Thursday, November 26, 2015

ஆமிர்கானும் சகிப்புத்தன்மையும்! தினமணி ஆசிரியர் தலையங்கம்

சமீபத்தில் நடிகர் ஆமிர் கான் ஒரு நிகழ்ச்சியின்போது பேசிய பேச்சு, ஊடகங்களில் விவாதப் பொருளாகி இருக்கிறது. தனது மனைவி கிரண், “இந்தியாவை விட்டு வெளியேறி வெளிநாட்டில் வாழலாமா?’ என்று வீட்டுக்குள் நடந்த உரையாடலின்போது குறிப்பிட்டதாக ஆமிர் கான் ஒரு விழா மேடையில் பகிர்ந்துகொண்டார். இந்தப் பேச்சின் உள்ளுறைப்பொருள் இந்தியாவில் சகிப்புத்தன்மை இல்லை என்பதுதான். ஆமிர் கான் பேச்சுக்கு காங்கிரஸ் மற்றும் சில எதிர்க்கட்சிகள் ஆதரவு அளித்து, விவாதப் பொருளாக்கிவிட்டிருக்கின்றன.
ஆமிர் கான் நடித்து வெளியான பி.கே. திரைப்படத்தில் ஹிந்து கடவுள்கள், சாமியார்கள் குறித்து சில விமர்சனங்கள் இருந்தன. இதற்காக இந்தப் படத்தை தடை செய்ய வேண்டும் என்று இந்து அமைப்புகள் கோரிக்கை வைத்தபோது அதைப் புறந்தள்ளியது மத்தியில் ஆளும் இதே நரேந்திர மோடி அரசுதான். இந்தப் படம் தொடர்பான ஆதரவான கருத்தை முன்வைத்தவர் பா.ஜ.க.வின் முன்னணித் தலைவர் எல்.கே. அத்வானி.
நிலைமை இதுவாக இருக்கும்போது, ஆமிர் கான் ஏன் இந்த விவாதத்தை பொதுமேடையில் பேசினார் என்பது தெரியவில்லை. அவர் இயல்பாகச் சொன்னாரா அல்லது இந்த விவாதம் வேறு தளங்களுக்குக் கொண்டு செல்லப்பட வேண்டும் என்று வேண்டுமென்றே தொடங்கி வைத்தாரா என்பதை அவர்தான் விளக்க வேண்டும்.

இஸ்லாமியர்கள் சிறுபான்மையினராக இருக்கும் இந்தியாவில்தான் ஆமிர் கான், சல்மான் கான், ஷாரூக் கான் ஆகியோர் முன்னணி நடிகர்களாகக் கடந்த பதின் ஆண்டுகளுக்கும் மேலாக திரைத் துறையில் கோலோச்சுகின்றனர். இவர்களுக்கு முன்னாலும், இந்தித் திரைப்பட உலகில் திலீப்குமார், பெரோஸ்கான், சஞ்சய் கான், பரூக் ஷேக் உள்ளிட்ட இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்த கதாநாயகர்களும், எண்ணிலடங்காத பல நடிகைகளும் மக்களின் பேராதரவுடன் வலம் வந்திருக்கிறார்கள். இந்திய மக்கள் சகிப்புத்தன்மை கொண்டவர்கள் என்பதால் மட்டுமே இது சாத்தியமாகிறது.
ஆஸ்கர் விருது பெற்ற தமிழ் இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான், “முகம்மது: இறைதூதர்’ என்ற ஈரானிய படத்துக்கு இசையமைத்தார் என்பதற்காக மும்பையைச் சேர்ந்த அமைப்பு ஃபட்வா அறிவித்தபோது இந்தியத் திரைத் துறையும், அறிவுஜீவிகளும், அரசியல்வாதிகளும் சகித்துக்கொண்டு சும்மா இருந்தார்களே, அது ஏன்? நடிகர் ஆமிர் கானின் தனிப்பட்ட கருத்து தேசத்தின் கருத்தாக மாற்றப்படும்போது, ரஹ்மான் மீதான மிரட்டல் ஏன் தனிப்பட்ட விவகாரமாகவே முடிந்துபோனது?
இப்போது இந்தியாவை ஏன் சகிப்புத்தன்மை இல்லாத நாடாக மாற்றிவிடும் முயற்சியில் அறிவுஜீவிகளும் கலைஜீவிகளும் இறங்கியிருக்கிறார்கள் என்ற கேள்விக்கு நேரடியான பதில் இல்லாவிட்டாலும், அறிவுஜீவிகள், கலைஜீவிகள் கோரிக்கைகளை மோடி அரசு ஏற்க மறுத்ததுதான் இதற்கு அடிப்படைக் காரணம் என்பதை ஊகமாகப் புரிந்துகொள்ள முடிகிறது.

பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு அமைந்த பிறகு பல்கலைக்கழக மானியக் குழுவில் கெடுபிடிகள் அதிகரிக்கத் தொடங்கின. குறிப்பாக, மத்திய பல்கலைக்கழகங்களில் முனைவர் பட்டம், எம்.பில். பட்டம் படிப்போருக்கான உதவித் தொகையை ஆய்வுகளின் தர அடிப்படையில் தீர்மானிப்பது என்பது உள்ளிட்ட பல கட்டுப்பாடுகளை ஏற்படுத்தியது. ஆய்வு நடத்துகிறோம் என்ற பெயரில் உதவித் தொகை தவறான நபர்களுக்குத் தரப்படுவதைத் தடுப்பதுதான் இந்த முடிவுக்குக் காரணம்.
ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகம், தில்லி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 700 ஆராய்ச்சி மாணவர்களும், நாடு முழுவதிலும் பல்வேறு பல்கலைக்கழகங்களில் ஆராய்ச்சி மாணவர்களும் இதைக் கடுமையாக எதிர்த்துப் போராடினர். “நான்-நெட் ஃபெலோஷிப் திட்டங்களை’ ரத்து செய்யமாட்டோம் என்று மத்திய அரசு இறங்கி வந்தாலும், மற்ற கோரிக்கைகளை ஏற்க மறுத்துவிட்டது. இதனால், அறிவுஜீவிகளின் கோபம் அதிகரித்தது.
கடந்த நான்கு மாதங்களில், இந்தியாவில் 300 மதக் கலவரங்கள் நடந்திருக்கின்றன. 35 பேர் கொல்லப்பட்டிருக்கின்றனர் என்கிறது மத்திய உள்துறை அமைச்சகக் குறிப்பு. அக்டோபர் மாதம் வரை 630 மதக் கலவரங்களும், 86 மரணங்களும் நடைபெற்றிருக்கின்றன. இதுதான் மத சகிப்புத்தன்மை இல்லாத நிலைமையின் அடையாளம் என்று சொல்வார்களேயானால், இவர்கள் கடந்த ஆட்சியில் ஏன் மெளனமாக இருந்தார்கள் என்கிற கேள்வி எழுகிறது.
முந்தைய மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில், 2013-இல் நடந்த மதக் கலவரங்களின் எண்ணிக்கை 823. அப்போது அறிவுஜீவிகளுக்குப் புலப்படாத சகிப்புத்தன்மை இல்லாத நிலைமை இப்போது திடீரென்று தோன்றுவதற்கு நரேந்திர மோடி மீதான கண்மூடித்தனமான வெறுப்பும், காங்கிரஸ் மீதான அனுதாபமும்தான் காரணமாக இருக்க முடியும்.
மோடி முகத்தில் கரி பூச வேண்டும் என்பதற்காக இந்திய மக்கள் அனைவரின் மீதும் கரி பூசுவதும், இந்தியா என்கின்ற நாடே சகிப்பின்மை அற்ற நாடென முத்திரை குத்தி, பயங்கரவாதிகளின் கோபத்தைக் கிளறிவிடப் பார்ப்பதும் விபரீதமான சிந்தனை. இதைச் சொல்லும் அதே நேரத்தில், இன்னொன்றையும் குறிப்பிடத்தான் வேண்டும். தனது கட்சிக்காரர்களும், கூட்டணிக் கட்சியினரும் சமூக நல்லிணக்கத்தை பாதிக்கும் விதத்தில் பேசுவதைத் தடுப்பதும், கட்டுப்படுத்துவதும் பிரதமர் மோடியின் கடமை. அவரது மௌனமும்கூட இப்படியொரு தோற்றத்திற்குக் காரணமாக அமைகிறது என்பதை அவர் உணர வேண்டும்
தினமணி 

Monday, November 23, 2015

நீங்கள் ஒரு புத்தகப் பிரியரா ? கண்டிப்பாக இதை படிக்கவேண்டாம்!



நல்ல புத்தகம் ஒரு சிறந்த நண்பன்.கண்டதையும் கற்பவன்  பண்டிதன் ஆவான் என்று எங்கள் பாடசாலை நூலகத்தில் எழுதப்பட்டிருந்தது  இப்போதும் எனது நினைவில் இருக்கிறது .இங்கு கண்டது என்பது பலதரப்பட்ட நூல்கள் என்ற பொருள் கொள்ள வேண்டும் .இனி வாசிப்பு சம்பந்தமாக சில  விடயங்கள்                                                                      


                                       
                                         


• நாம் ஒரு நூலில் .சில பக்கங்களைப் படிக்கிறோம். ஆனால் படித்த பிறகு என்ன படித்தோம் என்று நினைவுக்கு வருவதில்லை. காரணம் மனம் அதில் ஈடுபடாமல் இருப்பதால், கிரகித்துக் கொள்ள முடியவில்லை. அதனால் குறிப்புகள் எடுப்பது சிறந்தது.

• கண்கள் 5 சதவிகிதம் தான் வேலை செய்கிறது. 95 சதவிகிதம் மூளைதான் வேலை செய்கிறது. 1 மணி நேரம் படியுங்கள். பின்னர் சிறிது நேரம் ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள்.

• காலையில் கிழக்குப் பக்கமும், மாலையில் மேற்குப் பக்கமும் உட்கார்ந்து படியுங்கள். தெற்கு நோக்கிப் படிப்பதை தவிர்க்கவும்.என சொல்லப்படுகிறது

• என்ன புத்தகத்தினை படிக்க  வேண்டுமென்று முதலில் தீர்மானித்துக் கொள்ள வேண்டும்.அத்துடன் புத்தகங்களின் எழுத்தின் அளவினையும் கவனத்தில் கொள்ளவேண்டும்

• அவசியமில்லாததை ஒதுக்கித்தள்ள வேண்டும். மூளை ஒரு சேமிக்கும் வங்கி.அவசியம் அல்லது முக்கியம் என்று கருதுவதை நன்கு படித்து நினைவுப் பெட்டியில் பத்திரப்படுத்த வேண்டும்.. வாசிக்கும் எதையும்  புரிந்து கொண்டு மனதில்  பதியவைத்தல் எப்போதும் நினைவிலிருக்கும்.

• படிக்கும் வேகம் என்ன என்று அறிந்து, அதனைப் படிப்படியாக அதிகரித்துக் கொள்ளவும் ஒரு நிமிடத்திற்கு 150 வார்த்தைகளைப் படிக்கவும், அதில் 100 வார்த்தைகளையாவது கிரகிக்கும் தன்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.பின்னர் 200-150, 200-250 எனப் படிப்படியாக உயர்த்திக் கொள்ள முயற்சி செய்யவும்.

• தினசரி  பொது அறிவினை வளர்க்கக் கூடிய ஏதேனும் ஒரு புத்தகத்தை குறைந்தது 15 நிமிடமாவது படிக்கவும். ஒரு வாரத்தில் சுமார் 2 மணி நேரம், மாதத்தில் 8 மணி நேரம் கிடைக்கிறது. ஒரு நல்ல புத்தகத்தைப் படிக்க சுமார் 4 மணி நேரம் தேவை. மாதத்தில் இரண்டு புத்தகங்களைப் படிக்கலாம். ஆண்டில் 24 புத்தகங்களைப் படிக்கலாம்.

• வெளியில் போகும் போது, ஒரு புத்தகத்துடன் செல்லுங்கள், பயணம் செய்யும் போதும், பலவற்றிற்காகக் காத்திருக்கும் போது, நமது நேரத்தை வீணாகச் செலவிடாமல், பயனுள்ள வகையில் செலவிடலாம்.

• படிப்பதைக் கடமையாகக் கருதாமல் பிடித்தமான விஷயமாக மாற்றிக் கொண்டால், நிச்சயமாக மறக்காது.

• படிக்கிற நேரம் உங்களுக்கு எந்த நேரம் சிறந்தது என்று கருதுகிறீர்களோ, அதைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.

• படிக்கின்ற போது முக்கியமானவற்றை அடிக்கோடிடுங்கள். தனி குறிப்பேட்டில் குறிப்பெடுத்துக் கொள்ளுங்கள்.

• படிக்கும் பழக்கும் ஒரு சிறந்த பழக்கம். அதனை வழக்கப்படுத்திக் கொள்ளுங்கள். ஒரு நல்ல புத்தகம் ஒரு சிறந்த நண்பன், வழிபோக்கத் துணைவன்.



 நான் எனது தொலைபேசியில்  நிறைய நூல்களை தரவிறக்கம் செய்து வைத்திருக்கிறேன் .எங்கு சென்றாலும் என்னோடு  இருக்கும்  எதற்காகவும் காத்து இருக்கும் நேரங்களில்  இப்பொழுது எல்லாம் ஈ -நூல்களை படிக்கிறேன் தொலைபேசியில்  .அதைவிட எனது வாகனத்தில் குறைந்தது மூன்று புத்தகங்களாவது  வைத்திருப்பேன் .முக்கியமாக தொலைபேசியில் தேவை இல்லாமல் நோண்டிக்கொண்டு இருப்பதை சுத்தமாக விட்டுவிட்டேன்

.இப்பொது சில காலங்களாக நிறைய நூல்களை படிக்க முடிகிறது. முக்கியமாக உங்கள் பிள்ளைகளை நூலகம் செல்ல புத்தகங்கள் வாசிக்க ,இரவல் பெற ஊக்கப்படுத்துங்கள் .இங்கு கனடாவில் பாடசாலையில் சீனியர்  கிண்டர்கார்டனுக்கு  பிள்ளை போனவுடனேயே  பொது நூலகத்தில்  அங்கத்தவர் ஆவதற்கு விண்ணப்ப படிவம் கொடுக்கப்படும் .படசாலையில் இருந்து தினசரி ஒரு நூல் வீட்டுக்கு கொண்டுவருவார்கள் .வாசித்து அது சம்பந்தமாக எழுதி மறுநாள் கொண்டு போகவேண்டும் .

எப்போதும் தாய் மொழி வாசிப்பே சிறந்தது ஏனெனில் தாய்மொழியில்  வாசிக்கும் போது,அல்லது பேசும் போது அது ஒருவரின் இதயத்தால் உணரப்படுகிறது ,மாறாக அந்நிய மொழி மூளையால் கிரகிக்கப்படுகிறது .இங்கு கனடாவில் பிறந்து வளர்ந்த எனது பிள்ளைகளின் முதல் மொழி தமிழ் என்று குறிப்பிட்டாலும் நடைமுறையில் ஆங்கிலம் தான் முதல் மொழி .இது தான் இங்குள்ள யதார்த்தம்.

எனது பிள்ளைகளை நான் முதல் முதலில் பாடசாலையில் சேர்க்கும் போது எனது  இரண்டு பிள்ளைகளின் ஆசிரியர்கள் இருவரும் வெள்ளை இனத்தவர்கள் ,ஆங்கிலேய பெண்கள்   எனக்கு சொன்னது  ஆங்கிலத்தை உங்கள் பிள்ளை இலகுவாக கற்றுக்கொள்ளுவார்கள்  .அதை நாங்கள் பார்த்துக்கொள்வோம் .  நீங்கள் உங்கள் பிள்ளைக்கு உங்கள் தாய் மொழியை சொல்லிக்கொடுங்கள் என்று .ஒருவர் அல்ல இருவருமே சொன்னார்கள் .இன்றைக்கு எனது பிள்ளைகள் நன்றாக தமிழ் கதைப்பார்கள் .ஓரளவு எழுதுவார்கள் ஓரளவு வாசிப்பார்கள் .நாளை எனது பிள்ளைகள் தமிழ்
சார்ந்து சிந்திப்பார்கள், தமிழ் சார்ந்து செயற்படுவார்கள்  என்பதில் எனக்கு மிகவும் சந்தோசம் .

ஏனெனில் எனது பிள்ளைகளுக்கு நான் சொல்லியிருக்கிறேன் தமிழ் கதைப்பவர்கள் என்பதற்காக தாக்கப்பட்டிருக்கிறோம் ,கொல்லப்பட்டிருக்கிறோம்.தமிழுக்கா உயிர் கொடுத்தோர் வரலாறுகளையும் சொல்லியிருக்கிறேன் .

ஏனெனில் வரலாறு முக்கியம் அல்லவா அமைச்சரே !!!!!!!!!!!!

மீண்டும் மறு பதிவில்  சந்திப்போம்  அன்புடன் கரிகாலன்.