Saturday, July 30, 2005

தமிழ்நெட்டின் கருத்தோவியங்கள்!

தமிழ்நெட் இணையத்தளம் அண்மைக்காலமாக கருத்தோவியங்களை(cartoons)
தனது தளத்தில் இட்டு வருகிறது .மிகவும் அழகான வர்ணத்தில் இலங்கை
நிலவரங்களை அப்பட்டமாக தோலுரித்துக்காட்டும் இந்த கருத்தோவியங்களை (cartoon என்பதை தமிழில் கேலிச்சித்திரம் என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை) காண இங்கே வாருங்கள்.

http://www.tamilnet.com/cartoon.html?fid=43848

http://www.tamilnet.com/cartoon.html?fid=43485

http://www.tamilnet.com/cartoon.html?fid=43393

http://www.tamilnet.com/cartoon.html?fid=43051

http://www.tamilnet.com/cartoon.html?fid=42863

அதைப் போலவே
வலையுலகில் மூனாவும் தனது கருத்தோவியங்களை பதிந்து வருகிறார்.
அரசியல் ரீதியான கருத்தோவியங்களை கிறுக்கல் வலைப்பதிவிலும் பொதுவான
விடயங்களை துகிலிகை வலைப்பதிவிலும் பதிந்து வருகிறார்.அவருடைய
ஓவியங்களை பார்ப்பதுடன் ஒருவரி பாராட்டினையும் தெரிவித்து விடுங்களேன்.

Friday, July 29, 2005

தமிழ் தேசிய தொலைக்காட்சி தென் ஆசியா நோக்கி..

இந்த வருடம் மார்ச் 26 ந் திகதி தனது ஒளிபரப்பினை ஆரம்பித்த தமிழீழ தேசிய தொலைக்காட்சியானது இன்றைய திகதி வரையில் ஜரோப்பிய நாடுகளில் மட்டுமே பார்க்கமுடியும். வருகின்ற ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல் த.தே.தொலைக்காட்சியானது தனது ஒளிபரப்பினை தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கும் ஒளிபரப்பவுள்ளது.

தாயக நேரம் பி.ப 7.00 மணி தொடக்கம் 9.00 மணிவரை (GMT 13.30-15.30)தென்கிழக்கு ஆசிய நாட்டு மக்கள் இந்த ஒளிபரப்பினை கண்டுகளிக்கலாம் என கிளிநொச்சியில் நடைபெற்ற பத்திரிகையாளர் மகாநாட்டில் அறிவிக்கப்பட்டிருக்கிறது.தமது வியக்கத்தக்க பல இராணுவ நடவடிக்கைகள் மூலம் போராட்டத்தினை நகர்த்திச் சென்ற புலிகள் இப்போதைய சமாதான காலத்தில் தமது சாதுர்யமான பல இராஜதந்திர நடவடிக்கைகள் மூலம் உலகை திரும்பிப் பார்க்கவைத்திருக்கின்றனர்.

அத்துடன் போராட்டத்தினை வெற்றிகரமாக நடத்துவது மட்டும் போதாது ,தமது நோக்கங்கள்,கொள்கைகள்,இன்றைய சமாதான காலசெயற்பாடுகள்,தமது நிர்வாக கட்டமைப்புகள்,மற்றும் மக்களின் வாழ்வியல் ,இப்படி பலவற்றை
உலகெங்கும் கொண்டு செல்வதும் உலகெங்கினும் அறியச்செய்வதும் அப்போராட்டத்திற்கு வலுச் சேர்க்கும் என்பதனையும் புரிந்திருக்கின்றனர்.

இன்றைய சமாதான காலகட்டத்தில் அவர்கள் சந்தித்த பல நாட்டு இராஜதந்திரிகள் மற்றும் பலநாட்டு பத்திரிகையாளர்கள் மற்றும் பல நாடுகளுக்கு சென்று பெற்ற அனுபவங்களூடாக இன்றைய உலகில் ஊடகங்களின் சக்தியினை அவர்கள் தெளிவாக புரிந்திருக்கின்றனர் என்பது அவர்களின் அண்மைக் காலநடவடிக்கைகள் உணர்த்துகின்றன.அது அச்சு ஊடகங்களாக இருந்தாலும்சரி இலத்திரனியல் ஊடகங்களாக( தொலைக்காட்சி,வானொலி,இணையம்)இருந்தாலும் சரி எல்லாவற்றிலும் அவர்கள் இன்று கால் பதிக்க தொடங்கியிருக்கின்றனர்.அதில் ஒன்றுதான் இந்த சாட்டலைட் தொலைக்காட்சி.

இன்றைய உலகில் ஊடகங்களின் வலிமை என்பது எல்லொருக்குமே தெரிந்த ஒன்றுதானே.ஆப்கான் யுத்தம்,இராக் யுத்தம்,போன்றவற்றில் நாம் பார்த்தது தானே.யுத்தத்தின் போக்கையே மாற்ற இன்று ஊடகங்களால் முடியும். இது கூட நாம் அறிந்ததே.

இன்றைய நாட்களில் ஊடகங்கள் என்னதான் நடுநிலமை வேடம் போட்டாலும் அவற்றின் முதலாளிகளின் அல்லது பணியாளர்களின் அல்லது தாம் சார்ந்த நாடுகளின் நலன்களையே அவை முன்னிலைப்படுத்தும்.அவற்றுக்கு எதிரானசெய்திகளை அல்லது கருத்துக்களை அவை வெளிப்படுத்த மறுப்பதுடன் சில வேளைகளில் தமக்கு சார்பாக செய்திகளை திரிப்பதும் உண்டு. இதில் உலகின் புகழ்பூத்த சில ஊடகங்களும் விதிவிலக்கில்லை.

கடந்த காலங்களில் இலங்கையில் இதுதான் நடந்தது. இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதிகளில் நடைப்பெற்ற பல சம்பவங்கள் இலங்கை ஊடகங்களால் மறைக்கப்பட்டன அத்துடன் சிலவற்றை திரித்தும் வெளியிட்டனர்.இதில் அரச ,தனியார் ஊடகங்களென்ற பேதங்கள் இருக்கவில்லை.அப்படியும் சில செய்திகள் வெளிவந்தநிலையில் போட்டதுதான் பத்திரிகைதணிக்கை என்ற பெரியதொரு பூட்டு.

ஆரம்ப நாட்களில் புலிகளின் கையில் இருந்தது பத்திரிகை ஒன்றுதான்.அதுகூட யாழப்பாணம் மற்றும் வன்னியின் சில பகுதிகளுடன் முடங்கவேண்டிய நிலை. இப்படியான நிலையில் பரந்து பட்ட அளவில் செய்திகளை கொண்டு போகவேண்டிய தேவை ஏற்பட்ட போது வந்துதான்"புலிகளின் குரல்" வானொலி.ஆரம்பத்தில் யாழப்பாணத்தில் மட்டும் கேட்க முடிந்த புலிகளின் குரல் வானொலி இன்று வன்னியில் இருந்து ஒலிபரப்பாகிறது.

இன்று,திருகோணமலை,மட்டக்களப்பு,யாழ்ப்பாணம் மற்றும் இலங்கையின் பல பகுதிகளில் கேட்கமுடிவதுடன் இந்தியாவின் சில பகுதிகளிலும் கேட்கமுடியும்.

அத்துடன் 2000ம் ஆண்டிலிருந்து என்று நினைக்கிறேன் "தேதுன்ன" என்ற பெயரில் புலிகளின் குரல் வானொலி தனது சிங்கள மொழி ஒலிபரப்பினையும் ஆரம்பித்து சிங்கள மக்களுக்கு தமது நோக்கங்கள்,கொள்கைகள்,செய்திகள் போன்றவற்றை அறிந்து கொள்ள வசதிசெய்ததுடன் இலங்கையின் அரச,சிங்களஆங்கில ஊடகங்களின் முகத்திரையினை கிழிக்க ஆரம்பித்தது.பல சிங்கள மக்கள் மட்டும் அல்ல இராணுவத்தினர் கூட இதன் மூலம் சரியான களநிலவரங்களை அறிந்து கொண்டனர்.

1900 ஆம் ஆண்டுக்கு முன்னர் "நிதர்சனம்"என்ற பெயரில் சிலமணிநேர தொலைக்காட்சி ஒலிபரப்பினை புலிகள்நடத்தியதும் பின்னர் இலங்கைக்கு வந்த இந்திய படையினரால் அவை அழிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.


இப்போது புலிகளின் குரல் வானொலி இணையத்தின் வாயிலாக உலகெங்கினும் காலடி எடுத்து வைத்திருக்கிறது. புலிகள் "புலிகளின் குரல்"வானொலியினை நடாத்திவருவதுடன் "தமிழீழ வானொலி" என்று இன்னுமொரு வானொலி சேவையினையும் நடாத்தி வருவது குறிப்பிடத்தக்கது.இரண்டினையும் இணையத்தின் வாயிலாக கேட்கமுடியும்.அத்துடன் வன்னியில் இருந்து "ஈழநாதம்" எனும் பத்திரிகையினையும் மட்டக்களப்பில் இருந்து ஈழநாதம் மட்டக்களப்பு பதிப்பு வெளிவருவதும் குறிப்பிடத்தக்கது.அதனையும் இன்று இணையத்தின் வாயிலாக பார்க்கலாம்.

அத்துடன் புலிகளின் உத்தியோகபூர்வ பத்திரிகையான "புலிகளின் குரல்" இன்று இணையத்தில் கிடைக்கிறது.மேலும் புலிகளின் ஒளிக்கலைப் பிரிவினரின் "அருச்சுணா" இணையத்தளம்.அதுபோலவே மேலும் பல துறைகளும் கூட இணையத்தில் கிடக்கிறது. இன்று கிடைக்கும் வசதிகள், வாய்ப்புக்கள்,யுத்தநிறுத்தம் போன்றவை இதற்கு துணை நிற்பதுடன்,புலம்பெயர்ந்த தமிழர்கள் பலரின் பங்களிப்பையும் இதில் காணமுடிகிறது. இணையம்வழி இவை வருவதற்கு இதுவரையில் தடையில்லை.த.தே.தொலைக்காட்சி ஜரோப்பாவில் ஒளிபரப்பப்பட்ட வரையில் சரி. இப்போது கிழக்காசியா எண்டால் கண்டிப்பாக இலங்கையில் தெரியும். இந்தியாவிலு........ம் தெரியும்.

ஆக அங்குதான் நிற்கிறான் சூரியன்.இனி பெரியாண்ணன் என்ன சொல்லப்போகிறார்?அம்மாக்கள் என்ன சொல்லப்போகின்றனர்?இன்று வெள்ளமென இலங்கை,இந்தியா நாடுகளை நோக்கி பாய்ந்துவரும் மேற்குல நாட்டு ஊடகங்கள் தராத பாதிப்புக்களை அல்லது பாதிக்காத இறையாண்மையினை இந்த ஒளிபரப்பு பாதிக்கும் என எழும் குரல்களை நாளையிலிருந்து கேட்கலாம்.நிச்சயமாக கேட்கலாம்.

கண்டிப்பாக எதிர்ப்புகள் வரும்.எதிர்ப்புக்களையும் மீறி ஒளிபரப்புவார்களா?அல்லது ....... எதற்கும் பொறுத்திருந்து பார்ப்போம்.சில வாரங்களில் விடை கிடைக்கும்.


இன்று இணையத்தில் கிடைக்கும் புலிகளின் தளங்கள்.

புலிகளின் சமாதான செயலகம்.

"விடுதலைப்புலிகள்" பத்திரிகை

ஈழநாதம்.

ஈழநாதம் மட்டக்களப்பு பதிப்பு.

"புலிகளின் குரல்" வானொலி

நிதித்துறை

நீதித்துறை.

விளையாட்டுத்துறை

தினசரிச் செய்திகள்.

ஈழம்வெப்

"அருச்சுணா" ஒளிக்கலைப்பிரிவு



Sunday, July 24, 2005

சில நேரங்களில் சில நினைவுகள்.





1983 ஜூலையில் இலங்கை எங்கினும் நடைபெற்ற தமிழர்கள் மீதான வன்முறைகளின்போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் இவை.இப்போது இருக்கும் வசதிகள்அன்றைய நாட்களில் இருந்திருக்குமானால்இன்னும் நிறைய படங்கள்,விபரங்கள் எமது வருங்கால சந்ததிக்கு கிடைத்திருக்கும்.ஆனால் தூரதிர்ஸ்டமாக 83 இன வன்முறை தொடர்பான புகைப்படங்கள் அரிதாகவே இருக்கின்றன.செய்திகள் வந்த அளவு புகைப்படங்கள் பெரிதாக இல்லை.கொலைவெறிதாக்குதல்கள் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது எந்த தமிழனாவது கமராவைத் தூக்கிக்கொண்டுபோய் புகைப்படம் எடுத்துக் கொண்டிருக்கமுடியாதல்லவா?அதுதான் 83 ம் ஆண்டு நடந்தது.

வெளிவந்த படங்கள்கூட பல பிறநாட்டு பத்திரிகையாளர்களால் எடுக்கப்பட்டது என்பது அறிந்ததே.யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவந்த ஈழநாடு பத்திரிகையினர் நிறைய அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த பல புகைப்படங்களை சேர்த்துவைத்திருந்ததாகவும் ஆனால் பின்னாளில் இலங்கை,இந்தியப் படையினரினரால் ஈழநாடு பத்திரிகை தீக்கிரையாக்கப்பட்டபோது நிறைய படங்கள் அழிந்து போனதாகவும் நான் கேள்விப்பட்டதகவல்கள் சொல்கின்றன.

நான் கூட நிறைய புகைப்படங்கள்இப்படியான சம்பவங்கள் தொடர்பாக சேர்த்துவைத்திருந்தேன்,ஆனால் ஊரைவிட்டோடி அகதியாகி வேறு ஊரில் வாழ்ந்துபின்பு அந்த ஊரையும் விட்டோடி வேறு ஊரில் வாழ்ந்துபின்பு அங்கிருந்தும் இடம்பெயர்ந்து இப்படி நாடுகள் நகரங்கள் தாண்டி இப்போது இந்த தேசத்தில் என்னிருப்பு.இப்படி ஓடி,ஓடி வந்ததில் நான் சேகரித்த புகைப்படங்கள் யாவும் என்கை விட்டு போய்விட்டன.சிலவற்றினருமைஅவை எம்மிடம் இருக்கும் போது தெரிந்தாலும்நாம் அவற்றை சரியாக உணருவதில்லை.ஆனால் அவை எமை விட்டு அகன்றபின்னர் தான் அவற்றின் அருமை எம் மீது இருள் மாதிரி கவிகின்றது.இப்போது எனக்கு ஒரு பாடல் வரி ஞாபகத்தில் வருகிறது.
இது கூட.....................

"அழகான அந்த பனைமரம் அடிக்கடி நினைவில் வரும்"