இந்த மாதம் ஜூன் 08,2005 புதன்கிழமை ரொரண்டோவில் உலக சாதனையாக ten bin bowling என்ற விளையாட்டினை தொடங்கிய சாதனையாளன் அருளானந்தம் சுரேஸ் ஜோக்கிம் 100 மணித்தியாலங்கள் தொடர்ந்து அந்த விளையாட்டினை விளையாடி ஜூன் 12 ,2005 ஞாயிற்றுக்கிழமை நிறைவு செய்து தனது முப்பதாவது உலக சாதனையினை நிலைநாட்டினார்.
அருளானந்தம் சுரேஸ் ஜோக்கிமின் இந்த உலக சாதனையானது அண்மையில் மால்ராவில் இத்தாலியர் ஒருவர் நிலைநாட்டிய இதே சாதனையினை ( 60மணி 15 நிமிடங்களை) முறியடித்து பெறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இதுவரை முப்பது உலக சாதனைகள நிலைநாட்டியிருக்கும் சுரேஸ் அதிகளவு உலக சாதனைகளை செய்தவர் வரிசையில் இரண்டாம் இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.இவரின் திருமணத்தினையே ஒரு உலகசாதனையாக்கியவர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. 2003 ஆண்டு ரொரண்டோவில் உள்ள கீதவாணிவானொலியில் 120 மணித்தியாலங்கள் தொடர்ந்து அறிவிப்பாளனாக இருந்து ஒரு உலக சாதனையினைநிறைவேற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஈழத்தமிழனாகிய சுரேஸ் ஜோக்கிம் செய்யும் உலக சாதனைகளை நல்ல நோக்கங்களுக்காக செய்வதுடன்
நிகழ்ச்சிகளின் போது சேரும் பணத்தினை ஆசிய ஆபிரிக்க குழந்தைகள் பட்டினியில் இருந்து மீள்வதற்காக செலவிடுகிறார்.பசி பட்டினி மற்றும்
போரிலிருந்து குழந்தைகளை காப்பாற்ற வேண்டும் என்பதும் அவரின் ஒரு கனவு. அதனை அவரின் நிகழ்வுகளின்போதும் அவரின் இணையதளத்திலும் வலியுறுத்துகின்றார்.
அவரின் அடுத்த 31 வது உலக சாதனையாக 2005 டிசெம்பரில் ஜெருசலேமில் இருந்து அமைதி தீப்பந்தத்தினை ஏந்திக் கொண்டு ஆரம்பமாகும் அவரின் நடைப்பவனி 54 நாடுகளினூடாக சென்று அவுஸ்திரேலியாவில் முடிக்கின்றார்.அன்நாளில் உலக யுத்த நிறுத்த நாளாக பிரகடனப்படுத்துமாறு கோரும் 01 மில்லியன் மக்களின் கையெழுத்துக்கள் கொண்ட விண்ணப்பத்தினையும் ஐ.நா.செயலாளரிடம் கையளிக்கவும் திட்டம் தீட்டிஉள்ளார். இந்த நடைப்பவனியில் சேரும் பணத்தினையும் குழந்தைகளுக்காகவே செலவிடப்போவதாகவும்கூறுகிறார்.
இப்படி குழந்தைகள் மேல் அவர் காட்டும் பரிவுக்கும் அத்துடன். யுத்தத்தின் தாக்கத்தில் இருந்து குழந்தைகள் காப்பாற்றவேண்டும் என்ற அவரின் அவாவுக்கும் காரணமாக இருப்பது எது வென்றால் 1983 ஆம் ஆண்டு ஜூலை கலவரத்தின் போது சிங்கள காடையர்களால் தமிழர்களின் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட தாக்குதல்களின் கோரக்காட்சிகள் தான் என்பதுடன் அந்த வேளையில் தனது பாடசாலை விடுதியில் இருந்து தான் கண்ட தமிழர் மீதான தாக்குதல்களை தன்னால் இன்னமும் மறக்க முடியாது உள்ளது எனவும் கூறுகிறார் சுரேஸ் ஜோக்கிம்.
சாதனை படைக்கும் ஈழத்தமிழன் சுரேஸ் ஜோக்கிம் மேலும் பல சாதனைகள் படைக்க நானும் வாழ்த்துகிறேன்.அத்துடன் நீங்களும் வாழ்த்துக்கள் சொல்லப்
போறீங்களா?