Friday, December 11, 2015

வெள்ளத்தால் பரிதவிக்கும் தாய்த் தமிழக உறவுகளுக்கு ஓர் மடல்!

வந்தாரை வாழ வைக்கும் தாய்த் தமிழகம் -இன்று
வானத்துச் சுனாமியால் தனித் தீவானதே
தொப்புள் கொடி உறவுகளான
எம் சொந்தங்கள் படும் அவல நிலை கண்டு
எம் மனங்கள் துயர் தாளாமல் வெதும்பி உருகுகிறதே …!
வரலாறு காணாத மனிதப் பேரவலத்தால்
வந்தது மனிதப் பேரவலம்
இயற்கைத் தாயே … பதில் சொல்லு
ஏனடி உனக்கு இத்துணை கோபம் ?
போதுமம்மா…! போதும்..!
எம் உறவுகள் நிம்மதியாய் வாழ
இனியேனும் வழி விடு
இன மத மொழி பேதமின்றி
எல்லோர் மனதிலும் இடம்பிடித்த
சென்னை மாநகரம் -இன்று
யார் கண் பட்டதோ…!
தரையாய் இருந்து வந்த நிலங்கள்
கடலாய் மாறிட ….
திகைத்துப் போன மக்கள் கூட்டம்
இன்று செய்வதறியாது திகைத்து நிற்கும் பரிதாப நிலை
ஈழத் தமிழருக்கு ஏதும் இன்னலென்றால்
முதலில் ஒலிக்கும் குரல் உங்களுடையதே-அதை
எப்படி நாம் மறப்போம் ?
எம் மண்ணின் விடிவுக்காக நீங்கள் செய்த உன்னத தியாகங்களுக்கும்
தொடர்ச்சியான போராட்டங்களுக்கும்
நாம் என்ன தான் கைமாறு செய்வோம் ?
கரை காணாத் துயர் கடலுள் அகப்பட்டு
கதி கலங்கிப் போயிருக்கும்
ஒட்டு மொத்த எம் உதிர உறவுகளும்
விரைவில் வெள்ளத்தால் மீள
எல்லோருக்கும் பொதுவான இறைவனிடம் மன்றாடுகின்றோம்
வளம் கொழிக்க வாழ்ந்த எம் உறவுகள் -இன்று
ஒரு வேளை உணவுக்காகக்
கையேந்தும் அவல நிலை கண்டு
எங்கள் எல்லோர் விழியிலும்
கண்ணீர் மழை கொட்டுகிறதே !
கடல் எல்லை நம்மைப் பிரித்தாலும்
உணர்வு எல்லையால் நாங்கள்
என்றும் ஒன்றுபட்டவர்களே…!
அதனால் தான் மீண்டும் மீண்டும் சொல்கிறோம்
எப்போதும் நாங்கள் உங்களுடனேயே இருக்கிறோம்
உங்கள் துயரத்தில் நாங்களும் பங்கு கொள்கிறோம் உறவுகளே ..!
ஆறாத் துயருடன் : குறிஞ்சிக் கவி செ -ரவிசாந்,
வீரமனை, குப்பிளான்.யாழ்ப்பாணம் 

No comments: