Friday, December 18, 2015

இளையராஜா என்ன கேள்விக்கு அப்பாற்பட்டவரா..?

கொளத்தூரில் முத்துகுமார் உடல் கிடத்தப்பட்டிருந்தது. சுற்றிலும் ஆயிரக்கணக்கான உணர்வாளர்கள் பல்வேறு உணர்வலைகளுடன் நின்று கொண்டிருந்தார்கள்.
பத்திரிகை நண்பர்கள் நாங்கள் சிலபேர் ஒரு சுவர் ஓரம் நின்று நடப்பதை கவனித்துக் கொண்டிருந்தோம். அப்போது ஆங்கில ஊடகம் ஒன்றிலிருந்து ஒரு பெண் நிருபர் வந்தார்.

அவருக்கு அங்கு நடப்பது எதுவும் புரியவில்லை. ஏதோ ஒரு சினிமா ரசிகனின் தீக்குளிப்பு என்றே நினைத்திருப்பார் போலிருக்கிறது.
மேடையில் முழங்கிக் கொண்டிருந்த வைகோவை யாரென்று கேட்டார் (நல்லவேளை.. வைகோவுக்கு அந்த மேட்டர் இன்னும் தெரியாது.. wink emoticon ) ஈழம் தொடர்பாக உணர்வு சார்ந்து ஒரு போராட்டம் நடைபெறுகிறது.
அதுபற்றிய எந்த பார்வையும் இல்லாத ஒரு நிருபரை அந்த ஊடகத்தின் செய்தி ஆசிரியர் அனுப்பி வைக்கிறார் என்றால் மறுநாள் அந்த செய்தி என்ன லட்சணத்தில் வந்திருக்கும் என்பதை புரிந்து கொள்ளலாம்.
நாங்கள் பத்திரிகையாளர்கள்.. என்ன வேண்டுமானாலும் கேட்போம் என்று பொங்கும் ஊடகப்போராளிகள் பெரும்பாலானவர்களின் லட்சணம் இப்படிதான் இருக்கிறது.



இப்போது இளையராஜா விசயத்திற்கு வருவோம்.. இரண்டு முண்டங்கள் பாத்ரூமில் பாடியதை இணையத்தில் வெளியிட்டதை தொடர்ந்து ஏற்பட்டிருக்கும் சர்ச்சை தொடர்பாக இளையராஜாவிடம் கருத்து கேட்கிறார் அந்த நிருபர். அந்த கேள்வி தன்னிடம் கேட்கப்பட்டது அவமானமாக உணர்ந்ததால் இளையராஜா கோபப்படுகிறார். அவ்வளவுதான் விசயம்.
அபத்தமான நிருபரின் கேள்வி.. பெரியவரின் உணர்ச்சிவசப்பட்ட கோபம் என்றளவில் இதை கடந்து சென்றிருந்தால் பிரச்னை இல்லை.
ஆனால் இதுதான் சாக்கு என்று சிலபேர் தங்களின் வன்மத்தை தீர்த்துக்கொள்ள இதை பயன்படுத்துகிறார்கள்.
ஒரு இசை பற்றிய சர்ச்சைக்கு அத்துறையை சார்ந்த ஒருவரிடம் கேள்வி கேட்பது தவறா என்று ரொம்ப அறிவாளித்தனமாக மடக்கிவிட்டதுபோல் வேறு கேட்கிறார்கள்.அந்த பெரியவாக்களுக்கெல்லாம்,சர்ச்சைக்குரிய அந்த குப்பைக்கு முதலில் ஒரு பாடல் எனும் அங்கீகாரம் கொடுப்பதே அபத்தமானது என்பதை சொல்லிக்கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன் மைலார்ட்.
அதற்கு இசைத்துறையை சேர்ந்த ஒரு மூத்தவரிடம் கருத்து கேட்பது அதைவிட அபத்தமானது. அதுவும் என்னமாதிரியான நிகழ்வில் சென்று அந்த கேள்வி கேட்கிறோம் என்ற புரிதல் வேண்டும்.
அதுதவிர.. ஒருவனுக்கு  எல்லாவற்றிற்கும் கருத்து சொல்லியே ஆக வேண்டும் என்ற கட்டாயமா என்ன.
அப்படியானால் இளையராஜா என்ன கேள்விக்கு அப்பாற்பட்டவரா. பாடலை ரசிக்கவும் கைதட்டவும் நாங்கள் வேண்டும். ஆனால் கேள்வி கேட்க கூடாதா.
நிச்சயமாக.. கேள்வி கேட்க வேண்டும்.. கேள்வி கேட்பதே பத்திரிகையாளனின் அடிப்படை. ஆனால் அந்த கேள்வியில் ஒரு அடிப்படை இருக்க வேண்டும். அதோடு கேள்வி அதிகாரத்தை நோக்கி கேட்கப்பட வேண்டும்.
இளையராஜாவின் பாடலை ரசிக்க ரசிகனாக இருந்தால் போதும். ஆனால் அவரிடம் கேள்வி கேட்க அவரின் இசை பங்களிப்பும் இசைத்துறை குறித்த அறிவும் அவசியம்.

ஒரு துறை சார்ந்த பிரபலத்தை நேர்காணலுக்காக சந்திக்கப்போகிறோம் என்றால் முதலில் அந்த நபர் குறித்து கொஞ்சம் படித்துவிட்டு செல்ல வேண்டும். எதுவுமே படிக்காமல் கேள்வி கேட்க போனால் இப்படிதான் குப்பை பாடல்கள் குறித்து கருத்து கேட்கும் கேள்விகள்தான் வரும்.
சரி.. நாங்கள் பத்திரிகையாளர்கள்.. அப்படிதான்டா கேப்போம் என்று பொங்கல் வைத்து போராளி அவதாரம் எடுப்பவர்களுக்கு..
இணையத்தில் தினசரி ஏதேனும் ஒரு ஹோம் மேட் வீடியோக்கள் ரிலீஸாகிக் கொண்டேதான் இருக்கிறது. ஷகிலா, ரேஷ்மா படங்கள் எல்லாம் வெளியாகின்றன.
சினிமாக்காரர்கள் தான் ஆட்சியாளர்கள் என்பதற்காக இந்த படங்கள் குறித்தெல்லாம் உங்க கருத்தை சொல்ல முடியுமா.. என்று ஜெயாவிடமோ கருணாவிடமோ ரஜினியிடமோ கமலிடமோ போய் கேள்வி கேட்பார்களா என்ன.
அட.. அதுகூட ஆபாசமான விசயம் விடுங்கள்..
போயஸ் தோட்டத்திற்கு சென்று ”முதல்வர் அவர்களே.. வெளியே வாருங்கள்.. மழை வெள்ளத்திற்கு மக்களுக்கு பதில் சொல்லுங்கள்.. பத்திரிகையாளர்களை சந்தியுங்கள்” என்று சொல்ல தமிழ்நாட்டில் பத்திரிகை போராளிகள் எவருக்காவது நெஞ்சுல மஞ்சா சோறு இருக்கிறதா என்ன.

காலையில் அவசரமாக வேலைக்கு கிளம்பிக்கொண்டிருக்கிறீர்கள். “உங்க பக்கத்துவீட்டுக்காரன் பொண்டாட்டியை எவனோ வச்சுருக்கானாமே.. அவர்களின் கள்ளக்காதல் பற்றி கருத்து சொல்ல முடியுமா..” என்று உங்கள் மூக்குக்குள் மைக்கை சொருகி கேட்டால் கோபப்படுவீர்களா மாட்டீர்களா..?
அதுபோல்தான் ஒரு படைப்பாளிக்கு வரும் இயல்பான உணர்ச்சியின் வெளிப்பாடாக இளையராஜா அந்த அபத்தமான கேள்விக்கு கோபப்பட்டார்.. விசயம் அவ்வளவுதான். இதில் விவாதிக்கவோ சர்ச்சைக்கோ இடமில்லை.
72 வயதான ஒரு பெரியவரிடம் எப்படியான ஒரு இயல்பு இருக்குமோ அதுதான் இளையராஜாவிடமும் இருக்கிறது. அதை கடந்து தான் ராஜாவை அவரின் ரசிகர்கள் பலர் ரசிக்கிறார்கள்.
அதே சமயம் இளையாராஜவும் அந்த கேள்வியை புன்முறுவலுடன் கடந்து சென்றிருக்கலாம்.
தமிழ்நாட்டில் எக்கச்சக்கமாக இருக்கும் பத்திரிகையாளர் அமைப்புகள் இதுபோன்று அபத்தமான கேள்விகளால் உருவாகும் சர்ச்சைகளை தவிர்க்க, கொஞ்சம் பத்திரிகையாளர்களுக்கு அடிப்படை விசயங்களை போதிக்க சண்டே கிளாஸ்களை எடுத்து உருப்படியாக ஏதாவது செய்யலாம்.
-கார்ட்டூனிஸ்ட் பாலா
18-12-15

10 comments:

bandhu said...

நூற்றுக்கு நூறு சரியான கருத்து.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

//அதே சமயம் இளையாராஜவும் அந்த கேள்வியை புன்முறுவலுடன் கடந்து சென்றிருக்கலாம்.//இதே! என் நிலை.
அல்லது "நிவாரணப் பணியில் முழுமையாக உள்ளதால்,கேட்கவில்லை - கேட்டு விட்டு உங்களுக்குக் கூறுகிறேன். எனவும் கூறியிருக்கலாம்.

Vijaya Kumar said...

from Oneindiatamil.com
முன்னாள் முதல்வர் ஜானகி எம்ஜிஆர் ராமாவரம் தோட்டத்தில் சடலமாகக் கிடக்கிறார். அஞ்சலி செலுத்த வந்த முன்னாள் அமைச்சர் திருநாவுக்கரசர், அழுதபடி மலர் மாலை வைத்துவிட்டு வெளியில் வர, அப்போதுதான் காமிரா வாங்கியிருந்த ஒரு நாளிதழ் புகைப்படக்காரர், 'சார் சார்.. அந்த மாலையை எடுத்து இன்னொரு வாட்டி போடுற மாதிரி போஸ் கொடுங்க சார்... ' என்று கேட்க, எப்படி ரியாக்ட் பண்ணுவதென்றே தெரியாமல் கடுப்புடன் காரை நோக்கிப் போனார் திருநாவுக்கரசர். தா. பாண்டியன் ஒரு தொலைகாட்சி நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறார். அவரை பேட்டி எடுக்க வந்த பெண் நிருபர் 'உங்க பேர் என்ன சார்' என்று கேட்ட பேட்டியை ஆரம்பித்திருக்கிறார். தன்னை யார் என்றே தெரியாத நிருபருக்கு பேட்டி கொடுக்க வேண்டுமா என்று கோபத்தில் எழுந்த வந்து விட்டாராம் தா.பா. அது ஒரு எப்எம் ரேடியோ நிகழ்ச்சி. அமரர் எம்எஸ்வியை ஒரு பெண் பேட்டி காண்கிறார். "எம்எஸ்வி சார்... உங்க பேரு, உங்க பேக்ரவுண்ட் பத்தி நீங்களே சொல்லுங்களேன்," என்று கூற... "என்னப் பத்தி நான் என்ன சொல்றது... என்னை யாருன்னு கூட உனக்குத் தெரியாதாம்மா?" என்று வேதனையுடன் திருப்பிக் கேட்கிறார். இதே போல் மனோரமா மரணமடைந்த போது அவருக்கு மலர் வளையம் வைக்கக்கூட விஐபிகளை போக விடாமல் அவர்கள் தலையில் கேமாரவை இடித்து தள்ளினர். இன்னொரு விஐபி மாலை வைத்து விட்டு திரும்பினார் "சார்... வயர் கட் ஆகி விட்டது. மறுபடியும் மாலையை வைங்க," என்று அதட்டல் போட்டதும்... எல்லை மீறலின் உச்சம். இப்போது தொலைக்காட்சி மீடியாக்களுக்கு வரும் 'கத்துக்குட்டி' நிருபர்கள், ஒளிப்பதிவாளர்கள், புகைப்படக்காரர்கள் பண்ணும் கேலிக் கூத்து இவையெல்லாம். எந்தக் கேள்வியை எப்போது கேட்க வேண்டும், யாரிடம் கேட்க வேண்டும் என்கிற குறைந்தபட்ச நாகரீகம் இல்லாமல் நடந்து கொள்கிறார்கள். இது பல காலமாகவே தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. காரணம், அலுவலக நெருக்கடி, நடைமுறை யதார்த்தம் என்று பல காரணங்கள் சொல்வார்கள். ஆனால் அவை ஏற்கத்தக்கதல்ல. மழை வெள்ளத்தால் சென்னை மயிரிழையில் உயிர் தப்பியிருக்கும் இந்த நேரத்தில், தத்தளித்த பல ஆயிரம் மக்களை தன்னார்வலர்கள் பலரும் தாங்களாகவே முன் வந்து உயிரைப் பணயம் வைத்து காப்பாற்றியிருக்கிறார்கள். குப்பைகளை அகற்றி நோய் பரவாமல் தடுத்திருக்கிறார்கள். பல லட்சம் செலவு செய்து உணவு அளித்திருக்கிறார்கள். மழை வெள்ளம் வடிந்த பிறகு அந்த உதவும் உள்ளங்களை மறந்து விடக்கூடாது என்பதற்காக அவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் தனியார் தொண்டு நிறுவனம் அவர்களுக்கு நினைவு பரிசு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்து. கனத்த மனதோடு பாதிக்கப்பட்டவர்கள் கூடியிருந்த அந்த நிகழ்ச்சியில் ஒரு டிவி நிருபர் ‘சிம்பு எழுதிய பீப் சாங் பற்றி உங்க கருத்து என்ன?' என்று இளையராஜாவிடம் கேட்டு எல்லோரையும் முகம் சுளிக்க வைத்தார். அங்கிருந்த பத்திரிகையாளர்கள் பலரும் இந்த முதிர்ச்சியற்ற செயலை கண்டு அதிர்ச்சியடைந்தனர். வீடுகள், உறவுகள், உடமைகள் என்று அனைத்தையும் இழந்து நிற்கும் அபலைகளுக்கு ஆறுதல் கூற வந்த இடத்தில் ஒரு மரியாதைக்குரிய மனிதரிடம் இந்த கேள்வியை கேட்ககூடாது என்கிற குறைந்தபட்ச நாகரிகம் கூட இல்லாதவர்களை பணியில் வைத்திருப்பது அந்த டிவிக்கு வந்த சோதனை. அப்படியென்றால் இந்த கேள்வியை கேட்கவே கூடாது என்று அர்த்தமல்ல. இந்த இடத்தில் கேட்கக்கூடாது என்பது பக்குவப்பட்ட பத்திரிகையாளருக்கு தெரியும். தனியே இசைஞானியிடம் பேட்டிக்கு நேரம் வாங்கிகொண்டு போய் கேட்க வேண்டும். அப்படியொன்றும் திறவாத இரும்புக் கதவுகள் இல்லை அவருடைய ஸ்டுடியோவில். இங்கு கேட்பது சாவு வீட்டில் சாப்பாடு கேட்டு சண்டை போடுவது போன்ற மோசமான செயல். மைக்கை நீட்டுவது மட்டும் பத்திரிகையாளரின் வேலை அல்ல.

Vijaya Kumar said...

உதவிக்கு கையும் நீட்ட வேண்டும் இதை புதிதாக வந்து மீடியாக்களில் பணியாற்றுபவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்! யாரையும் கேள்வி கேட்கலாம் என்ற மாபெரும் சலுகை மீடியாக்காரர்களுக்கு மட்டுமே கிடைத்திருக்கிறது. அந்த சலுகையை பொறுப்பற்ற முடியில் பயன்படுத்தப் பார்த்தால், 'அறிவிருக்கா' மட்டுமல்ல... இன்னும் பல மோசமான எதிர்வினைகளை மீடியா உலகம் எதிர்கொள்ள நேரும். அந்தக் கேள்வியை அந்த நிருபர் கேட்ட முறையும், அதற்கு இளையராஜா எதிர்வினையாற்றிய பிறகு, அந்த நிருபர் காட்டிய எகத்தாளமும்... நிச்சயம் இது பத்திரிகை தர்மமன்று. கல்லூரியின் குட்டிச் சுவற்றில் அமர்ந்தபடி போகிற வருகிற பெண்களை வம்புக்கிழுக்கும் பொறுக்கித்தனத்துக்கு சற்றும் சளைத்ததல்ல! இந்தக் கேள்வியை இவர்கள் கேட்டிருக்க வேண்டியது மாண்புமிகு தமிழக முதல்வரிடம். ஒரு பெண்ணான உங்கள் ஆட்சியில் இப்படி கேவலமான பாடல்கள் வருகின்றனவே... டாஸ்மாக் எதிர்ப்பு பாடல் பாடிய கோவனை கைது செய்த உங்களால், இந்த மாதிரி பீப் பாடல்களை எப்படி அனுமதிக்க முடிகிறது... இவர்கள் மீது நடவடிக்கை என்று என்று கேட்டிருக்க வேண்டும். அவர் பிரஸ் மீட் வைக்காவிட்டாலும், போயஸ் தோட்டத்திலோ, தலைமைச் செயலகத்திலோ மறித்து நிற்க வைத்துக் கேட்டிருக்க வேண்டும். 'தில்' இருக்கா... ராஜா கேட்ட மாதிரி அதற்கான அறிவிருக்கா இந்த நிருபர்களுக்கு? அட, குறைந்தபட்சம், புகார்களை வாங்கிக் கொண்ட பிறகும் மவுனமாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கும் காவல் துறை அதிகாரிகளிடம்? ம்ஹூம்! மழை வெள்ளம் மக்களின் வாழ்க்கையையே புரட்டிப் போட்டிருக்கிறது. மாநிலத்துக்கே மறுசீரமைப்பு தேவைப்படுகிறது. இந்த நேரத்தில் ஒரு முகமாக நின்று அரசுக்கு அழுத்தம் கொடுத்து மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த வேண்டிய பொறுப்பில் உள்ள மீடியாக்காரர்கள், வெற்றுப் பரபரப்புக்காக கண்டபடி கேட்பது, தங்கள் தான்தோன்றித்தனத்தையே ஒரு செய்தியாக்கி குளிர்காய்வது போன்றவை உண்மையிலேயே அநாகரீம்தான். ஆளாளுக்கு அறிக்கை விட்டுக் கொண்டிருக்காமல், மீடியா தன்னை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டிய நேரம் இது!

வேகநரி said...

//இளையாராஜவும் அந்த கேள்வியை புன்முறுவலுடன் கடந்து சென்றிருக்கலாம்.//

இப்படியான ஒரு நிலமையில் ரொம்பவே அபந்தமாகவே கேள்வி கேட்கும் ஒரு பத்திரிக்கையாளரை நோக்கி புன்முறுவலுடன் கடந்து ....

விஜயகுமார், நன்றாகவே சொன்னீர்கள்.

Anonymous said...

அப்படி என்ன அபத்தத்தை கண்டீர்கள் நிருபரின் கேள்வியில் ???

சகல விதமானவரிடமும், சர்ச்சைக்குரிய பாடல் பற்றி கருத்து கேட்கப்படுகிறது. யாரிடம் கேட்டால் அபத்தம் ??, யாரிடம் கேட்டால் உத்தமம் ??? பட்டியல் இருந்தால் அனுப்புங்கள் ....நிருபர்களுக்கு உபயோகமாயிருக்கும்.

சர்ச்சை பாடல்/ இசை சார்ந்திருப்பதால், பெரியவர் இந்தக்கேள்வியை எதிபார்த்திருக்க வேண்டும். இளையராஜா கோபப்படுவதில் எந்த நியாயமுமில்லை.

எந்த கேள்வியை யாரிடம் கேட்டல் தகும் அல்லது தகாது என்று ஆளாளுக்கு நாட்டாமை செய்வதை தவிருங்கள்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

வேகநரி!
விஜய குமார் பல சம்பவங்களைக் குறிப்பிடுகிறார். அவை நடக்காமல் இல்லை.
ஆனால், இக் கேள்வி ஒரு அபத்தமான கேள்வி என நீங்கள் குறிப்பிடுவதன் காரணம் புரியவில்லை.
தமிழகமே அதைப் பாடல், இசை என அங்கீகரித்து விட்டது.அதனால் தான் இவ்வளவு கூத்து. நீங்களும் நானும் அபத்தம் என்பது எடுபடுமா?
எனவே அத் துறை சார்ந்த ஒரு பெரும் புகழ் மிக்க நிபுணர் இளையராஜா, அவரிடம் கேட்டதில் தப்பேயில்லை. அதுவும் பேட்டி முடிவில்!
அதற்கு " ஒனக்கு அறிவிருக்கென , எந்த அறிவை வைத்து கண்டு பிடிச்ச" என்ற ஒரு "அறிவார்ந்த" போன்ற கேள்வி கேட்டு, ஒலக நாயகன் குழம்பி, குழப்புவாரே! அப்படி ஞானியும் குழப்பிவிட்டார்.
இப்போ ஞானி - பாடல் பிடிக்காமல் கோபப்பட்டாரா? அல்லது அற்புதமான இசைக் கொடையை இந்த ரசனையற்ற ஜன்மங்கள் ரசிக்காமல் புறக்கணிக்கிறதெனக் கோபப்பட்டாரா?
எனக்கு இந்த உண்மை ! தெரிந்தாகனும்.

நா.முத்துநிலவன், புதுக்கோட்டை said...

'அதே சமயம் இளையாராஜவும் அந்த கேள்வியை புன்முறுவலுடன் கடந்து சென்றிருக்கலாம்" -இதைக் கடைசியிலாவது சொன்னீர்களே! நீங்கள் போட்ட போட்டில் ஒரேயடியாக ஞானி போலவே, “அறிவிருக்கா?” என்று கேட்டதும் சரிதான் என்று சொல்லிவிடுவீர்களோ? என்று அஞ்சினேன். நல்ல வேளை காப்பாற்றி விட்டீர்கள். அதுசரி, இசைஞானியிடம் இசையமைப்புப் பற்றியும் கேட்கக் கூடாது என்றால்..? வேறு என்னதான் கேட்பது என்றும் ஒரு பட்டியல் தயாரித்துத தர வேண்டுகிறேன். நன்றி

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

இளையராஜாவை என் பதிவுகளில் பலமுறை விமர்சித்திருக்கிறேன். தனிப்பட்ட முறையில் ராஜா வழங்கிய 1000க்கும் மேற்பட்ட போரவைகளும் ரகுமான் வழங்கிய 50 டன் அரிசியும் இன்னும் சிலரும் செய்த உதவிகள் பாராட்டுக்குரியவையாகவே கருதுகிறேன்.அந்த விழா நிவாரண உதவி செய்தவர்களை பாராட்டுவதற்காக நடைபெற்றது. அது சார்ந்த கேள்விகள் கேட்பதுதான் நாகரீகமானது. கோபம் நியாயமானது என்றாலும் இளையராஜா கொஞ்சம் நிதானத்தை கடை பிடித்திருக்கலாம்.
வயதான பலரின் பேச்சுக்களை கேட்கும்போது ஒரு குறிப்பிட்ட வயதிற்குப்பின் பொறுமையும் சகிப்புத் தன்மையும் குறைந்து விடுகிறது என்ற உண்மை புலப்படுகிறது.அவரது பேச்சினால் அவர் செய்த உதவிகள் மறக்கடிக்கப் பட்டுவிட்டன.
இந்நிகழ்வு நிருபர்களுக்கு மட்டுமல்லாது பிரபலங்களுக்கும் ஒரு பாடமே.

கரந்தை ஜெயக்குமார் said...

இசைஞானியிடம் இசையமைப்புப் பற்றியும் கேட்கக் கூடாது என்றால்..?