Friday, September 09, 2005

சந்திரமுகி "ராரா" பாடல்:- தெலுங்கா? தமிழா?

ங்கு ரொரண்டோவில் ஒலிபரப்பாகும் தமிழோசை வானொலியினை நான் அடிக்கடி கேட்பதுண்டு.இரவு 12.00 முதல் அதிகாலை 6.00மணிவரை இந்த வானொலி நிகழ்சிகள் இடம்இடம்பெறும். நேற்றைய தினம் அறிவிப்பாளர் கஜன் அவர்களின் அறிவிப்பில் 12.00 மணிதொடங்கி 1.00 மணிரையிலான நிகழ்சிகள் இளமைத்துடிப்புடன் களை கட்டியிருந்தன.இரவு 1.00 மணிவரை நல்ல பாடல்கள் பலவற்றை நேயர்கள் கேட்டுக்கொண்டிருந்தனர்.நானும்
உறக்கம் வரும்வரை கேட்டுக்கொண்டிருந்தேன்.

அந்நிகழ்சியில் கலந்துகொண்ட பெண் ஒருவர் சந்திரமுகி படத்தில் இடம்பெற்ற ராரா பாடலை ஒலிபரப்புமாறு கேட்டபோது அறிவிப்பாளர் கஜன் சொன்னார் இந்த ராராபாடலை தான் தமிழில் தரப்போவதாகவும் நீங்கள் இதுவரையில் கேட்டிருக்கமுடியாது என்று சொல்லி அந்தப்பாடலை ஒலிபரப்பினார்.

நான் சந்திரமுகி படத்தை இதுவரையில் பார்க்கவில்லை.பாடல்கள் தான் கேட்டிருக்கிறேன்.இந்த ராரா பாடல் தெலுங்கில் ஒலிப்பதைத்தான் இதுவரையில் கேட்டிருக்கிறேன். படத்திலும் தெலுங்கில் தான் இடம் பெற்றிருப்பதாக படித்திருக்கிறேன்.நான் அறிய விரும்புவது இந்த பாடல் படத்தில் தமிழில் உண்டா? அல்லது இப்போது தமிழில் தயாரித்து புதிய இசைத்தட்டில் சேர்த்திருக்கிறார்களா? இப்படி வேறு சில பாடல்கள் பின்னாளில் இசைத்தட்டில் சேர்த்திருக்கின்றனர்.எப்படி இருந்தாலும் கர்நாடக இசையில் அமைந்த இந்த பாடல் தெலுங்கில் கேட்டாலும் சரி,தமிழில் கேட்டாலும் சரி இனிமையாகவே இருக்கிறது. மனதை கொள்ளை கொள்கிறது.

Tuesday, September 06, 2005

எங்கே போகிறோம் நாம் ?- பகுதி 1

நான் எழுதி வைத்திருந்த ஒரு கட்டுரையினைவிட பதிக்க எண்ணியிருந்த போதினிலே திரு அ.இரவி அவர்களால் எழுதப்பட்டிருந்த இக் கட்டுரை கண்ணில் பட்டது. நான் எழுதிவைத்திருந்த சில விடயங்களை விட மிக அழகாக எழுதப்பட்டிருந்த இக் கட்டுரையினை இங்கு பதிக்கலாம் என்று எண்ணி இக் கட்டுரையினை இங்கு பதிக்கிறேன்.

என்னுள் எழுந்த அதே கோபம் இக்கட்டுரையாளரிடமும் எழுந்ததன் விளைவே இந்த கட்டுரை யதார்த்தம் புரியாமல் இன்னும் 1987 க்கு முற்பட்ட காலங்களிலேயே நின்றிருக்கும் சில 56,57,46 வயதில் உள்ளோருக்கு இதில் உள்ளவை பரிந்துரைக்கப்படுகிறது.வயது,படிப்பு மட்டும் அறிவையோ முதிர்ச்சியையோ தீர்மானிக்காது.

யாரையும் காயப்படுத்தவோ அல்லது நோகடிக்கவோ இக்கட்டுரை இங்கு பதிக்கப்படவில்லை என்பதை புரிந்து கொள்ளவும்.

கட்டுரை ஆசிரியர் திரு அ.இரவி அவர்களுக்கு நன்றி

-------------------------------------------------------------------------------------------

"புதியதோர் உலகம்" என்றொரு நாவல் 1985ல் வந்ததது.கோவிந்தன் எழுதியிருந்தார்.கோவிந்தன் அவர்கள் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின்(பிளாட்-PLOT) அங்கத்தவராக செயற்பட்டவர்.அந்த அமைப்பில் நிலவிய அராஜகம் ஜனநாயகமின்மை காரணமாக அதிலிருந்து வெளியேறியதாக கோவிந்தன் எழுதியிருந்தார்.அவ்வாறு வெளியேறி தலைமறைவாக இருந்த இரண்டு மாத கால இடைவெளியில் இவ் நாவல் எழுதப்பட்டிருக்கிறது.தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் அராஜகச் செயற்பாடுகளை வெளிப்படுத்தும் தொனிப்பொருள் கொண்டது இவ்நாவல் ஆயினும் அந்நாவலின் முன்னுரையில் கோவிந்தன் மேலும் எழுதுகிறார்.

"இந்நாவல் கூறும் விடயங்களை சிறீலங்கா அரசு தனக்கு சாதகமாக பயன்படுத்தி தமிழீழ விடுதலைப் போராட்டத்தினை சிறுமைப்படுத்தும் பிரசாரத்தினை மேற்கொள்ளலாமே என்ற அச்சம் இந்நாவல் படைக்கப்படும்போது கூட இருந்தது.கூடுமானவரை அந்த உணர்வு வாசகர்களுக்கு ஏற்படாதவகையில் நாவல் உருவாக்கப்பட்டது...."

ஒரு எழுத்து போராளி எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு கோவிந்தனின் கூற்று மெத்தச்சரியான உதாரணம்.விடுதலைப்போரை அவர் நேசித்ததன் அடையாளம் தான் இவ்வாசகங்கள்.அந்தநேசிப்பிலிருந்தும் சத்தியத்திலிருந்தும் பிறந்ததனால் மிகச் சிறந்த தமிழ்நாவல்களுள் ஒன்றாக புதியதோர் உலகம் நாவலும் அமைகின்றது.

அனால் இப்போதெல்லாம் என்ன நடக்கின்றது?மானுடத்தை,விடுதலையைநேசிக்காதோர்,படைப்பாளிகளாக வரலாறு எழுதுவோராக வந்ததனால் சில விகற்பங்கள் நிகழகின்றன.தமக்கு நேர்ந்த அனுபவங்களை பொதுஅனுபவங்களாக்கி,தம்மை மாத்திரமே மனிதர் எனநினைத்து, தனக்கான சுதந்திரத்தினை மாத்திரமே அவாவி நின்று,மானுடவிடுதலையை விலைகூறுபவர்களாக சில படைப்பாளிகள் மாறி வருகின்றனர்.அதுதான் மண்ணுக்கு,மக்களுக்கு செய்துவிட்ட பாதகச்செயல்.

"எனது மண்ணில்
நிச்சயமற்று போய்விட்ட
எனது இருப்பை உறுதிப்படுத்த
பிறந்தமண்ணின் எல்லையைக்கடந்தேன்"

என்று ஒரு கவிஞர் கருதுகின்றார்.அவரது உயிர்ப்பயம் என்பது அவரால் மாத்திரமே உணரப்படமுடியும்.அது பற்றிஏதும் பேச இயலாது.சரி அவ்வளவற்றுடன் அந்தக் கவிதையை அவர் நிறுத்திவிடவில்லை.மேலும் தொடர்கிறார்.

"இறுதியாக பாதங்களில்
ஒட்டியிருந்த செம்மண்ணையும்
தட்டியாயிற்று"

அந்தக்கவிஞர் தன் பிறந்த மண்ணின் எல்லையில் தன் மண்ணின் அடையாளத்தினை முற்று முழுதாக களைந்துவிடுகிறார்.இப்போது அவர் அந்த மண்ணுக்கு உரியவர் அல்லர்.இறுதிவரி இப்படி முடிகிறது.

"செம்மண்ணும் போயிற்று
எம்மண்ணும் போயிற்று"

இப்போது சொந்த மண்ணையே முற்றாக மறந்து விடுகிறார்.முற்றுப்புள்ளிவைத்தாயிற்று.இப்படி முற்றுப்புள்ளிவைப்பது வலு இலகு.இனி சமையல்,சாப்பாடு,கோயில்,கும்பிடு என்று இலெளகீக வாழ்க்கைக்குள் நுழையவேண்டியதுதான்.அதுவெல்லாம் சரி.மெத்தச் சந்தோஷம்.சாகும் வரை போராடி ஏன் வாழ்வான்? வாழ்வு இடர் தருகிறதா?உதறி எறிந்திட வேண்டியதுதான்.உபத்திரம் இது.

ஆனால் வேறொன்றுதான் சற்று உதைக்கிறது.இந்தக் கவிதை எழுதிய இதே கவிஞர் முன்னர் வேறுபல கவிதைகளையும் எழுதிவிட்டு போய்விட்டார்

"தோழி
எழுந்து வா
இன்னும் இருட்டினில் என்னடி வேலை?"

என்று இருட்டினில் நித்திரைப்பாயில் படுத்திருந்த பலரையும் எழுப்பி பின்னால் வரச்சொல்லியும் கூப்பிட்டுவிட்டார்.இப்போது இந்தக்கவிஞர் "குண்டி மண்ணையும்" தட்டிவிட்டு போனபின்,எழுந்துவந்த அவர்கள் என்ன செய்வதென்றறியாது கலங்குகின்றார்கள்.

இனிச் சற்றுக் காத்திருந்தால் போதும்"மனித உரிமைகளின்" பெயரில் "நியாயவாதி"களின் பெயரில் ஆதிபத்தியநாடுகளும் அதன் அடிவருடிகளும்,விருதும் சொச்சப்பணமும் தேவைப்பட்டால் புலமைப்பரிசிலும் தந்து விலை பேசிவிடுவார்கள்.

தொடரும்................

Sunday, September 04, 2005

மதிமுக--- சன் ரீவி லடாய்!!!

சென்னையில் நேற்று நடைபெற்ற வைகோவின் "சிறையில் விரிந்த மடல்கள்" நூல் வெளியீட்டு விழாவில் செய்தி சேகரிக்க சென்ற சன் ரிவி குழுவினரை அனுமதிக்க மதிமுகவினர் மறுத்து விட்டனர்.
இதன் காரணமாக மதிமுகவினருக்கும், சன் ரிவி நிருபர்களுக்கும் இடையே பெரும் விவாதம் நடை பெற்றுள்ளது. மதிமுக பொதுச் செயலாளர் வைகோ சம்பந்தப்பட்ட செய்திகளை சன் ரிவி இருட்டடிப்பு செய்வதாக மதிமுக வினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.

சமீபத்தில் திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்தபோது வைகோவும் இதனை அவரிடம் சுட்டிக் காட்டியதாகவும், இந்த விஷயத்தில் தான் ஒன்றும் செய் வதற்கு இல்லையென்று அவர் கை விரித்து விட்டதாகவும் கூறப் படுகிறது. இந்த நிலையில், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எழுதிய "சிறையில் விரிந்த மடல்கள்' நூல் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது.

பிரதமர் மன்மோகன்சிங், திமுக தலைவர் கருணாநிதி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் கலந்து கொண்டனர்.இந்த நிகழ்ச்சிக்கான அழைப்பிதழை சன் ரிவிக்கு மதிமுக அனுப்பவில்லை என்று தெரிகிறது. இது குறித்து சன் ரிவி நிருபர் ஒருவர் மதிமுக நிர்வாகி ஒருவரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு அழைப்பிதழ் வரவில்லை என்று கூறியதாக தெரிகிறது.

இதற்கு அந்த நிர்வாகி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பற்றிய செய்திகளை சன் ரிவி இருட்டடிப்பு செய்வதால் அழைப்பிதழ் அனுப்பப்படவில்லை யென்று கூறி யிருக்கிறார். மேலும் சன் ரிவி சார்பில் நிருபர் கள் யாரும் வர தேவையில்லை யென்றும் அவர் கூறியிருக்கிறார்.

பிரதமர் பங்கேற்கும் நிகழ்ச்சி என்பதால் செய்தி சேகரிக்க வேண்டும்.
எனவே அழைப்பிதழ் தாருங்கள் என்று அந்த நிருபர் வலியுறுத்தி கேட்டதாகவும், இது எங்கள் கட்சி நிகழ்ச்சி, நீங்கள் வர தேவை யில்லை என்று அந்த நிர்வாகி திட்டவட்டமாக கூறியதாகவும் தெரிகிறது. நிர்வாகியின் பதிலால் சற்றே கோபமடைந்த நிருபர், கட்சி நிகழ்ச்சி என்றால் உங்கள் அலுவலகத்தில் நடத்த வேண்டியது தானே என்று கூறியதாகவும், இது உங்களுக்கு தேவையில்லாத விஷயம் அதிகபிரசங்கித்தனமாக பேசாதீர்கள் என்றும் அந்த நிர்வாகி கூறியதுடன், தொலைபேசி உரை யாடலை துண்டித்து விட்டதாகவும் மதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறு அனுமதி மறுக்கப்பட்ட நிலையிலும், சன் ரிவியின் மற்றொரு நிருபரும், கேமராமேனும் நிகழ்ச்சி நடந்த அரங்கிற்குள் வந்து செய்தி சேகரித்து சென்றனர்.

------மாலைசுடர்------------

Friday, September 02, 2005

விஜயகாந்தின் அரசியல் இணையத்தளம்!

டிகர் அரசியலாளர் விஜயகாந் அவர்களுக்காக புதிய ஒரு இணையத்தளம்
ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது.இதில அவர் தொடர்பான விடயங்கள்,அவரின்
பேட்டிகள்,அவரின் புகைப்படங்கள்,அவரின் பேச்சுக்கள்,அவர் ரசிகர்களுக்கு எழுதும் கடிதங்கள் போன்ற பல விடயங்கள்அவற்றில் தொகுக்கப்பட்டிருக்கிறது.அவரின் அரசியல் பயணத்துக்கு முன்னோடியாக
அவரைப் பற்றிய சகல விடயங்களையும் தாங்கி இந்த இணையத்தளம்
ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. தமிழ் எழுத்துருவினை தரவிறக்கம் செய்வதன்
மூலம் இத்தளத்தினை தமிழில் பார்க்கலாம்.

தளம் இதுதான்:--http://www.namadhuvijayakanth.com

உண்மை உண்மையைத் தவிர வேறொன்றில்லை

ன்று ஒரு பதிவு இட்டிருந்தேன் தமிழ் பேசும் முஸ்லீம்கள்...என்ற தலைப்பிலே எழுதியிருந்த ஒரு பதிவு பலர் தங்கள் கருத்துக்களை தெரிவித்திருந்தனர்.அதில் பெயரிலி மற்றும் டீ.சே அவர்கள் "உண்மை"பற்றி சில உண்மைக்கருத்துக்களை உண்மையாகவே கூறியிருந்தனர்.பெயரிலியின் பின்னூட்டம் இடும் வேகம் ,விவேகம் ஆச்சரியத்தினை அளிக்கிறது.
நீண்டநாட்களின் பின்னர் பின்னூட்டகுளத்தில் தொபுக்கடீர் எண்டு மூழ்கி கரை ஏறியது மிகவும் சந்தோஷத்தினை தந்தது.

இது டீ.சே யின் பின்னூட்டத்தின் ஒரு பகுதி:-'உண்மைகளை மட்டுமே பேசுதலே' மிகச்சரியானது என்ற ஒரு முடிவுக்கு வந்திருந்தேன்.

இதற்குபெயரிலியின் பின்னூட்டம்:-
'///உண்மைகளை மட்டுமே பேசுதலே' மிகச்சரியானது என்ற ஒரு முடிவுக்கு வந்திருந்தேன்.///ப்ரோ ரப்பர், 'உண்மை என்றும் ஒன்றானதல்ல";அதனால், "நிகழ்வுகளைப் பேசுவோம்; அதுவும் கிடைத்த தரவுகளாற் பேசுவோம்; எமது பார்வைகளால் அல்ல" ;-))

இதற்கு டீ.சே யின் பதில் பின்னூட்டம்:-
ப்ரோ தெளிவுபடுத்தியமைக்கு நன்றி. //ஆதாரத்துடன் பேசப்படும் உண்மையான விடயங்களை // என்று முதல் பின்னூட்டத்தில் கூறப்பட்ட உண்மைகளைத்தான் நானும் குறிப்பிட விரும்பினேன் :-). அவரவர்க்குரிய 'உண்மைகளை' அல்ல. பிறகு பின்நவீனத்துவக்காரர்களும் அடிக்க வந்துவிடுவார்கள். உண்மை என்பது எப்படி ஒன்றாக இருக்கும். பல உண்மைகள்தானே உண்மை என்ற உண்மை உனக்குத்தெரியாத உண்மையற்றவனாய் இருக்கின்றாயே என்று (ஆகா ஒருவருக்கும் விளங்காத ஒரு சொற்றொடரை நானும் எழுதிவிட்டேன் :-))

உண்மையாகவே எனக்கு இவர்கள் உண்மையைப்பற்றி எழுதியிருக்கும் உண்மைக்கருத்துக்கள் புரியவில்லை.பெயரிலி சொன்ன உண்மையைப் பற்றிய உண்மைக் கருத்துக்கள் எனக்கு கொஞ்சம் விளங்குகிறது.ஏன் இப்படி உண்மையினைப் பற்றி உண்மையில் இவர்கள் எழுதிய உண்மைக்கருத்தினை புரிந்துகொள்ள உண்மையாகவே சிரமமாக இருக்கிறது என்று யோசித்தபோது இந்த கதை ஞாபகம் வந்தது.

எங்கோ எப்போதோ படித்தது.நீதிபதிகள் இருக்கிறார்களே இவர்களுக்கு உண்மையினை அறிந்து கொள்ளவேண்டிய தேவை, கட்டாயம் உண்டு.அவர்கள் எப்படி உண்மையினை அறிந்து கொள்கிறார்கள் என்பதற்கு உதாரணம்இந்த சம்பவம் என்று வைத்துக் கொள்ளுங்கள்.

ஒரு வக்கீல் முதன்முறையாக நீதிமன்றம் வருகின்றார் முதல் அனுபவம் வேறு.எனவே உணர்ச்சி வசப்படுகிறார்.கூச்சப்படுகிறார்.தடுமாறுகிறார்.

"தூரதிர்ஸ்டம் பிடித்த என் கட்சிக்காரர் விதிவசத்தால் அகப்பட்டுக் கொண்ட என் கட்சிக்காரர்...!இதற்கு மேல் பேசமுடியாமல் தடுமாறுகிறார்.இப்போது நீதிபதி சொல்கிறார்.

"உங்களிடம் வந்துவிட்ட உங்கள் கட்சிக்காரரின் நிலை எங்களுக்கு தெளிவாக புரிந்துவிட்டது...மேலே தொடர்ந்து வழக்கு விபரங்களை சொல்லுங்கள்!"

சத்தம் தமிழனுக்கு ரொம்பப் பிடித்தது!

டந்த வார இறுதியில் இங்கு நடந்த இரண்டு நிகழ்வுகளுக்கு போகவேண்டி ஏற்பட்டது.இரண்டுமே தமிழர்களின் விழாக்கள் முற்றுமுழுதாக தமிழர்களே கலந்து கொண்டனர்.முதல் விழாகாலை 10.00 மணிக்கு என்று சொல்லியிருந்தனர்.சரி என்று நானும் துணைவியாருமாக புறப்பட்டு போனால் விரைவு நெடுஞ்சாலையில்அந்த விழாவுக்கு செல்லவேண்டிய வெளியேற்றத்தினை(exit) தவறவிட்டுவிட்டேன்.

சரி என்று போட்டு வேறு வெளியேற்றம்? வாயிலாக வெளியே வந்து விழா மண்டபத்தினை சென்றடைந்தபோது நேரமோ 10.30 மணியாச்சு விழா தொடங்குவதற்கான அறிகுறியே காணவில்லை.ஒவ்வொருவராக வரத்தொடங்கி விழா ஆரம்பித்தது காலை 11.30 மணிக்கு.விழா ஆரம்பித்து சில நிமிடங்களிலேயே தொல்லை தரத் தொடங்கிவிட்டதுஒலிபெருக்கி.200பேர் கூடியிருக்கும் ஒரு சிறிய மண்டபத்தில் இவ்வளவு சவுண்டில் ஒலிபெருக்கியை வைத்தால் எப்படி இருக்கும்.இரண்டுதடவை ஒலிபெருக்கி இயக்கிக் கொண்டிருந்தவரிடம் சொன்னேன் ஒலியளவு அதிகமாக இருக்குதுகொஞ்சம் குறையுங்கோ எண்டு.அவரும் சிறிது குறைப்பார் பின்னர்சில நிமிடங்களின் பின்னர் ஒலியளவு பழையபடி வந்துவிடும்.இப்படி அன்றையவிழா தொல்லையாக கழிந்தது.

இங்கு பல தமிழர்களின் விழாக்களுக்கு போயிருக்கிறேன்.அங்கு தொல்லைதருவது இந்த ஒலிபெருக்கியாகவே இருக்கும்.தமிழர்களின் விழாக்கள் என்றால்அலறிக் கொண்டிருக்கும் ஒலிபெருக்கி.மற்றைய நாட்டவர்களின் நிகழ்வுகளில்பார்த்தால் நிகழ்வின் தேவையொட்டியே இருக்கும் ஒலிபெருக்கின் ஒலி அளவு.ஏன் இப்படி வதைக்கிறார்களோ தெரியவில்லை.ஒலியளவு தேவையான நிகழ்வுகள் என்றால் பரவாயில்லை.எல்லா நிகழ்வுகளுக்கும்அல்லவா அப்படி செய்கின்றனர்.

தமிழர்களுடன் பிறப்பில் தொடங்கும்"சத்தம்" அவர்களின் வாழ்வெங்கினும் தொடர்கிறது.பிறந்தால் "சத்தம்" பெரியவள் ஆனா"சத்தம்" திருமணத்தில் "சத்தம்"இறந்தால"சத்தம்" நல்ல காலம் முதலிரவை மட்டும் விட்டு வைத்திருக்கிறார்கள்.இனி கோயிலில் போனால் "சத்தம்".அது இறைவனை கூட சத்தமிட்டுதுயில் எழுப்பி வணங்க சொல்கிறது. இது சமயம்.இப்படி தமிழனுக்கு சப்தம் இடுவது,சத்தம் கேட்பதும் பிடித்துப் போயிறு போலும்.

நல்ல காலம் பனையின் உச்சியில் லவுட்ஸீக்கர் கட்டி பாட்டு போட்ட பரம்பரையில் வந்த எம் தமிழர் இங்கும் அதையே செய்திருப்பர்.நல்ல காலம் இங்கு பனைகள் இல்லாமல் போனது.அத்துடன் அங்கு மாதிரி இல்லாமல் இங்குள்ள சட்டங்கள்.அந்த மட்டில் எமது காதுகள் தப்பித்ன போங்கள்.

முகமூடிகள் கிழிகின்றன...மூக்குகள் அறுக்கப்படுகின்றன...

புலிகள் தமிழ்நாட்டிலிருந்து போதைப் பொருட்களை கடத்தி தமது இயக்கத்துக்கு நிதி திரட்டுகிறார்கள்.என இன்று நேற்றல்ல பல காலமாகவே இலங்கை மற்றும் இந்திய ஊடகங்கள் சில புலிகள் மேல் புழுதிவாரி தூற்றிவந்தன, வருகின்றன. இலங்கையை சேர்ந்தவர்கள் யாராவது போதை பொருள் கடத்தி பிடிபட்டாலும் அவர்கள் இந்த ஊடகங்களுக்கு மட்டும் புலியாக தெரிவார்கள்.செய்தி வெளியிடுவார்கள்.

இங்கு அவர்களின் நோக்கம் புலிகளை இழிவுபடுத்துவது மட்டுமே.இவர்களுக்கு எப்படியாவது என்ன வழியிலாவது புலிகளை தூற்றவேண்டும்.சென்னையில் சிறுமிகளை பாலியல் வன்புணர்வு செய்ததாக கைதுசெய்யப்பட்ட ஒரு சுங்க அதிகாரியின் விடயத்தில் கூட அவரின் வீட்டில் புலிகள் பற்றிய புத்தகங்கள் கிடந்தன என்பதை சம்பந்தபடுத்தி புலிகளுக்கு சார்பானவர்கள் என்றால் அவர்கள் சிறுமிகளை வன் புணர்பவர்கள் என்றோ அல்லது புலிகள் என்றால் இப்படியான சம்பவங்களை செய்பவர்கள் என்றோ ஒரு தோற்றப்பாட்டை பாமர மக்கள் மத்தியில் ஏற்படுத்தவே இவ் ஊடகங்கள் முயல்கின்றன.மொத்தத்தில் புலியெதிர்ப்பு என்னும் தமது அரிப்பை தாமே இப்படி செய்தி வெளியிடுவதன் மூலம் தடவிவிட்டுக் கொள்கின்றன.

இதற்கு எவ்வையிலும் குறைந்ததல்ல இந்தப்பதிவு 40தடவைகள் சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் யாழ்ப்பாண புலி என்னும் இத்தலையங்கத்தின் மூலம் இதனை எழுதியவரின் முகமூடி கிழிந்துவிட்டது.இங்கு இவர் பேசியது பாலியல் துஸ்பிரயோகம் பற்றியல்ல.இவரின் நோக்கமும் பாதிக்கப்பட்ட சிறுமி பற்றியல்ல. புலியெதிர்ப்பே இங்கு முன்னிலை வகிக்கிறது. மனநலம் பற்றி கதைக்கும் இவரின் மனநலம் பற்றி மற்றவர்கள் சந்தேகப்படும் படி இருக்கிறது.கண்டிப்பாக இச் செயலை செய்தவருக்கு கடுமையான தண்டனை வழங்கப்படவேண்டும் என்பதில் மாற்றுக் கருத்துக்கே இடமில்லை.

இவரின் பதிவுகளில் பொதுநலம் என்பர்.மக்கள் என்பர்,ஜனநாயகம் என்பர்,பொருள்முதல் வாதம் என்பர்.மர்க்சிசம் என்பர்,சோசலிசம்என்பர்,இலக்கியம் என்பர்,இலக்கணம் என்பர்.போரெதிர்ப்பு என்பர் அழகாக வார்த்தையாடுவார்..இவை யாவும் முகமூடிகள். நிஜமுகம் புலியெதிர்பு.நிஜமுகத்தினை மறைப்பதற்காக இந்தமுகமூடிகள்.இந்தபதிவுடன் கிழிந்தன முகமூடிகள்,நிற்பது அவரின் நிஜமுகம் அல்லது அவரின் மனம்.வேண்டாம அய்யா முகமூடிகள்.நீங்கள் எதை எழுத விரும்புகிறீர்களோ அதை பாசாங்கு இல்லாமல் எழுதுங்கள் நீங்கள் எதை எழுதினாலும் பார்க்க படிக்க பலர் இருக்கின்றனர்.ஏன் நான்கூட படிப்பேன்.ஏனெனில் பதிவுகள் படைப்பது யாராக இருந்தாலும் தீர்மானிப்பது நான்தானே.
யாரும் எதையும் எழுதலாம்.அது அவரவர் சுதந்திரம் நான் வேண்டுவது
எல்லாம் பாசாங்கு இல்லாத எழுத்துக்கள்.

இதைப் போலதான் இன்னுமொருவிடயத்தில் சில இலங்கை இந்திய ஊடகங்களின் மூக்கறுக்கப்பட்டிருக்கிறது.முதலாவது பந்தியை படியங்கள்.இனி விடயத்தினை சொல்கிறேன்.

தமிழ்நாட்டிலிருந்து சிறிலங்காவிற்கு கடத்தப்படுகிற போதைப் பொருள்களுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும்எதுவித தொடர்பும் இல்லை என்று இந்திய அரசின் போதைப் பொருள் தடுப்புத்துறையின் மண்டல இயக்குநர்சங்கர் ஜிவால் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக சென்னையிலிருந்து வெளியாகும் "டெக்கான் குரோனிக்கல்" ஆங்கில நாளேட்டுக்கு அவர் அளித்த நேர்காணல்:

தமிழ்நாட்டிலிருந்து சிறிலங்காவிற்கு தமிழீழ விடுதலைப் புலிகள் போதைப் பொருள்களை கடத்தியதற்கான எதுவித சான்றும் இதுவரை இல்லை. தமிழீழ விடுதலைப் புலிகள் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபடுவதாக பலர் சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால் அதை நிரூபிக்கும் ஆவணங்கள் எதையும் அவர்கள் பெற்றிருக்கவில்லை. புலனாய்வுத்துறை தரப்பு தகவலும் கூட இது தொடர்பில் இல்லை என்றார்.அந்த நாளேட்டில் இடம்பெற்றுள்ள மேலும் சில தகவல்கள்:

கடந்த ஜனவரி முதல் ஓகஸ்ட் மாதம் வரை போதைப் பொருள் கடத்தியதாக தமிழ்நாட்டில் 54 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 19 பேர் சிறிலங்காவைச் சேர்ந்தவர்கள். மற்ற அனைவரும் இந்தியர்கள்.

இந்த ஆண்டு காலத்தில் 72 கிலோ கிராம் போதைப் பொருள் கடத்தப்பட்டுள்ளது. இதில் 275 கிராம் மட்டும்தான்
மாலத்தீவிற்கு கடத்தப்பட இருந்தது. மற்ற அனைத்தும் சிறிலங்காவுக்குத்தான் கொண்டு செல்ல திட்டமிடப்பட்டிருந்தது.போதைப் பொருள் கடத்தலில் சிறிலங்கா கேந்திரமாக விளங்குகிறது.
இதுவரை நிலப்பரப்பில்தான் போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அண்மையில் படகு மூலம் சிறிலங்காவுக்கு கடத்தப்பட இருந்த போதைப் பொருளை இந்திய கடற்படை உதவியுடன் முதன் முறையாக இந்தியபோதைப் பொருள் பறிமுதல் செய்துள்ளனர்.

இப்போது சொல்லுங்கள் சில ஊடகங்களின் மூ........க்கு அறுக்கப்பட்டிருக்கிறதுதானே.