Friday, December 18, 2015

இளையராஜா என்ன கேள்விக்கு அப்பாற்பட்டவரா..?

கொளத்தூரில் முத்துகுமார் உடல் கிடத்தப்பட்டிருந்தது. சுற்றிலும் ஆயிரக்கணக்கான உணர்வாளர்கள் பல்வேறு உணர்வலைகளுடன் நின்று கொண்டிருந்தார்கள்.
பத்திரிகை நண்பர்கள் நாங்கள் சிலபேர் ஒரு சுவர் ஓரம் நின்று நடப்பதை கவனித்துக் கொண்டிருந்தோம். அப்போது ஆங்கில ஊடகம் ஒன்றிலிருந்து ஒரு பெண் நிருபர் வந்தார்.

அவருக்கு அங்கு நடப்பது எதுவும் புரியவில்லை. ஏதோ ஒரு சினிமா ரசிகனின் தீக்குளிப்பு என்றே நினைத்திருப்பார் போலிருக்கிறது.
மேடையில் முழங்கிக் கொண்டிருந்த வைகோவை யாரென்று கேட்டார் (நல்லவேளை.. வைகோவுக்கு அந்த மேட்டர் இன்னும் தெரியாது.. wink emoticon ) ஈழம் தொடர்பாக உணர்வு சார்ந்து ஒரு போராட்டம் நடைபெறுகிறது.
அதுபற்றிய எந்த பார்வையும் இல்லாத ஒரு நிருபரை அந்த ஊடகத்தின் செய்தி ஆசிரியர் அனுப்பி வைக்கிறார் என்றால் மறுநாள் அந்த செய்தி என்ன லட்சணத்தில் வந்திருக்கும் என்பதை புரிந்து கொள்ளலாம்.
நாங்கள் பத்திரிகையாளர்கள்.. என்ன வேண்டுமானாலும் கேட்போம் என்று பொங்கும் ஊடகப்போராளிகள் பெரும்பாலானவர்களின் லட்சணம் இப்படிதான் இருக்கிறது.



இப்போது இளையராஜா விசயத்திற்கு வருவோம்.. இரண்டு முண்டங்கள் பாத்ரூமில் பாடியதை இணையத்தில் வெளியிட்டதை தொடர்ந்து ஏற்பட்டிருக்கும் சர்ச்சை தொடர்பாக இளையராஜாவிடம் கருத்து கேட்கிறார் அந்த நிருபர். அந்த கேள்வி தன்னிடம் கேட்கப்பட்டது அவமானமாக உணர்ந்ததால் இளையராஜா கோபப்படுகிறார். அவ்வளவுதான் விசயம்.
அபத்தமான நிருபரின் கேள்வி.. பெரியவரின் உணர்ச்சிவசப்பட்ட கோபம் என்றளவில் இதை கடந்து சென்றிருந்தால் பிரச்னை இல்லை.
ஆனால் இதுதான் சாக்கு என்று சிலபேர் தங்களின் வன்மத்தை தீர்த்துக்கொள்ள இதை பயன்படுத்துகிறார்கள்.
ஒரு இசை பற்றிய சர்ச்சைக்கு அத்துறையை சார்ந்த ஒருவரிடம் கேள்வி கேட்பது தவறா என்று ரொம்ப அறிவாளித்தனமாக மடக்கிவிட்டதுபோல் வேறு கேட்கிறார்கள்.அந்த பெரியவாக்களுக்கெல்லாம்,சர்ச்சைக்குரிய அந்த குப்பைக்கு முதலில் ஒரு பாடல் எனும் அங்கீகாரம் கொடுப்பதே அபத்தமானது என்பதை சொல்லிக்கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன் மைலார்ட்.
அதற்கு இசைத்துறையை சேர்ந்த ஒரு மூத்தவரிடம் கருத்து கேட்பது அதைவிட அபத்தமானது. அதுவும் என்னமாதிரியான நிகழ்வில் சென்று அந்த கேள்வி கேட்கிறோம் என்ற புரிதல் வேண்டும்.
அதுதவிர.. ஒருவனுக்கு  எல்லாவற்றிற்கும் கருத்து சொல்லியே ஆக வேண்டும் என்ற கட்டாயமா என்ன.
அப்படியானால் இளையராஜா என்ன கேள்விக்கு அப்பாற்பட்டவரா. பாடலை ரசிக்கவும் கைதட்டவும் நாங்கள் வேண்டும். ஆனால் கேள்வி கேட்க கூடாதா.
நிச்சயமாக.. கேள்வி கேட்க வேண்டும்.. கேள்வி கேட்பதே பத்திரிகையாளனின் அடிப்படை. ஆனால் அந்த கேள்வியில் ஒரு அடிப்படை இருக்க வேண்டும். அதோடு கேள்வி அதிகாரத்தை நோக்கி கேட்கப்பட வேண்டும்.
இளையராஜாவின் பாடலை ரசிக்க ரசிகனாக இருந்தால் போதும். ஆனால் அவரிடம் கேள்வி கேட்க அவரின் இசை பங்களிப்பும் இசைத்துறை குறித்த அறிவும் அவசியம்.

ஒரு துறை சார்ந்த பிரபலத்தை நேர்காணலுக்காக சந்திக்கப்போகிறோம் என்றால் முதலில் அந்த நபர் குறித்து கொஞ்சம் படித்துவிட்டு செல்ல வேண்டும். எதுவுமே படிக்காமல் கேள்வி கேட்க போனால் இப்படிதான் குப்பை பாடல்கள் குறித்து கருத்து கேட்கும் கேள்விகள்தான் வரும்.
சரி.. நாங்கள் பத்திரிகையாளர்கள்.. அப்படிதான்டா கேப்போம் என்று பொங்கல் வைத்து போராளி அவதாரம் எடுப்பவர்களுக்கு..
இணையத்தில் தினசரி ஏதேனும் ஒரு ஹோம் மேட் வீடியோக்கள் ரிலீஸாகிக் கொண்டேதான் இருக்கிறது. ஷகிலா, ரேஷ்மா படங்கள் எல்லாம் வெளியாகின்றன.
சினிமாக்காரர்கள் தான் ஆட்சியாளர்கள் என்பதற்காக இந்த படங்கள் குறித்தெல்லாம் உங்க கருத்தை சொல்ல முடியுமா.. என்று ஜெயாவிடமோ கருணாவிடமோ ரஜினியிடமோ கமலிடமோ போய் கேள்வி கேட்பார்களா என்ன.
அட.. அதுகூட ஆபாசமான விசயம் விடுங்கள்..
போயஸ் தோட்டத்திற்கு சென்று ”முதல்வர் அவர்களே.. வெளியே வாருங்கள்.. மழை வெள்ளத்திற்கு மக்களுக்கு பதில் சொல்லுங்கள்.. பத்திரிகையாளர்களை சந்தியுங்கள்” என்று சொல்ல தமிழ்நாட்டில் பத்திரிகை போராளிகள் எவருக்காவது நெஞ்சுல மஞ்சா சோறு இருக்கிறதா என்ன.

காலையில் அவசரமாக வேலைக்கு கிளம்பிக்கொண்டிருக்கிறீர்கள். “உங்க பக்கத்துவீட்டுக்காரன் பொண்டாட்டியை எவனோ வச்சுருக்கானாமே.. அவர்களின் கள்ளக்காதல் பற்றி கருத்து சொல்ல முடியுமா..” என்று உங்கள் மூக்குக்குள் மைக்கை சொருகி கேட்டால் கோபப்படுவீர்களா மாட்டீர்களா..?
அதுபோல்தான் ஒரு படைப்பாளிக்கு வரும் இயல்பான உணர்ச்சியின் வெளிப்பாடாக இளையராஜா அந்த அபத்தமான கேள்விக்கு கோபப்பட்டார்.. விசயம் அவ்வளவுதான். இதில் விவாதிக்கவோ சர்ச்சைக்கோ இடமில்லை.
72 வயதான ஒரு பெரியவரிடம் எப்படியான ஒரு இயல்பு இருக்குமோ அதுதான் இளையராஜாவிடமும் இருக்கிறது. அதை கடந்து தான் ராஜாவை அவரின் ரசிகர்கள் பலர் ரசிக்கிறார்கள்.
அதே சமயம் இளையாராஜவும் அந்த கேள்வியை புன்முறுவலுடன் கடந்து சென்றிருக்கலாம்.
தமிழ்நாட்டில் எக்கச்சக்கமாக இருக்கும் பத்திரிகையாளர் அமைப்புகள் இதுபோன்று அபத்தமான கேள்விகளால் உருவாகும் சர்ச்சைகளை தவிர்க்க, கொஞ்சம் பத்திரிகையாளர்களுக்கு அடிப்படை விசயங்களை போதிக்க சண்டே கிளாஸ்களை எடுத்து உருப்படியாக ஏதாவது செய்யலாம்.
-கார்ட்டூனிஸ்ட் பாலா
18-12-15