Sunday, August 28, 2016

மகாத்மாவின் மௌனமும்..... !! ஒரு மறைக்கப்பட்ட துரோக வரலாறு.!...

மகாத்மாவின் மௌனமும்..... !! ஒரு மறைக்கப்பட்ட துரோக வரலாறும்!!.... பகத் சிங், சுகதேவ் மற்றும் ராஜ்குரு !

மூவரின் மரணமும்.... மகாத்மாவின் மௌனமும்..... !!
ஒரு மறைக்கப்பட்ட துரோக வரலாறு........ !!
பகத் சிங், சுகதேவ் மற்றும் ராஜ்குரு ஆகியோர் தூக்கிலடப்பட்டு இன்றோடு 85 ஆண்டுகள் 4மாதங்கள் 9 நாட்கள் ஆகிவிட்டன; என்றாலும் அதன் மறைக்கப்பட்ட வரல்லற்றுப் பின்னணி என்ன என்பதை வருங்கால சந்ததிக்கு சொல்வது நமது கடமையாகிறது...... !! அவர்கள் மார்ச் 23, 1931 அன்று லாகூரில் உள்ள மத்திய சிறைச்சாலையில் இரவு 7 மணிக்கு
தூக்கிலடப்பட்டு கொல்லப்பட்டனர் !!

எத்தனையோ பேர்கள் தங்களின் குடும்பங்களை இழந்துள்ளனர், ஆயிரக்கணக்கான மக்கள் மரணத்தை முத்தமிட்டுள்ளனர். பகத்சிங், உத்தம்சிங் போன்ற எண்ணற்ற போராளிகளின் புரட்சிப் போராட்டங்களால் நிறைந்ததுதான் இந்தியப் விடுதலைப் போராட்ட வரலாறு. சிப்பாய்க் கலகம் எனப்படும் முதல் இந்திய சுதந்திரப் போர், சௌரிசௌரா உழவர்களின் பேரெழுச்சி, சிட்டகாங் ஆயுதக் கிடங்குச் சூறையாடல், பகத்சிங், குதிராம் போஸ், உத்தம்சிங் போன்றவர்களின் புரட்சிகர சாகசங்கள் முதல், தபால்- தந்தி ஊழியர்கள் மற்றும் மாபெரும் கடற்படை எழுச்சி என்று இலட்சக்கணக்கான மக்களின் இரத்தத்தால் சிவந்ததுதான் இந்திய விடுதலைப் போராட்டப் பாதை; ஆனால், அதையெல்லாம் பின்னிருத்தி விட்டு; மகாத்மா என்று சொல்லிக்குள்ளும் மிஸ்டர் காந்தி மட்டுமே வெற்றி வலம் வந்ததேன் என்று நம்மை நாமே ஒரு நாளாவது கேள்வியாக நம் மனதிற்குள் கேட்டிருப்போமா ?

வெள்ளைக்காரன் ஒன்றும் காந்தியின் உண்ணாவிரததிற்கு இரக்கப்பட்டு கொண்டு வெளியேறிவிடவில்லை. காலனியாதிக்கத்திற்கெதிராக பீரிட்டெழுந்த பல இலட்சம் மக்களின் தன்னெழுச்சியான போராட்டங்கள் ஆட்சியாளர்களாலும், மக்கள் போராட்டங்களை மழுங்கடிப்பதையே எப்போதும் வேலையாகக் கொண்டிருந்த காந்தியாலுமே கட்டுப்படுத்தவியலாத வன்முறையை நோக்கி பயணித்த காரணத்தாலும், இரண்டாம் உலகப் போரில் பொருளாதார ரீதியில் வாங்கிய அடியாலும் தான் வெள்ளைக்காரன் வெளியேறினான்.
இரண்டாம் உலக போரால் சிதறி சின்னாபின்னமான ஆங்கிலேய ஏகாதிபத்தியம் தனது இராணுவ பலத்தை முற்றிலும் இழந்திருந்தது. காலனியாட்சிக்கெதிராக பிரிட்டீஷ் இராணுவத்திற்குள்ளேயே இருந்த இந்திய வீரர்கள் தமது முழு எதிர்ப்பையும் காட்டினர். மக்கள் தன்னெழுச்சியாக வீதியில் இறங்கி போராடினர்.

நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர பிரிட்டிஷ் அரசால் முடியவில்லை. இது குறித்து அப்போதைய கிழக்கிந்திய பிராந்தியத் தளபதியாக இருந்த லெப். ஜெனரல் சர்.பிரான்ஸ் டகர் என்பவன் தனது “ நினைவிருக்கும் வரை, பக்.518 ” புத்தகத்தில் “நமது நாட்டின் (இங்கிலாந்து) தொழில் தேவையை விட அதிகமாக நமது இராணுவக் கடமை இருந்ததையும், போண்டியாகிப் போன நமது நாட்டின் பலத்தை மீறியதாக இது இருந்ததையும் நாம் இறுதியில் கண்டோம். இந்தியாவை விட்டு வெளியேறியதற்கு அதுவும் விரைவாக வெளியேறியதற்கு இது மிக முக்கியமான மற்றொரு காரணமாகும்” என்று குறிப்பிட்டிருப்பது கத்தியின்றி இரத்தமின்றி வெட்கமின்றி பெற்ற சுதந்திரத்திற்கு மற்றுமொரு சான்றாகும்.

ஆனால் வெறும் சத்தயசோதனையைப் படித்திட்டுவிட்டு எல்லோரும் மகாத்மாவாகிவிடுவது போன்ற மாய வலையில் இன்றும் இருக்கிறோம் என்பதை நம்மில் யாரும் மறுக்கவோ மறுதலிக்கவோ இயலவில்லை ஏன் ? காந்தியைப் பற்றி ஏதாவது சொல்லிவிட்டால் உடனே அதற்கு வரிந்துகட்டிக்கொண்டு வருவதற்கென்றே ஒரு கூட்டத்தை உருவாக்கி வைத்திருக்கிறது இந்த போலி சமூகம் என்பதுதான் உண்மை !! காந்தி என்றாலே அவரின் சத்தியாகிரகம், அகிம்சை அதாவது “கத்தியின்றி இரத்தமின்றி” நாட்டுக்குச் சுதந்திரம் வாங்கித் தந்ததாக ஏறக்குறைய பலப் பத்தாண்டுகளாகப் பொய்ப்பிரச்சாரம் நடந்துகொண்டிருக்கிறது. 

மறைக்கப்பட்ட வரலாற்று சுருக்கம்:
1919 ஆம் ஆண்டு ஜாலியன் வாலாபாக் படுகொலையை கண்ணுற்ற பகத்சிங் விடுதலை வேள்வியில் தன்னையும் இணைத்துக்கொண்டு பல்வேறு அரசியல் நடவடிக்கையில் ஈடுபட்டார். பகத்சிங்கும், சுகதேவும் தேசியக் கல்லூரியில் பயின்ற போது சந்தித்துக்கொண்டனர். சக மாணவர்களோடு இணைந்து சுதந்திரப் போராட்டதில் பங்கேற்றனர். தேசியக் கல்லூரியின் நூலகத்தில் சோசலிச இலக்கியங்களையும், தத்துவங்களையும் கற்றிந்து தன்னை செழுமைப் படுத்திக்கொண்டனர். இன்னொருவர் ராஜகுரு, கோரக்பூரைச் சேர்ந்த சுதேஷ் என்ற வாரப் பத்திரிக்கையின் உதவி ஆசிரியரான முனீஸ்வர அவஸ்தியின் தொடர்பால் இந்துஸ்தான் சோசலிச குடியரசுப் படையில் இணைந்தவர், இந்த பிண்ணனியில் தான் பகத்சிங் அவரது தோழர்கள் சோசலிச இலட்சித்திற்காகவும், விடுதலைக்காகவும் தங்களை அர்ப்பணம் செய்து கொண்டார்கள்.

1928 ஆம் ஆண்டு ஜனநாயக சட்டமன்ற ஆட்சியை விரிவாக்க சர் ஜான் தலைமையில் ஒரு குழுவை ஆங்கில அரசு அமைத்தது. அக்குழு பிப் 7ல் பம்பாய் துறைமுகம் வந்தது. அதை புறக்கணிக்கும்படி காங்கிரஸ் அறைகூவல் விட்டது. அதில் சைமனே திரும்பிப் போ, ஏகாதிபத்தியம் ஒழிக, சுதந்திரம் எனது பிறப்புரிமை என்ற முழக்கங்கள் ஒலிக்கிறது. தொடர்ச்சியாக அக்குழு அக்டோபர் 1930ல் லாகூர் வந்நது. இந்த குழுவின் வருகையை எதிர்த்து லாலா லஜபதிராய் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தை பொறுத்துக் கொள்ள முடியாத பிரிட்டிஷ் போலீஸ் லாலாஜி மீதும், ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதும் கடுமையாக தாக்குதல் நடத்தியது. இதில் லாலாஜி நிலைகுலைந்து போய் நவ. 17ஆம் நாள் உயிர் இழந்தார்.

1930ம் ஆண்டு வடகிழக்கின் சிட்டகாங் நகரிலும் மேற்கிலுள்ள பெஷாவரிலும் மக்கள் எழுச்சிப் போராட்டங்கள் முழு வீச்சில் நடைபெற்றன. சிட்டகாங்கில் புரட்சிகர மானவர் இயக்கங்களைச் சேர்ந்த ’ஹிந்துஸ்தான் குடியரசுப் படையினர்’ பிரிட்டிஷ் ஆயுதக் கிடங்கை சூறையாடினர். பெஷாவரில் பத்தானியர்கள் என்ற மக்கள் குழுவினர் பிரிட்டீஷ் படைக்கு எதிராக துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டனர். பெஷாவரில் சண்டையிட்ட அனைவரும் ’இஸ்லாமியர்கள்’. அக்காலகட்டத்தில் ’கார்வாலிப் படையினர்’ என்றொரு படைப்பிரிவு பிரிட்டிஷ் இராணுவத்தில் இருந்தது. மக்கள் எழுச்சியை அடக்க இந்த கார்வாலிப் படையினரைத் தான் அனுப்பியது.

இவர்கள் அனைவரும் ’ஹிந்து’க்கள். இந்த கார்வாலிப் படையினரும் அதே பகுதியைச் சேர்ந்தவர்கள் தாம். தமது சொந்த மக்களுக்கு எதிராக துப்பாக்கி ஏந்த முடியாது என்று அவர்களில் பாதிக்கு மேற்பட்டோர் ஆயுதங்களை திருப்பிக் கொடுத்தனர். மீதிப்பேர் போராடிய மக்களுடன் இணைந்து கொண்டனர். இதனால் பிரிட்டீஷ் இராணுவத்திற்கு மிகப் பெரும் பின்னடைவு ஏற்பட்டது.
காலனியாட்சிக்கெதிராக போராடும் சொந்த நாட்டு மக்களை கொன்றொழிக்க ஆயுதம் ஏந்த முடியாது என்று பிரிட்டீஷ் இராணுவத்தில் இருந்தாலும் இந்திய சிப்பாய்கள் தேசப்பற்றுடன் மறுத்திருக்கிறார்கள், அத்துடன் வெள்ளையாட்சிக்கெதிராக போராடும் மக்களோடும் தங்களை இணைத்து கொண்டிருக்கிறார்கள். பிரிட்டீஷ் ஆட்சியாளர்களின் ஆணைப்படி இயந்திரங்களை போல துப்பாக்கிகளின் விசையை தட்டிவிட்டு போராடும் மக்களை கொல்லுவது அகிம்சையா அல்லது மக்களை கொல்ல மறுத்து ஆயுதங்களை கீழே போட்டது அகிம்சையா? எது அகிம்சை? இது நம்மைப் போன்ற சாதாரண ஆத்மாக்களுக்கே தெரியும் போது மகாத்மாவுக்கு தெரியாதா
என்ன ? 

ஆனால் அகிம்சா மூர்த்தி ’மகாத்மா’ காந்தி கூறியது என்ன ? கீழ் கண்டவாறு தான் கூறினார்.

”இராணுவ சிப்பாயாக வேலைக்கு சேர்ந்த பிறகு இராணுவ அதிகாரி யாரை சுட்டுக் கொல்லச் சொன்னாலும் சுட வேண்டும் அது தான் அவனது கடமை. அப்படி செய்யவில்லை என்றால் அவன் கீழ்படிய மறுத்த பெருங்குற்றத்தைச் செய்தவன் ஆவான். அப்படி சுட்டுக் கொல்லச் சொன்ன பிறகும் அதை செய்ய மறுக்குமாறு நான் ஒரு போதும் கூற மாட்டேன். ஏனெனில் நான் அதிகாரத்தில் இருக்கும் போது இதே அதிகாரிகளையும் சிப்பாய்களையும் நான் பயன்படுத்திக் கொள்ள நேரிடலாம். இப்பொழுது நான் அவர்களை அவ்வாறு சுட மறுக்குமாறு கற்பித்தால் பின்னர் நான் அவர்களை சுடச் சொல்லும் போதும் இவர்கள் இதே போல கிழ்படிய மறுக்க நேரிடும் என அஞ்சுகிறேன்’’.

(ஆதாரம்: பிரெஞ்சு பத்திரிக்கையாளர் சார்லஸ் பெட்ராஷ், கார்வாலிப் படை வீரர்கள் பற்றிக் கேட்ட கேள்விக்கு மகாத்மாவின் பதில்: மாண்ட்,பிப்ரவரி 20,1932)
காந்தி ‘மகான்’ “இந்துக்களும் முஸ்லீம்களும் ‘புனிதமற்ற ஒரு கூட்டில் சேந்ததாக’ மக்களை சாடினார். அந்த எழுச்சியைக் கண்டு பயங்கரமாக அதிர்ச்சி அடைந்த தொடை நடுங்கி காந்தி அந்தப் போராட்டத்தை அடக்க தன்னாலான அனைத்து முயற்சிகளையும் முன்னெடுத்தார்.

இது குறித்து தனது ஹரிஜன் இதழில் இந்த அகிம்சாவாதி எழுதியவை பின்வருமாறு:

”அந்தப் போராட்டம் வெற்றி பெற்றிருக்குமானால் அது நாட்டைக் காலிகளின் கையில் கொடுத்திருக்கும். அந்த முடிவைக் காண்பதற்கு நான் 125 ஆண்டுகள் வாழ விரும்பவில்லை. மாறாக தீயிலிட்டு என்னை அழித்துக் கொள்வேன்” (ஆதாரம் : ஹரிஜன்: ஏப்ரல் 2, 1946).

இதே காலகட்டத்தில் இவர் உதிர்த்த முத்துக்கள் “ நாங்கள் பிரிட்டனுடைய அழிவிலிருந்து எங்களுடைய சுதந்திரத்தைத் தேடவில்லை”. அது தவிர பிரிட்டன் நியாயத்திற்காக போராடுவதாகவும் அதற்கு ஒத்துழைப்புத் தர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

”ஆகையால் நான் எப்போதும் சுதந்திரத்தைப் பற்றி நினைத்துக் கொண்டிருக்கவில்லை. அது கட்டாயம் வரும். ஆனால் பிரிட்டனும் பிரான்சும் வீழ்ந்து விட்டால் என்ன ஆகும் ?” – (ஹரிஜன் – செப்.9, 1939)

அன்றைக்கும் இன்றைக்கும் காங்கிரஸ் கட்சிக்கு காந்தி மட்டுமே முகமூடியாக தேவைப்பட்டார். காந்திக்கு இணையாக வேறு ஒரு தலைவரை ஏற்றுக்கொள்ளவில்லை. இதையே காந்தியும் விரும்பினார். சுதந்திரப்போராட்ட காலத்தில், தனக்கு நிகராகவோ அல்லது தன்னை விட அதிகமாகவோ வேறு ஒரு தலைவர் வளர்வதை காந்தி விரும்பமாட்டார் . அதனால் தான் பகத்சிங், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், டாக்டர் அம்பேத்கர் போன்ற தேசத்தலைவர்களை விலக்கியே வைத்திருந்தார். இவர்களெல்லாம் வன்முறையாளர்கள் போலவும், அகிம்சைக்கு எதிரானவர்கள் போலவும் சித்தரித்துக்கா ட்டுவார்.

இந்த தேசத்தின் விடுதலையை போராட்டத்தின் மூலமாகவும், புரட்சியின் மூலமாகவும் தான் பெறமுடியும் என்று பிரிட்டிஷாருடன் சினங்கொண்டு போராடிய பகத்சிங் என்ற மாவீரனை இழந்துவிட்டோம். காந்தி நினைத்திருந்தால் அன்றைக்கிருந்த பிரிட்டிஷ் அரசுடன் பேசி பகத்சிங்கை தூக்குமேடையிலிருந்து காப்பாற்றியிருக்க முடியும். அதைத்தான் அன்றைக்கு நாட்டில் பலரும் எதிர்ப்பார்த்தா ர்கள். இன்னும் சொல்லப்போனால் காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே பல தலைவர்களும் தொண்டர்களுமே எதிர்ப்பார்த்தா ர்கள்.

இதை புரிந்துகொண்ட காந்தி, 1931 - ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கராச்சியில் நடைபெறவிருக்கும் காங்கிரஸ் மாநாட்டிலும் இந்த பிரச்சனை எதிரொலிக்கும் என்று எதிர்ப்பார்த்தார். மாநாட்டில் கலந்துகொள்பவர்க ள் பகத்சிங்கை தூக்கு தண்டனையிலிருந்து காப்பாற்றுங்கள் என்று தன்னை நிர்பந்தம் செய்வார்கள் என்று முன் கூட்டியே அறிந்துகொண்டார் . அப்படி நடக்கும் பட்சத்தில் அவர்கள் கட்டளைப்படி, தான் பிரிட்டிஷ் அரசிடம் பேசி பகத்சிங்கை தூக்கு தண்டனையிலிருந்து காப்பாற்ற வேண்டி வரும் என்பதை உணர்ந்தார்.அப்படியெல்லாம் ஒன்றும் நடந்துவிடக்கூடா து என்பதில் காந்தி தீவிரம் காட்டினார்.

பகத்சிங்கை தூக்கிலிட நாள் குறித்த நல்லவர்...... !!

மக்களை சுட்டுப்பொசுக்கு அது தான் உனது கடமை எனவே கடமையை செய் என்று வெள்ளைக்கார துரையை போல சிப்பாய்களுக்கு கட்டளையிட்ட இந்த அகிம்சா மூர்த்தி தான் பகத் சிங்கைத் தூக்கிலிட இர்வின் பிரபுவுக்கு நாள் குறித்துக் கொடுத்தார். அதாவது பகத் சிங்கைத் தூக்கிலிடுவதாக இருந்தால் லாகூர் மாநாட்டிற்கு முன்பே தூக்கிலிட்டு விடுமாறு இர்வினுக்கு கடிதம் எழுதியவர் தான் இந்த பாபுஜி. இந்த சம்பவத்தை காந்தியின் முதல் வாழ்க்கை வரலாறு நூலை எழுதிய பட்டாபி சீதாராமையா - காங்கிரஸ்; (காந்தியால் நேதாஜியை எதிர்த்து காங்கிரஸ் தலைமைக்கு களமிறக்கப்பட்டவை) தனது நூலில் குறிப்பிட்டுள்ளார். மேலும்
இதுகுறித்து இர்வின் கூறியதாவது..... ” மக்கள் காந்தியை உடனடியாக ஒழித்துக்கட்ட, பலாத்காரமாக நசுக்க ஆயத்தமாயிருந்தனர்” . (ஆதாரம்: Earl Of Birhenhead P. 305).

அதனால் அன்றைய பிரிட்டிஷ் வைஸ்ராய் இர்வினை ( Irwin) சந்தித்து, கராச்சி காங்கிரஸ் மாநாட்டிற்கு முன் பகத்சிங்கை தூக்கில் போடும்படி கேட்டுக்கொண்டவர் தான் ''மகாத்மா'' என்று சொல்லக்கூடிய காந்தி என்பதை யாரும் மறந்துவிடக் கூடாது. அதனால் தான்பிரிட்டிஷ் அரசாங்கம் கராச்சி காங்கிரஸ் மாநாட்டிற்கு ஒரு வாரத்திற்கு முன்பே பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் போன்றவர்களை தூக்கிலிட முடிவு செய்து, 1931 மார்ச் மாதம் 24 - ஆம் தேதியை தூக்கிடும் தேதியாக அறிவித்தது.

ஆனால் அந்த 24 - ஆம் தேதிவரைக் கூட காத்திருக்க முடியாமல் பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் அவர்களை தூக்கிலிடுவதற்கு துடித்தார்கள். அதனால் 23 - ஆம் தேதியே இரவு 7.04 மணிக்கே வழக்கத்திற்கு மாறாக - மரபுக்கு மாறாக மூவரையும் தூக்கிலிட்டார்கள்.

வழக்கமாக தூக்கு தண்டனை என்பது விடியற்காலையில் சூரிய உதயத்திற்கு முன்பாகவே நிறைவேற்றுவது தான் மரபு. ஆனால் அந்த மரபைக்கூட அன்றைய ஆட்சியாளர்கள் மீறினார்கள் என்பது குறிப்பிடத்தக்க து. 24 - ஆம் தேதி விடியற்காலை தூக்கிலிட வேண்டியவர்களை 23 - ஆம் தேதி இரவே அவசர அவசரமாக தூக்கிலிட்டனர். பகத்சிங்கை கொல்வதில் காந்தியை விட பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் இன்னும் ஒரு மடங்கு வேகம் காட்டினர்.

பகத் சிங்கிற்கு அறிவிக்கப்பட்ட இந்த தூக்கு தண்டனை காந்திக்கும், இர்வினுக்கும் நடந்த ஒப்பந்த்த்தில் விவாதத்திற்கு வந்திருக்க வேண்டும். லார்டு இர்வின் இது தொடர்பாக எந்த வாக்குறுதியையும் அளிக்கவில்லை என்ற போதிலும், இடைக்காலத்தில் காந்தியின் உரை, இர்வின் தன் வரம்புக்குட்பட்டு மூன்று இளைஞர்களை காப்பாற்ற தீவிர முயற்சி எடுப்பார் என்று நம்பிக்கை தருவதாக இருந்தது. ஆனால், இந்த ஊகங்களும், எதிர்பார்ப்புகளும், கோரிக்கைகளும் வீணாய் போயின. லாகூர் மத்திய சிறையில் 23 மார்ச், 1931ல் மாலை 7 மணிக்கு தூக்கிலப்பட்டு கொலை செய்யப்பட்டனர். தங்களை விடுவிக்க வேண்டும் என்று எவரொருவரும் கெஞ்சவில்லை.

ஏற்கனவே வெளியிடப்பட்டதை போல, தூக்கிலிட்டு கொல்வதற்கு பதிலாக துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்ட விருப்பம் தெரிவித்திருந்தார். ஆனால், அவரது கடைசி வார்த்தை நிறைவேற்றப்படவில்லை, தூக்கிலிட்டு கொல்ல வேண்டும் என்ற நீதிமன்றத்தின் தீர்ப்பை நிறைவேற்றுவதிலேயே குறியாய் இருந்தனர். துப்பாக்கி குண்டுகளால் கொல்லப்பட்டிருந்தால், நீதிமன்றத்தில் தீர்ப்பை மீறியதாய் ஆகியிருக்கும். ஆகையால், நீதிதேவதையின் கட்டளையில் அச்சுபிசகாமல் அப்படியே நிறைவேற்றிவிட்டனர்.

1931 மார்ச் 24 தூக்கு தண்டனை தீர்மானிக்கப்படுகிறது. கடுமையான நெருக்கடிகள், போராட்டங்கள் காரணமாக யாருக்கும் தெரியாமல் மார்ச் 23 மாலையே தூக்கில் போட சிறை அதிகாரிகள் ஏற்பாடு செய்கின்றனர். சிறை அதிகாரிகள் பகத்சிங் அறையை தட்டுகிறார்கள், அப்போது பகத்சிங் லெனினின் அரசும், புரட்சியும் புத்தகத்தோடு உறைந்து கிடக்கிறார், ஒரு புரட்சியாளனோடு உரையாடிக் கொண்டிருக்கிறேன் என பதில் கொடுக்கிறார். பிறகு மூவரும் தூக்குமேடைக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள். தூக்குமேடையில் நின்று கொண்டு பகத்சிங் “நாங்கள் எத்தனை முறை பிறந்தாலும் நாட்டின் விடுதலைக்காக போராடிக் கொண்டே இருப்போம்” என வீராவேசமான வார்த்தைகளோடு இன்குலாப் ஜிந்தாபாத் என்ற முழக்கம் அதிருகிறது...... !!
தேவைப்பட்டால் இன்னமும் ஆய்ந்து சொல்வேன்......

நன்றிகள்
பார்த்திபன். ப   முகநூல் பதிவு
01/08/2016

2 comments:

காரிகன் said...

நியாமான கட்டுரை. பாராட்டுக்கள்.

காந்தி குறித்து நம் நாட்டில் புனைவான கருத்துக்கள் நிறைய எழுப்பப்பட்டுள்ளன. அவர் ஒரு புனித பசு அளவுக்கு விமர்சனக் கோட்டுக்கு மேலே வைக்கப்பட்டிருக்கிறார்.

ஆங்கிலேயன் நமக்கு விடுதலை கொடுத்தது காந்தியால்தான் என்ற புனைவை மக்கள் நம்பிக்கொண்டிருக்கும் வரை எதுவும் மாறாது.

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

இது உங்கள் கருத்து.காந்திமீது கொண்ட வெறுப்பின் காரணமாக புனைவு கலந்து எழுதப் பட்டதாகவே தோன்றுகிறது காந்தி மட்டுமே சுநந்திரம் பெற்றுத் தந்தார் என்று யாருமே சொல்லவில்லை.ஆயிரக்கணக்கானவர்களின் தியாகம் பின்னனியில் இருப்பதை அனைவருமே அறிவோம். காந்தி ஒரு அடையாளமே. காந்தி நாட்டுக்காக ஒன்றுமே செய்யவில்லை என்ற ரீதியிலேயே காந்திக்கு எதிரான மன நிலை கொண்டவர்ககள் பேசுகிறார்கள். யாருக்கோ சேரவேண்டிய புகழை அவர் தட்டிப் பறித்தது போனற எண்ணத்தை உருவாக்க முனைவது வழக்கமாக உள்ளது, . யாரையும் துரோகியாகவும் தியாகியாகவும் சித்தரித்து விட முடியும்.ராம்குமாரைக் கூட தியாகி ரேஞ்சுக்கு காட்டிவிட முடியும் காட்டிக் கொண்டும் இருக்கிறார்கள். காந்திக்கு எதிராக பேசுவதும் எழுதுவதும் அறிவுஜீவித் தனம் என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.காந்தி குறைகளே இல்லாத மனிதர் என்று யாரும் சொல்லவில்லை. ஏன் அவரே கூட அதை ஏற்கவில்லை.
காந்தி,பகத்சிங் பற்றி அறிந்து கொள்ள எனக்கு ஜெயமோகனின் கட்டுரைகள் உதவின. அவற்றை படியுங்கள் என்று நான் சொல்லப் போவதில்லை.
தொலை தொடர்பு இல்லாத காலத்திலேயே அவரது புகழ் பாமர மக்களிடம் பரவி இருந்தது. இதை யாரும் வலிந்து செய்ததாகத் தெரியவில்லை.
உங்கள் எண்ணத்தை நீங்கள் பதிவு செய்துள்ளீர்கள் எனது கருத்தை நான் பதிவு செய்துள்ளேன்.எதுவும் திணித்து வந்துவிடாது. காந்தி பற்றிய எண்ணமும் அப்படியே!