Saturday, July 23, 2005

ஆடி தமிழின அழிப்பும் இன்றைய தமிழின பலமும்

சிங்கள பேரினவாதிகள் தமிழினத்தை பூண்டோடு அழிக்க கங்கணம்கட்டி மேற்கொண்ட ஆடி தமிழின அழிப்பு நடந்து இருபத்தி ரெண்டாவது வருடத்தில் நினைவு கூருகின்றோம்.

பல்லாயிரக் கணக்கான தமிழினத்தைக் கொன்று வேட்டையாடியது போன்று இன்று செய்ய முடியாதளவிற்கு தமிழினம், பலமும், உரமும் பெற்றுவிட்டமைக்கு 1983ம் ஆண்டு ஏற்பட்ட கலவரமும் அதன் பின்னர் தமிழினம் கொண்ட விடுதலை உணர்வுமே காரணமாகும்.
தற்போது சமாதான வழிமுறைகளுக்கான கதவடைப்புக்கள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் தமிழின விடுதலைப் போராட்டம் இந்த இருபத்திரெண்டு வருடங்களில் எவ்வாறு வளர்ந்திருக்கிறது என்பதையே இந்தப் பத்தி எடுத்தியம்புகிறது.

தமிழின விடுதலைப் போராட்டம் முனைப்புடன் ஆரம்பமாகி வளர்ந்து கொண்டிருந்த காலகட்டம் சிங்கள அரசுகள் தமிழினத்தை இறைச்சித் துண்டுகளாகக் கடித்துக் குதறிக் கொண்டிருந்த காலகட்டத்தில் தமிழினத்தின் வலிமையை சிங்கள அரசுக்கு உணர்த்த வேண்டிய தருணம் வந்து விட்டதை உணர்ந்த தேசியத் தலைவர் அவர்கள் சிறிலங்கா படையினர் மீது தாக்குதலை ஆரம்பிக்குமாறு போராளிகளுக்குக் கட்டளையிட்டார்.

1981ம் ஆண்டு ஐப்பசி 15ம் நாள் யாழ்ப்பாணத்தில் உள்ள காங்கேசன்துறை வீதியில் இராணுவ வாகனம் ஒன்றின் மீது நடாத்தப்பட்ட தாக்குதலில் இரண்டு படையினர் பலியாகினர். படையினரது ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன.
இதுவே தமிழீழ விடுதலைப்புலிகள் படையினருக்கு எதிராக மேற்கொண்ட முதலாவது தாக்குதலாகும். இதன் பின்னர் 1982 ஆடி 2ம் நாள் நெல்லியடியில் பொலிசார் மீதான தாக்குதல் உட்பட பலதாக்குதல் சம்பவங்கள் இடம் பெற்றன.

1983ம் ஆண்டு வைகாசி 18ம் நாள் உள்ளுராட்சி சபைத் தேர்தல் நடைபெற்றது. தேர்தல் வாக்களிப்பு நிறைவுறுவதற்கு முன்பாக யாழ். நல்லூர் கந்தர் மடத்து தேர்தல் வாக்குச்சாவடியில் காவலுக்கு நின்ற சிறிலங்காப் படையினர் மற்றும் பொலிசார் மீது விடுதலைப் புலிகள் தாக்குதலைத் தொடுத்தனர்.

இத்தாக்குதலில் படையினர் ஒருவரும் இரு பொலிசாரும் பலியாகியிருந்தனர். அத்தோடு படையினரின் தானியங்கு சுடுகுழல் துப்பாக்கி ஒன்றும் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டது.இந்த வெற்றிகரமான தாக்குதல் அப்போது ஆட்சியிலிருந்த ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவுக்கு இன வெறியை ஊட்டியது.

தமிழினப் போராளிகளை பயங்கரவாதிகளாகச் சித்தரித்த ஜே.ஆர், சந்தேகம் கொள்வோரைக் கண்ட இடத்தில் சுட்டுத் தள்ளும் படியும், சடலங்களை நீதிமன்ற விசாரணையின்றி அடக்கம் செய்வதற்கும் ஆணை பிறப்பித்தார். இந்த ஆணை பிறப்பித்து ஓரிரு நாட்களின் பின்னர் அதாவது ஆடி 23ம் திகதி தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதல் பிரிவு சிங்களப் படையினருக்கு எதிரான ஒரு தாக்குதலுக்கு காத்து நின்றது. யாழ். திருநெல்வேலியிலுள்ள பலாலி வீதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் படையினருக்கு எதிரான தாக்குதலுக்குக் காத்து நின்றனர்.

14 விடுதலைப் புலிகளைக் கொண்ட இப்பிரிவில் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களும் ஒரு போராளியாக நின்றார். தாக்குதலை வழிநடத்தும் தலைமைப் பொறுப்பை லெப்டினன்ட் செல்லக்கிளியிடம் கொடுத்திருந்தார். குறிப்பிட்ட இடத்திற்கு படையினரின் வாகனத் தொடர் வந்ததும் நிலக்கண்ணிவெடி வெடிக்க வைக்கப்பட்டது.

இத்தாக்குதலில் 13 படையினர் பலியாகினர். பல ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன. இதுவே தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதற் திறனை இனங்கண்டு கொள்ளக் கூடிய வாய்ப்பை ஏற்படுத்தியது. மறுபுறம் தமிழினத்தை அழித்து ஒழிப்பதற்கான இன வெறியாட்டம் கட்டவிழ்த்து விடப்பட்டது.

1983ம் ஆண்டு ஆடி 24ம் திகதி நள்ளிரவிலிருந்து சிறிலங்காவின் கொலை வெறிக் கும்பல்களால் கொன்றழிக்கப்பட்டனர். சிறிலங்காவின் சிங்களச் சகோதரர்கள் துரோகமிழைக்கமாட்டர்கள் என்ற நம்பிக்கையில் வாழ்ந்த தமிழர்கள் காடையர் கும்பல்களால் வேட்டையாடப்பட்டனர்.

சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் தமிழினம் தலை நிமிர்ந்து நிற்பது பேரினவாதிகளுக்கு விருப்பம் இல்லாத விடயம். நகை வியாபாரம், வர்த்தக வியாபாரம் என பெரும் வர்த்தகப் புள்ளிகள் கொழும்பில் தமிழர்களாய் இருந்தனர். இது சிங்கள வர்த்தக பிரபல்யங்களுக்குப் பொறாமையையும் விரோத உணர்வையும் ஊட்டின.

தமிழனின் கொழும்பு பொருளாதாரத்தை வீழ்த்தி ஓட்டாண்டிகளாக்கி விடுவதே இதன் நோக்கம் ஆகும். இதனை அடிப்படையாகக் கொண்டு கொழும்பு நகரில் உள்ள வர்த்தக நிலையங்கள் சூறையாடப்பட்டன. தமிழர்கள் கண்ட துண்டமாக வெட்டி வீதியில் எறியப்பட்டனர். வீதிகளில் டயர்கள் இடப்பட்டு எரிக்கப்பட்டனர். தமிழ்ப் பெண்கள் காமுகர்களால் குதறி எறியப்பட்டனர்.

கொழும்பு நகரில் தமிழினம் ஒப்பாரி வைத்து அழுதது. பயணம் செய்த பல நூற்றுக்கணக்கான தமிழ் மக்கள் வாகனங்களிலிருந்து இறக்கப்பட்டு கொலை செய்யப்பட்டனர். இந்த வன்முறை கொழும்பு தவிர்ந்த ஏனைய மாவட்டங்களுக்கும் பரவின. கண்டி, காலி, பதுளை, மலையகம், திருமலை எனத் தமிழ் மக்கள் இன அழிப்பு வேள்வியில் சிக்குண்டனர்.

இதேவேளை பயங்கரவாதிகள் என நாமம் சூட்டிப் படையினரால் கைது செய்யப்பட்ட தமிழ் இளைஞர்கள் 35 பேர் ஆடி 25ம் திகதி வெலிக்கடைச் சிறைச்சாலையில் வைத்து படுகொலை செய்யப்பட்டனர்.
இப்படுகொலை நடந்த பிற்பாடுகூட கைதிகளுக்கு உரிய பாதுகாப்பு அளிப்பதற்கு ஜே.ஆர்.அரசு தவறிவிட்டது. ஆடி 27ம் திகதியும் 19 தமிழ் இளைஞர்கள் வெலிக்கடைச் சிறைச்சாலைக்குள் இன அழிப்பில் இரையாகி விட்டனர். இந்தச் சம்பவங்கள் ஒருபுறம் நிகழ மறுபுறம் தமிழினம் தமக்கான தாயக விடுதலை உணர்வின் சிகரத்திற்குச் செல்ல முடிந்தது.

தமிழ் மக்களுக்கு தனிநாடு அவசியம் என்பதையும், அதற்காக விடுதலைப் போராட்டத்தில் இணைந்து தாயக விடுதலைக்காக போராட வேண்டும் என்ற உணர்வு தமிழ் இளைஞர்களிடையே ஊற்றெடுத்தது. தமிழினமே இலட்சியமென நேசித்த ஆயிரம் ஆயிரம் இளைஞர்கள் தலைவன் பின்னால் அணி திரண்டனர். அர்ப்பணிப்பு, தியாகம், கொண்ட போராளிகள் இணைவும், பலமும் விடுதலைப் போராட்டத்திற்கு வலிமையை ஈட்டிக் கொடுத்தது.

சிங்கள அரசுகள் தமிழினத்திற்கென்று எவ்வித பிரச்சினைகளுமில்லை.
பயங்கரவாதிகளே பிரச்சினையை உருவாக்குகின்றனர் என்ற பொய்யான கருத்துக்களை சர்வதேச நாடுகளிடையே முன்வைத்து ஆயுதங்களையும், இராணுவயுத்திக ளையும் பெற்று தமிழீழ விடுதலைப் போராட்டத்தை அழிக்க நினைத்தனர். உலக நாடுகளில் ஈழத் தமிழினத்தின் பிரச்சினை பெரிதாகத் தோற்றம்பெறவில்லை. ஏனெனில் இஸ்ரேல், பாலஸ்தீன பிரச்சினை உட்பட பல மேற்குலக நாடுகளில் தோன்றிய சம்பவங்களில் தான் சர்வதேச சமூகம் அக்கறை காட்டியது. சிங்களப் படைகள் வீதிகளில்; தமிழ் இளைஞர்களை சுட்டு, டயரிட்டு எரித்த போது விமானங்கள் குண்டுமழை பொழிந்து தமிழினத்தின் குடிமனைகளை அழித்த போது, மனித உடலங்கள் சிதறுண்டு கிடந்தபோது, தமிழினம் ஒப்பாரி வைத்து அழுத போது, எல்லாம் இந்த சர்வதேச சமூகம் தலையிடவோ, கண்மூடித்தனமான தாக்குதலை நிறுத்தவோ முடியவில்லை.

எனினும் தமிழினத்தின் பாதுகாப்பினை விடுதலைப் புலிகள் உறுதிப்படுத்தியதுடன் சிங்கள தேசம் தமிழினத்தை அழித்து ஒட்டு மொத்த தேசத்தில் சிங்களக் கொடியை ஏற்றமுடியாது. அதனை ஏற்கும் நிலையில் தமிழினம் இல்லை என்ற சூழ்நிலையில் தான் சர்வதேசத்தின் பார்வை கூர்மையடைந்தது.

தமிழினத்தின் ஏகபிரதிநிதிகள் விடுதலைப் புலிகள் தான் என்பது இப்போது சர்வதேசத்தினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளை ஆயுத வழி முறைகள் மூலம் பலமிழக்கச் செய்யவோ, அல்லது அழித்து விடவோ முடியாது என்பதை இப்போது சர்வதேசம் உணர்ந்து விட்டது.
அதிலே சமாதான வழிமுறைகளைக் கையாளுமாறு வேண்டுகைவிடுத்து வருகின்றனர்.

விடுதலைப் புலிகளைப் பொறுத்தமட்டில் மிகச்சிறியதொரு அணியாகவிருந்த விடுதலைப் புலிகள் தற்போது பலம் பெற்று விட்டனர். கெரில்லா அணியாக தமது தாக்குதலை ஆரம்பித்து இன்று மரபு ரீதியான படையணிகளைக் கொண்ட இராணுவக் கட்டமைப்பாக விடுதலைப் புலிகள் உள்ளனர்.
அதேவேளை ஒரு நாடு எத்தகைய படை வலிமையைக் கொண்டிருக்குமோ, அதே படைத்துறைகளை விடுதலைப் புலிகள் கொண்டிருப்பது தமிழினம் பெருமிதமடையும் விடயம் அல்லவா! தரைப்படை, கடற்புலிகள், வான்படை ஆகிய முப்படைகளை விட உலகின் எந்தவொரு நாடும் கொண்டிராத உயிராயுப் படை (கரும்புலிகள்)யையும் தமிழினம் கொண்டிருப்பது தமிழனின் வீரத்தின் திறனை இமய மலை போல் தொட்டு நிற்கின்றது.

இத்தனை படைகளையும் கொண்டிருப்பது மட்டுமன்றி சட்டம், நீதி நிருவாகங்களும் செம்மையாக விடுதலையை நேசிக்கின்ற தமிழ் மக்கள் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் மீது கொண்டிருக்கும் பற்றுறுதியையும், நம்பிக்கையும் தேச விடுதலை உணர்வும் விடுதலைப் போராட்டத்தை ஆளப்படுத்தி நிற்கின்றது.

இந்த நிலையில் இன்னுமொரு ஆடிக்கலவரம் எழுமா? என்றால் இல்லை என்று கூறுவதை விட 1983ம் ஆண்டு வெட்டிக் குதறியது போன்று இனி தமிழினத்தை வேட்டையாட முடியாது. ஏனெனில் அன்று தமிழினம் பலமாக இருக்கவில்லை. அதனால்தான் பந்தாடிச் சென்றார்கள். இன்று பலம் பெற்று விட்டோம். நினைத்த மாதிரி அழித்தொழிக்க முடியாது. அவ்வாறு துணிவார்களானால் அதற்கான பாடம் புகட்டப்படும். இதனை இப்போது சிங்கள தேசம் நன்றாக உணர்ந்து விட்டது.

பின்னரும் கலவரங்களைக் கட்டவிழ்த்து விடுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதும் அவை தோல்வியைத் தழுவியது. இவை தவிர ஆடிக் கலவரம் தமிழனம் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட முதல் நாள் ஆடி 24ம் திகதி 2001ம் ஆண்டில் அத்திகதியில் விடுதலைப் புலிகள் எதிரிக்குப் பலமான பாடம் புகட்டி வீரவரலாறும் படைத்துள்ளனர்.

அதுதான் கட்டுநாயக்கா வான்தளம். விடுதலைப் போராளிகளால் வெற்றிகரமாகத் தாக்கியழிக்கப்பட்டது. இத்தாக்குதலில் 28 வான் கலங்கள் அழிக்கப்பட்டன. பல கோடிக்கணக்கான ரூபாய் அரசுக்கு நட்டமேற்பட்டது. சிறிலங்கா அரசின் பிரதான பலமாக இருந்த வான்படைப் பலம் அழிக்கப்பட்டமை அரசுக்குப் பெரியதொரு பலவீனமே என்பதும் இங்கு சுட்டிக் காட் ப்பட வேண்டிய விடயம். எனவே தமிழினமும், தமிழீழ விடுதலைப் போராட்டமும் ஆடிக் கலவரத்துடன் ஒப்பிடுகையில் இன்று பன்மடங்கு பலமும், உரமும் பெற்று விட்டது என்பதே உண்மை.

மேலதிக தகவல்களுக்கு:- http://www.tamilcanadian.com/eelam/massacres/83/

நன்றி----பிரவீனா, ஈழநாதம் மட்டக்களப்பு

Friday, July 22, 2005

குழந்தை பிறக்காமல் இருக்க...............

குழந்தை பிறக்காமல் இருக்க என்ன செய்யவேண்டும் என்று ஒரு பெண் டாக்டரிடம் கேட்டாள்.
அதுக்கு டாக்டர் சொன்னார் ஒன்றும் செய்யாமல் இருந்தாலே போதும் என்று.
மூன்று வருடங்களாக முத்தநிறுத்தம். இனி என்ன நடக்கப் போகிறது.?

இது என்ன மஞ்சள் பத்திரிகையின் தலைப்பு போல இருக்கிது எண்டு நீங்கள் யோசிக்கிறது தெரியுது.நானும் தலைப்பை படிச்சு போட்டு சத்தியமாக குழம்பிப்போட்டன். பொறுங்கோ விசியத்தை சொல்லுறன்.இது இஞ்ச ரொரண்டோவில் இருந்து வெளிவருகின்ற ஒரு தமிழ் பத்திரிகையின்4,5 மாதத்துக்கு முந்திய இதழின் முன்பக்க தலைப்பு செய்தி அது. தடித்த எழுத்தில் வேறு போடப்பட்டிருந்தது.தலைப்பு செய்திக்கு கீழே ஒரு விபரமும் இல்லை.மிகுதி மூன்றாம் பக்கம் எண்டு போட்டிருந்தது.

சரி பத்திரிகையின் பெயர்,முன்பக்கம் தான் மஞ்சள் கலரில வருது எண்டால் விடயமுமெல்லோ மஞ்சள் மண்டிக் கிடக்குது எண்டு போட்டு அவசரமாக மூண்டாம் பக்கம் போனால் அதில் தலைப்புக்கு சம்பந்தம் இல்லாமல் இலங்கை விடயங்கள்தான் இருந்தது. சரி எண்டு போட்டு மற்றைய பக்கங்களையும் புரட்டி பாத்தால் ஒண்டையும் காணேல்ல.மீண்டும் ஒருக்கா மூண்டாம் பக்கம் வந்து பார்த்தால் தான் எனக்கு விசியமே விளங்கிச்சு.

சரி இவ்வளவு சொல்லியிருக்கிறன் உங்களுக்கு ஏதாவது விளங்கிச்சோ.விளங்கேலையோ.சரி பொறுங்கோ. தலையங்கத்தை சரியா தாறன் இப்ப ஏதாவது புரியுதோ எண்டுபாருங்கோ.

குழந்தை பிறக்காமல் இருக்க என்ன செய்யவேண்டும் என்று ஒரு பெண் டாக்டரிடம் கேட்டாள்.அதுக்கு டாக்டர் சொன்னார் ஒன்றும் செய்யாமல்இருந்தாலே போதும் என்று.மூன்று வருடங்களாக யுத்தநிறுத்தம்.இனி என்ன நடக்கப் போகிறது.?

இப்ப புரிஞ்சுதோ என்ன விசியம் எண்டு. யுத்தம் முத்தமாக மாறியதை.
"யு"த்த நிறுத்தம் "மு"த்தநிறுத்தமாக மாறியதைக் கூட கவனிக்காமல் அப்படி என்னதான் பத்திரிகை வெளியிடுகின்றனர்.சரி ஒரு பந்தியில் ஒரு எழுத்து பிழை என்றால் பரவாயில்லை.முன்பக்கத்தில் அதுவும் பிரதான செய்தி தலையங்கத்தில்இப்படி ஒரு பிழை வந்ததைக் கவனிக்காமல் பத்திரிகை அச்சாகியதுடன் அல்லாமல் மக்களையும் சென்றடைந்திருக்கிறது.ஒரு பத்திரிகை அச்சாகும் முன்னர் பிழைதிருதுவார்கள்.அச்சாகிய பின்னர் பிழை இருக்கிறதா என்று பார்ப்பார்கள்.இவர்கள் இவை எவற்றினையும் பார்ப்பதில்லை.இலவசப்பத்திரிகை விளம்பரங்கள் மூலம் காசு வருகிறது.அது போதும் அவர்களுக்கு.1970ம் ஆண்டுகளிலே யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவந்த ஒரு பத்திரிகையின் பெயரினை தாங்கிய இந்தப் பத்திரிகைஅச்சுப்பிழைகளுக்கெனவே பெயர் போனதாக இருந்தது.இலங்கையிலோ அல்லது இந்தியாவிலோ பத்திரிகைகள்வெளியிடுபவர்கள் அல்லது அதன் வாசகர்களுக்கும் இடையே இருக்கும் தேவைகளுக்கும் இங்குகனடாவில் வெளிவரும் பத்திரிகைகளை வெளியிடுபவர்களுக்கும் அத்துடன் அதன் வாசகர்களுக்கும் இடையேயான தேவைகள் நிச்சயம் வேறுபாடானவை.அது கூட இவற்றுக்கு காரணிகளாக அமையாலாம்.
மேற்படி பத்ரிகையின் ஒரு ஆசிரிய தலையங்கத்தினை கீழே பாருங்கள்.எவ்வளவு தப்பும் தவறுகளும்.அப்பத்திரிகை ஆசிரியரால் எழுதப்படும்
ஆசிரிய தலையங்கத்திலேயே இப்படி என்றால் பத்திரிகையில் எப்படி இருக்கும்?



(கிளிக் பண்ணிபெரிதாக பார்க்கலாம்.)

தமிழ்மக்களின் நல்ல காலமோ என்னவோ அப்பத்திரிகை இப்போது புதிய ஆசிரியரின் நிர்வாகத்தின் கீழ் இப்போது எழுத்து பிழைகள் இல்லாமல் தரமாக பல விடயங்களை தாங்கி வெளிவருகிறது.இருந்தாலும்இங்கு வெளியாகும் சில பத்திரிகைகளில் எழுத்துபிழைகள் மலிந்தே காணப்படுகிறது.கனடாவில் வெளியாகும் தமிழ் பத்திரிகைகள் பற்றி ஒரு பதிவு எழுதவே எண்ணியிருந்தேன். சினேகிதியின் வலைப்பூவில் (காணவில்லை?)அண்மையில் பத்திரிகைகள் தொடர்பாக பலர் தெரிவித்த கருத்துக்களே இதற்கு காரணிகளாக அமைந்தது.அப்படி இருக்கும் நிலையில் தான் இன்று இந்த தலையங்கத்தினை தாங்கிய பழைய பத்திரிகையினை கண்டேன்.உடனே இந்த பதிவை பதிந்துள்ளேன்.பின்பு ஒரு விரிவான பதிவு தருகிறேன்

பயணங்கள்! பஸ் பயணங்கள்!

மிழ்நாட்டில் வாகனம் ஓட்டுவது என்பது ஒரு கலை .தமிழ் நாட்டில் வாகனம் ஓட்டிபழகியவர்கள் உலகில் எங்கும் வாகனம் ஓட்டலாம் என்று அடித்து சொல்லலாம்.


யப்பா மக்கள் கூட்டம்,மாக்கள் கூட்டம் ,வாகன நெருக்கடி இப்படி இவை எல்லாவற்றையும் விலத்தி வண்டி ஓட்டும் லாவகம் இருக்கிறதே.அதுவும் பளபளக்கும் தனியார் பேருந்துகள், சினிமாப்பாடல்கள் பேரிரைச்சலோடு ஒலிக்க ஓடும் ஓட்டம் இருக்கிறதே அதை சொல்லில் எழுதமுடியாது.அதில் ஏறி தப்பித்தவறி முன் சீட்டில் இருந்துவிட்டீர்கள் ஆனால் கண்டிப்பாக கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களுக்கு கூட கடவுள் நம்பிக்கை வந்துவிடும்.அந்தளவு வேகம்,வேகம், வேகம். அதுதான் அவர்களின் மந்திரம்.
நான் சென்னைக்கு போவது என்றால் வழமையாக எயர் பஸ்களில் தான் போவேன்.நான்இப்படி நீண்ட தூர பஸ்களில் போவது எண்டால் ஓட்டுனருக்கு இடதுபுறமாக உள்ள சீட்களில் தான் இருப்பேன்.ஏனெனில் அந்த பக்கம் அபாயம் குறைவு என்று. அன்று ஒருநாள் திடீரென்று சென்னை போகும் நிலை ரிக்கற் பதிவு செய்ய சென்றால் ஒரு இடமும் பதிவு செய்யமுடியவில்லை.வரும் நாட்களில் ஏதோ விசேஷம் என்றபடியால் அப்படி ஒரு நிலை .ஒரு இடத்தில் ஒரு இடம் கிடைத்தது .சரி அவசரத்துக்கு பரவாயில்லைஎன்று பதிவு செய்தேன் .இரவு பஸ் ஏறி எனது இருக்கையிலும் அமர்ந்துவிட்டேன்.



பஸ் ஓடத்தொடங்கி விட்டது.நான் அமர்ந்திருந்தது இடது புறத்தில் முன் இருக்கை.அதாவது வாசலுக்குஅருகில்.கொஞ்சநேரம் வீடியோவில் படம் பார்த்துக் கொண்டிருந்தேன்.பின்பு படமும் முடிய உறங்க தயாரானேன்.கண்ணை மூடினால் நித்திரை வருது இல்லை.எதிரே வரும் வாகன வெளிச்சம்.அவற்றின் ஹாரன் ஒலி,ஒன்றை ஒன்று விலத்தும் போது ஏற்படும் சத்தம் இதனால் நித்திரையே வராமல் போட்டுது.அது ஏனோ தெரியவில்லையே.எதிரே இன்னுமொரு வாகனத்தினை முந்திக் கொண்டு வந்து குறுகிய இடைவெளியில் பஸ்சினையும் முந்துகின்றனர்.சில வேளை பார்க்க பயங்கரமாக இருக்கும்.இனி வாகன ஹெட் லைட் வெளிச்சம் பெரும்பாலான வாகனங்கள் எதிரேவரும் வாகனங்களுக்காக தமது ஹெட் லைட்டினை "டிம்" பண்ணியே கொடுக்க மாட்டார்கள்.இப்படி ஒரு வாகனம் கடந்து போனால் அந்த வாகனம் கடந்து போன கொஞ்ச நேரத்துக்கு ஓட்டுநருக்கு ஒரே இருட்டாகதான் தெரியும்.எதிரே பாதசாரி யாராவது நடந்து வந்தால் நிலை என்ன? யோசிக்கவே பயங்கரமாக இருக்கும்.


இதை விட சென்னை போகும் வழியில் சில கிராமங்களை கடக்கும் போது பார்த்தால் மெயின்ரோட்டின் மேலேயே நெற்கதிர்களை மற்றும் சில தோட்டத்தில், வயலில் விளையும் கதிர்களை போட்டிருப்பார்கள்.கைகளினால் பிரிக்கும் வேலையினை குறைப்பதற்காக.அதாவது சாலையில் போகும் வாகனங்கள் அதன் மேலக போகும்போது நெல் மணிகள் ,வைக்கோல் ஒரு புறமாக பிரியும் என்பதற்காக.நாலு சக்கர வாகனங்கள் பரவாயில்லை.இரு சக்கரவாகனங்களில் நிலையினை யோசித்துப் பாருங்கள்.மிதமான வேகத்தில் வந்தால் கூட வண்டி சறுக்கும் அபாயம் உண்டு. சரி அதை விடுங்கள்.

தனியார் சொகுசு வண்டிகளில் போனால் சொகுசும் கிடைக்கும் ஓரளவு பாதுகாப்பும் கிடைக்கும். எப்படி எண்டால் இரண்டு ஓட்டுனர்கள் இருப்பார்கள்.விழுப்புரம் வரை ஒரு ஓட்டுனர் பஸ்சினை ஓட்டுவார்.அதன் பின்னர் மற்ற ஓட்டுனர் பஸ்சினை ஓட்ட முன்னையவர் உறங்குவார்.இது பஸ் முதலாளிகள் ஓட்டுனர்கள் மீது பாசத்தினால்செய்த ஏற்பாடு அல்ல தமது பஸ்சின் மீது கொண்ட பற்றுதலினால் செய்த ஏற்பாடு. ஏனெனில் ஒரு சொகுசுவண்டியின் விலை 25 இலட்சம்(இந்திய) அளவில் வரும் என்று கேள்வி.


இது இப்படி எண்டால் அரசு வண்டிகளில் நிலை? அங்கு ஒரு ஓட்டுனரே 7,8 மணித்தியாலங்கள் தொடர்ந்து ஓட்டுவார்.அப்பஅவருக்கு ஓய்வு எண்டு அப்பாவி மாதிரி கேட்க கூடாது.பயணிகள் சாப்பிடுவதற்கும் ரீகுடிப்பதற்கும் பஸ் நிறுத்தப்படும் நேரங்களில் பஸ் ஓட்டுனர் அப்படியே "ஸ்டேரிங்கில்"படுத்து ஒரு குட்டித்துக்கம் போடுவார்.சிலவேளைகளில் விபத்துக்கள் காரணமாகவும் போக்குவரத்து நெருக்கடி காரணமாகவும் பஸ் நிறுத்தப்படும் குறுகிய நேரத்தில் கூட ஓட்டுனர் சிறு தூக்கம் போட்டு எழுந்திருப்பதை காணும் போது ஓட்டுனர்கள் மீது பரிதாபப்படுவதுடன் அடி வயிற்றில் கிலியும் வந்திருக்கிறது.அப்படியான ஓட்டுனர்கள் ஓடும் பஸ்சில் நானும் பயணிக்கும் சந்தர்ப்பத்தில்.


இருந்தாலும் தமிழ்நாட்டு பஸ்களின் மேல எனக்கு அலாதி பிரியம் உண்டு ஏனெனில் பஸ்சின் பெயர் முதல் கொண்டுபஸ்சின் நிறம், பஸ்சினுள் மற்றும் பின் கண்ணாடியில் எழுதப்பட்டிருக்கும் வாசகங்கள் இப்படி பல.(ஆட்டோக்களில்கூட இப்படி பல சுவாரசியமான வாசகங்கள் எழுதப்பட்டிருக்கும்.பல ஆட்டோக்களில் இந்த வசனம் பார்த்திருக்கிறேன். "சீறும்பாம்பை நம்பு சிரிக்கும் பெண்ணை நம்பாதே"ஆட்டோறைவர்கள் பலர் காதலில் தோல்வி உற்றவர் போலும்.)


"பறக்கும் மோகினி","மின்னல் பாவை","பறக்கும் மின்னல்"இவை எல்லாம் என்ன என்கிறீர்களா?சில பஸ்சின் பெயர்கள்தான்.பல வித நிறங்களில் பல்வேறு வடிவங்களில் பார்க்க அழகாக இருப்பதுடன் டி.வி.டி. மற்றும் சி.டி வசதிகளுடன் சில பஸ்களில் கமெராகூட படிக்கட்டுகளில் இறங்குபவரை பார்க்க பொருத்தப்பட்டிருப்பதையும் கண்டிருக்கிறேன்.இவை எல்லாம் தனியார் பேருந்துகள் தான்.அரசு பேருந்துகள் பற்றி நான் சொல்ல போவதில்லை.நெடுந்தூர விரைவு பேரூந்துகளை தவிர மற்றவை எப்படி இருக்கும் என்பது நான் சொல்ல வேண்டியதில்லை.இருந்தாலும் அண்மையகாலங்களில் அரசு பேரூந்துகளும் சிறப்பாக வடிவமைத்து சேவையில் ஈடுபடுத்தி இருக்கின்றனர்.இதைவிட கலைஞர் ஆட்சியில் இருக்கும் போது என்று நினைக்கிறேன் கிராமங்களில் ஓடுவதற்கு என அழகான மஞ்சள் "மினி பஸ்கள்" கொண்டுவரப்பட்டது.


சரி இதை இப்படியே விட்டு விட்டு இன்னொரு விடயத்துக்கு வருவோம்.இதில் எனக்கு பலத்த சந்தேகம்?

அது என்ன எண்டால் நீங்கள் வாகனம் ஒன்றை ஓட்டிக் கொண்டு செல்கிறீர்கள் எண்டு வச்சுக் கொள்ளுங்கோ.முன்னே ஒரு வாகனம்போய்க்கொண்டிருக்கிறது..முன்னே செல்லும் அந்த வாகனத்தினை முந்த ஹாரன் அடிக்கின்றீர்கள் அல்லது விளக்குகளால் சைகை செய்கின்றீர்கள். உடனே முன்னே செல்லும் வாகனம் தனது வலது பக்க சிக்னலை எரியவிடுகின்றது.நீங்கள் அந்த வாகனத்தினை முந்திக் கொண்டு போகின்றீர்கள். அதாவது முன்னே போகும் வாகனம் தனது வலது பக்க சிக்னலை எரிய விடுவது நீங்கள் அவரை முந்திக் கொண்டு போக அவர் அனுமதி தருகிறார் என்று கருதப்படுகிறது. இந்த வழக்கம் தமிழ்நாட்டில் இருந்து வருகிறது பலரால் பின்பற்றப்படுகிறது.


நான் தமிழ்நாட்டுக்கு போன புதிதில் ஒரு நீண்ட தூரப்பயணத்தின் போதே இதை அவதானித்தேன். நாங்கள்சென்று கொண்டிருந்த சுமோ வண்டியின் ஓட்டுனர் முன்னே சென்று கொண்டிருந்த ஒரு வாகனத்தினை முந்த ஹாரன் கொடுத்து சிறிது நேரத்தின் பின்னர் அந்த வாகனத்தின் வலது பக்க சிக்னல் விட்டுவிட்டு எரிந்தது.
உடனேஎமது வண்டி ஓட்டுனர் அந்த வாகனத்தினை முந்த முயற்சித்த போது அவரின் அருகினில் இருந்த நான்அவரை தடுத்தேன்.அவர் வலது பக்க சிக்னல் போட்டிருக்கிறார்.நீங்கள் அவரை முந்த முயற்சிக்காதீர்கள் என்று சொன்னபோது எமது சுமோ ஓட்டுனர் சொன்னார். நாம் அவரை முந்த அனுமதி தருமுகமாகத்தான் அவர் வலது பக்க சிக்கனல் விளக்கினை ஒளிரவிட்டுள்ளார் என்று சொல்லிய படியே அந்த வாகனத்தினை முந்திச்சென்றார். ஓட்டுனரிடம் இது என்னப்பா புது முறையாக இருக்கே என்று கேட்டதுக்கு அவர் புன்சிரிப்பையே எனக்குபதிலாக தந்தார்.மேலும் துருவி கேட்டதுக்கு சொன்னார்.சரியோ பிழையோ இங்கு இதுதான் நடைமுறை என்று.


இது ஒரு பிழையான நடைமுறை என்று நான் நினைக்கிறேன். உண்மையான நடைமுறை இடது பக்க சிக்னல் விளக்கை எரிய விடுவதுதான்அதாவது நான் இடது பக்கம் ஒதுங்கி வழிவிடுகிறேன் அல்லது இடது பக்கம் திரும்புகிறேன்.நீ வலது பக்கத்தால்முந்தி செல்லலாம். இதுதான்உண்மையான நடைமுறையாக இருக்கமுடியும்.

எப்படி ஒரு பிழையான நடைமுறை பழக்கத்தில் அல்லது புழக்கத்தில் வந்தது?
தமிழ்நாட்டில் மட்டும் இப்படியா?அல்லது இந்தியாமுழுவதும் இப்படியா என்பது எனக்கு தெரியவில்லை?தமிழ்நாட்டில் தான் இப்படி என்றால் மற்ற மாநிலவாசிகள் தமிழ்நாட்டில் எப்படி வண்டி ஓட்டுவர்? யார் இதை ஆரம்பித்து வைத்த புண்ணியவான்?எப்படி அல்லது எவ்வாறு இது பழக்கத்துக்கு வந்தது?

சில வருடங்களுக்குமுன்னர் தமிழ்நாட்டில் நேரில் பார்த்தை இங்கு நான் சொன்னேன்.இப்போதும் அப்படிதான் இருக்கும் என நினைக்கிறேன்.இதில் வேறு ஏதும் காரணங்கள் உண்டா தெரிந்தவர்கள் தெரிவிக்கலாமே.


என்னஇருந்தாலும் நீண்டதூர பஸ் பயணம் என்பதுஒரு இனிமையான அனுபவம். குழந்தைகளுக்கு ஏன் பெரியவர்களுக்கும் கூட .அதில் யன்னல் ஓர இருக்கை கிடைத்து விட்டால் சொல்லவேண்டியதில்லை.பெரியவர்கள் கூட குழந்தைகள் ஆகிவிடுகின்றனர்.பிடித்த பாடலை முணுமுணுத்தபடி முகத்தில் எதிர் காற்று அடிக்கசெல்லும் சுகம் இருக்கிறதே அப்பப்பா.அதிலும் மனதுக்கு பிடித்தவளும் அருகினில் அல்லது பஸ்சினுள் இருந்தால்.?.அங்கு காற்றையும் கண்களையும் தவிர மற்றவை எவற்றுக்கும் வேலை இல்லை


என் கண்மணி என் காதலி எனைப் பார்த்ததும் ஓராயிரம்கதை பேசுதே உன் கண்கள் ..................