Tuesday, June 01, 2004

கடலே!

இங்கு கனடாவில் வெளிவரும் பத்திரிகை ஒன்றிலே அண்மையில் வந்த கவிதை ஒன்று எனது மனதினைத்
தைத்தது.உங்களுடன்பகிர்ந்துகொள்ளலாம் என்று நினைக்கிறேன். ஈழத்தின்எழுச்சிக் கவிஏர் காசி ஆனந்தனின்
கவிதை வரிகள் இவை..

கடலே!

ஈழம் தமிழகம் எனுமிரு நாட்டிடை
ஓலம் இடுமோர் உப்புக் கடலே!


இந்நாள் இடிநகர் அலைகக் குரல் எழுப்பி
என்னதான் நீ இரைந்து நின்றாலும்
கோடி கரங்கள் ஒருநாள் உன்னை
மூடித் தமிழ்மண் போடுவதுண்மை!


அந்நாள் உனது சாநாள் ஆகும்!
நாங்களெலாம் கரத்தே பறைகள்
தாங்கி நின்று தாளம் கொட்டுவோம்!


உள்ளத் தோணியில் ஊர்ந்த தலைவனைக்
கள்ளத் தோணி ஆக்கிக் கனிமகள்
ஈழநாட்டில் எலும்பாய் உருக
காளையைத் தமிழ்நாட்டுக் கனுப்பினாய்!


அலறும் தாயைத் தமிழகத் தமர்த்திக்
குழறும் சேயைக் கொழும்பில் விட்டாய்!
அண்ணன் ஒருவன் தொண்டியில் புலம்பத்
தம்பி ஒருவனைக் கண்டியில் வைத்தாய்!


கடலே! உன்னை இனியும் தமிழர்
விடுவார் என்று கருதுதல் வேண்டா!
நின்றன் சாநாள் நெருங்கிவிட்டது!
வெறி அலைக் கரங்கள் வீசும் உன்னைச்
சிறைசெய் தடக்கி நின்னுயிர் சிதைத்து
மண்ணிடும் நாள்வரை ஓயோம்.....
அந்நாள் தமிழர் ஆளுநாள் கடலே!

No comments: