Monday, October 09, 2006

இந்திய தலைவர்களை சந்திக்கும் முயற்சியின் பின்ணணியில்......

ந்தியத் தலைவர்களை சந்திப்பதற்கான தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு எம்.பி.க்களின் முயற்சிகளின் போது நடந்தவை பற்றி மறவன்புலவு க.சச்சிதானந்தன் எழுதி தினக்குரல் பத்திரிகையில் தொடராக வந்து கொண்டிருக்கும் கட்டுரையினை தேவை கருதி இங்கு தருகிறேன்.
தினக்குரல் நிறுவனத்தினருக்கும் திரு மறவன்புலவு சச்சிதானத்துக்கும் எனது நன்றிகள்.


ஈழத் தமிழரின் அடிமை வாழ்வு நீங்க வேண்டும்.

ஈழத் தமிழருக்கும் இந்தியாவுக்கும் உள்ள உறவுகள் சீரடைய வேண்டும்

என்ற இரு நோக்கங்களுடன் என்னாலான மிகச் சிறிய அளவிலான முயற்சிகளைச் சென்னையிலிருந்து மேற்கொண்டு வருகிறேன்.

ஈழத் தமிழரின் பாதுகாப்பும் தன்னாட்சியும் ஈழத் தமிழரிடமே இருக்க வேண்டிய தேவை.

1987 -91 கால, ஈழத் தமிழர்- இந்தியப் பொருந்தா நிகழ்வுகளை மறப்பது,

இந்தியாவில் அகதிகள் நலம்,

சிங்களப் படைகளுக்கு இந்தியா உதவக் கூடாதமை,

இந்திய நலன்களுக்கு மாறாக ஈழத் தமிழர் செயற்படார் என்ற உறுதி,

தமிழ் பாராளுமன்ற உறுப்பினரை இந்தியா அழைத்துப் பேசுவது,

தமிழகத்தின் பல்வேறு துறைகளிலும் உள்ள தமிழர்களை ஈழத்துக்கு அனுப்பவது,

இந்த நோக்கங்களை ஒட்டிய கருத்துருவாக்கக் கட்டுரைகள், ஒலி/ஒளிபரப்புகள்,

இந்த நோக்கங்களை முன்னெடுக்கச் செல்வாக்குள்ள தமிழகத் தமிழர் மற்றும் இந்தியர்களிடம் ஈழத் தமிழர் பால் நல்லெண்ணத்தை உருவாக்குவது போன்றவை என் முயற்சிகளுட் சிலவாக அமைந்து வந்தன.

இந்தப் பின்னணியில் 28.08.2006 முதலாக 23.09.2006 வரையுள்ள மூன்று வார காலப் பகுதியில் நிகழ்ந்தவற்றைப் பதிவு செய்ய வேண்டியது என் கடன். கடந்த ஒன்றரை ஆண்டுகளாகவே சென்னைக்கு வரும் பொழுதெல்லாம் பழம் பெரும் விடுதலைத் தியாகியும் பாராளுமன்ற உறுப்பினராகிய மாவை சேனாதிராசா என்னுடனேயே தங்குவார். ஈழத் தமிழர் - இந்திய உறவுகள் மேம்பாடடையும் முயற்சிகளுக்கு எனக்கு ஒத்தாசையாக இருப்பார். இதற்காகச் சில மாதங்களுக்கு முன்னர் ஒரு முறை இருவருமாகத் டில்லிக்கும் போய் வந்தோம்.

தமிழகச் சட்ட சபைத் தேர்தலுக்கு முன் பெப்ரவரியில் ஒரு சுற்றாகவும், தேர்தலுக்குப் பின் ஜூலையில் ஒரு சுற்றாகவும் தமிழகத் தலைவர்களைச் சந்தித்தோம். பெப்ரவரியில் நடந்த பல்வேறு சந்திப்புகளின் செய்திகள் வெளிவராதவாறு காத்துக் கொண்டோம். தேர்தலுக்குப் பிந்தைய ஜூலை மாதச் சந்திப்புக்கு இரா.சம்பந்தனும் வருவார் என மாவை சேனாதிராசா என்னிடம் தெரிவித்திருந்தார். எனவே தமிழகத் தலைவர்களிடம் அதைக் கடிதமாக முன்கூட்டியே தெரிவித்திருந்தேன். தமிழக முதல்வர் கலைஞர், எதிர்க் கட்சித் தலைவர் ஜெயலலிதா, மார்க்சிய பொதுவுடமைக் கட்சி இவை தவிர, ஏனைய கட்சித் தலைவர்கள், ஈழத்தவர் இவரின் வரவை ஆவலோடு பார்த்திருப்பதாக என்னிடம் தெரிவித்தனர்.

ஒப்பியவாறு இரா.சம்பந்தன் வரவில்லை. எனவே, மாவை சேனாதிராஜாவும் நானும் இச் சந்திப்புகளைத் தொடர்ந்தோம். சந்திப்புகளின் செய்திகளும் வெளிவந்தன. இரா.சம்பந்தன் தனது குடும்பச் சூழ்நிலையே வர இயலாமைக்குக் கராணம் எனத் தெரிவித்திருந்தார். அக் காலத்தில் அவர் இந்தியாவில் இருந்தார். அவருக்குப் பதிலாக வேறொரு பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை அவர் அனுப்பியிருக்கலாம். இந்தச் சந்திப்புகளின் தேவை, அவசியம் பற்றி இரா. சம்பந்தன் போதுமான அக்கறை கொண்டிருக்கவில்லையென அப்பொழுது எனக்குத் தோன்றியது.
அடுத்த சுற்றுச் சந்திப்புகளுக்காக, இரா. சம்பந்தன் தலைமையிலான பாராளுமன்ற உறுப்பினர் குழுவுடன் 10.8 முதலாகச் சென்னையில் தங்கி இருக்கப் போவதாகவும் ஏற்பாடுகளைச் செய்யுமாறும் மாவை சேனாதிராசா என்னைத் தொலைப்பேசியில் கேட்டுக் கொண்டார். அவர்கள் அனைவரும் சென்னை வந்து சேர்ந்த பின் தமிழகத் தலைவர்களைத் தொடர்புகொள்வதே ஏற்றது எனக் கருதிய நான், காத்திருந்தேன். முந்தைய அநுபவம் பாடமாக இருந்தது.

23.08.2006 அன்று மாவை சேனாதிராசா சென்னைக்கு வந்தார். விரைவில் இரா. சம்பந்தன் தலைமையிலான குழு வந்து விடும் என எனக்குக் கூறினார்.

28.08.2006 மாலை 5 மணியளவில் வைகோவின் செயலர் அருணகிரி என்னிடம் வந்திருந்தார். அவர் வெளியிடவுள்ள புத்தகம் ஒன்றின் பக்கங்களைப் பார்த்துத் தவறுகள் இருப்பின் திருத்தித் தருமாறு கேட்க வந்திருந்தார். ஈழத் தமிழர் தொடர்பாகப் பல நூல்களை அவர் வெளியிட்டு வருகிறார். அவற்றை நான் பார்த்துக் கொடுப்பது வழமை. தினமணியில் வெளிவந்த `மன்னிப்போம்.. மறப்போம் அரவணைப்போம்' என்ற என் கட்டுரையைத் தம் கட்சி ஏடான சங்கொலியில் மீள் பிரசுரம் செய்யுமாறு வைகோ தன்னிடம் சொன்னதாகவும், வைகோ என்னிடம் பேச விரும்பியதாகவும் அருணகிரி தெரிவித்தார்.

சென்னை வரும் போது வைகோவைச் சந்திக்கிறேன் எனத் தெரிவித்தேன். உடனே வைகோவுடன் தொடர்பு கொண்டு, 29.8 மாலை சென்னையில் சந்திப்பதற்கு அருணகிரி ஏற்பாடு செய்தார். மாவை சேனாதிராசாவும் அப்போது உடனிருந்தார். நீங்களும் வாருங்கள் என மாவை சேனாதிராசாவிடம் கேட்டேன். நீங்களே சந்தித்து விட்டு வாருங்கள் என்றார்.
29.8 மாலை 6 மணிக்கு வைகோவை அவரது இல்லத்தில் சந்தித்தேன். மறுநாள் 30.8 பிரதமரைச் சந்திக்க டில்லி செல்வதாகக் கூறிய வைகோ, பலவற்றை என்னுடன் பேசினார்.

சிங்களத் தலைவர்கள் அடிக்கடி டில்லிக்கு வந்து பிரதமரையும் கட்சித் தலைவரையும் சந்தித்துப் போகிறார்கள். தமிழர் தரப்பு நியாயங்களைக் கூற ஈழத் தமிழ்த் தலைவர்களையும் சந்திக்க ஏற்பாடு செய்யுங்கள் என்றேன். ஏற்கனவே குறித்து வைத்திருக்கிறேன், கட்டாயம் பேசுவேன் என்றார்.
ஈழத் தமிழ்த் தலைவர்களைச் சந்திக்கப் பிரதமர் நேரம் ஒதுக்க வேண்டும் என வைகோ, நெடுமாறன் ஆகிய இருவரும் மிகத் தீவிரமாகவும், மருத்துவர் இராமதாஸ், கி.வீரமணி போன்ற பலர் அடிக்கடியும் போராட்டங்கள் நடத்துவதும் அறிக்கைகள் வெளியிடுவதும் தமிழ் நாட்டில் கடந்த பல மாதங்களாகவே நடைபெற்று வந்த நிகழ்வுகள், ஈழத் தமிழ்த் தலைவர்களைச் சந்திப்பது பற்றி முன்பொரு முறை பிரதமரிடம் வைகோ பேசிய பொழுதும், கவனிக்கிறேன் எனப் பிரதமர் வைகோவிடம் கூறியிருந்தார்.

31.08.2006
30.8 பிரதமர்- வைகோ சந்திப்பின் போது, ஈழத் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களைப் பிரதமர் சந்திக்க ஒப்புக் கொண்டுள்ளார் எனவும் வைகோவின் பேட்டி 31.8 காலை இதழ்களில் வந்திருந்தது. அன்று காலை 11 மணிக்கு வைகோ என்னைத் தொலைபேசியில் அழைத்தார். மாவை சேனாதிராசாவையும் அழைத்துக் கொண்டு பிற்பகல் 2 மணிக்குத் தன்னைச் சந்திக்க வருமாறு கேட்டார். நானும் மாவை சேனாதிராசாவும் அவரிடம் சென்றோம்.

எம்மிடம் பல விபரங்களைச் சொன்ன அவர், பிரதமர் உங்களைக் கட்டாயம் சந்திப்பார். அதற்கான உறுதியை என்னிடம் தந்துள்ளார். ஆணையையும் என் முன்னே இட்டார். நீங்கள் கடிதம் எழுதித் தொலைநகலாக உடனேயே அனுப்புங்கள் என்றார்.

வீடு திரும்பியதும் இரா.சம்பந்தனை தொலைபேசியில் மாவை சேனாதிராசார தொடர்பு கொண்டார். இந்தியாவில் இரா.சம்பந்தன் இருப்பதாகவும் 4.9 சென்னை வருவார் என்றும் அவர் வந்ததும் கடிதத்தைத் தயாரித்து அனுப்பலாம் என அவரே சொன்னதாகவும் மாவை சேனாதிராசா என்னிடம் கூறினார். அவர் வரும் வரை காத்திருக்க வேண்டாம், நீங்கள் உடன் கடிதத்தை அனுப்புங்கள் எனக் கேட்டேன். மாவை சேனாதி ராசா உடன்படவில்லை.

நான் மனம் நொந்தேன். தமிழ்ச் சாதியின் தலைவிதி இதுவா? என மாவை சேனாதிராசாவிடம் கேட்டேன். தமிழ் நாட்டில் பலர் இதற்காகப் பல போராட்டங்கள் நடத்தியிருக்கிறார்கள், கருத்துருவாக்கத்தில் பலர் தம் நேரத்தை, பொருளைச் செலவிட்டிருக்கிறார்கள். தமிழகத்தின் அழுத்தத்தை உணர்ந்த பிரதமரும் ஒப்புகிறார். நீங்கள் கடிதம் அனுப்புவது முறை, அதை ஏன் பின் போடுகிறீர்கள்? எனக் கேட்டேன். இரா. சம்பந்தன் வரட்டும் என்று முடிவாகச் சொல்லிவிட்டார்.

01.09.2006
மாவை சேனாதிராசாவும் இரா. சம்பந்தனும் சந்திப்புக் கேட்டு, இருவரும் ஏற்கனவே கையொப்பமிட்டுக் கலைஞருக்கு எழுதிய கடிதத்தை வெள்ளிக்கிழமை காலை , கலைஞர் வீட்டுக்கு கொடுத்தனுப்பினோம்.
மதியம் கவிஞர் காசி ஆனந்தனும் மனைவியாரும் என்னைத் தற்செயலாகச் சந்திக்க வந்திருந்தனர். என் ஆற்றாமையையும் ஆதங்கத்தையும் அவர்களிடம் சொன்னேன். ஈழத் தமிழர் நியாயங்களை இந்தியப் பிரதமரிடம் எடுத்துச் சொல்ல நல்ல வாய்ப்பு நழுவி விடும் போலத் தெரிகிறதே என்றேன். வாங்கோ சச்சி, நெடுமாறனிடம் போவோம் எனக் கவிஞர் கூறினார். நேரே நெடுமாறனிடம் போனோம். விபரத்தைச் சொன்னேன்.ஏன் இப்படிச் செய்கிறார்கள்? கவலைப்படாதீங்க, எல்லாம் நல்லபடி நடக்கும் எனக் கூறி எங்கள் மூவரையும் வழியனுப்பினார்.

அன்று இரவு மாவை சேனாதிராசாவுக்குத் தொலைபேசியில் செய்தி வந்தது. 4.9 இல் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வந்து விடுவார், உடன் பிரதமரைச் சந்தியுங்கள் என்பதே செய்தியின் சாரம் என மாவை சேனாதிராசா என்னிடம் சொன்னார்.

இரா. சம்பந்தன் 5.9 இரவு தான் வருகிறார், அவர் வந்த பின்பு முடிவு செய்வோம் என்பதையும் மாவை சேனாதிராசா சொன்னார்.
2.9 காலை நெடுமாறன் என்னிடம் தொலைபேசியில் பேசினார். கவலைப்படாதீங்க, எல்லாம் நல்லபடி நடக்கும். கஜேந்திர குமார் பொன்னம்பலம் நாளையோ மறுநாளோ வருவார். வந்ததும் டில்லிக்குப் போகலாம் என்றார். மாவை சேனாதிராசாவுக்கும் அத்தகைய செய்தி இரவே வந்துள்ளதை அவரிடம் கூறினேன்.

இதற்கிடையில் வைகோ என்னை அழைத்தார். 9.9 க்கு முன் சந்திப்பு நிகழ வேண்டும். 10.9 பிரதமர் வெளிநாடு போக உள்ளார். போனால் 20.9 க்குப் பின்னர் தான் நாடு திரும்புவார் என்றார் வைகோ.

கலைஞரோ தமிழ் நாட்டின் முதலமைச்சர். மூத்த அரசியல் வாதி. ஏற்கனவே ஈழத் தமிழரின் சில செய்கைகள் அவரைப் புண்படுத்தியுள்ளன. அவரைச் சந்திக்காமல் பிரதமரைச்சந்திப்பது முறையல்ல. அவருடைய வாழ்த்துகளுடன் செல்வதே ஈழத் தமிழருக்கு நல்லது, எனவே, அந்தச் சந்திப்புக்கு முயல்வோம் என்றார் மாவை சேனாதிராசா.

காலை வேளைகளில் தொலைபேசியில் அழைத்ததால் கலைஞருடன் நேரில் பேசும் வாய்ப்புகள் உண்டு. என்னோடு உள்ள பரிச்சயத்தால் அவர் பேசுவதுண்டு. எனவே 3.9 காலை 6 மணியளவில் கலைஞர் இல்லத்துக்கு அழைத்தேன். அவர் உடற் பயிற்சியில் இருக்கிறார் என்றார்கள். குழப்பாதீர்கள் பின்னர் அழைக்கிறேன் எனக் கூறிய நானே நேரில் போய்ப் பேசுவதே முறை எனக் கருதினேன். அன்று முற்பகல் உதவியாளர்களிடம் பேசினேன். உங்கள் கடிதத்தை இன்னமும் பார்க்கவில்லை என்றார்கள்.

எனக்கும் மனம் கேட்கவில்லை. இரா.சம்பந்தன் வரும் வரை பார்த்திருப்பதா? மாவை சேனாதிராசா கடிதம் எழுதினால் என்ன? 3.9 காலை 9 மணிக்கு மருத்துவர் இராமதாஸின் உதவியாளரைத் தொலைபேசியில் அழைத்தேன். மருத்துவர் இராமதாஸே நேரில் பேசினார். பத்து மணிக்குச் சந்திப்போம் என்றார். மாவை சேனாதிராஜாவும் நானும் சென்றோம். 22 உறுப்பினருள் 10 உறுப்பினராவது சேர்ந்து செல்ல வேண்டும். பிரதமரிடம் விபரங்களைச் சொல்லுங்கள்; அழுத்தம் திருத்தமாகச் சொல்லுங்கள் என வாழ்த்தி அனுப்பினார்.

இரா. சம்பந்தன் சென்னைக்கு வராமல் எதையும் செய்ய முடியாது என்பதில் மாவை சேனாதிராசா முடிவாக இருந்தார்.

04.09.2006
8.9 அல்லது 9.9 இல், பிரதமரைச் சந்திக்கப் போகிறோம். உங்களைச் சந்திக்காமல் பிரதமரைச் சந்திப்பதும் முறையல்ல. 7.9 காலை எமக்கு நியமனம் தாருங்கள் எனக் கேட்டு 4.9 நாளிட்ட கடிதம் ஒன்றை மாவை சேனாதிராசா எழுத அதையும் 1.9 கடிதப் படியையும் இணைத்துக் கொண்டு, 4.9 காலை 9 மணிக்கு நேரில் கலைஞரின் இல்லம் சென்றேன். அங்குள்ள உதவியாளர் யாவரும் அன்புடன் என்னை வரவேற்று, கடிதங்களைப் பெற்றுக் கொண்டு, உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறினர். மாலையில் தொடர்பு கொள்ளுங்கள் என்றனர். மாவை சேனாதிராசாவும் நானும் மாறி மாறிக் கலைஞரின் உதவியாளருடன் தொடர்பு கொண்டவாறாயிருந்தோம். சாதகமான பதில் வரவில்லை.

06.09.2006

5.9 மாலை சம்பந்தன் சென்னை வந்தார். 6.9 காலை, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் பத்மினி சிதம்பரநாதன் இருவரும் சென்னை வந்தனர். சிவாஜிலிங்கம் சென்னையிலேயே தங்கியிருந்தார். மாவை சேனாதிராசா, சிவாஜிலிங்கம், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், பத்மினி சிதம்பர நாதன் நால்வரும் 6.9 மதியம் எனதில்லத்தில் கூடிப் பிரதமரின் சந்திப்பு பற்றிப் பேசினோம். தமிழீழ விடுதலைப் போராட்டத்தை இந்தியா அங்கீகரிக்குமாறு பிரதமரிடம் கோருவது என்ற கருத்தில் அனைவருக்கும் ஒற்றுமை இருந்தது.

இரா. சம்பந்தன் சென்னையில் இருந்தாராயினும் அவர் இந்த நால்வரையும் 6.9 அன்று சந்திக்கவில்லை. இவர்களும் அவரைச் சந்திக்கவில்லை.
நெருப்பை மடியில் கட்டிக் கொண்டிருப்பது போன்ற உணர்வு எனக்கு. பிரதமர் சந்திக்க ஒப்புதல் தந்துள்ளார். சந்திப்புக்கு நேரம் ஒதுக்கக் கேட்டு நாம் அவருக்குக் கடிதம் அனுப்பவில்லை. 30.8 இல் ஒப்புதல் தந்தவர், 10.9 இல் வெளிநாட்டுக்குப் புறப்பட இருப்பவர், ஏதோ நாம் கேட்ட உடனே நேரம் ஒதுக்குவார் என்ற துணிவு 6.9 வரை எமக்கு இருப்பது அசாத்தியத் துணிவு தான் எனக் கருதினேன். ஆனாலும் உந்துதலை விடாமல் கடிதம் அனுப்புவோமா எனத் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருந்தேன். விதியே விதியே தமிழ்ச் சாதியை என்ன செய்தாய்? என்ற என் மனக் குமுறலை அதே சொற்களால் இந்த நால்வரிடம் கூறினேன்.

7.9 காலை எனது இல்லத்தில் இந்த ஐவரும் சந்திப்பது என இரா. சம்பந்தனிடமிருந்து தொலைபேசி செய்தி வந்தது.

07.09.2006
காலை 10.30 மணியளவில் எனது இல்லத்தில் இந்த ஐவரும் கூடினர். நானும் அங்கிருந்தேன்.
பிரதமர் எங்களைச் சந்திக்க ஒப்பமாட்டார், எனவே, நியமனம் கேட்டு அவருக்கு கடிதம் எழுதுவதில் பயனில்லை என்றார் இரா. சம்பந்தன். மற்ற நால்வருக்கும் அந்தக் கருத்தில் உடன்பாடில்லை. அதை அவர்கள் ஒவ்வொருவராக விளக்கிக் கூறினர்.

பிரதமர் அலுவலகத்தில் என்ன செய்வார்கள் என முன்கூட்டியே முடிவு செய்வதற்கு எமக்கு உரித்தில்லை. பிரதமர் அலுவலகம் செய்ய வேண்டிய முடிவை நாம் இங்கிருந்து செய்ய வேண்டாம். மூன்று படி நிலைகளாக முயல்வோம். பிரதமருக்குக் கடிதம் எழுதுவோம், கலைஞருக்குக் கடிதம் எழுதுவோம், பிரதமரிடம் என்ன கேட்கப் போகிறோம் என்பதையும் எழுதி வைத்திருப்போம் என அழுத்தம் திருத்தமாகச் சம்பந்தனிடம் கூறினேன்.
தமிழகத்தின் முதல்வர் கலைஞர், அவரை மீறி, அவரின் ஒப்புதல் பெறாமல் பிரதமரிடம் போவது முறையல்ல. கலைஞரின் ஒப்புதலைப் பெறுவோம் அதன் பின்னர் பிரதமரிடம் செல்வோம் என்றார் இரா. சம்பந்தன்.

தமிழகச் சட்டசபைத் தேர்தலுக்கு முன்னர், பெப்ரவரி 2006 இல், மாவை சேனாதிராசாவும் நானும் கலைஞரைச் சந்தித்து நீண்ட நேரம் உரையாடியிருந்தோம். கலைஞருடைய வழிகாட்டலில் டில்லியுடன் தொடர்பு கொள்ள விரும்பகிறோம் என்று அப்பொழுது அவரிடம் கூறினோம். நீங்கள் நேரே டில்லியுடன் தொடர்பு கொள்ளுங்கள், என அவர் அப்பொழுது சொன்னார். அதற்குரிய வலுவான காரணங்களையும் கலைஞர் எமக்கு விளக்கினார்.

ஈழத் தமிழருக்கு நன்மை எனில் கலைஞர் ஒரு பொழுதும் குறுக்கே நிற்கமாட்டார். ஈழத் தமிழர் தமக்குரியதை விரைந்து பெற வேண்டும் என்பதே கலைஞரது உளமார்ந்த விருப்பம். அவர் டில்லிக்கு எங்களைப் போகச் சொல்லி விட்டார். எனவே, கலைஞரைக் காரணம் காட்டிச் சந்திப்பைத் தவிர்க்க வேண்டாம் எனக் கூறினேன். அந்தச் சந்திப்பில் நிகழ்ந்ததை இரா. சம்பந்தனுக்கும் மற்ற நால்வருக்கும் மாவை சேனாதிராசா விரித்துக் கூறினார்.

மதியம் 1.30 மணியளவில் கலைஞருக்கான தமிழ்க் கடிதத்தை முதலில் நான் எழுதினேன். பிரதமருக்கான ஆங்கிலக் கடிதத்தை இரா. சம்பந்தன் எழுதினார். இரண்டையும் நானே தட்டச்சுச் செய்து கொடுத்தேன். சம்பந்தன் கையெழுத்திட்டுத் தந்தார். பிரதமரின் இல்ல மற்றும் அலுவலகத் தொலைநகல் எண்களைத் தேடிக் கொடுத்தேன். தொலைநகலை அனுப்பி விட்டதாக மாவை சேனாதிராசா எம்மிடம் வந்து கூறிய பொழுது 7.9.2006 பிற்பகல் 2.30 மணிக்கு கலைஞருக்கு தொலைநகலாகக் கடிதம் போய்ச் சேர்ந்தது.

சரி பிறகு சந்திப்போம் எனச் சம்பந்தன் எழுந்தார். பிரதமருக்கு என்ன சொல்லப் போகிறோம் என்பதைத் தெளிவாக்கி, எழுத்தில் தயாரித்து முடிப்போம் என நான் வலியுறுத்த, சம்பந்தன் மீண்டும் அமர்ந்தார். எழுதினார். தட்டச்சு நிலையில் சரி பார்த்த பிறகு போகலாம் என்றேன். கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அந்தக் கடிதத்தைத் தட்டச்சுச் செய்ய முன் வந்தார். தட்டச்சுப் படிகளுள் ஒன்று இரா. சம்பந்தனிடம் மற்றது கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திடம் என்ற நிலையில் அன்றைய கூட்டம் கலைந்தது.
தொலைநகலில் பிரதமருக்குக் கடிதம் அனுப்பினோம் என்பதை வைகோவுக்கும் நெடுமாறனுக்கும் கூறினேன். வைகோ தென் மாவட்டமொன்றில் இருந்தார். பின்னர் அன்றிரவு அவராகவே என்னுடன் பேசினார். நாளை சந்திப்பு நிகழலாம் போலத் தெரிகிறது என்றார்.


7.9.2006
காலை 10.30 மணிக்குக் கூடிய பொழுது, எங்களுள் பலருக்கு இருந்த கருத்தொற்றுமையில், பிரதமரைச் சந்திக்கும் வரை இது தொடர்பான செய்திகள் வெளிவரக் கூடாதென்பதாகும். ஆனால், கூட்டமாக நாம் கலந்துரையாடிக் கொண்டிருந்த பொழுதே, சிவாஜிலிங்கத்தின் தொலைபேசிக்குச் செய்தியாளர்களிடமிருந்து அழைப்பகள் வந்தன. அது மட்டுமல்ல, அந்த அழைப்புகளுக்கு இரா. சம்பந்தன் பதில் கூற வேண்டுமெனவும் சிவாஜிலிங்கம் விரும்பினார்.

பிரதமரைச் சந்திப்பது பற்றிய செய்திகளை, பிரதமர் சந்திப்பு முடியும் வரை எங்கள் தரப்பிலிருந்து எந்தக் கசிவும் இருக்கக் கூடாதென முடிவு செய்தோம்.
8.9.2006 காலை 10.30 மணி. பிரதமர் அலுவலகத்திலிருந்து என்னைத் தொலைபேசியில் அழைத்தனர். பாராளுமன்ற உறுப்பினர்கள் எத்தனை பேர் உள்ளீர்கள்? விமான நிலையத்திலிருந்து எத்தனை கி.மீ. தூரத்தில் உள்ளீர்கள்? அடுத்த விமானம் எப்பொழுது? விபரங்களைத் தயாரித்து என்னை அழைக்கமுடியுமா? எனக்கேட்டுத் தன் பெயரையும் தொலைபேசி எண்ணையும் அந்த உதவியாளர் என்னிடம் தந்தார்.

பயண ஒழுங்குகளையும் பிரதமர் அலுவலகத் தொடர்பையும் நான் கவனிக்க உறுப்பினரைத் திரட்டும் முயற்சியில் மாவை சேனாதிராசா ஈடுப்பட்டார். விமானச் செலவுகள் பற்றி உடனடியாகக் கவலை வேண்டாம் நான் இப்பொழுது பொறுப்பு நிற்கிறேன். பிறகு பார்ப்போம் என்றேன்.
பிற்பகல் 1.45 விமானம் உள்ளதையும் பயணச் சீட்டுகள் பெறமுடியும் என்பதையும் மதுராடிராவல்ஸ் வி.கே.டி. பாலன் உறுதி செய்தார். இந்த விபரங்களை நான் மாவை சேனாதிராசாவிடம் சொல்லி, ஏனைய உறுப்பினரைத் திரட்டி மதியம் 12 மணி அளவில் விமான நிலையம் போக ஆயத்தமாகச் சொன்னேன். பிரதமர் அலுவலகத்திற்கும் இந்தத் தகவலைச் சொன்னேன். தாம் சொல்லும் வரை விமான நிலையம் போக வேண்டாம் எனவும் ஆயத்தமாக இருக்கும் படியும் பிரதமர் அலுவலக உதவியாளர் என்னிடம் கூறினார்.

இதற்கிடையில் அடுத்து விமானம் எத்தனை மணிக்கு என விசாரித்தேன். மாலை 6 மணிக்கு என்றார்கள். அதையும் பிரதமர் அலுவலகத்தில் கூறிய பொழுது சந்திப்பதாயின் 1.45 விமானத்திலேயே வந்துவிட வேண்டும் பிரதமர் அலுவலகத்துள் செயலாளர் போயுள்ளார். வந்ததும் சொல்கிறேன் காத்திருங்கள் என்றார் பிரதமர் அலுவலகத்தின் அந்த உதவியாளர்.
கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் பத்மினி சிதம்பரநாதனும் பயணப் பொதிகளுடன் எனதில்லம் வந்து சேர்ந்தனர். சம்பந்தனும் சிவாஜிலிங்கமும் நேரே விமான நிலையம் வந்துவிடுவதாகக் கூறினர். தொடர்பாக இருங்கள் நாம் சொன்னதும் புறப்படலாம் என ஆயத்த நிலையில் அவர்களை வைத்திருந்தோம்.

1 மணியளவில் பிரதமர் அலுவலகத்திலிருந்து அழைப்பு எனக்கு வந்தது. நியமனத்தை உறுதிசெய்ய முடியவில்லை. வைகோவுடன் தொடர்பாக இருங்கள் அவருக்கு விபரம் சொல்கிறோம். வெளிவிவகார அமைச்சிடமும் பேசி வருகிறோம் என்றார்கள்.

இதற்கிடையில் மாவை சேனாதிராசாவுடன் கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகத்தினரும் தொடர்பாக இருந்தனர். அவர்களும் இந்தச் சந்திப்புப் பற்றி உற்சாகமாகப் பேசி ஊக்குவித்து வந்தனர்.

உடனுக்குடன் வைகோவிற்கு விபரம் சொன்னோம். அவரும் பிரதமர் அலுவலகத்தோடு தொடர்பு கொண்டு வந்தார். 8.9 இரவு ஒரு கூட்டத்திலிருந்த வைகோவைப் பிரதமர் அலுவலகம் அழைத்து, வெளிநாட்டுப் பயணத்தின் பின்னரே சந்திப்பு என்பதை எம்மிடம் தெரிவிக்கக் கூறினார்கள். இதை எம்மிடம் தெரிவித்த வைகோ, மறுநாள் 9.9 காலை இரா. சம்பந்தனைச் சந்திக்க விரும்புவதாக என்னிடம் கூறினார். இதை மாவை சேனாதிராசாவிடம் தெரிவித்தேன். குழுவாகப் போவதென முடிவாயிற்று.

டில்லிப் பயணத்துக்காகப் பயணப் பொதிகளோடு எனதில்லம் வந்த பத்மினி சிதம்பரநாதன் வெளியே விடுதியில் தங்கியிருக்க விருப்பமில்லை என்றதால் எனது இல்லத்திலேயே தங்குவது என முடிவாயிற்று. மாவை சேனாதிராசா ஏற்கனவே எனது இல்லத்தில் தங்கியிருந்தார்.

பிரதமரின் வெளிநாட்டுப் பயணத்துக்கு முன் சந்திப்பு நிகழ முடியவில்லை. 30.8 இல் ஒப்பிய பிரதமருக்கு அடுத்தநாளே கடிதம் அனுப்பி இருப்பின் சூட்டோடு சூடாகச் சந்திப்பு நடந்திருக்கலாம். ஈழத் தமிழரின் அண்மைய வரலாற்றின் திருப்பு முனையாக அமைய வேண்டிய சந்திப்பு இவ்வாறு நழுவியமைக்கு யார் காரணம்?

7.9 பிற்பகல் 2.30 மணிக்கு கடிதம் அனுப்புகிறோம். 8.9 காலை 10.30 மணிக்குப் பிரதமர் அலுவலகம் எம்மோடு தொடர்பு கொள்கிறார்கள். அத்தகைய வேகம் பிரதமர் அலுவலகத்திற்கு இருந்தது. 30.8 இல் ஒப்பியதற்கு 7.9 இல் கடிதம் எழுதும் வேகம் ஈழத் தமிழர் தரப்பில் இருந்தது.

09.09.2006
முற்பகலில் வைகோவைச் சந்திக்க இரா.சம்பந்தன் மாவை சேனாதிராசா, கஜேந்திரகுமார் பொன்னம்பலம், பத்மினி சிதம்பரநாதன் ஆகியோரை அழைத்துச் சென்றேன். சிவாஜிலிங்கம் வரவில்லை. செய்தியாளரிடம் அவர் கொண்ட தொடர்புகள் பற்றியும் தேவையற்ற கசிவுகள் பற்றியும் எச்சரிக்கையாக இருக்க முடிவு செய்ததன் விளைவாகவே அவர் அழைக்கப்படவில்லைப்போலும் என நான் ஊகித்தேன்.

தொடரும்)

No comments: