Saturday, May 16, 2015

கொத்து ரொட்டி -002

குமுதினி ஒரு குடும்பப்பெண் .கணவன்  மற்றும் இரண்டு பிள்ளைகள் கொண்ட அளவான குடும்பம் .கணவன் ஒரு கனரக வாகனம்  ஓட்டும் சாரதி மா தத்தில்அரைவாசி நாள் அமெரிக்காவில் இருப்பார் . மிகுதிநாள் தான் கனடாவில் வீட்டில் நிற்பார் .குமுதினிக்கு துணை பிள்ளைகளும் மாமியாரும் தான்  .மிகுந்த பக்தி கொண்ட குமுதினி பெரும்பாலான  நாட்களில் அருகில் உள்ள கோயிலுக்கு போவது ,தொண்டுகள் செய்வது  இப் படி  அவரின் காலங்கள் இனிமையாக  சென்றுகொண்டிருந்த நிலையில்  கோடை  காலம் வந்தது .

அந்த கோயிலுக்கு  சோதிடம் சொல்வதற்காக ஒரு  சோதிடரை தமிழகத்தில் இருந்து வரவழைத்து இருந்தார்கள் .அவரிடம் சோதிடம் கேட்பதற்காக பலரும் கட்டணம் செலுத்தி  சோதிடம் கேட்டுபோனார்கள் .சோதிடத்தில் ஆர்வமும்  நம்பி க்கையும் கொண்ட குமுதினி  சோதிடம் கேட்டபோது சோதிடர் ஒரு பெரிய குண்டை குமுதினியின் தலையில் போட்டார் .இன்னும்  மூன்று மாதங்களில் உனது கணவன் ஒரு சாலை விபத்தில் மரணம் அடைவார் என்று . இதைகேட்ட குமுதினி க்கு இரவெல்லாம் நித்திரை இல்லை .

மறுநாள்  சோதிடரிடம் சென்று கேட்டார்  இதற்கு ஏதாவது பரிகாரம் செய்து எனது கணவனின்  உயிரினை காப்பாற்ற முடியுமா  என்று கேட்க சோதிடர் அடுத்த குண்டை குமுதினியின் தலையில் போட்டார் . நான் சில பூஜைகள் செய்யவேண்டும் அத்துடன் ஒரே ஒரு நாள் என்னுடன் உறவு கொள்ளவேண்டும் இது தான் பரிகாரம்  இதை நீ செய்தால் நான் உனது கணவனை உயிர் ஆபத்தில் இருந்து காப்பாற்றுவேன் என்று சொன்னார் .

இரவு முழுவதும் குமுதினிக்கு நித்திரை இல்லை .மறுநாள் கணவனுக்காக ஒரே ஒரு முறை தானே பரிகாரம் செய்வது என்று முடிவெடுத்த குமுதினி சோதிடர்  இடம் சென்று சம்மதம்  சொல்ல ஒரு சுபநாளில் "பரிகாரம் " முடிந்தது .சில நாட்களின் பின்னர் குமுதினியை  அழைத்த  சோதிடர் முதல் முறை செய்த "பரிகாரம் " வெற்றி பெறவில்லை எனவே மீண்டும் ஒரு முறை "பரிகாரம் "செய்யவேண்டும் என் சொல்ல குமுதினி அரை மனதோடு சம்மதிக்கிறார் ."பரிகாரம்" நடந்து முடிந்தது  சில நாட்களின் பின்னர் கோயிலுக்கு வரும் குமுதினியிடம் மீண் டும்   சோதிடர்  இதே கதையை  சொல்ல  இப்போதுதான் குமுதினிக்கு சந்தேகம் வருகிறது .

இந்த விடையத்தினை கணவனிடம் சொல்ல மனைவியை கோபிக்கும் கணவன் காவல் துறையிடம் இந்த விடையத்தினை  கொண்டு செல்ல சோதிடர் கைதாகிறார் .இனி அவரின் தண்டனை காலம் முழுவதையும்  சிறையில் கழித்துவிட்டுஅதன் பின்னர்  அவரின் சொந்தநாட்டுக்கு அனுப்பப்படும் சோதிடர்  இனி  இந்தநாட்டுக்கு திரும்பி வர முடியாது .
இதில் யாரை நோவது  கனடா வந்து கூட இன்னமும் சோதிடம் அது இது  என்று நம்பிய குமுதினியையா? அல்லது கோடை காலம் பிறந்தால் இப்படியான சோதிடர்களை வரவழைத்து காசு பார்ப்பவர்களையா? இந்த சோதிடர்களை நம்பி  செல்லும் மக்களையா ?

இன்றைய தினம் ஒரு பத்திரிகையில் இப்படி இரு விளம்பரத்தினை பார்த்ததின் விளைவு இந்த பதிவு .


------------------------------------------------------------------------------------------------------------------------------

எனது வலைபதிவில் அதிகம் பார்க்கப்பட்ட பக்கங்கள் என்னும் தலைப்பில் சிலபதிவுகளை நீங்கள் பார்க்கமுடியும் .இதில் நான் இட்ட பதிவுகள்  அதிகமாக பார்க்கப்பட்டவை  மாறி மாறி தோன்றிக்கொண்டு இருப்பதை காணலாம் .இதை கவனித்தவர்களுக்கு  தெரியும் இதில் ஒரு பதிவு நான் எழுதிய நாட்களில் இருந்ததே முன்னணியில் இருக்கிறது .ஆபாச பின்னூட்டங்கள்! ஒரு பார்வை! என்னும் பதிவுதான் அது .

இது நான் எழுதி  கிட்ட தட்ட  பதினைந்து வருடங்கள் ஆகப்போகிறது JULY -05-2005 இல் எழதி இருந்தேன் .இன்று மட்டுமா  முன்னணியில்,இனிவரும் காலங்களிலும் முன்னணியில் தான் இருக்கும் .எப்படி என்கிறீர்களா  ?  காமலோகம், அந்தரங்கம் இந்த இரண்டு  சொற்களை கூகிளில் தமிழில்  தேடுபவர்களுக்கு எனது அந்த பதிவு  சிக்குகிறது .இதை நான் எழுத கூடாது எனத்தான் எண்ணியிருந்தேன் .இப்போது எழுதி விட்டேன்  இதிலும் ஒரு சிக்கல் இருக்கிறது  என்னவென்றால் இனி அந்த தளங்களை தேடுபவர்களுக்கு  கூகிள்  இந்த பதிவையும்  காட்டப் போகிறது .இனி இந்த பதிவும் அதிகம் பார்கப்ப்ட்டவையின் கீழ் வரப்போகின்றது.

சரி  கூகிளில் தமிழ் என தேடினால் கொஞ்சக்காலங்களின் முன்னர்  என்ன வந்தது என்பது பலருக்கும் தெரிந்திருக்கும் .இப்போது பரவாயில்லை ,உங்கள் தரமான பதிவுகளுக்கு தமிழ் என  அடையாளங்கள்(லேபல் ) வையுங்கள். தமிழ் என தேடினால் தரமானவை முன்னணியில் வந்து நிற்கும் .



*********************************************************************************


எனது பதிவுகளை பெரும்பாலும் ஆங்கில கலப்பு இல்லாமல் சுத்த தமிழில்தான்  எழுதி வருகிறேன் .ஒரு நாளில் கிட்டதட்ட பதினாலு மணித் தியாலங்கள் ஆங்கிலத்தில் தான் உறவாடுகிறேன் .அலுவலகத்தில் ,வெளியில். .ஆங்கிலத்தினை ஆங்கிலமாகவும் தமிழை தமிழாகவும் தான் கதைப்பேனே  ஒழிய இரண்டையும் இணைப்பதில்லை .பாவம் அவை ,இரண்டும் பிழைத்துக்கொள்ள வேண்டும் அல்லவா .எனவே  தமிழை தமிழாகவே கதையுங்கள் .ஆங்கிலமும் வேண்டாம் ,இந்தி "ஜி "யும் வேண்டாம் . பாவம் தமிழ் பிழைத்துக் கொள்ளட்டும் .


***********************************************************************************

கடந்த வருடம் எனது மாமனார் இந்தியாவில் இருந்து வந்து  இருந்தார் .எனவே அவருக்காக  தமிழ் தொலைக்காட்சி எடுப்போம் என்று தீர்மானித்தபோது என்ன சனல் எடுப்பது என்ற போது ஏற்கனவே இருந்த  கனேடிய தமிழ் தொலைகாட்சிகளுடன் விஜய் தொலைக்காட்சியையும் மேலதிகமாக எடுப்போம் என்று முடிவெடுத்தோம் .அவர் போனபின்பும்  விஜய்  தொலைகாட்சி ஓடிக்கொண்டிருக் கின்றது
விஜய் தொலைக்காட்சி வெளிநாடுகளுக்கு என்று சிங்கப்பூரில் இருந்து ஒளிபரப்புகின்றனர் என நினைக்கிறேன் .எந்த ஒரு விளம்பரங்களும் இல்லை .ஒன்று இரண்டு நல்ல நிகழ்ச்சிகளை தவிர மற்றவை எல்லாம்
சினிமா சினிமா தான் .

நான் பார்ப்பவை சுப்பர் சிங்கர் ,நீயா நானா ,டொக்டர் டொக்டர்  இதில் சுப்பர் சிங்கர் முடிந்து விட்டது ..H.D தரத்தில் இல்லை .இதனால் தெளிவாகவும் இல்லை .நான் விஜய் தொலைகாட்சி எடுத்தபோது ஆகா விளம்பரங்கள் பார்க்கலாம் என்றுதான் எடுத்தேன் ,விளம்பரங்கள் இல்லை என்பதில் எனக்கு ஏமாற்றம் தான் சன்னில் விளம்பரம் வருகிறது என சொன்னாலும் சன் தொ.காட்சி பார்க்க விருப்பம் இல்லை .

சில தினங்களுக்கு முன்னர் ஒரு நண்பரோடு கதைத்தபோத விஜயில் விளம்பரங்கள் இல்லை என்று சொன்னபோது அவரும் சொன்னார் தனக்கு விளம்பரங்கள் பார்க்கத்தான் விருப்பம் என்று
அகா என்னைபோல ஒருவர் இருக்கிறாரே என்று எனது மனதில் ஒரு சந்தோசம் .


**********************************************************************************


இது சில காலங்களுக்கு முன்னர் நடந்தது எனது நண்பனின் மகன் நண்பனின் சாரதி அனுமதிப்பத்திரத் தினை எடுத்து பார்த்துவிட்டு சொன்னாராம் உங்கள் சாரதி அனுப்திபத்திரத்தில் ஒரு  கெட்ட வார்த்தை இருக்கிறது என்று குழம்பிப்போன நண்பன் கேட்டிருக்கிறார் .அது என்ன என்று மகன் சொல்லியிருக்கிறார் செக்ஸ் என்று போட்டு இருக்கு என்று தலையில்அடித்துக்கொண்டு  யார் சொன்னது என்று  நண்பன் கேட்க

.தனது நண்பன் சொன்னான் என்றாராம் நண்பனின் மகன் இது நடந்தது நன்பனின் மகன் முதலாவது தரம் படிக்கும் போது .காலம் எப்படி எல்லாம் மாறுகிறது பார்த்திர்களா ?

இதை என் இங்கு சொல்லியுள்ளேன் என்றால் தரம் மூன்றில் இருந்து பாலியல் கல்வியை கட்டாயமாக்கப்போகிறது நான் வதியும் ஒன்ராறியோ மாநில அரசு
இப்போதும் பாலியல் கல்வி தரம் ஆறில் இருந்து இருக்கிறது .ஆனால் இப்பொழுது  தெரிவு  பெற்றோர்களின் கைகளில்  விளைவு பெரும்பாலான பெற்றோர் பாடசாலையில்  அனுமதி .கேட்டு கடிதம் வரும்போது  பிள்ளை கள்
படிக்க அனுமதி கொடுப் பதில்லை .இதனால் அரசு கட்டாய பாலியல் கல்வியை கொண்டுவர யோசிக்கிறார்கள் .இதில் தன்னின சேர்க்கை,இயற்கைக்கு மாறான உறவு இப்படி பலவும் உள்ளடக்கம் .இதனால்
பெற்றோர் எதிர்ப்பு கிளம்பியுள்ளது .கடந்த வாரம் சில இடங்களில் பாடசாலை
பகிஸ்கரிப்பும்  இடம்பெற்றது .

நேரம் கிடைக்கும் போது .இதைபற்றி பின்னர் விரிவாக எழுதுகிறேன் .


**********************************************************************************

வாசியுங்கள் .உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் .உங்கள் கருத்துக்கள் தான் என்னை ஊக்கப்படுத்தும் .கருத்திட்ட அனைவருக்கும் எனது நன்றி .

Wednesday, May 13, 2015

இன்றைய தேதிக்கு இன்ர நெட்டை கலக்கும் புகைப்படம்




சொத்துக் குவிப்பு வழக்கில் , நிரபராதி என்று ஜெயலலிதா வெளியே வந்தது கூட பெரிய விடயம் அல்ல. அவரை விடுவித்த நீதிபதி குமாரசாமி பெயர் தான் பெரும் பரபரப்பாக அடிபடுகிறது. அதிமுகா காரர்கள் கும்பிட்ட எல்லா சாமியும் சேர்ந்துதான் குமாரசாமியாக உருவாகியுள்ளது என்று சிலர் செய்தி எழுதியுள்ளார்கள். அது ஒரு புறம் இருக்க மோசடி வழக்கில் சிக்கி தவிக்கும் , கனிமொழிக்கு கலைஞர் ஆறுதல் கூறுவது போன்ற ஒரு படம் தற்போது வெளியாகி இன்ர நெட்டையே கலக்கி வருகிறது.

அதில் கனிமொழியைப் பார்த்து பார்த்து கருணாநிதி சொல்வது தான் கொமடியிலும் கொமடி 

தமிழகத்தை  கடவுள் தான்  காப்பாற்ற வேண்டும் .

சரி படம் இதுதான்