Tuesday, January 05, 2016

இலங்கை மீனவரின் படகு மூழ்கடிப்பு ! தமிழக படகு சிறைப்பிடிப்பு !

முல்லைத்தீவு கடற்பகுதியில் அத்துமீறி மீன்பிடித்துக் கொண்டிருந்த இந்திய இழுவை படகு மோதியதில் முல்லைத்தீவு மீனவர்களின் படகு ஒன்று கடலில் மூழ்கியுள்ளது. இதனால் கோபமடைந்த முல்லைத்தீவு மீனவர்கள் இந்திய இழுவை படகு ஒன்றையும் 8 மீனவர்களையும் சிறைப்பிடித்துள்ளனர். இந்தச் சம்பவம் இன்று(௦௪-௦௧ -௨௦௧௬  காலை 11.30 மணியளவில் இடம்பெற்றது.

முல்லைத்தீவு- கள்ளப்பாடு தீர்த்தக்கரை மீனவர்கள் கடலில் தொழிலுக்கு சென்றிருந்த வேளை முல்லைத்தீவு கடற்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த இந்திய இழுவை படகுகள் முல்லைத்தீவு மீனவர் ஒருவருக்கு சொந்தமான படகை இடித்து தள்ளியதில் படகு சேதமடைந்து அதிலிருந்த மீனவர்கள் கடலில் வீழ்ந்து தத்தளித்த நிலையில் அங்கிருந்த சக மீனவர்களால் மீட்கப்பட்டுள்ளனர். இதனை அறிந்து கரையிலிருந்து சென்ற மீனவர்கள் இந்திய இழுவை படகு ஒன்றை முற்றுகையிட்டு அதிலிருந்த 8 மீனவர்களையும் கரைக்கு கொண்டு வந்தனர்.இதனை அடுத்து மாவட்டச் செயலர், படையினர், பொலிஸார், மாகாணசபை உறுப்பினர்கள் ஆகியோர் சென்று மீனவர்களுடன் கலந்துரையாடல் நடத்திய நிலையில் முல்லைத்தீவு மீனவர்களால் பிடிக்கப்பட்ட இந்திய மீனவர்கள் 8 பேரும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், சேதமடைந்த முல்லை மீனவர்களின் படகும் கடலில் மூழ்கியிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.