Tuesday, April 10, 2018

அண்ணாவின் தந்திரம் ! .... பெரியாரின் கோபம் !.....

திராவிடர் கழகத்தில் பெரியாரிடம் அண்ணா செயலாளராகப்  பணிசெய்து  கொண்டிருந்த காலம் அது . அந்த நாளில் திராவிடர் கழக காரியாலயத்துக்கு வெள்ளை அடிக்கவேண்டும் என ஒரு நாள் அண்ணா தெரிவித்தார்.

“சரி  நாளை ஒரு நல்ல ஆளாக பார்த்து அழைத்து வா!”  என்றார் பெரியார் .மறுநாள் அது போல ஒரு ஆளுடன் போய் நின்றார் அண்ணா .

வெள்ளை அடிக்க வந்தவருக்கு முதலில் கட்டிடத்தை முழுவதும் சுற்றிக்காட்டி விட்டு “என்ன கூலி கேட்கிறாய்?” என்றார் பெரியார் .


வந்தவர் “ஜந்து ரூபா தாருங்கள்” என்றவுடன் கோபமடைந்த பெரியார் “நீ என்ன படித்திருக்கிறாய்?” என்று கேட்டார் .


“படிச்சிருந்தா நான் ஏன் இந்த வேலைக்கு வருகிறேன் “படிக்கலிங்க. என்றார் அண்ணா அழைத்து வந்தவர்.


உடனேயே பெரியார் அண்ணாவை சுட்டிக்காட்டி “ இதோ நிற்கிறாரே , இவர் எம்.ஏ படித்தவர்.இவருக்கே மாதச்சம்பளம் ஜந்து ரூபா தான் தருகிறேன் .கூலியை பார்த்துக் கேள் !” என்றவர்  பின்பு “இரண்டு ரூபா தருகிறேன்! “  என்றார் .


“கட்டாதுங்க!” என்று கூறிப்போய் விட்டார் வெள்ளை அடிக்க வந்தவர் .


இப்படி அண்ணா அழைத்து வந்த பலராலும் ,கூலி தகராறினால் வெள்ளை அடிக்கமுடியாமல் போகவே பல மாதங்களாக காரியாலயத்துக்கு வெள்ளை அடிக்க முடியாமல் காரியாலயம் மிகவும் அவலட்சணம் அடைந்து வருவது கண்டு யோசித்த அண்ணா ஒரு உபாயம் மேற்கொள்ள தீர்மானித்தார் .


ஒரு தொழிலாளியிடம் போய் “ஜயா ஒரு பெரியவரிடம் உங்களை அழைத்துச் செல்வேன் .அவர் கொடுக்கும் கூலிக்கு ஒப்புக்கொண்டு வேலை செய்யுங்கள் . உங்களுக்குரிய மீதிப் பணத்தினை, வேலை முடிந்ததும் வெளியே வந்து என்னிடம் பெற்றுக்கொள்ளுங்கள்!” என்று கூறி அவரை அழைத்து வந்தார் .


அவரும் அண்ணா கூறியபடி வந்து காரியாலயத்துக்கு வெள்ளை அடித்துக்கொண்டு இருந்தார். அண்ணா இல்லாத உணவு இடைவேளையில் அங்கு வந்த பெரியார் அந்த தொழிலாளியை ஏற இறங்க பார்த்துவிட்டு “ஏம்பா! நீ நன்றாக வெள்ளை அடிப்பாயா?” என்று கேட்டார்.


“ஏன் ஐயா இப்படி கேட்கிறீர்கள்?” என்று திடுக்கிட்டவாறு கேட்டார் வெள்ளை அடித்துக்கொண்டிருந்தவர் .


அதற்கு பெரியார்” அதில்லைப்பா; உனக்கு முன்னர் வந்த பலர் இந்த கூலிக்கு முடியாது என போய்விட்டார்கள். நீ மட்டும் எப்படி ஒப்புக்கொண்டாய் ? அனேகமாக உனக்கு வேலை சரியாக தெரியாது என நினைக்கிறேன்!” என்றார்  பெரியார் .


உடனே தன்மான உணர்வு மேலிட “ நான் ஒன்றும் கற்றுக்குட்டி அல்ல” என்று தொடங்கி அண்ணா அழைத்து வந்த விடயங்களையும் சொல்லி பணத்தினை  வெளியே வாங்கும் படியான ஏற்பாட்டையும் கக்கி விட்டார் .


இதை கேட்டு மிகவும் கோபம் அடைந்த பெரியார் “ அப்படியா விடயம் ! “ சரி நீ வேலை செய்தது போதும் .பூச்சு மட்டையை கிழே வைத்து விட்டு முழுப்பணத்தையும் அவரிடமே வாங்கிகொண்டு  போ !” என்று அவரை அனுப்பியதும் அல்லாமல் அவருடன் சேர்த்து அண்ணாவையும் வெளியே அனுப்பி விட்டார் .


அதன் பின்பு நீண்டகாலத்தின் பின்னர் தான் அண்ணாவை மன்னித்து தன்னுடன் சேர்த்துக்கொண்டார் பெரியார் .



அண்மையில் வாசித்த ஒரு நூலில் ரசித்த பகுதி உங்களுக்காக இங்கு தந்திருக்கிறேன் . நீங்கள்  படித்து ரசிப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன் மறு பதிவில் சந்திக்கிறேன் .
நன்றி

1 comment:

இமா க்றிஸ் said...

சுவாரசியமான விடயம்.