Wednesday, December 19, 2007

திருமலையில் பல கிராமங்களிலிருந்து முஸ்லிம்களை வெளியேற்ற திரைமறைவில் சதி நடவடிக்கை

திருகோணமலை மாவட்டத்தில் பல கிராமப்புற முஸ்லிம் குடியிருப்புகளிலிருந்து முஸ்லிம்களை வெளியேற்ற திரை மறைவுச் சதி மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

கிண்ணியா பிரதேச சபைப் பிரிவிலுள்ள பல இடங்களிலிருந்து முஸ்லிம்களை வெளியேறுமாறு பொலிஸார் அச்சுறுத்தி வருவதாகவும் முஸ்லிம்கள் வன இலாகாவுக்குட்பட்ட காணிகளில் அத்துமீறிக்குடியேறி இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

அரசாங்கம் 1971 ஆம் ஆண்டு முதல் குடியிருந்து வந்த முஸ்லிம்களை தமது பிறந்த இடங்களிலிருந்துவெளியேற்ற திட்டமிட்டுச் செயற்பட்டுவருவதாக திருகோணமலை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தௌபீக் தெரிவித்திருக்கின்றார்.

இது பற்றி அவர் மேலும் விளக்கமளிக்கையில் கூறியதாவது;

கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வட்ட மடு, செம்பி மோட்டை,வழைமடு, பனிச்சங்குளம், கள்ளரப்பு, குரங்குப் பாஞ்சான், போன்ற கிராமங்களில் முஸ்லிம்களுக்குரிய குடியிருப்புக்காணிகள், விவசாய காணிகளிலிருந்து அவர்களை உடனடியாக வெளியேறுமாறு பொலிஸார் உட்பட அதிகாரிகள் அச்சுறுத்தி அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.

ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்களை உடனடியாக வெளியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

காணி அபிவிருத்திச் சட்டத்தின் கீழ் 1971 ஆம் ஆண்டிலும், 1979 ஆம் ஆண்டு காலப்பகுதியிலும் வழங்கப்பட்ட காணி அனுமதிப் பத்திரங்களுக்கமையவே இக்காணிகளில் முஸ்லிம் மக்கள் குடியிருப்புகளில் குடியேறி விவசாயத்தில் ஈடுபட்டு வந்தனர்.

1990 ஆம் ஆண்டில் இடம்பெற்ற கலவரம் காரணமாக இப்பிரதேச மக்கள் தமது விவசாய நிலங்களையும், குடியிருப்புகளையும் கைவிட்டு வெளியேறி வேறுபகுதிகளில் தஞ்சமடைந்தனர். சுமார் 17,18 வருடங்களுக்குப் பின்னர் இந்த முஸ்லிம் மக்கள் தமது சொந்த இடங்களுக்கு மீண்டும் திரும்பி விவசாயத்தை மேற்கொள்ளத் தொடங்கியுள்ளனர்.

இந்த நிலையில் அரச காணிகளில் அத்துமீறி குடியேறியிருப்பதாக குற்றச்சாட்டு சுமத்தி இவர்களை உடனடியாக வெளியேற்றும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இக்காணிகள் வனபரிபாலன திணைக்களத்துக்குரியதெனக் கூறி அதிகாரிகளும், வான் எல பொலிஸாரும் அக்குடியிருப்புக்களில் மக்களை அச்சுறுத்தி உடன் வெளியேறுமாறு கட்டாயப்படுத்துகின்றனர்.

கிழக்கு மாகாணத்தை அரசு முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருப்பதாகவும், அங்கு மக்கள் சுதந்திரமாகத் தமது செயற்பாடுகளை மேற்கொள்ள முடியுமெனக் கூறும் அரசாங்கம் மறுபுறத்தில் குடியிருப்புகளிலிருந்து முஸ்லிம்களை வெளியேற்றும் நடவடிக்கைகளை முடுக்கிவிட்டிருக்கின்றது.

அரசு இவ்விடயத்தில் உரிய நடவடிக்கை எடுத்து நியாயம் பெற்றுக்கொடுக்கத் தவறினால் இப்பகுதி முஸ்லிம்கள் பெரும் நெருக்கடிக்குள் தள்ளப்படலாமெனவும் அந்த மக்களை இன்னுமொரு தடவை அகதிகளாக்க வேண்டாமெனவும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் அரசுக்கு வலியுறுத்தியுள்ளார்.

thinakkural

Sunday, December 09, 2007

காங்கிரஸ் கட்சியினரை திகைக்க வைத்த எஸ்.ஆர்.பி.யின் புதிய காய் நகர்த்தல்

இலங்கைத் தலைநகர் கொழும்பிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் அரசபடைகளால் தமிழர்கள் ஆயிரக்கணக்கில் கைதுசெய்யப்பட்டு பயங்கரவாதிகள் போல் சிறைகளிலடைக்கப்பட்டு இம்சிக்கப்பட்டபோதும் அதன் வலி தமிழகத்தில் உணரப்படாதது தமிழக அரசியலின் சந்தர்ப்பவாதத்தை மீண்டும் ஒரு தடவை உறுதிப்படுத்தியுள்ளது.

மலேசிய அரசுக்கெதிராக அங்குள்ள இந்தியத்தமிழர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது 38 பேர் கைதுசெய்யப்பட்டதற்காக கொதித்தெழுந்த தமிழகமும் தமிழகத்தின் அரசியல் தலைவர்களும் மலேசியாவை விட அருகிலுள்ள இலங்கையில் இந்தியவம்சாவளித் தமிழரும் தமது இரத்த உறவுகளும் ஆயிரக்கணக்கில் ஆண் பெண் பேதமின்றி வயதுவித்தியாசமின்றி கைது செய்யப்பட்டபோது அமைதிகாத்ததற்கும் வலுவான அரசியல் பின்னணி உண்டு.

தமிழகத்தில் தற்போது இரு கொள்கைகளையுடைய அரசியல் கட்சிகள் உண்டு. ஒருதரப்பு ஈழத்தமிழருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் ஆதரவு தெரிவித்து அரசியல் நடத்துவார்கள். இன்னொரு தரப்பு விடுதலைப் புலிகளுக்கும் ஈழத்தமிழர்களுக்கும் எதிரான கருத்துக்களைக்கூறி அரசியல் பிழைப்பு நடத்துவார்கள். இது ஒரு கொள்கையுடைய இரு அணிகள்.

மத உணர்வையும் மதத்தையும் பயன்படுத்தி அரசியல் நடத்துவது இன்னொரு கொள்கை. ஒரு தரப்பு மத உணர்வுகளை புண்படுத்தி மதவாதிகளை தாக்கிப் பேசி மதவாதக் கொள்கைகளை உடைத்தெறிந்து நாஸ்திக அரசியல் நடத்திக் கொண்டிருக்கிறது. இன்னொரு தரப்பு மதஉணர்வுகளையே மூலதனமாகக் கொண்டு மதவாத அரசியலை முன்னெடுக்கும் ஆஸ்திக அரசியலை நடத்தி வருகிறார்கள்.

இவ்வாறான நிலையில் இன்று தமிழகத்தின் அரசியலில் விடுதலைப் புலிகள் அமைப்பும் மதவாதமுமே செல்வாக்குச் செலுத்திக் கொண்டிக்கின்றது. இதனால், இங்கு மனிதாபிமானம் தார்மீக கடமை, இரத்த பாசம் போன்றவையெல்லாம் கடைநிலைக்குத் தள்ளப்பட்டு விட்டன.

இதன் வெளிப்பாடே மலேசியாவில் இந்தியத் தமிழர்கள் கைது செய்யப்பட்ட போது கொதித்தெழுந்து உரிமைக்குரல் எழுப்பி கண்ணீர் விட்ட தமிழக் முதலமைச்சரும் தமிழக அரசியல் தலைவர்களும் இலங்கையிலுள்ள இந்தியவம்சாவளி மக்களான தோட்டத் தொழிலாளர்கள் 400 க்கும் மேற்பட்டோர் அரசபடைகளால் கைதுசெய்யப்பட்டு சிறைகளிலடைக்கப்பட்ட போது கண்டு கொள்ளாமலிருந்தனர்.

மலேசியாவில் 38 இந்தியவம்சாவளித் தமிழர் கைதுசெய்யப்பட்ட போது கண்டனக்குரல் எழுப்பிய தமிழகம் இலங்கையில் 400 க்கும் மேற்பட்ட இந்திய வம்சாவளித்தமிழர் கைதுசெய்யப்பட்ட போது ஏன் கண்டனம் செய்யவில்லை. மலேசியாவிலுள்ள இந்தியவம்சாவளித் தமிழர் வேறு இலங்கையிலுள்ள இந்தியவம்சாவளித் தமிழர் வேறா ?

மலேசியாவிலுள்ள இந்தியவம்சாவளித் தமிழருக்கு உரிமைகளை வழங்க வேண்டுமென மத்திய அரசு ஊடாக வலியுறுத்தும் தமிழக அரசு இலங்கையிலுள்ள இந்தியவம்சாவளித் தமிழருக்கு உரிமைகளை கொடுக்க வேண்டுமென எப்போதாவது குரல்கொடுத்ததுண்டா? குரல் கொடுக்க நினைத்தாலும் அவர்களால் முடியாது. அதுதான் தமிழகத்தின் இன்றைய அரசியல் நிலைவரம்

வழக்கமாக வடக்கு-கிழக்கு தமிழர்களை மட்டுமே இலக்கு வைத்து செயற்பட்டு வந்த இலங்கையரசும் அதன் படைகளும் இம்முறை இலங்கையிலுள்ள இந்தியவம்சாவளித் தமிழர்கள் மீதும் கைவைத்துள்ளனர். இது தொடர்பாகத் தமிழக இந்திய அரசுகள் மௌனம் காத்து வருவது எதிர்காலத்தில இந்தியவம்சாவளித் தமிழர்களுக்கும் பேராபத்தை ஏற்படுத்தப் போகின்றது.

இந்திய வம்சாவளித் தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்கள் பலர் இலங்கை அரசில் அங்கம் வகித்தாலும் அவர்கள் அரசுக்கு கூசா தூக்கி சேவகம் செய்பவர்களாக இருப்பதால் இந்திய வம்சாவளித் தமிழர்கள் இலங்கையில் அநாதைகள் போலவே இருக்கிறார்கள். அராதைகள் போன்றே இலங்கையரசினாலும் நடத்தப்படுகிறார்கள்.

இவ்வாறான ஒரு நிலையில் இந்திய வம்சாவளித் தமிழ்மக்கள் இலங்கைப் படைகளால் வீதிகளிலும் வீடுகளிலும் தொழில் புரியும் இடங்களிலும் வைத்துக் கைது செய்யப்பட்டு ஆடு மாடுகளைப்போல் சிறைகளில் அடைக்கப்பட்டு இம்சிக்கப்பட்டபோது அதனை தமிழக அரசும் இந்திய அரசும் வேடிக்கை பார்த்து தமது மக்களுக்கு பெரும் துரோகத்தை செய்துள்ளது.

உலகத்தமிழரின் காவலன் என தன்னைக் கூறிக்கொள்ளும் தமிழகத்தின் முதலமைச்சர் கருணாநிதி இலங்கைத் தலைநகரில் வடக்கு-கிழக்கு தமிழர்களும் இந்திய வம்சாவளித் தமிழர்களும் இலங்கைப்படைகளால் கொத்துக் கொத்தாக கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்ட போது தனது காவலன் பணியிலிருந்து கடமை தவறிவிட்டார். இது அவருக்கும் நன்றாகவே தெரிந்துள்ளது.

எஸ்.ஆர்.பி.யின் அபாண்ட குற்றச்சாட்டு

இதேவேளை, விடுதலைப் புலிகளுக்கு எதிராக தமிழகத்தில் காங்கிரஸ் அமைச்சர் இளங்கோவன் புயலைக்கிளப்பிக் கொண்டிருக்க தமிழ்ச்செல்வனை விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனே இலங்கையரசுக்குத் காட்டிக்கொடுத்து படுகொலை செய்தாரென தமிழக காங்கிரஸின் மூத்த தலைவர்களில் ஒருவரான எஸ்.ஆர்.பி.என அழைக்கப்படும் முன்னாள் அமைச்சர் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன் அபாண்டமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழக காங்கிரஸின் சட்டமன்ற கட்சித் தலைவராகவும் இணை அமைச்சராகவும் இருந்தவர் எஸ்.ஆர்.பி.அண்மைக்காலமாக அரசியலிலிருந்து ஒதுங்கியிருந்த இவர் திடீரென தமிழ்ச்செல்வன் கொலைக்கு பிரபாகரன் தான் காரணமென்ற குற்றச்சாட்டுடன் ஊடகவியலாளர்களைச் சந்தித்தார். இது காங்கிரஸ் கட்சியினரையே கொஞ்சம் திகைக்க வைத்துவிட்டது.

அரசியலிலிருந்து ஒதுங்கியிருந்த எஸ்.ஆர்.பி. மீண்டும் அரசியல் பிரவேசம் செய்வதற்காகவே தமிழ்ச்செல்வன் விவகாரத்துடன் ஊடகவியலாளர்கள் முன் தோன்றியதாக காங்கிரஸிடையே முணுமுணுப்புகள் கேட்கின்றன. இக் கருத்தை நிராகரிப்பதற்கில்லை. ஏனெனில், ஊடகங்களில் பிரதான செய்தியாக வேண்டுமென்றால் ஒன்று இராமரைப் பற்றிக் கூறவேண்டும். இல்லையென்றால் விடுதலைப் புலிகளைப் பற்றிக்கூறவேண்டும்.

ஆனால், இக்குற்றச்சாட்டை மறுக்கும் எஸ்.ஆர்.பி. அரசியலுக்காக பரபரப்பாக செய்ய வேண்டிய தேவை எதுவும் தனக்கில்லை எனக்கூறியுள்ளார். தமிழ்ச்செல்வனை பிரபாகரன் படுகொலை செய்ததாகக் கூறும் அவரின் குற்றச்சாட்டுக்கு அவர் கூறும் ஆதாரம் இலங்கையில் தமிழர்களால் வெறுத்து ஒதுக்கப்பட்டுள்ள ஆனந்தசங்கரி கூறிய கருத்து மட்டுமே.

இதேவேளை, இலங்கைத் தமிழர்களுக்கு சம உரிமை வழங்க வேண்டும் . அவர்கள் இரண்டாம்தர பிரஜைகளாக நடத்தப்படக் கூடாது என்பதை தாம் வலியுறுத்துவதாகக்கூறியுள்ள காங்கிரஸின் மத்திய அமைச்சர் இளங்கோவன் விடுதலைப் புலிகள் அழிக்கப்பட வேண்டும். அவர்களை மன்னிக்கவோ, மறக்கவோ காங்கிரஸ் தயாரில்லை எனக் கூறியுள்ளதுடன் புலிகளை ஆதரிப்போர் தமது முதல் எதிரிகளென்றும் கூறியுள்ளார்.

விடுதலைப் புலிகளை ஆதரிப்பவர்கள் அவர்களை தமது காவலர்களாக போற்றுபவர்கள் இலங்கைத் தமிழர்கள். அவ்வாறெனில் இளங்கோவனின் கூற்றுப்படி இலங்கைத் தமிழர்கள் தான் காங்கிரஸின் முதல் எதிரிகள். அதனால்தான் காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு இலங்கைத் தமிழரை அழிப்பதற்காக இலங்கை அரசுக்கு ஆயுத உதவிகளை வழங்கி வருகின்றதா?

இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும். அவர்களுக்கு சமஉரிமை வழங்கப்பட வேண்டுமெனக் கூறும் அமைச்சர் இளங்கோவன் விடுதலைப் புலிகளை அழிக்க வேண்டுமெனவும் கூறுகின்றார்.

இலங்கைத் தமிழரின் ஏக பிரதிநிதிகளாக இருக்கும் விடுதலைப் புலிகளை அழித்துவிட்டு தமிழர் பிரச்சினைக்கு எவ்வாறு தீர்வு காணமுடியும்?

இளங்கோவனின் கருத்துப்படி விடுதலைப் புலிகளை அழித்துவிட்டு இலங்கைத் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதென்பது மணமகன் இல்லாமல் நடக்கும் திருமணம் போன்றது. இளங்கோவன் தொண்டர்களை உசுப்பேற்றும் கருத்துகளை கூறுகிறாரே தவிர யதார்த்த பூர்வமானவற்றை ஏற்கமறுக்கிறார். இதுதான் இளங்கோவனின் இலங்கைத் தமிழர் தொடர்பான நிலைப்பாடு.

அமைச்சர் இளங்கோவனின் கருத்தையே இந்திய பார்ப்பன ஊடகமும் தமிழர் விரோதப் போக்கைக் கொண்டதுமான த ஹிந்து தனது ஆசிரிய தலையங்கத்தில் வலியுறுத்தியிருந்தது. விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை அழிப்பதன் மூலமோ அல்லது அவரை தலைமைப் பதவியிலிருந்து நீக்குவதன் மூலமாகவே தான் இலங்கைத் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காணமுடியுமென கருத்து வெளியிட்டிருந்தது.

இலங்கைத் தமிழர்கள் தமது உயிரினும் மேலாக நேசிக்கும் தமக்கு சுதந்திரத்தைப் பெற்றுத் தருவாரென நம்பியிருக்கும் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை அழிக்க வேண்டுமென்பதிலேயே இந்தியாவின் அதிகார சக்திகள் தமது செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றன. பிரபாகரனை அழிப்பதன் மூலம் ஒரு இனமே அழிந்து விடுமென்பதை நன்குணர்ந்தும் அதனை மூடிமறைத்து பிரபாகரனை அழிப்பதன் மூலமே தமிழர்களுக்குத் தீர்வு கிடைக்குமென்ற பிரசாரத்தை முன்னெடுத்துள்ளன.

இதனாலேயே பிரபாகரன் தனது மாவீரர் தின உரையில் தமது விடுதலைப் போராட்டம் தொடர்பாக இந்தியா செய்த வரலாற்றுத் தவறுகளை சுட்டிக்காட்டியதுடன் மீண்டும் அவ்வாறான தவறுகளை செய்ய வேண்டாமெனவும் தமது போராட்டத்துக்குத் தார்மீக ஆதரவை தருமாறும் கோரியுள்ளார்.

இக்கோரிக்கை பிணத்திடம் கேட்டதற்கு ஒப்பானதாகும்.

ஏனெனில், தமிழர்களை இலங்கையரசு சிறுகச்சிறுக அழித்தாலும் ஒட்டுமொத்தமாக அழித்தாலும் இந்திய அரசோ, தமிழக அரசோ கண்டுகொள்ளாது. அதேவேளை, தமிழர் விடுதலைப் போராட்டத்தை அழிக்கத் தேவையான உதவிகளை வழங்கத்தயார் என்பதே தமிழக, மத்திய அரசுகள் இலங்கை தொடர்பில் அண்மைக்காலமாக வெளிப்படுத்தி வரும் செயற்பாடுகளின் உண்மை வடிவமாகும்.

-கலைஞன்-/thinakkural

Sunday, December 02, 2007

தெற்கின் பாதுகாப்புக்காக தனிமைப்படுத்தப்படும் வடக்கு

போர்நிறுத்த உடன்படிக்கை முடிவுக்கு வரப்போகிறது. விடுதலைப்புலிகளைத் தடை செய்வதன் மூலம் போர்நிறுத்த உடன்படிக்கையை முறித்து விடவும் சமாதான முயற்சிகளுக்கான வாய்ப்பை இல்லாது செய்துவிடவும் அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது. முழு அளவிலான போரில் இறங்கியுள்ள அரசு, வடக்கை முழுமையாக மீட்கப் போவதாகவும் சூளுரைத்து வருகிறது.

வடக்கில் பாரிய தாக்குதலை நடத்தியவாறு தெற்கின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசு முயல்கிறது. வடக்கில் படையினர் மேற்கொள்ளும் தாக்குதல்களால் அப்பாவி மக்கள் கொல்லப்படும் தகவல்களை மறைத்து, தெற்கில் இடம்பெறும் சிறிய சம்பவங்களுக்கும் அரசு முக்கியத்துவம் கொடுக்க முற்படுகிறது.

தெற்கின் பாதுகாப்பென்பது வடக்கில் இடம்பெறும் தாக்குதல்களைப் பொறுத்ததே. வடக்கில் எந்த அழிவுகளைச் செய்தாலும் எவருமே கேட்கக் கூடாதெனக் கருதும் இனவாதிகள், தெற்கில் என்ன சம்பவம் நடைபெற்றாலும் அது பயங்கரவாதத்தின் உச்சமென்கின்றனர்.

வடக்கில் மக்கள் குடியிருப்புக்களுக்கு மத்தியில் புலிகளின் முகாம்களிருப்பதால் வன்னியில் இடம்பெறும் தாக்குதல்களில் மக்களின் இழப்பு தவிர்க்க முடியாததெனத் தனது தாக்குதல்களை நியாயப்படுத்த முயலும் அரசு, தெற்கில் மக்கள் வாழ்விடங்களுக்கு மத்தியிலும் வர்த்தக பொருளாதார நிலைகளுக்கு மத்தியிலும் படைமுகாம்களிருப்பதை மறந்துவிட்டது.

கொழும்பு நுகேகொடையில் கடந்த புதன்கிழமை இடம்பெற்ற குண்டுவெடிப்பில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டது மிகவும் கொடூரமானது. வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டியது. எந்த வன்முறையிலும் அப்பாவி மக்களை இலக்கு வைப்பது ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது. எவரதும் குற்றங்களுக்காக ஏதுமறியாதவர்கள் தண்டிக்கப்படுவது ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது.

பாதிக்கப்படுபவர்கள் எந்த மக்களாயிருந்தாலும் அப்பாவிகளைக் கொன்று குவிப்பது கோழைத்தனமானது. அவ்வாறானதொரு செயலைச் செய்துவிட்டு அதனை நியாயப்படுத்துவதும் அப்படியொரு தாக்குதல் நடைபெற்றதா, சர்வதேச சமூகத்தை ஏமாற்ற மேற்கொள்ளப்படும் பொய்ப்பிரசாரங்களே இவ்வாறான தாக்குதல் பற்றிய தகவல்களெனக் கூறப்படுவதும் மேலும் அப்பாவிகளை பழிவாங்கப் போவதற்கான செயல்களேயாகும்.

முழு அளவில் போர் தொடங்கிவிட்டது. சமாதானத்திற்கான வாய்ப்புகள் இனி சாத்தியப்படமாட்டாது. புலிகளைத் தடை செய்வதில் அரசு தீவிரம் காட்டுகிறது. வரவு - செலவுத் திட்டத்தின் 3 ஆவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு எதிர்வரும் 14 ஆம் திகதி நடைபெறுவதற்கு முன் புலிகளை அரசு தடை செய்துவிட வேண்டுமென ஜே.வி.பி. கோரிக்கை விடுத்துள்ளது. இது பெரும்பாலும் சாத்தியப்படலாமென எதிர்பார்க்கப்படுகிறது.

போர்நிறுத்த உடன்பாடு அமுலிலிருக்கையில் அரச படைகளின் மனித உரிமை மீறல்கள் குறித்து சர்வதேச சமூகம் கடும் விசனமடைந்துள்ளது. இதனால், போர்நிறுத்த உடன்படிக்கையை நேரடியாக முறிக்காமல், புலிகள் மோசமான வன்முறைகளில் ஈடுபட்டு வருவதாகக் கூறி அவர்களைத் தடை செய்வதன் மூலம் போர்நிறுத்த உடன்படிக்கைக்கு முடிவுகட்டி விடலாமென சில தரப்புக்கள் சிந்திக்கின்றன. இதனால், அடுத்து வரும் நாட்களில் வன்முறைகள் அதிகரிக்கலாமென்ற அச்சம் அனைவர் மத்தியிலும் நிலவுகின்றது.

கடந்த 25 வருட காலப்போரில் புலிகளுக்கெதிராக துணிச்சலாகச் செயற்படுபவர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவே என அவரைப் புகழுவோர் தற்போது தெற்கில் அதிகம். இனப்பிரச்சினைக்கு சமாதானத் தீர்வைக் கண்டுவிடக் கூடாதென விரும்புவோர் இராணுவத் தீர்வைத் தூண்டி வருகின்றனர்.

இனப்பிரச்சினை வேறு பயங்கரவாதப் பிரச்சினை வேறென அதற்கு வியாக்கியானம் கூறும் அவர்கள், பயங்கரவாதப் பிரச்சினைக்கு இராணுவ ரீதியில் தீர்வு கண்டுவிட்டால் இனப்பிரச்சினைக்கு சுமுகமான தீர்வைக் கண்டுவிடலாமென விளக்கமும் கூற முற்படுகின்றனர்.

தற்போதைய நிலையில் இராணுவத் தீர்வை காணுமாறு அரசை வலியுறுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இனப்பிரச்சினைக்கு அதிகாரப் பரவலாக்கல் மூலம் தீர்வு காண்பதென்பது ஈழத்தை உருவாக்குவதற்கு சமனென அவர்கள் விளக்கம் கூற முற்படுகின்றனர். இதனால், தமிழ் மக்களின் பிரச்சினையை பயங்கரவாதப் பிரச்சினையாக்கி புலிகளை அழிப்பதன் மூலம் இனப்பிரச்சினைக்கு தீர்வு கண்டுவிட வேண்டுமென இனவாதிகள் துடிக்கின்றனர்.

புலிகள் மிகவும் பலவீனமடைந்துள்ளதாக இனவாதிகள் கருதுகின்றனர். அநுராதபுரம் விமானப் படைத்தளம் மீதான தாக்குதலால் தென்பகுதி அதிர்ந்து போயிருந்தது. ஆனால், புலிகளின் அரசியல் துறைப்பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வன் கொல்லப்பட்டதால், இழந்த உற்சாகத்தை அவர்கள் மீளப்பெற்றதுடன் புலிகளின் ஏனைய தலைவர்களையும் இவ்வாறு அழித்துவிடலாமென்ற நப்பாசையில் உள்ளனர்.

இதனால், வன்னியில் தினமும் விமானத் தாக்குதலும் கடும் ஷெல் தாக்குதலும் ஆழ ஊடுருவும் படையினரின் கிளேமோர் தாக்குதலும் நடைபெற்று வருகிறது. வடக்கே அனைத்து தடைகளையும் விதித்துவிட்டு அங்கு நடைபெறும் கொடூரத் தாக்குதல்களை அரசு முழு உலகுக்கும் மறைத்து வருகிறது.

தெற்கில் இடம்பெறும் சிறுசிறு சம்பவங்களும் மிகப் பெரியளவில் பிரசாரப்படுத்தப்படுகிறது. சிங்கள, ஆங்கில ஊடகங்கள் இந்தச் செய்திகளை தலைப்புச் செய்திகளாக்கி வருகின்றன. ஆனால், வடக்கு - கிழக்கில் இடம்பெறும் சம்பவங்கள் அனைத்தும் மூடிமறைக்கப்படுகின்றன. சிங்கள, ஆங்கில ஊடகங்கள் அவை பற்றி மூச்சும் விடுவதில்லை. இதனால், தென்னிலங்கை மக்களுக்கு அங்கு தினமும் நடைபெறும் கொடூரங்கள் பற்றி எதுவும் தெரிவதில்லை. முற்றாகவே இருட்டடிப்புச் செய்யப்படுகிறது.

வடக்கு - கிழக்கில் தினமும் பலர் கொல்லப்படுகின்றனர். பலர் கடத்தப்படுகின்றனர். பலர் காணாமல் போகின்றனர். யுத்தமென்ற பெயரில் வடக்கே தினமும் தமிழர் பகுதிகளில் நூற்றுக்கணக்கில் ஆட்லறி ஷெல் தாக்குதலும் மோட்டார் குண்டுத் தாக்குதலும் பல்குழல் ரொக்கட் தாக்குதலும் நடைபெறுகிறது. இவற்றின் தாக்கம் சொல்லில் உணர்த்தப்பட முடியாது. நேரில் அனுபவிக்கும் மக்களுக்கே அதன் தாக்கம் புரியும்.

இதைவிட கடந்த ஒன்றரை வருட காலத்தில் வடக்கில் மட்டும் விமானங்கள் ஆயிரக் கணக்கான குண்டுகளை வீசியுள்ளன. கிபிர் மற்றும் மிக் விமானங்கள் வீசும் ஒவ்வொரு குண்டும் 500 கிலோவுக்கும் மேற்பட்ட எடை கொண்டன. ஒவ்வொரு குண்டும் குறைந்தது ஒரு வீட்டையாவது தரைமட்டமாக்கும். இன்று வரை ஆயிரக்கணக்கான வீடுகள் அழிக்கப்பட்டு பல நூற்றுக்கணக்கானோர் இந்தத் தாக்குதல்களால் கொல்லப்பட்டுள்ளனர்.

யுத்தம் நடைபெறும் பூமி வடக்கு - கிழக்கு என்பதால் அங்கு மட்டும் தான் இந்தத் தாக்குதல் நடத்தப்பட வேண்டுமென்பது என்ன நியாயம்? இதே தாக்குதல்களில் ஒன்று,இரண்டு தெற்கில் நடைபெற்றால் எப்படியிருக்குமென்பதை இன்று வரை சிங்கள மக்கள் எவருமே உணரவில்லை. இதனால்தான் தெற்கில் சிறிய குண்டுவெடித்தால் உலகம் முழுவதற்கும் மரண ஓலம் எழுப்பப்படுகிறது.

அதேநேரம், புலிகளை எந்தளவு தூரம் ஆத்திரப்படுத்த முடியுமோ அந்தளவிற்கு ஆத்திரப்படுத்தி அவர்களை வன்முறைகளில் ஈடுபடச் செய்ய வேண்டுமென்பதில் அரசும் இனவாதிகளும் தீவிரம் காட்டுகின்றனர். தமிழ்ச்செல்வன் மீதான தாக்குதல், விமானப் படையினரின் துல்லியமான செயற்பாட்டால் ஏற்பட்டதல்ல. வழமைபோல் வன்னியில் குண்டுகளை வீசியபோது எதேச்சையாக ஏற்பட்டதொன்றென்பதை அனைவரும் அறிவர்.

தமிழ்ச்செல்வன் கொல்லப்பட்டதால் சமாதான முயற்சிக்கே சாவுமணி அடிக்கப்பட்டுவிட்டதாக தென்பகுதி மக்கள் கூட உணர்ந்தபோது, தமிழ்ச்செல்வனை எந்தளவில் அவமதிக்க முடியுமோ அந்தளவுக்கு அவர்குறித்து அரசும் இனவாத ஊடகங்களும் மிக மோசமாகப் பிரசாரம் செய்தன. தங்கள் தரப்புடன் சமாதானம் பேசியவர், தங்களுடன் இனியும் சமாதானம் பேச இருந்தவரெனக் கூடப் பார்க்காது அவரை அரசு மிகவும் கேவலப்படுத்தியது.

புலிகளின் தலைவர் பிரபாகரனின் பிறந்த நாளன்று, அவரை கொல்லப்போவதாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் சகோதரருமான கோதாபய ராஜபக்ஷ சபதமிட்டார். அடுத்த மாவீரர் தினத்தில் உரையாற்ற அவர் இருக்கமாட்டாரெனவும் கூறி புலிகளை எந்தளவுக்கு சீண்ட முடியுமோ அந்தளவுக்கு சீண்டினார்.

மாவீரர் தினமன்று வன்னியில் ஆழ ஊடுருவும் படையணியினர் நடத்திய தாக்குதலில் 10 பாடசாலை மாணவர்கள் உட்பட 13 பேர் கொல்லப்பட்டனர். புலிகளின் தலைவர் ஆற்றும் மாவீரர் தின உரையை எவருமே கேட்கக் கூடாதென்பதற்காக, ஊடக நிலையமென்றும் பாராது அன்று மாலை `புலிகளின் குரல்' வானொலி நிலையம் மீது 12 குண்டுகள் வீசி அந்த நிலையம் தரைமட்டமாக்கப்பட்டதுடன் பத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். ஆனாலும், பிரபாகரனின் உரையை முழு உலகமும் கேட்டது.

இவையெல்லாவற்றுக்கும் அப்பால் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவும் புலிகளை ஆத்திரமூட்ட முயன்று பார்க்கிறார். பிரபாகரன் உயிருடன் பிடிக்கப்பட்டால் அவரை இந்தியாவிடம் ஒப்படைப்போமென்றும் அவ்வாறு உயிருடன் பிடிக்க முடியாது, இராணுவ நடவடிக்கை மூலம் அவர் கொல்லப்பட்டால் அவரது உடல் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் ஊடாகவோ அல்லது வேறு வழிகளிலோ புலிகளிடம் ஒப்படைக்கப்படமாட்டாதெனவும் பிரபாகரனின் உடலை இந்தியா கேட்டால் அதனை அவர்களிடம் ஒப்படைப்போமென்றும் கெஹலிய ரம்புக்வெல கூறியுள்ளார்.

இவ்வாறெல்லாம் கூறி அவர்களை சினமுறச் செய்து அதன்மூலம் அவர்கள் ஏதாவது வன்முறையில் ஈடுபட வேண்டுமென்ற நோக்கில் அரசு செயற்படுகிறதா? என்ற கேள்வியும் எழுகிறது. ஆனால், கடந்த காலங்களிலெல்லாம் இவ்வாறான ஆத்திரமூட்டல்களை புலிகள் சந்தித்தவர்களென்பதால் உரியவர்கள் மட்டுமே இதற்குரிய பலாபலன்களை அனுபவிப்பார்களென புலிகள் தரப்பில் கூறப்படுகிறது.

புலிகளுக்கெதிரான இராணுவ நடவடிக்கையெனக் கூறி வடக்கில் தமிழ் மக்கள் மிக மோசமாக இம்சிக்கப்படுகின்றனர். கடந்த வருடம் ஆகஸ்ட் மாதத்துடன் யாழ். குடாநாட்டுக்கான தரைவழிப் பாதையை முகமாலையுடன் அரசு மூடியது. தற்போது வன்னிக்கான பாதையை மூடியதுடன் மட்டுமல்லாது மதவாச்சியுடன் ரயில் சேவையை நிறுத்தி வடபகுதிக்கான போக்குவரத்தையே அரசு முடக்கியுள்ளது.

ஏற்கனவே, யாழ்.குடா மக்களை குடாநாட்டுக்குள் முடக்கிய அரசு இன்று வடபகுதி மக்களை முழுமையாக முடக்கியுள்ளது. தென்பகுதியின் பாதுகாப்புக்காக வடபகுதியை அரசு முழுமையாகத் தனிமைப்படுத்தியுள்ளது. தெற்கை முதன்மைப்படுத்தியே நாட்டின் நலன்கள் அனைத்துமிருப்பதை இந்தச் செயற்பாட்டின் மூலம் அரசு உணர்த்தியுள்ளது. சர்வதேச சமூகமும் இதனடிப்படையிலேயே செயற்படுகின்றது.

வடக்கில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்ட போதெல்லாம் மௌனம் சாதித்த ஐ.நா.வும் அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் தெற்கில் ஒரு தாக்குதல் நடைபெற்ற பின்பே தங்கள் மௌனத்தை கலைத்துள்ளன. வன்முறைகளை கண்டிப்பதில் கூட சர்வதேச சமூகமும் ஒரு வரைமுறைக்குள் தான் நிற்கின்றதென்பதை அண்மைய சம்பவங்கள் எடுத்துக் காட்டுகின்றன.

இந்தியா, பாகிஸ்தான், ஈரான், அமெரிக்கா என உலக நாடுகளிடமிருந்தெல்லாம் போர்த் தளபாடங்களை வாங்கிக் குவிக்கும் இலங்கை அரசு இவற்றை வைத்திருப்பது சமாதானம் பேசவல்ல. படையினருக்கு ஏற்படும் இழப்புகளால் படைகளை விட்டுத் தப்பியோடுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பதுடன் படைகளுக்குச் சேருவோரின் தொகையும் குறைவடைந்து வருவதால் இனிமேல் போர்த் தளபாடங்களையே அரசு பெரிதும் நம்பியிருக்க வேண்டிய நிலையேற்பட்டுள்ளது.

ஆயுத உதவிகளை அள்ளிக் கொடுக்கும் அயல்நாடுகள் மனிதாபிமானம் பற்றி பேசுகின்றன. வடக்கிலும் கிழக்கிலும் அழிவுகள் ஏற்படும் போதெல்லாம் மௌனம் சாதிப்பவர்கள் தெற்கில் ஏதாவது நடந்ததும் துடித்து விடுகின்றனர். வடக்கே மோசமான தாக்குதல் இடம்பெறும் போது தெற்கில் அதன் பிரதிபலிப்பு இருக்குமென்பது இன்று நேற்றுத் தெரிந்ததல்ல, இனப்பிரச்சினை தொடங்கிய காலம் முதலே என்பதை அனைவரும் உணர வேண்டும்.

-விதுரன்- thinakkural.

Sunday, November 25, 2007

மாவீரர் தின உரையில் இம்முறை பிரபாகரன் சொல்லப் போவதென்ன?





மிழீழ பிரகடனமா? போர் நிறுத்தத்திலிருந்து விலகும் அறிவிப்பாவென இலங்கையரசும் சர்வதேசமும் கிலி பிடித்துப் போயுள்ள நிலையில் அதற்கான விடையுடன் நாளை மறுதினம் வருகிறது விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் வரலாற்றுச் சிறப்புமிக்க மாவீரர் தின உரை.

கடந்த காலங்களை விட மிகவும் தீர்க்கமானதொரு கால கட்டத்தில் இலங்கையரசும் விடுதலைப் புலிகளுமுள்ள நிலையில் பிரபாகரனின் இவ்வருடத்துக்கான மாவீரர் தின உரையில் காத்திரமான சில அறிவிப்புகள் அடங்கியிருக்குமென்பதே அனைத்து தரப்பினரினதும் எதிர்பார்ப்பாகவுள்ளது.

ஏனெனில், கடந்த ஆண்டுக்கான மாவீரர் தின உரையில் இலங்கையரசுக்கு சில எச்சரிக்கைகளை விடுத்திருந்த பிரபாகரன் சமாதானத்தின் மீது தனக்கிருந்த நம்பிக்கையை வெளிப்படுத்து முகமாக இலங்கையரசுக்கு கால அவகாசத்தையும் வழங்கியிருந்த போதும் இலங்கையரசு அதனை உதாசீனப்படுத்தி பெரும் போர் முன்னெடுப்புகளை மேற்கொண்டது.

போர் நிறுத்த உடன்படிக்கையில் முக்கிய சரத்துக்களை மீறி கிழக்கு மாகாணத்தில் பாரிய படை நடவடிக்கைகளை மேற்கொண்ட இலங்கையரசு பல நூற்றுக்கணக்கான தமிழ் மக்களை கொன்றொழித்து கோடிக்கணக்கான ரூபா சொத்துகளை அழித்து மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை, குடும்பிமலை பகுதிகளை ஆக்கிரமித்தது.

அதன் தொடர்ச்சியாக பல படை நடவடிக்கைகளை முன்னெடுத்தது. இதன் ஒரு பகுதியாக வன்னி பிரதேசத்தில் பாரிய படை நடவடிக்கையை மேற்கொண்டு சிலாவத்துறை பிரதேசத்தை ஆக்கிரமித்தது. தற்போதும் ஆக்கிரமிக்கும் நோக்குடன் படை நடவடிக்கைகளை தொடர்வதால் வன்னி முன்னரங்க பகுதிகள் அதிர்ந்து கொண்டிருக்கின்றன.

இது தவிர விடுதலைப் புலிகளின் ஆயுதக் கப்பல்களெனக் கூறி சர்வதேசக் கடற்பரப்பில் வைத்து சில கப்பல்களை இலங்கை கடற்படையினர் மூழ்கடித்தனர். குடும்பிமலை ஆக்கிரமிப்பு, கப்பல்கள் மூழ்கடிப்பென இலங்கையரசு வெற்றி விழாக்களை கொண்டாடி முழுவதுமான ஒரு போரை முன்னெடுத்தது.

இலங்கையரசின் ஒவ்வொரு செயலுக்கும் விடுதலைப் புலிகளும் பதிலடி வழங்கினர். காலி துறைமுகம் மீதான தாக்குதல், கட்டுநாயக்கா, பலாலி விமானத் தளங்கள், கொலன்னாவை எண்ணெய்க் குதங்கள் மீதான விமானத் தாக்குதல்கள், விளாத்திக்குள அதிரடித் தாக்குதல், பம்பைமடுவில் கனரக ஆயுதங்கள் அழிப்பு, அநுராதபுரம் விமானத் தளம் மீதான கரும்புலிப் படையணித் தாக்குதல்களென இலங்கையரசுக்கு பேரழிவை ஏற்படுத்தினர்.

இந்நிலையில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள் இராணுவத்தின் ஆழ ஊடுருவும் படையணி நடத்தும் தாக்குதல்கள், தொடர்ச்சியான விமானத் தாக்குதல்களென புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகள் அதிர்ந்து கொண்டிருக்க, யால வன விலங்கு சரணாலய தாக்குதல், திஸ்ஸமகராம தாக்குதல்களென தென் பகுதி கதிகலங்கிக் கொண்டிருக்கிறது.

இலங்கையரசின் வலிந்த தாக்குதல்களுக்கே புலிகள் பதிலடி வழங்கி வந்த அதேவேளை இலங்கையரசின் போர் நிறுத்த உடன்படிக்கை மீறல்களை சர்வதேசத்தினதும் சமாதானப் பேச்சுக்களுக்கான அனுசரணையாளர்களினதும் கவனத்துக்கும் கொண்டு சென்று போர் நிறுத்த உடன்படிக்கையை இலங்கையரசு சீராக கடைப்பிடிக்க அழுத்தம் கொடுக்குமாறும் வேண்டினர்.

ஆனால் இலங்கையரசு போர் நிறுத்த உடன்படிக்கையின் பிரதான பாத்திரமும் தம்முடனான சமாதான பேச்சுக்களில் பங்குபற்றிய விடுதலைப் புலிகளின் சமாதான பேச்சுக் குழுவின் தலைவரும் அரசியல் துறைப் பொறுப்பாளருமான சு.ப.தமிழ்ச்செல்வனை கிளிநொச்சியில் அமைந்துள்ள சர்வதேச பிரதிநிதிகளுடனான பேச்சுக்கள் இடம்பெறும் சமாதான செயலகத்துக்கருகில் வைத்து விமானக் குண்டு வீச்சு மூலம் படுகொலை செய்து போர் நிறுத்த உடன்படிக்கைக்கு முற்றுப் புள்ளி வைத்தது.

இலங்கை இனப்பிரச்சினைக்கு சமாதான வழியில் தீர்வொன்றை பெற்றுக் கொள்வதற்காக முன்னின்று செயற்பட்ட விடுதலைப் புலிகளின் சமாதான பேச்சுக்குழுவின் தலைவர் தமிழ்ச்செல்வனை படுகொலை செய்த இலங்கையரசு அதனை வெற்றி விழாவாகக் கொண்டாடியது. ஒரு கொடிய பயங்கரவாதியை கொன்றொழித்துவிட்டதாக தீவிர பிரசாரம் செய்தது.

தமிழ்ச்செல்வன் படுகொலை செய்யப்பட்ட அதேநாள் அறிக்கையொன்றை விடுத்த ஜனாதிபதியின் சகோதரரும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருமான கோதாபய ராஜபக்ஷ, தமிழ்ச்செல்வன் படுகொலையே ஆரம்பமெனவும் இனி விடுதலைப் புலிகளின் ஒவ்வொரு தலைவர்களையும் பலியெடுப்போமெனவும் சூளுரைத்தார். இதேபோன்றே விமானப்படை தளபதி ரொஷான் குணதிலகவும் புலிகளின் தலைவர் பிரபாகரனின் நாட்கள் எண்ணப்படுவதாக எச்சரித்தார்.

இவ்வாறான நிலையில் விடுதலைப் புலிகள் உடனடியாகவே போர் நிறுத்த உடன்படிக்கையிலிருந்து விலகுவததாக அறிவிப்பார்களென்றே அனைவரும் எதிர்பார்த்ததுடன் தமிழ்ச்செல்வன் இழப்புக்காக பாரிய பதிலடியொன்றை மேற்கொள்வார்களெனவும் எதிர்வு கூறப்பட்டது. ஆனால் இவை எதனையும் இன்றுவரை புலிகள் செய்யாதது பலரையும் சந்தேகப் படவைத்துள்ளது.

தமிழ்ச்செல்வன் படுகொலையின் பின்னர் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் தலைவரை கிளிநொச்சிக்கு அழைத்த விடுதலைப் புலிகள் தமிழ்ச்செல்வன் படுகொலை தொடர்பான தமது கண்டனத்தை தெரிவித்ததுடன் இது தொடர்பாக சர்வதேச சமூகத்தின் மௌனத்தை கண்டித்ததுடன் சமாதான அனுசரணையாளரான நோர்வே எவ்வித கருத்தையும் வெளியிடாதது குறித்து தமது வருத்தத்தையும் தெரிவித்ததுடன் நோர்வே தனது கருத்தை தெரிவிக்க வேண்டுமெனவும் கூறினார்.

நிலைமை இவ்வாறிருக்க அரசின் மூத்த அமைச்சரும் ஜனாதிபதியின் நம்பிக்கைக்குரியவருமான ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே விடுதலைப் புலிகள் விரைவில் தமிழீழத்தை பிரகடனப்படுத்தவுள்ளனரெனக் கூறி தென்னிலங்கையில் பீதியைக் கிளப்பிவிட்டார். இதனைத் தொடர்ந்து மாவீரர் தினத்தில் தமிழீழ பிரகடனம், தைப்பொங்கலில் தமிழீழ பிரகடனமென தினமும் ஒரு செய்தி தென்னிலங்கையில் வெளியாகிக் கொண்டிருக்கிறது.

இதேநேரம், சமாதானத்தை விரும்பும் நாடுகளின் அழுத்தம் இலங்கையரசு மீது பிரயோகிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் போது வல்லரசு நாடுகளான அமெரிக்கா, சீனா, இந்தியா ஆகியன இலங்கையரசின் போர் இயந்திரத்தை வலுப்படுத்தும் முகமாக தாராளமான இராணுவ உதவிகளை அள்ளி வழங்கிவருவதால் இலங்கையரசு போர் மூர்க்கம் கொண்டு வன்னி மீதான படையெடுப்புக்கு தயாராகி வருகிறது.

விடுதலைப் புலிகளும் தற்போது தற்காப்பு போரிலேயே ஈடுபட்டு வந்தாலும் பாரிய படை நடவடிக்கையொன்றுக்கான தயார்படுத்தலில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதற்கான சில முன்னேற்பாட்டு, ஒத்திகை சண்டைகளையும் புலிகள் நடத்தியுள்ளனர். முப்படைப்பலத்தை கொண்டுள்ள விடுதலைப் புலிகளும் இறுதி யுத்தமொன்றுக்கு தம்மை தயார்படுத்திவிட்டே உத்தரவுக்காக காத்திருக்கின்றனர்.

இலங்கையரசும் விடுதலைப் புலிகளும் இறுதி யுத்தமொன்றுக்கு தயாராகிவிட்ட நிலையில் நாளை மறுதினம் இடம்பெறவுள்ள விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மாவீரர் தின உரை பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த மாவீரர்தின உரையில் தமிழீழ பிரகடனமென இலங்கையரசும் போர் நிறுத்த உடன்படிக்கையிலிருந்து விலகல் அறிவிப்பு வருமென சர்வதேசமும் குழப்பிக் கொண்டிருக்கின்றன.

தமது விடுதலைப் போராட்டத்தில் இதுவரை சுமார் 20 ஆயிரம் வரையான போராளிகளையும் 1 இலட்சத்துக்கு மேற்பட்ட பொதுமக்களையும் இழந்துவிட்ட புலிகள் இனியும் பொறுமை காக்கமாட்டார்களென்ற கருத்து வலுத்துவரும் நிலையில் புலிகளின் முக்கிய பிரமுகர் பாலகுமார் அண்மையில் நிகழ்த்திய உரையொன்றில் இனியும் நாம் போராளிகளை விதைக்க தயாரில்லை என்பதால் விரைந்து முடிவொன்றை எடுப்போமெனக் கூறியதும் கவனிக்கத்தக்கது.

புலிகள் பாரிய தாக்குதலொன்றை மிக விரைவில் நடத்துவார்களென்று இலங்கையரசும் எதிர்பார்ப்பதால் அதற்கு முன்பாக தாம் முந்திவிட வேண்டுமென்பதில் தீவிரமாகவுள்ளது. அதனாலேயே பூநகரி மற்றும் மடுப்பகுதிகளை கைப்பற்றிவிடத் துடிக்கிறது. பூநகரியை கைப்பற்றுவதன் மூலம் புலிகளின் ஆட்டிலறி பலத்தை முறியடிக்கவும் மடுப்பகுதியை கைப்பற்றுவதன் மூலம் புலிகளின் விநியோக மார்க்கங்களை துண்டாடவும் இராணுவம் முயற்சிக்கின்றது.

இவ்வாறான ஏட்டிக்கு போட்டியான இராணுவ முனைப்புகளுக்கு மத்தியில் தனது மாவீரர் தின உரையில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் எதனைக் கூறப் போகின்றார்? தமிழீழ பிரகடனமா? போர் நிறுத்த உடன்படிக்கையிலிருந்து விலகும் அறிவிப்பா? அல்லது வழக்கம் போலவே இலங்கையரசுக்கு இறுதி எச்சரிக்கையும் சர்வதேசத்தின் செயற்பாடுகள் தொடர்பான கவலையுமா?

இலங்கையரசின் யுத்த நடவடிக்கைகளாலும் சர்வதேசத்தின் பக்கச்சார்வுப் போக்குகளாலும் விசனமடைந்திருக்கும் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் இம் மாவீரர் தின உரையில் போர் முரசு கொட்டலாமென்பதே அனைவரினதும் எதிர்பார்ப்பாகவுள்ளது.

எனவே இலங்கையரசுக்கும் சமாதான அனுசரணையாளர்களுக்கும் அதிர்ச்சி தரும் அறிவிப்புகள் பல இம்மாவீரர் தின உரையில் வெளிவருமென்பதில் சந்தேகமில்லை.

தாயகன்,தினக்குரல்

Thursday, November 01, 2007

முரண்பட்ட கருணா குழுவினர் ஒன்றுகூடி மீண்டும் சேர்ந்தியங்குவர் என அறிவிப்பு

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் (ரி.எம்.வி.பி) என்று அழைக்கப்படும் கருணா அணிக்குள் தோன்றியதாகக் கூறப்படும் உள் முரண்பாடுகள் முடிவுக்கு வந்துள்ளன என்று அந்த அணியின் அரசியல் துறைப் பொறுப்பாளர் திலீபன் தெரிவித்திருக்கிறார்
.
இது தொடர்பாக அவர்களுடைய இணையத்தளத்தில் வெளியிடப்பட்டிருப்பவை வருமாறு:
கடந்த 21 ஆம் திகதி மட்டக்களப்பில் கட்சியின் சகல உயர் மட்ட உறுப்பினர்கள் ஒன்றுகூடி மக்களினதும், கட்சியினதும் எதிர்கால நலனையும், சமகால நிலைமையையும் கருத்தில் கொண்டு நடைமுறைச் சாத்தியமான முக்கிய முடிவுகளை எடுத்துள்ளனர்.
அதனடிப்படையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் கருணாவின் ஆலோசனையிலும் பணிப்புரையின் கீழும் பிள்ளையான் இரண்டாம் நிலைப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கட்சியின் அதிகாரங்கள் பரவலாக்கப்பட்டு கருணாவின் நேரடிக் கண்காணிப்பில் கட்சியின் அரசியல் வேலைத்திட்டங்களை முன்னெடுக்க ஆறுபேர் கொண்ட அரசியல் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

அதன் உறுப்பினர்களாக பிள்ளையான், திலீபன், பாரதி, அசாத் மௌலானா, மார்க்கன், பிரதீப் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். கட்சியின் நிதிநிலைகள் தொடர்பாக கையாள்வதற்கு 7 பேர் கொண்ட நிதி செயற்குழு ஒன்றும் பிரத்தியேகமாக அமைக்கப்பட்டுள்ளது.
கட்சியின் நற்பெயருக்கும், கட்டுக்கோப்பிற்கும்,விதிக்கு முரணாகச் செயற்படும் யாராக இருந்தாலும் அவர்களுக்கு எதிராக பதவி நிலை கருத்தில் கொள்ளப்படாது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவும் அந்தக் கூட்டத்தில் முடிவுசெய்யப்பட்டிருக்கின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த பலவாரங்களாக கருணா அணிக்குள் முரண்பாடுகள் உருவாகி இருந்தமை உண்மையே.
அதற்குப் புறம்பாக தலைமைத்துவப் போட்டி, நிதிமோசடி என்றெல்லாம் கூறப்பட்டவை கற்பனை இவ்வாறான கருத்தையும் எந்தச் சந்தர்ப்பத்திலும் ரி.எம்.வி.பி. உறுப்பினர்கள் கொண்டிருக்கவில்லை என்று கூறப்பட்டுள்ளது
.
அண்மையில் தமது அமைப்புக்குச் சொந்தமான பல கோடி ரூபா நிதியை அதன் தலைவர் கருணா மோசடி செய்துவிட்டார் என்றும், ரி.எம். வி.பி. அணியில் இருந்தும் அதன் தலைமைப் பொறுப்பில் இருந்தும் அவரை மத்தியகுழு இடைநிறுத்தியிருக்கிறது எனவும் அறிவித்திருந்தமை தெரிந்ததே

Tuesday, October 30, 2007

போரியல் தீவிரப் போக்கால் மோசமடையும் பொருளாதாரம்

நுராதபுரம் விமானப்படைத் தளம் மீது விடுதலைப் புலிகளின் கரும்புலி அணி நடத்திய அதிரடிப் பாய்ச்சலினால் அதிர்ந்துபோயிருந்த தென்னிலங்கையை, திடீரென வந்த பால்மா விலை அதிகரிப்புப் பற்றிய அறிவிப்பு மேலும் அதிர்ச்சிக்குள் ஆழ்த்தியிருக்கின்றது.
போரியல் வெறிப் போக்கால் நாட்டின் பொருளாதாரத்தை மண்ணாக்கி வருகின்றது இந்த அரசுத் தலைமை. அதன் விபரீத விளைவுகளுக்கு முகம்கொடுத்து, அவற்றை எதிர்கொள்ள வேண்டிய நெருக்குவாரத்துக்குள் இக்கட்டுக்குள் தள்ளப்பட்டிருக்கின்றார்கள் பொதுமக்கள்.
ஒரு கிலோ பால்மா பக்கெட்டின் விலை ஒரேயடியாக இருநூறு ரூபாவால் அதிகரிக்கப்பட்டிருக்கின்றது.

அடுத்த வாரம் அரசின் வருடாந்த வரவு செலவுத் திட்டம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவிருக்கின்றது. அதற்கு முன்னரே விலை அதிகரிப்பு அறிவிப்புகள் தம்பாட்டில் வந்து கொண்டிருக்கின்றன.

இனி, வரவு செலவுத் திட்டத்தின் மூலமும் புதிய வரி விதிப்புகள், விலை அதிகரிப்புகள் தாராளமாக வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஒருபுறம் யுத்தத்துக்காகப் பெரும் தொகை நிதி வீண் விரயம் செய்யப்படுகின்றது. மறுபுறம் அதே யுத்தம் பொருளாதார விருத்தியை வீழ்த்தி, வருமானத்தை முடக்கி, பொருளாதார நெருக்கடியை உருவாக்கி நிற்கின்றது. இவற்றுக்கு மத்தியில் புதிய வரிவிதிப்புகள், விலை அதிகரிப்புகள் என்று நாட்டின் மோசமடைந்துவரும் பொருளாதாரச் சுமையை மக்கள் மீது சுமத்துவதைத் தவிர அரசுக்கு வேறு வழியேயில்லை. எனவே, வரவு செலவுத் திட்டத்தை ஒட்டியும் புதிய விலை அதிகரிப்புகள் வரும் என நம்பிக்கையாக நம்பலாம்.

இதே சமயம்,தொலைத் தொடர்புக் கட்டண (தொலைபேசிக்கட்டண) அதிகரிப்பு, மின்சாரக் கட்டண உயர்வு, எரிபொருள் விலை அதிகரிப்பு என்று பல நிதிச் சுமை அறிவிப்புகள் அடுத்தடுத்துத் தொடர்ந்தும் வெளியாவதற்கு வரிசையாகக் காத்து நிற்கின்றன என்கின்றன விடயமறிந்த வட்டாரங்கள்.

நல்லாட்சி தவறி, ஊழலும், மோசடியும், லஞ்சமும் அரச நிர்வாகத்துக்குள் புரையோடிப் போயிருக்கின்றமையும் நாட்டின் பொருளாதாரம் இவ்வாறு அதல பாதாளத்துக்குள் வீழ்ந்தமைக்கு மற்றொரு முக்கிய காரணமாகும்.

இவ்வளவு குளறுபடிகளையும் "புலிகளுக்கு எதிரான யுத்தம்' என்ற ஏமாற்று நாடகத்தின் அரங்குகளினால் மூடி மறைத்துக்கொண்டு ஆட்சி வாகனத்தை ஓட்டுகின்றது அரசுத் தலைமை.
மிகவும் மோசமடைந்துவரும் இந்தப் பொருளாதார நெருக்கடிக்குள் இருந்து நாடு எப்படித் தாக்குப் பிடித்துப் பிழைத்து, மீண்டு, தப்பும் என்பதே தென்னிலங்கை அரசியல் விமர்சகர்களின் ஆச்சரியத்துடன் கூடிய வினாவாகவிருக்கின்றது.

கட்டுமட்டில்லாமல் எகிறிவரும் விலைவாசி உயர்வுக்கு முகம் கொடுத்து, குடும்பத்தின் அன்றாடத் தேவைகளையாவது நிறைவு செய்து, எவ்வாறு வாழ்க்கையை ஓட்டுவது என்பது சாதாரண அப்பாவிப் பொதுமகனின் ஒரே வினாவாகவிருக்கின்றது. ஒரு வேளை கூட முழுமையாக உணவு அருந்தும் வசதியில்லாத "அன்றாடம் காய்ச்சி' நிலைக்குப் பல குடும்பங்கள் வந்துவிட்டன.
விலைவாசி அதிகரிப்புச் சுமையால் சமூகம் தடுமாறுகிறது என்றால், மறுபுறம் அதிகார நிர்வாகத் தவறுகளில் அதிருப்தி கொண்டுள்ள நாட்டு மக்கள் குறிப்பாகத் தென்னிலங்கை மக்கள் இந்த அரசுக்கு எதிராகத் தமது எரிச்சலை வெளிப்படுத்தத் தொடங்கிவிட்டார்கள்.
நாடளாவிய ரீதியில் ஆசிரியர்கள், அதிபர்கள் இன்றும் நாளையும் வேலைநிறுத்தத்தில் குதிக்கின்றார்கள். இதனால் அரச பாடசாலைகள் முற்றாகச் செயல் இழக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. எனினும் இந்த வேலை நிறுத்தத்தில் தமிழர் சார்பு ஆசிரியர் தொழிற்சங்கங்கள் சம்பந்தப்படாததால், இந்த வேலைநிறுத்தத்தின் நேரடிப் பாதிப்பு வடக்கு, கிழக்கில் அநேகமாகக் குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

இதேசமயம், சுகாதார சேவைத் தொழிற்சங்கங்கள் நாளை மீண்டும் ஒருநாள் வேலைநிறுத்தத்தில் குதிக்கவுள்ளன.
அதேவேளை, மின்சாரசபை உட்பட பல அத்தியாவசியத் துறைத் தொழிற்சங்கங்களும் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்துக்குத் தயாராகி வருகின்றன.
ஆட்சி, அதிகாரக் கையாள்கை தவறியதால் விலைவாசி அதிகரிப்பு, வாழ்க்கைச் சுமை உயர்வு, பண வீக்கம், ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி என்று நாட்டின் பொருளாதாரத்தின் ஒவ்வொரு அடிப்படை அங்கங்களும் வரிசையாகத் தளர்ந்து வருகின்றன.
தற்போதைய அரசின் யுத்தத் தீவிரப் போக்கு பல மோசமான பின்னடைவுகளையும், விளைவுகளையும் நாட்டின் பொருளாதாரத்தில் ஏற்படுத்தி வருவது அப்பட்டமாகப் புலப்படுகின்றது.

நாட்டுக்குப் பெரும் வருமானம் ஈட்டித்தரும் உல்லாசப் பயணத்துறை, போர் விபரீதங்களால் மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றது. உல்லாசப் பயணிகளின் வருகை ஏற்கனவே சுமார் இருபது வீதத்திலும் அதிகமாக வீழ்ச்சியடைந்துள்ளது. யால வனச் சரணாலயம் மற்றும் அநுராதபுர விமானப்படைத்தளம் ஆகியவை மீதான புலிகளின் வெற்றிகரத் தாக்குதல்கள் இந்தத் துறையை மேலும் மோசமாகப் பாதிக்கும் சூழ்நிலை தென்படுகிறது.
மொத்தத்தில் நாட்டின் பொருளாதாரம் கட்டையில் ஏறிப் படுக்கப்போகின்றது என்பது மெல்ல மெல்ல நிச்சயமாகி வருகின்றது.
இந்த மோசமான நிலைமைக்கு அரசை வழிப்படுத்திய "ராஜபக்ஷ சகோதரர்கள் அண்ட் கம்பனியே பொறுப்பேற்க வேண்டியிருக்கும்.

-sudaroli-

Monday, October 15, 2007

இலங்கை நிலைமை தொடர்பாக ஆர்பர் அம்மையாரின் கையாள்கை

இலங்கை இனப்பிரச்சினை விவகாரம் தொடர்பாகக் காத்திரமான விடயங்களை வெளிக்கொண்டு வரும் என எதிர்பார்க்கப்பட்ட, மனித உரிமைகளுக்கான ஐ.நா.தூதுவர் லூயிஸ் ஆர்பர் அம்மையாரின் இலங்கை விஜயம் முடிவடைந்துவிட்டது.
எதிர்பார்க்கப்பட்டபடி, இலங்கை நிலைமை தொடர்பான தெளிவான பார்வை ஒன்றை ஆர்பர் அம்மையாரின் இந்தப் பயணம் மூலம் உலகம் தரிசிக்கக்கூடிய நல்லதோர் வாய்ப்புக் கிட்டியிருக்கின்றது.
இலங்கையில் மிக மோசமாக இடம்பெறும் மனித உரிமை மீறல்களைக் கண்காணிக்க ஐ.நாவின் அவதானிப்பு அலுவலகம் ஒன்றை இலங்கையில் ஸ்தாபிக்க வேண்டும் என்பதில் ஐ.நா.உறுதியாக இருப்பதும்
அதற்கு இடமளிப்பது இல்லை என்பதில் இலங்கை அரசு பிடிவாதமாக இருக்கின்றது என்பதும்
ஆர்பர் அம்மையாரின் கொழும்பு விஜயத்தின் முடிவின்போது நடத்தப்பட்ட பத்திரிகையாளர் மாநாட்டில் தெளிவாக வெளிப்பட்டன.
இலங்கை விவகாரத்தைக் கண்காணிப்பதற்காக சர்வதேச அமைப்புகள் இலங்கைக்கு வருவதற்கும், இங்கு ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பின் அலுவலகம் ஒன்றைத் திறப்பதற்கு அனுமதிப்பது இல்லை என்பதிலும் அரசு உறுதியாக இருக்கின்றது.
மேற்படி அலுவலகம் திறப்பதைப் பிரேரிக்கும் விதத்தில் ஆர்பர் அம்மையார் தெரிவித்த கருத்துக்கு அதே பத்திரிகையாளர் மாநாட்டில் வைத்து அரசின் திட்டவட்டமான நிராகரிப்புப் பதில் தெளிவாகத் தெரிவிக்கப்பட்டு விட்டது.
இலங்கை அரசின் சார்பில் அந்தப் பத்திரிகையாளர் மாநாட்டில் பங்குபற்றிய இடர் முகாமைத்துவ, மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க இந்த விடயத்தை உறுதியாகத் தெளிவுபடுத்தினார்.
அந்த மாநாட்டில் வைத்து மனித உரிமைகளுக்கான ஐ.நா.தூதுவர் ஆர்பர் அம்மையார், தெரிவித்த கருத்துகளின் சாராம்சம் இங்கு நோக்கற்பாலது.
""மனித உரிமைகளைப் பேணும் விடயத்தில் இலங்கை அரசுக்கும் ஐ.நாவுக்கும் இடையில் வெறும் தொழில்நுட்ப உதவிப் பரிமாற்றம் இருந்தால் மட்டும் போதுமானது என நான் நம்பவில்லை. மக்களுக்கு நன்மைதரும் விதத்தில் இதில் ஐ.நாவின் பங்களிப்பு உயர்ந்தளவுக்கு மேம்படுத்தப்படவேண்டும்.
""மனித உரிமை மீறல்கள் கட்டுமட்டில்லாமல் நடக்கின்றன. இவை அரசுக்கு எதிரான புலிகளின் வெறும் பிரசார உத்தியின் அடிப்படையிலான குற்றச்சாட்டுகள் என்று கூறப்பட்டாலும் கூட, விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டிய பல விடயங்கள் அவற்றில் புதைந்திருப்பதை உணர முடிகின்றது.
""பயங்கரவாதத்தை ஒழிக்கும் நோக்குடன் இலங்கை அரசு கொண்டு வந்துள்ள அவசரகாலச்சட்ட விதிகள் தொடர்பான இறுக்கமான ஏற்பாடுகள், சட்டத்தின் ஆட்சியில் ஏற்பட்டுள்ள மிக மோசமான நலிவு நிலைமை, குற்றமிழைத்தோரைச் சட்டத்தின் பிடியிலிருந்து காப்பாற்றும் விசேட சட்டவிலக்களிப்பு வசதிகள் போன்றவை மனித உரிமைகள் தொடர்பான விடயத்தில் அபாய எச்சரிக்கையை ஏற்படுத்துவனவாக உள்ளன.
""ஊன்றிய கவனிப்புடன் கூடிய விசாரணைகள், குற்றமிழைத்தோரை சட்டத்தின் முன் நிறுத்துதல், அத்தகையோரைத் தண்டித்தல் போன்றவை தொடர்பாக இறுக்கமான சட்ட ஏற்பாடுகள் இல்லாமை கவலையைத் தருகின்றது.''
இப்படியெல்லாம் தமது இலங்கை விஜய முடிவில் ஆர்பர் அம்மையார் கருத்துத் தெரிவித்திருக்கின்றார்.
ஆர்பர் அம்மையார் தமது இலங்கை விஜயத்தை அடுத்து, கொழும்பில் தெரிவித்த கருத்துகளில் இருந்து ஊன்றிக் கவனிக்கத்தக்க அம்சங்களாக வெளிப்பட்ட விடயங்களை இனிப் பார்ப்போம். அவை:
* மனித உரிமை மீறல்கள் தொடர்பான முறைப்பாடுகளை விசாரிப்பதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன என்று இலங்கை அரசு கூறினாலும், அவ்வாறு நேர்மையாக விசாரிக்கப்படவேண்டிய பல்வேறு சம்பவங்கள் இன்னும் விசாரிக்கப்படாமலேயே உள்ளன.
* அவ்வாறு நிலுவையில் விடப்பட்டிருக்கும் பல்வேறு மனித உரிமை மீறல்கள் விசாரிக்கப்படுவதற்கு ஆவன செய்யப்பட வேண்டும்.
* இலங்கையில் மோசமாக இடம்பெறும் மனித உரிமை மீறல்களை விசாரணை செய்வதற்கு இலங்கையில் தற்சமயம் நடைமுறைப்படுத்தப்படும் சட்டங்கள் போதுமானவையல்ல.
*குற்றச்சம்பவங்கள் குறித்து விசாரிக்கப்படாத நிலைமை நீடிப்பது பெரும் குழப்பத்தைத் தருகின்றது.
இவையே ஆர்பர் அம்மையார் வெளிப்படுத்தும் முக்கிய விடயங்களாகும்.
ஏற்கனவே சர்வதேச ரீதியில் சர்ச்சைக்குரிய முக்கிய தேசங்களின் மனித உரிமை மீறல்கள் தொடர்பான விடயங்களைக் கையாண்ட நிரம்பிய அனுபவம் பெற்றவரே லூயிஸ் ஆர்பர் அம்மையாராவார்.
முன்னாள் யூகோஸ்லாவியாவிலும், ருவாண்டாவிலும் மிக மோசமாக இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து, சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கைத் தொடர்ந்து, அந் நாடுகளின் தலைவர்களுக்கு எதிரான வழக்கு விசாரணைகளை நடத்திய முன் அனுபவம் ஆர்பர் அம்மையாருக்கு நிறையவே உண்டு.
சர்வதேச நீதிமன்றத்தில் சிறந்த வழக்குத் தொடுநராகப் பணியாற்றிய ஆர்பர் அம்மையாருக்கு, இலங்கைக்கு உள்ளே இனப்பிரச்சினை ரீதியாகத் தமிழர் அடக்கி, ஒடுக்கப்பட்டு, அவலப் படுத்தப்படும் வாழ்க்கை நிலையைப் புரிந்து கொள்வது (அவருக்கு) ஒன்றும் அப்படிக் கஷ்டமான விடயமே அல்ல.
இந்தப் பின்னணியில்
இங்கு தாம் கண்ட உண்மைகளை சர்வதேச மயப்படுத்தி, இலங்கைப் பிரச்சினையில் மேற்குலகு உட்பட்ட பெரும்பான்மை சர்வதேச சமூகத்துக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த ஆர்பர் அம்மையார் உதவி செய்வார்; உறுதியாக நடவடிக்கை எடுப்பார் எனத் தமிழர்கள் நம்பிக்கையோடு எதிர்பார்க்கின்றனர்.

நன்றி- சுடரொளி

Monday, September 03, 2007

நாலு வரி தேவையா?இது மட்டும் போதுமே.

மேலே உள்ள கருத்தோவியத்தினைப்(கேலிச்சித்திரம்?????) பாருங்கள்.ஓவியர் என்ன சொல்லவருகிறார் என்பது புரிந்திருக்கும்.
உங்கள் கருத்துக்களை எழுதுங்கள்.

நன்றிகள்:- ஓவியர் - மூனா,
யாழ் இணையத்தளம் (http://www.yarl.com/)

Monday, June 18, 2007

ஆண் குழந்தைக்கு தமிழ் பெயர் வேண்டும்!

எனது நண்பர் ஒருவரின் இல்லத்தில் ஒரு புது வரவு.ஒரு குட்டி இளவரசன்
பிறந்துள்ளான்.அந்த குட்டி இளவரசனுக்கு பெயர் வைப்பதற்காக நண்பர் குடும்பம் பல பெயர்களை பரிசீலித்துக்கொண்டிருக்கிறார்கள். பெயர் வைப்பது
தொடர்பாக என்னையும் ஆலோசித்தார்கள்.நான் உங்களிடம் வேண்டி நிற்கிறேன்.

அவர்களுக்கு
தேவை நல்ல அழகான தமிழ் பெயர்,அத்துடன் ஆங்கிலத்திலும் தமிழிலும்
எழுதும்போது சுருக்கமானதாக அதாவது குறைந்த எழுத்துக்கள் கொண்டதாக
இருக்கவேண்டும்.ஆங்கிலத்தில் உச்சரிக்க இலகுவாய் இருக்கவேண்டும்.
சரி நண்பர்களே எப்படியும் நல்லபெயர்களை உங்கள் வாயிலாக பெற்றுக்கொள்ளலாம் என்ற நம்பிக்கையில் இதனை பதிந்துள்ளேன்.
நன்பர்களே உதவி செய்யுங்கள்.

நன்றி.

கரிகாலன்

Thursday, May 31, 2007

வான் தாக்குதலுக்கே இப்படியென்றால்? வான் சண்டைகளுக்குத் தாயாராகிவிட்டால்?

வான்புலிகளின் வான் தாக்குதலுக்கே இப்படியென்றால்? வான் சண்டைகளுக்குத் தாயாராகிவிட்டால்?

-கேசவன்-

விடுதலைப்புலிகளிடம் விமனத் தாக்குதல் நடத்துகின்ற அளவுக்குப் பலம் கிடையாது அப்படித் தாக்குதல் நடத்த வந்தால் கூட அடுத்த நொடியிலேயே சுட்டு வீழ்த்திவிடுவோம். என அரசாங்கம் முன்னர் கூறியிருந்தது ஆனால் இப்போது புலிகள் வான் வழியாக வந்து தாக்குதல் நடத்திவிட்டுப் பத்திரமாகச் சென்று தரையிறங்கியிருக்கின்றனர்

இந்தத் தாக்குதல் புலிகளின் வான்படைப்பலம் குறித்த பல்வேறு கேள்விகளை எழுப்பியிருக்கிறது.
முன்னர் புலிகளிடம் இருக்கும் விமானங்கள் எந்த ரகத்தைச் சேர்ந்தவையாக இருக்கலாம் என்ற கேள்வி இருந்து வந்தது. ஆனால் கட்டுநாயக்கா தாக்குதலுக்குப் பின்னர் புலிகளிடம் இருப்பது செக் நாட்டுத் தயாரிப்பான ணுடுஐNணு143டு விமானங்களே என்பது திட்டவட்டமாக உறுதியாகியிருக்கிறது. இந்த விமானங்களைப்பயன்படுத்திப் புலிகளால் எத்தகைய தாக்குதல்களை நடத்தி அழிவுகளை ஏற்படுத்த முடியும் என்ற கேள்விக்கு விடைகாண்பதே அரசாங்கத்துக்கு பெரும் தலைவலியாக மாறியிருக்கிறது.

புலிகளால் விமானங்களைப் பயன்படுத்தி தற்கொலைத்தாக்குதல்களை மட்டுமே நடத்த முடியும். என்றும் அப்படியான தாக்குதல்களைக்கூட ஒரிரண்டு தடவைக்குமேல் நடத்த முடியாது என்றுமே இலங்கை அரசு கருதியிருந்தது.

ஆனால் புலிகளோ கட்டுநாயக்க வரை வந்து குண்டுத்தாக்குதல்களை நடத்தி விட்டுச் சென்றிருக்கிறார்கள். இது புலிகளின் வான்படைப்பலம் ஏற்கனவே கணிக்கப்பட்டதையும் விட அதிகமானதென்பதை எடுத்துக் காட்டியிருக்ககிறது. புலிகளால் விமானப்படைப் ஒன்று அமைக்கப்பட்டதே வியப்புடன் பார்க்கப்படும் நிலையில் அவர்கள் தம்மிடமுள்ள விமானங்களைத் தாக்குதலுக்காக மட்டும் பயன்படுத்தி விட்டு விமானிகளுடன் அவற்றை இழப்பதற்கு தயாராக இல்லை என்ற செய்தியே முக்கியத்துவமாக நோக்கப்படுகிறது

புலிகள் பெருமளவு பணத்தைக்கொடுத்து பல்வேறு தடைகளுக்கு மத்தியில் கொள்வனவு செய்த விமானங்களையும் மிகுந்தசிரமங்களின் மத்தியில் உருவாக்கி பயிற்றுவித்த விமானிகளையும் தற்கொலைத் தாக்குதலுக்காகப் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்த்தது தவறானதே.

இதனால்தான் புலிகளின் விமானத் தாக்குதல் பலருக்கும் அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறது. புலிகளிடமுள்ள விமானங்கள் குண்டுவீச்சுக்களுக்கெனத் தயாரிக்கப்பட்டவையல்ல ஆயினும் அவர்கள் சுய முயற்சியால் தான் குண்டு வீச்சுத் தொழில்நூட்பத்தைப் பெற்றிருக்கிறார்கள்.

புலிகளிடமுள்ள குண்டுவீச்சு தொழில்நூட்பமானது நவீனமாயமானதாக இல்லாவிடினும் அவர்களால் துல்லியமான தாக்குதலை நடத்த முடிந்திருக்கிறது. இப்போது அரசாங்கத்திற்கும் விமானப்படைக்கும் உள்ள முக்கிய பிரச்சினை அதுவல்ல வான்புலிகள் தனியே குண்டுத்தாக்குதல்களை நடத்துகின்ற அளவுக்கு மட்டும் பயிற்றுவிக்கப்பட்டுள்ளனரா அல்லது அதற்கும் அப்பால் வான் சண்டைகளை நடத்துகின்ற அளவுக்குத் திறன் பெற்றிருக்கிறார்களா எனபதே இலங்கை அரசுக்கு விடைகாண வேண்டிய முக்கிய வினாவாக உள்ளது

இலங்கை அரசுக்கு இந்தச் சந்தேகம் ஏற்பட்டுள்ளமைக்கு பிரதான காரணமாக இருப்பது கட்டுநாயக்க விமானப்படைத்தளம் மீதான தாக்குதலுக்கு வந்த புலிகளின் இரண்டு விமானங்களில் ஒன்றே குண்டுத் தாக்குதல்களை நடத்தியமை ஆகும்.

புலிகளால் தாக்குதலுக்குப் புறப்பட்ட விமானங்களின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டிருந்தன. இதன்படி விமானத்தின் அடிப்பகுதியில் பின் சக்கரங்களுக்கிடையில் நான்கு குண்டுகள் பொருத்தப்பட்டிருந்தன. இவை ஒவ்வென்றும் சுமார் 25 கிலோ எடை கொண்டதாக இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. உள்ளுரிலேயே இந்தக்குண்டுகள் வடிவமைக்கப்பட்டதும் உறுதியாகியிருக்கிறது.

கட்டுநாயக்க விமானப்படைத்தளம் மீது தாக்குதல் நடத்த இரண்டு விமானங்களில் வந்த புலிகள் தலா நான்கு வீதமாக எட்டுக்கொண்டுகளையல்லவா வீசியிருக்கவேண்டும்? ஆனால் நான்கு குண்டுகள் மட்டுமே வான்புலிகளால் வீசப்பட்டன இதில் மூன்று குண்டுகள் வெடித்துச் சேதங்களை ஏற்படுத்தின ஒன்று மட்டுமே வெடிக்கவில்லை. இதில் ஒரு விமானம் மட்டுமே தாக்குதல் நடத்தியது உறுதியாகிறது. அப்படியானால் இரண்டாவது விமானம் எதற்காக வந்தது என்ற கேள்வி எழுகிறது புலிகளை பொறுத்தவரையில் மிகவும் பெறுமதி வாய்ந்த சொத்தான விமானம் ஒன்றையும் விமானிகள் இருவரையும் தேவையில்லாத ஒரு களத்துக்குள் அனுப்பியிருக்க மாட்டார்கள்.

எனவே கட்டுநாயக்கா தாக்குதலுக்காக வந்த மற்றைய விமானத்தையும் இராணுவ நோக்கங்களின்றிப் புலிகளால் அனுப்பப்பட்டிருக்க வாய்ப்புகளில்லை. கட்டுநாயக்க மீதான தாக்குதலில் அதியுயர் விளைவுகளை எதிர்பார்த்திருக்கக் கூடிய புலிகளின் தலைமை இரு விமானங்களின் மூலமும் ஆகக் கூடியளவுக்கு இழப்புக்களை ஏற்படுத்தவே திட்டமிட்டிருக்கும்.

ஆனால் இரண்டு விமானங்களை அனுப்பி நான்கு குண்டுகளை மட்டும் போடும் அளவுக்குத் திட்டமிடல் அமைந்துள்ளதென்றால் அதில் ஏதோ ஒரு உட்காரணம் இருந்திருக்க வேண்டும.; குண்டுத்தாலுக்காக வந்த விமானத்துக்குப் பாதுகாப்பு கொடுப்பதற்காக மற்றைய விமானம் வந்திருக்கலாம் என்ற சந்தேகம் இப்போது வலுப்பெறுகிறதல்லவா?

பொதுவாக குண்டுவீச்சுக்களை நடத்தச் செல்லும் விமானங்களுக்கும் ஆபத்தான இடங்களில் விநியோக நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படும் விமானங்களுக்கும் போர் விமானங்கள் மூலம் பாதுகாப்பு வழங்கப்படுவது வழக்கமே 1987 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் இந்திய விமானங்கள் உணவுப்பொட்டலங்களை வீச வந்தபோது இந்திய விமானப்படையின் மிராஜ் 2000 ரகப் போர் விமானங்கள் அவற்றுக்குப் பாதுகாப்பளித்தமை நினைவிருக்கலாம் இதுபோன்று புலிகளின் குண்டு வீச்சு விமானத்துக்குப் பாதுகாப்பாக இன்னொரு விமானம் வந்திருக்கலாம் ஆனால் ஒரு விமானத்துக்குப் பாதுகாப்புக் கொடுப்பதற்கான விமானம் சாதாரணமானதாக இருக்கமுடியாது.

வானில் சண்டயிடக் கூடிய திறன் அந்த விமானத்துக்கு இருப்பது அவசியம் விமானத்தில் அப்படிப்பட்ட வசதிகள் இருப்பினும் விமானிகளுக்குப் போதிய பயிற்சியும் அனுபவமும் தேவை இந்த நிலையில் புலிகளிடம் இருக்கின்ற இலகு ரக விமானங்கள் வன் சண்டைகளுக்கு ஏற்றதா? வான்புலிகளால் வான் சமர்களை நடத்தமுடியுமா? ஏன்ற கேள்விகள் எழுகின்றன.
புலிகளிடமுள்ள ZLIN Z 143 L ரக விமானங்கள் அடிப்படையில் பயிற்சி மற்றும் சாகசங்களுக்காகவே தயாரிக்கப்பட்டவையாகும்

இந்த விமானங்களால் கிபிர் மிக் போன்ற போர் விமானங்களுக்கெதிராகச் சண்டையிட முடியாவிட்டாலும் சராசரி வேகமும் ஆற்றலும் இருக்கின்றன. கடந்த பல வருடங்களாகவே இரகசியமாக வான்புலிகளைப் பயிற்றுவித்து வந்த புலிகள் அவர்களை வான் சண்டைகளுக்காகத் தயார்படுத்தியிருக்க மாட்டார்களா?

புலிகள் தம்மிடமுள்ள இலகு ரக விமானங்களில் 12.7 மி.மீ விமான எதிர்ப்புத் துப்பாக்கிகளையோ அல்லது 14.5 மி.மீ சிறு பீரங்கிகளையோ பொருத்தி வான் சண்டைக்களுக்காகத் தயார்படுத்தியிருக்கலாம் சாதாரணமாக குண்டு வீச்சுத் தொழில் நூட்பத்தையே சுயமாக கண்டறிந்த புலிகளுக்கு இது ஒன்றும் கடினமான காரியமாக இருக்கது.

இப்படியாக வன் சண்டைககளுக்காகத் தயார்படுத்தப்பட்ட விமானத்தில் குண்டுகளை ஏற்றிச் சென்றிருக்க முடியாது ஆகக் கூடியது 240 கிலே எடையையே சுமக்கக் கூடிய இந்த விமானத்தில் கனரக துப்பாக்கிகளைப் பொருத்தினால் குண்டுகளை எடுத்துச்செல்ல முடியாது. இதனால் கட்டுநாயக்க தாக்குதலுக்காக வந்த விமானத்துக்குப் பாதுகாப்புக் கொடுக்கும் நோக்கில் மற்றைய விமானம்வந்திருக்கக்கூடும்.

2005 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வவுனியாவுக்கு வடக்கே விஞ்ஞானகுளத்தில் இலங்கை விமானப்படையின் ஆளில்லா வேவுவிமானம வீழ்ந்து நொருங்கிய போது அது மற்றொரு விமானத்தால் சுடப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்பட்டது.

இப்போது இந்தச் சந்தேகம் மேலும் வலுப்பெற்றிருக்கிறது. புலிகள் வான் தாக்குதலை நடத்தியதற்கே ஆடிப்போன அரசு அவர்கள் வான் சண்டைகளை நடத்துகின்ற அளவுக்கு வளர்ந்து விட்டார்கள் என்ற செய்தி உறுதியானால் எப்படித்தான் தாங்கிக் கொள்ளப்பபோகிறதோ தெரியவில்லை.

Monday, April 16, 2007

கொழும்பின் கூட்டு ரோந்து திட்டத்தை நிராகரித்து விட்ட இந்திய அரசு!

* ஈழப் பிரச்சினையும் இந்தியாவும்... இலங்கைக் கடற்படையினரால் தமது உறவுகள் படுகொலை செய்யப்பட்டு பிணங்களாகக் கரை திரும்பிக்கொண்டிருக்கும் நிலையில், மீனவர்களைப் படுகொலை செய்தது, `இலங்கைக் கடற்படையா விடுதலைப் புலிகளா' என்ற ஆய்வில் தமிழக, மத்திய அரசுகள் ஈடுபட்டிருப்பது தமிழக மீனவர்களை கொதிப்படைய வைத்துள்ளது.

கடந்த சில வாரங்களாக இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் படுகொலை செய்யப்பட்டு வருகின்றனர். பலர் படுகாயப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களின் படகுகள், வலைகள், மீன்பிடி உபகரணங்கள் நாசப்படுத்தப்பட்டு வருகின்றன. பல மீனவர்கள் கைது செய்யப்பட்டு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

இவ்வாறான சம்பவங்களின்போது மயிரிழையில் உயிர் தப்பி கரைசேரும் மீனவர்கள் ஒருமித்த குரலில் இலங்கைக் கடற்படையே படுகொலைகளைச் செய்கின்றதென கூறிவருகின்ற நிலையில், அவர்களின் வேதனைகளையும் உணர்வுகளையும் சீண்டிப்பார்க்கும் விதமாக இலங்கை அரசும் இந்திய மத்திய அரசும் விடுதலைப் புலிகளை குற்றவாளிகளாக்கப்பார்க்கின்றனர். ஆனால் இதனை ஏற்றுக்கொள்ள மீனவர்கள் தயாரில்லை.

தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்படுவது தொடர்பாக தமிழக அரசு மத்திய அரசிடம் பல முறை முறையிட்டும் மத்திய அரசோ, இலங்கை அரசோ அதனை காதில் வாங்கிக்கொண்டதாகத் தெரியவில்லை.

இதேவேளை, தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் தாக்குதல் தொடர்பில் தமிழக அரசும் மென்போக்கை கடைப்பிடித்து வருவதாகவே தெரிகிறது. நெய்வேலி அனல் மின் நிலையப் பிரச்சினையின்போது தனது ஆதரவை வாபஸ் பெறப்போவதாக மிரட்டிய தமிழக அரசு, தினமும் இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் படுகொலை செய்யப்படும் விவகாரம் தொடர்பில் மத்திய அரசிடம் மென்போக்காகவே நடந்து கொள்கின்றது.

மீனவர்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டங்களை நடத்தியும், கொல்லப்பட்ட மீனவர்களுக்கு நஷ்ட ஈடுகளையும் அரச வேலைவாய்ப்புக்களையும் வழங்கி அவர்களை சாந்தப்படுத்த முனையும் தமிழக அரசும் ஏனைய அரசியல் கட்சிகளும் மீனவர்களின் வாழ்வாதாரப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வொன்றைக் காண முன்வரவில்லை.

தம்மீது இலங்கைக் கடற்படையினரே தாக்குதல் நடத்துவதாக பாதிக்கப்பட்ட மீனவர்கள் கூறுவதாக மத்திய அரசிடம் முறையிட்ட தமிழக அரசு, உரிய நடவடிக்கை எடுக்குமாறு வேண்டிநின்றபோது இந்தியக் கடற்படைத் தளபதி இப் படுகொலைகளில் புலிகளுக்கும் தொடர்பிருக்கலாமென கூறிய கருத்து தமிழக மீனவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியபோது, தமிழக மீனவர்களை படுகொலை செய்யவேண்டிய தேவை இலங்கைக் கடற்படைக்கு இல்லையென, இலங்கை அரசின் பேச்சாளர் போன்று இந்திய பாதுகாப்பு அமைச்சர் கூறியிருப்பது மீனவர்களை சினமடைய வைத்துள்ளது.
இலங்கை அரசும் இந்திய - இலங்கை நட்புறவை சீர்குலைப்பதற்காக விடுதலைப் புலிகளே தமிழக மீனவர்கள் மீது தாக்குதல்களை நடத்துவதாகவும் தமது கடற்படை தமிழக மீனவருக்கெதிராக ஒரு `ரவை' கூட சுட்டதில்லையென்றும் கூறுகின்றது.

இந்திய மத்திய அரசும் இலங்கையரசும் இவ்வாறு புலிகளின் மீது பழிபோட முயற்சிக்கையில் தமிழக அரசோ, மீனவர்களின் குற்றச்சாட்டை புறந்தள்ளிவிட்டு உண்மைக் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க விசாரணைக்குழு நியமிக்குமாறு கோருவது நகைப்புக்கிடமாகவுள்ளது.
தமிழக மீனவர்களை படுகொலை செய்யும் பழியை விடுதலைப் புலிகள் மீது போடவேண்டிய தேவை இந்திய மத்திய அரசுக்கும் இலங்கை அரசுக்கும் நிறையவே உள்ளது.

இந்திய மத்திய அரசைப் பொறுத்தவரை, விடுதலைப் புலிகளுக்கு தமிழகத்தில் தற்போது அதிகரித்து வரும் ஆதரவு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சிறிது காலம் புலிகளுக்கான தமிழக மக்களின் ஆதரவு நீறுபூத்த நெருப்பாக இருந்தபோதும் தற்போது அது வெளிப்படத் தொடங்கிவிட்டது.

இந்நிலையில் அண்மையில் இலங்கை கட்டுநாயக்கா விமானப் படைத்தளம் மீது புலிகளின் விமானப் படை நடத்திய தாக்குதல் தமிழகத்தில் பேரெழுச்சியை ஏற்படுத்தியது. இதன் வெளிப்பாடாக தமிழகத்தின் ஊடகங்கள் விடுதலைப் புலிகள் பலம் தொடர்பில் பெரும் பிரசாரங்களை முன்னெடுத்தன. இவையெல்லாம் மத்திய அரசையும் பிரதமர் மன்மோகன் சிங்கையும் சுற்றியுள்ள எம்.கே.நாராயணன், சிவ்சங்கர்மேனன் போன்றோரையும் சினமூட்டியதன் விளைவே புலிகள் மீது பழிபோடும் இந்த முயற்சி.

தமிழக மீனவர்களை புலிகள்தான் படுகொலை செய்கிறார்களென்ற பிரசாரத்தை முன்னெடுப்பதன் மூலம் தமிழகத்திலே புலிகளுக்கு அதிகரித்து வரும் ஆதரவை சீர்குலைக்க மத்திய அரசும் உளவுத் துறையும் கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டுவருகின்றன. அதன் வெளிப்பாடே இந்தியக் கடற்படைத் தளபதியும் இந்தியப் பாதுகாப்பு அமைச்சரும் விடுதலைப் புலிகள் மீது பழிபோடும் விதமாக வெளியிட்ட கருத்துகளாகும்.
இலங்கையரசைப் பொறுத்தவரையில் புலிகள் மீது பழிபோட வேண்டிய தேவைகள் நிறையவேயுள்ளன. விடுதலைப் புலிகளிடம் உள்ள கடற்புலிகளை வெற்றிகொள்ள முடியாத நிலையில் இலங்கைக் கடற்படையினர் உள்ளனர். கடற்புலிகளை வெற்றிகொள்ள வேண்டுமானால் இந்தியக் கடற்படையின் உதவி இலங்கைக்கு இன்றியமையாதது. ஆனால், இலங்கை விடயத்தில் இந்தியா சற்று எட்டவே நிற்பதனால் இலங்கைக்கு நேரடியாக உதவ பின்னடித்தது.

இலங்கைக் கடற்படையுடன் கூட்டு ரோந்தில் ஈடுபடுமாறு இலங்கை அரசு பலமுறை இந்தியாவிடம் வற்புறுத்திக் கேட்டபோதும் அதற்கு இந்தியா இணங்கவில்லை. இந்நிலையில் இந்தியாவை வழிக்குக் கொண்டுவர இலங்கை தெரிந்தெடுத்த வழிமுறையே தமிழக மீனவர் படுகொலை.
தமிழக மீனவர்களைப் படுகொலை செய்வதன் மூலம் தமிழக அரசினூடாக மத்திய அரசுக்கு அழுத்தத்தை ஏற்படுத்தி அதன்மூலம் தமிழக மீனவர்களை பாதுகாப்பதென்ற போர்வையில் கூட்டு ரோந்திற்கு இந்திய கடற்படையை இணங்கவைப்பதே இலங்கையரசின் நோக்கம். அதேவேளை, தம்மீது தமிழக அரசின் கோபப் பார்வை திரும்பிவிடக் கூடாது என்பதற்காகவே சிவிலுடைகளில் வந்து தமிழக மீனவர்களை தாக்கிவிட்டு விடுதலைப் புலிகள் மீது பழியைப் போடும் முயற்சி.

அத்தோடு, புதுடில்லியில் கூடிய சார்க் நாடுகளின் தலைவர்களின் மாநாட்டில் தமக்கு ஆதரவாகவும் புலிகளுக்கு எதிராகவும் நிலைப்பாடுகளை எடுக்க வைக்க வேண்டுமென்ற நோக்கிலும் தமிழக மீனவர்கள் இலக்கு வைக்கப்பட்டார்கள்.

ஆனால், இந்த மாநாட்டில் இலங்கை நினைத்தது ஒன்று, நடந்தது ஒன்றாகிவிட்டது. இலங்கை கூட்டு ரோந்திற்கு இந்தியா சம்மதிக்கும் என்ற பெரு நம்பிக்கையிலிருந்த இலங்கையரசு கூட்டுரோந்து தொடர்பில் இந்தியா சாதகமான பதிலை தந்துவிட்டதாக இலங்கையிலுள்ள அரச ஆதரவு ஊடகங்கள் மூலம் பெரிய பிரசாரத்தை முன்னெடுத்தது.
ஆனால், நெய்திரண்டு வரும்போது தாழி உடைந்த கதையாக தமிழக முதல்வர் கருணாநிதி இலங்கையுடன் கூட்டு ரோந்துக்கு இணங்க வேண்டாமென மத்திய அரசை வலியுறுத்தினார். கருணாநிதியின் இந்த வலியுறுத்தலுக்கு பின்னணியில் மீனவர்களின் வாக்கு வங்கி இருந்ததே தவிர கூட்டு ரோந்தினால் ஏற்படக்கூடிய சாதக, பாதகங்களோ ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான செயற்பாடுகளோ இருக்கவில்லை என்பது வேறு விடயம்.

இலங்கை அரசுடன் கூட்டு ரோந்துக்கு இணங்கும் நிலையிலிருந்த மத்திய அரசு அதிலிருந்து பின்வாங்கியது. இதனால் கூட்டு ரோந்துக்கு தயாரில்லையென தெரிவித்ததுடன் யுத்த மூலம் தீர்வுகாணும் முயற்சியை கைவிட்டுப் பேச்சு மூலம் தீர்வு காண முன்வரவேண்டுமென இலங்கை ஜனாதிபதிக்கு ஆலோசனை கூறி அனுப்பியது.

சார்க் மாநாட்டில் பயங்கரவாதத்திற்கு எதிராக செயற்பட உறுதி எடுக்கப்பட்டதே தவிர, புலிகளுக்கு எதிராகவோ அல்லது இலங்கை அரசுக்கு சார்பாகவோ எந்த முடிவுகளும் எடுக்கப்படவில்லை. இதனால், சார்க் மாநாட்டை தமக்கு சார்பாக பயன்படுத்த திட்டமிட்டிருந்த இலங்கையரசு தோல்வி கண்டது.

சார்க் மாநாடு முடிந்த சில தினங்களிலேயே இலங்கைக் கடற்படை மீண்டும் தமிழக மீனவர்களை வேட்டையாடத் தொடங்கிவிட்டது. கூட்டு ரோந்து என்ற தமது சூழ்ச்சித் திட்டத்துக்கு இந்திய அரசு இணங்கும்வரை தமிழக மீனவர்கள் மீதான படுகொலைகளை இலங்கையரசு தொடர்ந்து முன்னெடுக்குமென்பதே உண்மை.

இலங்கை அரசு, இந்திய மத்திய அரசு கூறுவதுபோல் தம் மீதான தாக்குதல்களுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் எவ்வித தொடர்புமில்லையென பாதிக்கப்பட்ட மீனவர்கள் அடித்துக் கூறுகின்றனர்.

இதேபோன்றே, விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் அந்த அமைப்பின் இராணுவப் பேச்சாளரான இளந்திரையன் ஆகியோர் இலங்கை, இந்திய அரசுகளின் குற்றச்சாட்டை முற்றாக மறுத்துள்ளனர். தமிழக மக்களும் தமது உறவுகளென தெரிவித்துள்ள அவர்கள் தம்மை தமிழக மக்களிடமிருந்து வேறுபடுத்தவே இலங்கைக் கடற்படையினர் செய்யும் படுகொலைகளை தம்மீது இலங்கை அரசு சுமத்துவதாக விளக்கியுள்ளனர்.

தமிழகத்தில் தமக்கு அதிகரித்து வரும் ஆதரவினை இழக்கக்கூடிய எந்தவொரு செயலிலும் விடுதலைப் புலிகள் ஈடுபட மாட்டார்கள். ஒரு கட்டத்தில் தமிழகத்தில் இழந்த ஆதரவினை மீண்டும் பெறுவதற்கு புலிகள் பெரும் சிரமப்பட்டார்கள். இவ்வாறான நிலையில் தமிழகத்தில் தற்போது ஈழப் போராட்டத்திற்கு சார்பாக மீண்டும் ஏற்பட்டுள்ள எழுச்சியை சீரழிக்கும் முயற்சியில் புலிகள் ஒருபோதும் ஈடுபடமாட்டார்கள். ஆனால் இந்த எழுச்சியை சீர்குலைக்கும் தேவை இலங்கையரசுக்கும் இந்திய மத்திய அரசுக்குமே அதிகளவில் உண்டு.

தமிழக மீனவர்கள் படுகொலையில் விடுதலைப் புலிகளுக்கு எவ்வித தொடர்புகளுமில்லையென்பது தமிழக, மத்திய அரசுகளுக்கு நன்கு தெரிந்திருந்தும் தமது அரசியல் நோக்கங்களுக்காக இலங்கையரசுடன் சேர்ந்து விடுதலைப் புலிகளை பகடைக்காயாகப் பார்க்கின்றனர். ஆனால், இவர்களின் புலிகள் மீதான பழிப் பிரசாரங்கள் தமிழக மக்களிடையே எடுபடவில்லை. இதற்கு இங்கு அதிகரித்து வரும் இலங்கையரசுக்கும் அதன் கடற்படைக்கும் எதிரான தொடர் போராட்டங்களே எடுத்துக்காட்டாகும்.

இலங்கைக் கடற்படையின் தாக்குதலினால் கொல்லப்பட்ட மீனவர்களின் கிராமங்களுக்கு சென்ற தமிழக காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி, `இலங்கைக் கடற்படையை இரும்புக்கரம் கொண்டு அடக்கவேண்டுமென' கூறியமை இந்திய அரசே உண்மை நிலையை உணர்ந்துள்ளமைக்கு எடுத்துக்காட்டாகும்.

தமிழக மீனவர்களைப் பொறுத்தவரை தமது ஜீவாதாரப் பிரச்சினையை அரசியலாக்காது அன்றாட வாழ்வுக்கு வழியேற்படுத்தி தரவேண்டுமென்பதே ஒரே கோரிக்கையாகும்.

கலைஞன்/thinakkural

Friday, March 30, 2007

தேவையா இது இந்தியாவுக்கு?

திவயின சிங்களப் பத்திரிகையின் ஆசிரிய தலையங்கம் ( 28.03.2007)

இந்தியா வழங்கிய ராடரை உருக்கி மண்வெட்டி தான் செய்ய வேண்டும்

இந்தியா ஸ்ரீ லங்காவுக்கு நல்லது செய்வதை தற்போது 2,500 ஆண்டுகளுக்கு முன்னரே நிறுத்திவிட்டது என்பதே எமது கருத்தாகும்.

முதன் முதல் 2,500 ஆண்டுகளுக்கு முன் உலகத்தின் மிகச் சிறந்த நன்மை ஒன்று இந்தியாவிடமிருந்து சிறிலங்காவுக்கு கிடைத்தது. அது தான் புத்த சமயமாகும். அதைத் தொடர்ந்து இந்திய கலைகள் கலாசார நன்மைகளும் எமக்குக் கிடைத்தன.

ஆனால், இதற்குப் பின்னர் இந்தியா எமக்கு நேரடியாக கொடுத்தவைகளும் இந்திய மத்தியஸ்தம் மூலம் கொடுத்தவைகளும் கெட்டவைகளேயாகும். அவற்றின் பிரதானமானவை கீழே காட்டப்பட்டுள்ளன.

1. இந்திய ஆதிக்க விஸ்தரிப்பு அழுத்தம்.
2. பிரபாகரனின் தாயகக் கொள்கை
3. இந்திய இலங்கை ஒப்பந்தம் (1987)

மேற்படி மூன்று விடயங்களில் இந்திய ஆதிக்க விஸ்தரிப்பு என்பது ஸ்ரீ லங்காவுக்கு இந்தியா நேரடியாக இல்லாத முறையில் சுற்றி வந்து கொடுக்கும் அழுத்தமாக அமைந்துள்ளது. இதற்கேற்ப இந்தியாவுக்கு வேண்டாத முறையிலான ஸ்ரீ லங்காவின் அரசியல் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை முறியடித்தல் மேற்படி இந்திய ஆதிக்க விஸ்தரிப்புக் கொள்கையில் ஒரு அங்கமாகும். (கட்டுநாயக்கவில் புலிகள் இயக்கம் மேற்கொண்ட விமானத் தாக்குதலுக்கும் இந்திய ஆதிக்க விஸ்தரிப்புக் கொள்கையே பொறுப்புக் கூற வேண்டும். இது பற்றி தொடரும் பந்திகளில் விபரித்துள்ளோம்.)

ஸ்ரீலங்கா குழப்பங்களற்ற சமாதானமான பிராந்தியமாக முன்னேற்றமடைந்து வருவதை விரும்பாத நிலையில் இந்தியாவே பிரபாகரன் என்ற வியாதியை ஸ்ரீலங்காவில் அறிமுகப்படுத்தியது. இந்தியா ஸ்ரீ லங்கா மீது பலாத்காரமாக 1987 இல் இந்திய இலங்கை ஒப்பந்தத்தை திணித்ததற்குக் காரணமும் இந்தியாவின் ஆதிக்க விஸ்தரிப்பு நிலைப்பாட்டுக்கேற்ப ஸ்ரீ லங்காவின் வடக்கு, கிழக்கு மாகாணங்களின் எதிர்காலத்தை பிரபாகரனிடம் ஏலம் போடுவதற்கேயாகும்.


இனி மேற்படி இந்தியாவின் விஸ்தரிப்பு அழுத்தமும் மற்றும் இந்நாட்டின் மீதான பலவந்தக் கொள்கையும் கட்டுநாயக்காவில் புலிகள் இயக்கம் மேற்கொண்ட விமானத் தாக்குதலும் எவ்வாறு சம்பந்தப்பட்டுள்ளது என்பதைப் பார்ப்போம்.

கடந்த 2002 ஆம் ஆண்டில் அதிநவீனமான ராடர் உபகரணத்தின் தேவை ஸ்ரீ லங்காவுக்கும் ஏற்பட்டிருந்தது.
அது நவீன தொழில் நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப ராடர் உபகரணத்தைப் பெற வேண்டிய அத்தியாவசிய தேவையாகும். இவ்வாறான உயர் தொழில் நுட்ப ராடர்களை சீனா உற்பத்தி செய்து நியாயமான விலைகளில் விற்று வந்ததால் சீனாவிலிருந்து ராடர்களை விலைக்கு வாங்குவதற்கு ஸ்ரீ லங்கா முயற்சி எடுத்தது. ஆனால், சீனாவுடன் பனிப்போரில் நெடுங்காலமாக ஈடுபட்டுள்ள இந்தியாவுக்கு இவ்வாறு ஸ்ரீ லங்கா சீனாவுடன் கொடுக்கல் வாங்கல்களை வைத்துக் கொள்வதைச் சகித்துக் கொள்ள முடியவில்லை.
சீனாவின் தொழில்நுட்ப முன்னேற்றம் உடைய ராடர் கருவிகளை ஸ்ரீ லங்காவில் பொருத்தி வைத்தால் இந்தியப் பிரதேசங்களிலுள்ள யுத்த தளங்களின் இரகசியங்கள் அந்நியர் கைகளில் கிடைத்து விடுமே என்ற காரணத்தால் இந்தியா தானாகவே முன்வந்து அங்கு உற்பத்தி செய்யப்பட்ட ராடர் கருவியை ஸ்ரீ லங்காவுக்கு வழங்கியது.


கட்டுநாயக்க விமானப்படை முகாமில் பொருத்தப்பட்ட இந்தியாவின் ராடர் உபகரணம் இன்னும் முற்றாகப் பொருத்தி முடிக்கப்படாத பழைய வகை ராடர் உபகரணமாகும்.

தொழில் நுட்ப ரீதியில் முன்னைய முதலாம் பரம்பரைக்குரியதென கருதப்படும் இரட்டை அமைப்புடைய அந்த ராடர் கருவி மூலம் பெறக்கூடிய பயனைப் பொறுத்தவரை எந்த பிரியோசனமும் கிடையாது என்பது இப்போது தெரிந்து விட்டது. (அப்படி ஏதேனும் பயன் இருந்திருந்தால் பிரபாகரனின் விமானங்கள் கட்டுநாயக்காவை நெருங்கியிருக்க முடியாது).

இந்தியா அன்று ஸ்ரீ லங்காவுக்குக் கொடுத்த அழுத்தம் காரணமாகவே இன்று நாட்டின் தேசிய பாதுகாப்பு பயங்கரமான ஆபத்துக்கு உள்ளாகிவிட்டது. இதன் மூலம், நிகழ்ந்து கொண்டிருப்பது யாதெனில், இந்தியாவின் தேவைக்கு ஏற்ப உருவாக்கப்பட்ட பிரபாகரன் எனப்படும் நாசகார சக்தி இந்தியாவின் அழுத்தத்திற்கேற்ப தொடர்ந்து மனிதப் படுகொலைகளை செய்து கொண்டிருக்கப் போகிறது. இந்தியா எம்மீது சுமத்தியுள்ள ராடர் எனப்படும் பழைய இரும்புக் குவியலிலிருந்து நாம் விடுதலை பெற வேண்டிய காலம் வந்துவிட்டது. அந்த இரும்புக் குவியலை உருக்கி மண்வெட்டிகள் செய்வதற்காக வைத்துக் கொண்டு வேறுநாட்டிலிருந்து அதிநவீன டாடர் உபகரணங்களை நாம் பெற்றுக் கொள்ளா விட்டால் அதனால் ஏற்படக் கூடிய ஆபத்து மிகப் பெரியதாகவே இருக்கும்.

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையேயுள்ள பகைக்கு ஸ்ரீலங்கா பலியாகிவிடக் கூடாது. 1977 ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஸ்ரீ லங்காவின் அனைத்து அரசாங்கங்கள் மீதும் இந்தியா பிரயோகித்த அழுத்தங்கள் பற்றி அனைவரும் அறிவார்கள். எமது மூத்த சகோதரன் என்ற ஸ்தானத்தில் இருக்க வேண்டிய நாடு இன்று எங்களை அழித்தொழிக்க முயற்சி செய்வதைப் புரிந்து கொள்ளுவதும் கடினமாகும்.

Friday, March 23, 2007

''சிங்களத்தரப்பு முழுவதுமாக தமிழருக்கெதிராகவே இயங்குகிறது''

-மனோகரன்-

மாதானக்காலத்தைவிடவும் யுத்த காலத்தில் சிங்களவர்கள் அதிகம் சுறுசுறுப்பாக இருப்பார்கள். யுத்தகாலத்தில் சிங்களவர்களின் ஊடகங்கள் மிகத்தீவிரமாக இயங்கும். அதிலும் சிறிலங்காப்படைகள் வெற்றிபெறுகின்றபோது அதை ஊடகங்கள் கொண்டாடுகிற விதம் சொல்லத் தேவையில்லை. அந்தளவுக்கு உண்மையும் புனைவும் கலந்த ஒருவகையான ஊடகப்பரப்புரை அப்போது நடக்கும்.

அதுபோலவே யுத்த்தின் போது சிறிலங்கா அரசாங்கமும் மிகத்தீவிரமாக இயங்கும். உள்நாட்டிலும் வெளியுலகிலும் யுத்தத்துக்கு ஆதரவான பரப்புரையை அரசாங்கம் மிக நுட்பமாக செய்யும். குறிப்பாக யுத்தத்தை நியாயப் படுத்துவதில் அரசாங்கம் மிகத்தீவிரமாகச் செயற்படும்.
இப்போது இது தான் நடக்கிறது மூதூர், சம்பூர், வாகரை பிரதேசங்களில் தமிழ் முஸ்லிம் மக்கள் மீதான யுத்தத்தை சிறிலங்கா அரசாங்கம் நியாயப்படுத்திவரும் விதம் சாதாரணமானதல்ல.

ஏ-15 பாதையை மூடி, தொடர்ச்சியாக தாக்குதல்களை நடத்தி, மக்களை கொலை செய்து பட்டினிபோட்டு வாகரையை ஆக்கிரமிதத்து சிறிலங்கா அரசு. இதன் போது தமிழ் மக்களுக்குச் சார்பான அல்லது நியாயமான முறையில் சர்வதேச சமூகத்தின் கவனம் திசை திரும்பவேயில்லை. பதிலாக அங்கிருந்து மக்கள் வெளியேறி படைக்கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் சென்றவுடன் சர்வதேச சமூகம் அந்த மக்களின் நலன்களைக் கவனிக்கவென வருகின்றது
.
இப்படி மட்டக்களப்பு நகரப்பகுதிக்கு வந்திருந்த வெளிநாட்டுத்தூதுவர்கள் அணிதான் கடந்தவாரம் நடைபெற்ற தாக்குதொலொன்றில் சிக்கியுமிருந்தது. இப்போது சிறிலங்கா அரசாங்கம் மட்டக்களப்பின் படுவான்கரை பிரதேசம் மீது வாகரை சம்பூர் பகுதிகளில் பின்பற்றிய வழிமுறையையே தொடர்கிறது.
படுவான்கரை மக்களின் போக்குவரத்துப் பாதைகளை மூடி, அவர்களின் நாளாந்த இயக்கத்தையும் இயல்பு வாழ்வையும் நெருக்கடிக்கள்ளாக்கியது அது. ஒரு சில பாதைகள் மட்டும் இடையில் திறக்கப்படுவதும் மூடப்படுவதுமாக இருக்கின்றன.

தொடர்ந்து அங்குள்ள மக்கள் மீது தாக்குதல்களை நடத்துகின்றன படைகள். கிராமங்கள் அழிகின்றன. மக்கள் இழப்புக்களுடன் இடம்பெயர்கின்றார்கள். மனிதப் பேரவலம் அங்கே தொடர்கிறது. சனங்கள் என்ன செய்வது எங்கே செல்வது என்று புரியாமல் தடுமாறுகிறார்கள்.

இந்த அவல நிலை குறித்தோ சிறிலங்காப்படைகள் நடத்துகின்ற மனித உரிமை மீறல்கள் பற்றியோ நியாயமற்ற முறையில் மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் பற்றியோ எந்தத் தகவல்களையும் செய்திகளையும் சிங்களத்தரப்பு ஊடகங்கள் வெளியிடுவதில்லை. இப்போதும் அவை இது விடயத்தில் அப்படித்தானிருக்கின்றன. சிங்களத்தரப்பினால் வெளியிடப்படும் சிங்கள ஆங்கில தமிழ் ஊடகங்கள் அனைத்திலும் விடுதலைப் புலிகள் மீதே தாக்குதல்கள் நடத்தப் படுவதாகவும் இதில் புலிகளே பாதிக்கப்படுவதாகவும் அவை உறுதி உரைக்கின்றன.

படைதரப்பின் ஆக்கிரமிப்பு நடவடிக்கை பற்றி அவை ஒரு சொல்தானும் வெளியிடுவதில்லை அதற்கு அவை தயாராகவும் இல்லை. அத்துடன் மக்களின் பாதிப்புகளையிட்டோ மக்கள் படுகின்ற பேரவல நிலையையிட்டோ அவை எதுவும் தெரியாமலே இருக்கின்றன.
இந்த ஊடகங்களின் மனதில் படையின் வெற்றி குறித்த எதிர்பார்ப்பும் அதற்கான வரைபடங்களுமே பதிவாகியிருக்கின்றன.

இதே வேளையில் மூதூரில் படையினர் மீது மட்டுப்படுத்தப்பட்ட படை நடவடிக்கையை விடுதலைப்புலிகள் நடத்திய போது இந்த ஊடகங்கள் மனித அவலங்கள் பெருகிவிட்டன என்றும் கண்டனங்களையும் ஒப்பாரிகளையும் பெரிய அளவில் வெளிப்படுத்தின. மூதூர் மீண்டும் படைத்தரப்பின் பிடிக்குள் வந்த போது சட்டென மறுபடியும் அமைதியாகிவிட்டன. மூதூரில் தாக்குதல்கள் நடத்துவதற்கு முன்னர் விடுதலைப் புலிகள் அங்கள்ள முஸ்லிம் மக்களின் பள்ளிவாசல் தலைவர்களுக்கு அறிவித்து பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யுமாறு அறிவுறுத்திய பின்னரே தமது நடவடிக்கையினை மேற்கொண்டிருந்தனர்.

அங்கோ படைதரப்புதான் பெரும் படுகொலைத் தாக்குதல்களை நடத்தியது. இதனை அப்போது களத்தில் நின்றிருந்த முஸ்லிம் மக்களே சாட்சி பூர்வமாக தெரியப்படுத்தினர். அத்துடன் சர்வதேச தொண்டு நிறுவனமான பிரான்சின் அக்ஸன்பெய்ம் அமைப்பின் பணியாளர்கள் பதினேழு பேர் படையினரால் படுகொலை செய்யப்பட்டுமிருந்தனர்.

இவ்வாறெல்லாம் சிறிலங்கா அரசு அங்கே நடத்திய படுகொலை மற்றும் மனித அழிவுகளையிட்டு எந்த வருத்தத்தையம் தெரிவிக்காமல் இருந்தன சிங்கள அறிவுலகமும் ஊடகமும்.
ஆக, படைத் தரப்போ சிறிலங்கா அரசோ தமிழ் மக்கள் மீது எந்த அழிவுகளையும் மேற்கொண்டாலும் அதுபற்றி சிங்கள மனதுக்கும் மூளைக்கும் எந்தச் சலனமும் ஏற்படுவதில்லை. அதனுடைய அறிவியக்கத்தில் தமிழ் மக்களின் அவலம்பற்றிய எந்தப் பதிவம் ஏற்படாது. அதேபோல சிங்கள மனச்சாட்சியிலும் தமிழ் மக்கள் மீதான அநீதிகளையிட்டு எந்த வருத்தமும் ஏற்படுவதில்லை.

இந்த ஊடகங்கள் மட்டக்களப்பு படுவான்கரை மீதான சிறிலங்காப்படையினரின் ஆக்கிரமிப்பு நடவடிக்கையையும் அதனால் பாதிக்கப்படும் மக்களையும் பற்றிய செய்திகளையும் இராணுவ நலன் சார்ந்தே அணுகுகின்றன.

படுவான்கரையில் இருந்து கடந்த மூன்று நாட்களுள் அறுபதினாயிரத்திற்கு மேற்பட்ட தமிழ் மக்கள அகதிகளாகி போக்கிடமின்றி இருக்கிறார்கள். ஏற்கனவே வாகரை சம்பூர் ஈச்சிலம்பற்று பிரதேசங்கிலிருந்து இடம்பெயர்ந்த தொண்ணூறாயிரம் அகதிகள் மட்டக்களப்பு அகதிகள் நகரில் அல்லற்படுகின்றனர் இப்போது படுவான்கரை அகதிகளும் சேர்ந்து ஒரு லட்சத்து முப்பதாயிரத்துக்கு மேல் அகதிகளின் பெருக்கம் அதிகரித்துள்ளது.
மாவட்டச் செயலகத்தினால் அகதிகளின் பிரச்சினைகளை சமாளிக்க முடியவில்லை என்று மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் சொல்கிறார் அகதிகளுக்கு அங்கே தங்குமிடமில்லை தவிர நகரில் மக்கள் குடியிருப்புக்களுக்கு மத்தியில் இருந்து கொண்டே படையினர் புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள தமிழ் மக்களின் கிராமங்களின் மீது எறிகணைத் தாக்குதலை நடத்தினர் இந்தத் தாக்குதலின் போது ஏற்பட்ட அதிர்ச்சியில் படைமுகாமுக்கு அண்மித்ததாக இருந்த பாடசாலையின் மாணவிகள் சிலர் மயக்கமடைந்தமை இங்கே கவனிக்கதக்கது.

மக்கள் மத்தியில் பாரிய படைத்தளங்களை அமைத்துக் கொண்டு அங்கிருந்து பாரிய அளவில் தாக்குதல்களை மேற்கொள்வது அடிப்படையில் பெரும் மனித உரிமை மீறல் இதனை சர்வதேச சமூகம் ஏன் காண
மறுக்கிறது என்று அயலிலுள்ள மக்கள் கேட்கின்றனர்.

தவிரவும் மக்கள் மத்தியில் நின்று விடுதலைப் புலிகளைத் தாக்குவதானது தமக்குப் பாதுகாப்புhக இருக்கும் எனவும் படையினர் கருதுகின்றனர். மக்களின் பாதுகாப்பைக் கருத்திற் கொண்டு விடுதலைப்புலிகள் எதிர் தாக்குதல்களை தம்மீது நடத்தமாட்டார்கள் என்று சிறிலங்கா படைதரப்புக்கு தெரியும்.

மக்கள் இடம் பெயர்ந்து படையினரின் கட்டுப்பாட்டுப்பகுதிக்கு உயிர்பாதுகாப்புக் கருதிய அச்சத்தின் காரணமாகவே செல்கின்றனர். சிறிலங்காப்படையினர் பரவலலாக எறிகணை மற்றும் விமானத்தாக்குதல்களை மக்களின் வாழிடங்கள் மீது நடத்துவதாலும் போக்குவரத்து உணவுப் பொருட்களுக்குத் தடைகள் எற்படும் என்பதாலும் படையினரின் பகுதிக்குள் வேறு வழியில்லாத நிர்ப்பந்தம் காரணமாகக் செல்கின்றனர்.

மக்களை மிக நெருக்கடிக்குள்ளாக்கி அவர்களை இடம்பெயரச் செய்துவிட்டு மக்களை பாதுகாக்கும் நடவடிக்கையை படையினர் மேற்கொள்கின்றனர் என்று சிறிலங்கா அரசாங்கம் சொல்கிறது.
இடம்பெயர்ந்துள்ள மக்களைக் காட்டி சர்வதேச சமூகத்திடம் இருந்து பெருவாரியான நிதியினையும் அது பெறுகிறது. படையினர் ஆக்கிரமித்த பகுதிகளுக்கு ஊடகவியளாளர்களை அழைத்துச் சென்று காட்டுகிறது.

அப்படியானால் படையினர் இப்போது தாக்குதல் நடத்துகின்ற பகுதிகளுக்கும் ஊடகவியலாளர்களை அனுப்பலாமே! அவர்கள் உண்மை நிலையையும், மக்களின் அவலத்தையும் அப்போது அறியமுடியும். சிங்கள ஊடகவியலாளர்களின் நடுநிலைமை ஊடகதர்மம், மக்கள் நலன், தேசியப்பாதுகாப்பு என்பனவெல்லாம் இந்த ஊடகங்களுக்கு அப்போது புரியும்.
இதனை நாம் எதிர்பார்க்க முடியாது. சிறிலங்காவின் ஊடகங்களும் அரசும் போர்காலத்தின் போது தமது ஊடகவெளிப்பாட்டையும் இராஜதந்திர அணுகுமுறையையும் வேகப்படுத்தி நுட்பமாகவே கையாள்கின்றன.

போர் தீவிரமாக நடக்கும் போது குறிப்பாக ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை மிகப்பிரமாண்டமான அளவில் செய்யும் போது சிறிலங்கா அரசின் சனாதிபதியோ படைத்தளபதிகளோ வெளிவிவகார அமைச்சரோ வெளிநாடுகளில் சற்றுப்பயணங்கள் செய்து பயங்கரவாதத்திற்கு எதிரான போரையோ செய்கிறோம் என்று பரப்புரை செய்வார்கள்.
சந்திரிக்கா குமாரதுங்காவின் ஆட்சிக்காலத்தில் மறைந்த லக்ஷ்மன் கதிர்காமர் இதனையே செய்தார். பின்னர் மங்களசமரவீர செய்தார். அமைச்சுப் பதவியை இழந்த பின்னர் மகிந்த ராஜபக்ஷவுடனான முரண்பாடுகள் அதிகரித்துவரும் சூழலில் மங்கள சமரவீர இந்த விடயங்களையெல்லாம் வெளிப்படுத்தி வருகிறார். இப்போது புதிய வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகமவும் இதனையே செய்கிறார்.

இலங்கையின் வெளிவிவகார அமைச்சரின் பணி என்பது தமிழ் மக்களுக்கு எதிரான போரை சர்வதேச அரங்கில் பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்று நம்பவைக்கும் பணியாகவே தொடர்கின்றது. ஏ-9 விதியை மூடியது மனித உரிமைக்கு முரணானது என்பதை சிறிலங்கா அரசு ஏற்றுக் கொள்ளத் தயாரில்லை. பதிலாக கடல்வழி விநியோகத்துக்கு விடுதலைப்பலிகள் அச்சுறுத்தலாக இருக்கிறார்கள் என்று அது சொல்வதன் பின்னணி என்ன?
முற்றுமுழுதான இராணுவ நலனை முதன்மைப்படுத்தியதன் விளைவுகளே இவையெல்லாம். இராணுவ நலன் இராணுவ மேலாதிக்கம் என்பதனூடாக தமிழ் மக்களை ஒடுக்குவதே அதன் ஒரே நோக்கம்.

இது தான் சிறிலங்காவின் நிகழ்ச்சி நிரல் அந்த நிகழ்ச்சி நிரலுக்குத் தோதானமாதிரி இதற்கு சிங்களத் தரப்பு ஊடகங்கள் முழுமையாக துடிப்புடன் இயங்குகிறது.

இந்த நிகழ்ச்சி நிரல் முற்றுமுழுதாக தமிழ் மக்களுக்கு எதிரானது. எனவே இதற்கு தமிழ் மக்கள் தங்களைத் தயார்படுத்தி செயற்பட வேண்டீயுள்ளது. சர்வதேச அளவில் தமிழர்கள் சிறிலங்கா அரசின் உண்மைத் தோற்றத்தை அதாவது தமிழரின் விடுதலை நடவடிக்கையை அம்பலப்படுத்த வேண்டும். புதிய ராஜதந்திர முயல்வுகளுக்கு நுட்பமாக தமிழர்கள் தங்களை அர்ப்பணித்து செயலாற்ற வேண்டும். ஒடுக்குமுறையை செய்வோர் அடக்குமுறையாளர் அநீதியை இழைப்போர் பொய் சொல்வதற்கு கூச்சப் படவோ வெட்கப்படவோ மாட்டார்கள். நீதியின் பக்கம் நியாயத்தோடு நிற்கும் நாங்கள் இனியும் பின்னிற்கலாமா?

நன்றி--ஈழமுரசு

Thursday, March 01, 2007

தலைவர் ஒருவரின் தவறை மன்னிக்கலாம் .......

கடந்த காலங்களில் பல தவற்றை செய்த பல தலவர்களின் வரலாறுகள்
பிறபட்ட காலங்களில் அவர்களின் ஆதரவாளர்களினால் நல்லவிதமாக
திருத்தப்பட்டு அவர்களினைப் பற்றிய ஒரு புனித பிம்மமே வளர்க்கப்பட்டு
ஈற்றில் அவர்களின் ஒரு பக்கமே மக்களின் முன் காட்டப்படுகிறது.இப்படிப்பட்ட ஒருவரைப் பற்றிய ஒரு தகவல் இது.


தலைவர் ஒருவரின் தவறை மன்னிக்கலாம் மூடிமறைக்க முற்பட்டால் வரலாறு பழி சுமத்தும் -ஈழவேந்தன் எம்.பி. கூறுகிறார்

கொல்வின் ஆர்.டி.சில்வாவின் நூற்றாண்டு விழா கொண்டாடப்படுகின்றது. சிறந்த ஒருவரைப் பற்றி அவர் இல்லாத போது குறைகாண்பது மனிதப்பண்பல்ல. ஆனால் நாட்டின் மிகப்பெரும் ஒரு தலைவர் செய்கின்ற தவறை மன்னிக்கலாம். மூடிமறைக்க முற்பட்டால் வரலாறு எம்மீது பழிசுமத்தும் என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மா.கா.ஈழவேந்தன் தெரிவித்துள்ளார்.

கொல்வின் ஆர்.டி.சில்வாவின் நூற்றாண்டு தின விழா கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மண்டபத்தில் கடந்த திங்கட்கிழமை டியூ.குணசேகர தலைமையில் நடைபெற்ற போது இணைப்பாட்சி தத்துவத்தில் ஈடு இணையற்ற புகழ்பெற்ற சுவிட்சர்லாந்து பேராசிரியர் சிறப்புரையாற்றினார்.

கூட்ட முடிவில் சுவிட்சர்லாந்து பேராசிரியருடன் கலந்துரையாடிய ஈழவேந்தன் கொல்வின் ஆர்.டி.சில்வா தொடர்பாக தொடர்ந்து தெரிவிக்கையில் கூறியதாவது;

கொல்வின் ஆர்.டி.சில்வா ஆழ்ந்து படித்த மேதை - வரலாற்றாசிரியர். என்.எம்.பெரேராவுடன் இணைந்து இடதுசாரி இயக்கத்தை கட்டியெழுப்பியவர். மலையக மக்களின் குடியுரிமை வாக்குரிமைக்காக குரலெழுப்பியவர்.
ஈழத்தமிழர்களுக்காக ஓங்கிக் குரலெழுப்பியவர். தொலைநோக்குடன் ஒரு மொழி எனில் இருநாடு, இருமொழி எனில் ஒரு நாடு என்ற சிந்தனையுடன் 1954 இல் அவர் எழுப்பிய குரலை நாம் மறந்துவிட முடியாது. மாறாக நன்றி உணர்வுடன் நினைவு கொள்கின்றோம்.

அயர்லாந்து மக்கள் மீது ஆங்கிலத்தை திணித்த போது அதனை எதிர்த்து அந்த மக்கள் வாந்தியெடுத்தார்களோ அவ்வாறே சிங்களத்தை தமிழர் தொண்டைக்குள் திணித்தால் தமிழர் வாந்தியெடுப்பதும் உறுதியென்று அவர் தெரிவித்தார்.

இப்படிப்பட்ட கொல்வின் ஆர்.டி.சில்வா பெருந்தகை சோல்பரியின் அரசியல் யாப்பில் மாற்ற முடியாத விதி என்று கூறப்பட்ட 29 ஆவது விதியை நீக்கி தமிழர்களுக்கு துளியளவும் பாதுகாப்பாற்ற நிலைமையை ஸ்ரீமாவோ பண்டாரநாயக்காவின் ஆட்சியில் 1972 இல் உருவாக்கிய வரும் இவரேயாவார்.

அத்துடன் தனிச் சிங்களச் சட்டத்துடன் பௌத்த மதத்தை ஆளும் மதமாகவும் மாற்றியமைத்தவரும் கொல்வின் ஆர்.டி.சில்வாவேயாவார். நிலைமை மேலும் மோசமடைவதை உணர்ந்த செனட்டர் நடேசன், தமிழ் மக்களுக்கு உரிமை வழங்காவிடினும் உள்ளதையும் கெடுக்காதே என்று கெஞ்சிக் கேட்ட போது சாத்தியமானதை செய்வதே அரசியல் என்று கூறி இருந்த சலுகைகள் சிலதை இல்லாமல் செய்தவரும் கொல்வின் ஆர்.டி.சில்வாவே.
எனவே தான் கொல்வினின் சட்டம் தமிழர்களை கொல்லும் சட்டம் என்று அப்போது எதிர்ப்புக்குரல்கள் எழுப்பியது என்றும் ஈழவேந்தன் அவரிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேற்குறிப்பிட்ட விடயங்களை சுவிட்சர்லாந்து பேராசிரியருக்கு ஈழவேந்தன் சுட்டிக்காட்டிய போது; அரசியல் வாதிகள் பலர் சூழ்நிலையின் கைதிகளாக மாறி தடம்புரள்வது இயல்பு. டாக்டர் கொல்வின் ஆர்.டி.சில்வாவும் இந்த தவறுக்கு ஆளானார் எனத் தெரிவித்தார்.

அடிக்கடி மறதிக்கு ஆளாகின்ற தமிழர்கள் மறதி தவறாதிருக்க வேண்டுமென்பதற்காகவே இச்செய்திகளை தெரிவிக்கின்றேன் என்றும் ஈழவேந்தன் அவரிடம் மீண்டும் சுட்டிக் காட்டினார்.

தினக்குரல்..


Thursday, February 22, 2007

5 வருட நிறைவில் போர்நிறுத்த உடன்படிக்கை.

5 வருட நிறைவில் போர்நிறுத்த உடன்படிக்கை-14 நாள் அவகாசம் கொடுக்காமலே நடவடிக்கைக்கு இரு தரப்பும் தயார் !!!

இலங்கை அரசாங்கத்துக்கும் விடுதலைப் புலிகள் அமைப்புக்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டு நாளையுடன் ஐந்து வருடங்கள் பூர்த்தியாகின்றன. அழிவுகளையும் துயரங்களையும் தந்துகொண்டிருந்த கொடிய யுத்தத்துக்கு ஒரு முடிவைக் கொண்டுவந்து நிரந்தர சமாதானத்துக்கு வழிவகுப்பதாக இந்த உடன்படிக்கை அமையுமென்ற நம்பிக்கை அது கைச்சாத்திடப்பட்ட குறுகிய காலத்திற்குள்ளாகவே அற்றுப்போய்விட்டது.

இந்த உடன்படிக்கை இப்போதும் நடைமுறையிலிருப்பதாகவும் அதனைப் பேணிப் பாதுகாப்பதில் தாம் நம்பிக்கை வைத்திருப்பதாகவும் இருதரப்பினரும் கூறிக்கொள்கின்ற போதிலும், அதற்கு முரணான நடவடிக்கைகள் எந்தவித தயக்கமுமின்றி முன்னெடுக்கப்படுவதைத்தான் தாராளமாகக் காணக்கூடியதாகவிருக்கின்றது. விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுடன் அப்போது பிரதமராகவிருந்த ரணில் விக்கிரமசிங்க இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டவேளையில், நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக இருந்தவர் திருமதி சந்திரிகா குமாரதுங்க. அவர் இந்த உடன்படிக்கையைக் கடுமையாக எதிர்த்தார். அந்த எதிர்ப்புக்கு அரசியல் நோக்கங்கள் தான் காரணமாக இருந்தது. அந்த எதிர்ப்பின் உச்சக்கட்டமாகவே ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தை தன்னுடைய அதிகாரங்களைப் பயன்படுத்தி அவர் பதவி கவிழ்த்தார். அதன் பின்னர் ஷ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான அரசாங்கத்தை அமைத்துக் கொண்டபோது புரிந்துணர்வு உடன்படிக்கையை ஏற்றுக் கொள்வதாகவே திருமதி குமாரதுங்க தன்னுடைய நிலைப்பாட்டை வெளிப்படுத்தினார். சிங்கள அரசியல் தலைவர்களைப் பொறுத்தவரையில் புரிந்துணர்வு உடன்படிக்கை தொடர்பில் இரட்டை அணுகுமுறையொன்றைத்தான் அவர்கள் கடைப்பிடிக்கின்றார்கள் என்பதை இது புலப்படுத்துகிறது.

சிங்கள மக்களைத் திருப்திப்படுத்துவதற்காகவும் அவர்களது ஆதரவைத் தக்கவைத்துக் கொள்வதற்காகவும் புரிந்துணர்வு உடன்படிக்கையை எதிர்ப்பதாகக் கூறிக்கொள்ளும் அவர்கள் பின்னர் சர்வதேச சமூகத்தைத் திருப்திப்படுத்தும் நோக்கத்துடன் புரிந்துணர்வு உடன்படிக்கை மீது பற்றுறுதி கொண்டிருப்பதாக காட்டிக்கொண்டார்கள். ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவும் இதேபோன்ற ஒரு அணுகுமுறையைத்தான் கடைப்பிடிக்கின்றார். புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு எதிரான ஒரு நிலைப்பாட்டை வெளிப்படுத்தியே அவர் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டு அதிகாரத்துக்கு வந்தார். "இந்த உடன்படிக்கையானது வரலாற்றில் ஒரு தவறு" என்ற நிலைப்பாட்டைத்தான் அண்மையில் பி.பி.சி. தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியொன்றிலும் ஜனாதிபதி ராஜபக்ஷ வெளிப்படுத்தியிருந்தார்.

ஆனால், "புரிந்துணர்வு உடன்படிக்கையைக் கிழித்தெறிவதன் மூலமாக இந்த வரலாற்றுத் தவறைத் திருத்திக் கொள்ளுங்கள்" என ஜே.வி.பி. உட்பட இனவாத அமைப்புகள் கொடுக்கும் அழுத்தத்துக்கு அடிபணிய அவர் தயாராயில்லை. புரிந்துணர்வு உடன்படிக்கையைக் கிழித்தெறிவது சர்வதேச ரீதியாக பாதகமான விளைவுகளை அரசுக்கு ஏற்படுத்துவதாக அமையும் என ஜனாதிபதி ராஜபக்ஷ கருதுகின்றார்போலும்.

ஒரு போராளி அமைப்பு ஐந்து வருட காலமாக உடன்படிக்கை ஒன்றை பாதுகாக்கும் நிலையில், அரசாங்கம் அதற்கெதிரான செயற்பாடுகளை மேற்கொள்வதென்பது சமாதானத்தில் அதற்கிருப்பதாக சர்வதேச சமூகம் இன்னமும் நம்பும் பற்றுறுதியைக் கேள்விக்குறியாக்குவதாக அமையலாம். அத்துடன், புரிந்துணர்வு உடன்படிக்கையைக் கிழித்தெறிவதென்பது சமாதானத்துக்கான கதவை மூடிவிடுவதாகக் கருதப்படும் என்பதும் இதற்கான மற்றொரு காரணம். அதாவது, சமாதானத்தில் நம்பிக்கை வைத்து அதற்காக செயற்படுவதாகக் காட்டிக்கொள்ள வேண்டுமாயின், புரிந்துணர்வு உடன்படிக்கையைக் கிழித்தெறிந்துவிட முடியாது! ஆக, அழுத்தங்களுக்கு அடிபணிந்து புரிந்துணர்வு உடன்படிக்கையைக் கிழித்தெறியும் முடிவை அரசாங்கம் எடுக்கப்போவதில்லை எனக் கூறலாம்.

மறுபுறத்தில், புரிந்துணர்வு உடன்படிக்கையை செயலற்றதாக்குவதில் அரசாங்கத்தின் பங்களிப்பு கணிசமானதாக இருந்துள்ளது என்ற குற்றச்சாட்டையும் எளிதில் புறக்கணித்துவிட முடியாது. புரிந்துணர்வு உடன்படிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பல விடயங்கள் நடைமுறைப்படுத்தப்படவில்லை. உயர் பாதுகாப்பு வலயங்களில் மீள் குடியேற்றம், பொதுக் கூட்டங்களிலிருந்து படையினரது வெளியேற்றம், துணைப் படைகளின் ஆயுதக்களைவு மற்றும் அவை செயலிழக்கச் செய்யப்படுதல் என்பன எழுத்தில் மட்டுமே உள்ளன. இவற்றைச் செயற்படுத்த வேண்டும் என்பதில் எந்தவிதமான அக்கறையும் காட்டப்படவில்லை.
இதனைவிட, கட்டுப்பாட்டு எல்லைகள் பேணப்பட வேண்டும் என்பது புரிந்துணர்வு உடன்படிக்கையில் திட்டவட்டமாக வரையறுக்கப்பட்டுள்ளபோதிலும், விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த சம்பூர், வாகரை ஆகிய பிரதேசங்கள் இராணுவத்தால் கைப்பற்றப்பட்டிருக்கின்றன. உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டபோது காணப்பட்ட இராணுவச் சமநிலை இதன்மூலம் மாற்றமடைந்திருக்கிறது.

விமானத் தாக்குதல்கள் போர் நிறுத்த விதிகளுக்கு முரணானதாக இருக்கின்றபோதிலும், அவை பெருமெடுப்பில் மேற்கொள்ளப்படுகின்றது. யாழ்ப்பாணத்துக்கான ஒரே தரைவழிப் பாதையான ஏ-9 பொதுமக்களின் பாவனைக்காகத் திறந்துவிடப்பட வேண்டும் என புரிந்துணர்வு உடன்படிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றபோதிலும், கடந்த ஆறு மாதகாலமாக அது மூடப்பட்டிருக்கின்றது. புரிந்துணர்வு உடன்படிக்கையில் சொல்லப்பட்டுள்ள மற்றொரு முக்கியமான அம்சம் - பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுகள், தடுத்துவைத்தல் என்பன மேற்கொள்ள முடியாது என்பதாகும். ஆனால், இப்போது பயங்கரவாதத் தடைச் சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படுவதுடன், எழுந்தமான கைதுகளும், விசாரணையற்ற தடுத்து வைத்தல்களும் தாராளமாக இடம்பெறுகின்றன.

அதாவது, புரிந்துணர்வு உடன்படிக்கை இன்று நடைமுறையில் இருப்பதாகக் கூறப்பட்டாலும், அதிலுள்ள அனைத்து அம்சங்களுமே நடைமுறைப்படுத்தப்படவில்லை அல்லது அப்பட்டமாக மீறப்பட்டிருக்கின்றது. புரிந்துணர்வு உடன்படிக்கையில் குறிப்பிட்டுள்ளபடி 14 நாள் அவகாசம் கொடுக்காமலே நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ள இரு தரப்பும் தயாராகவே இருக்கின்றது. கண்காணிப்புக் குழுவும் செயலிழந்து போயிருக்கின்றது. புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டபோது அதிகளவில் காணப்பட்ட சர்வதேச சமூகத்தின் அக்கறைதான் அதில் பெருமளவு நம்பிக்கையை ஏற்படுத்துவதாக இருந்தது. நிரந்தரமான ஒரு சமாதானத்தைக் கொண்டுவருவதற்கு புரிந்துணர்வு உடன்படிக்கை பயன்படுத்தப்பட வேண்டும் என்பதற்கான அழுத்தத்தை சர்வதேச சமூகம் கொடுக்கும் என்ற எதிர்பார்ப்பு இப்போது பொய்த்துப் போய்விட்டது. புரிந்துணர்வு உடன்படிக்கையின் எந்தவொரு அம்சமுமே நடைமுறைப்படுத்தப்படாத நிலைதான் இன்றுள்ளது.

இதன் தோல்விக்கான பொறுப்பை சர்வதேச சமூகம் இலகுவில் தட்டிக் கழித்துவிட முடியாது.

Saturday, February 10, 2007

"ஒரு பேப்பர்"காரர்களின் "ஒரு ரேடியோ"

ஓசியாய் வாசிக்க ஒரு பேப்பர் என்ற மகுட வாசகத்துடன் லண்டனில் இருந்து வெளிவந்து இப்போது கனடா.பிரான்ஸ் போன்ற பல நாடுகளில் இருந்து
வெளிவரும் ஒரு பேப்பர் பத்திரிகைகாரர்களால் ஒரு புதிய வானொலி
லண்டனில் இருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஒரு பேப்பர் என்ற அவர்களது
பத்திரிகை பெயரினைப் போலவே வானொலிக்கும் ஒரு ரேடியோ என்று
பெயரிட்டுள்ளனர். பேச்சுவழக்கிலே பத்திரிகையினை வெளியிட்டு ஆரம்பத்தில் எதிர்ப்பினை சந்தித்தாலும் பின்னர் நல்ல வரவேற்பினை பெற்றுக்கொண்டதைப் போல வானொலியிலும் முற்று முழுதாக பேச்சு தமிழினை கொண்டுவருவார்கள் என்பதனை நம்பலாம்.அவர்களின் பத்திரிகையினைப் போலவே வானொலியும் தரமானதை கொண்டுவரும்
எண்டு நம்புகிறேன்.

சிலர் ஒரு பேப்பரினை வீட்டுக்கு கொண்டுபோவது வடை ,ரோல்ஸ் என்பவற்றில் இருக்கும் எண்ணையினை ஒற்றுவதற்காக ,ஏனெனில் ஒரு
பேப்பர் பத்திரிகை தாள்கள் நல்லா எண்ணையினை ஒற்றுதாம் என்று
யதார்த்தத்தினையும் சமூகத்தினையும் கிண்டலடிக்கும் ஒரு பேப்பர்காரர்களின் "ஒரு ரேடியோ" விளம்பரம் இப்படி சொல்லுகிறது.
பேச ,கதைக்க,குரைக்க ,கனைக்க ஒரு ரேடியோ.

வித்தியாசமாக செய்பவர்கள்,யோசிப்பவர்கள் வெற்றி பெறுகிறார்கள்.அந்தவகையில் வித்தியாசமாக செய்வோம் என்று ப்ல வானொலிகள் இருக்கும் களத்தில் இறங்கி இருக்கும் ஒரு ரேடியோகாரர்களுக்கு எனது வாழ்த்துக்கள்.

ரேடியோ கேட்க:-http://www.oruradio.com/

கொசுறு:-

எனது பக்கத்து வீட்டுக்காரர் சில நாட்களாக காரில் இருந்து இறங்கும்போது நிறைய தமிழ் பத்திரிகைகளை கொண்டு போறதை
பாத்தன். நேற்று அவற்றை வீட்டை போகவேண்டிய சந்தர்ப்பம் வாய்த்தது. பாத்தன் அவரின் லோண்றி ரூம் முழுக்க கனடாவில் வெளிவரும் ஒரு
பிரபல்யம் வாய்ந்த பத்திரிகை. 120 பக்கம் கொண்ட அந்தபத்திரிகையில்
7,8 பக்கம் தான் ஏதாவது விசியம் வரும் அதுவும் இணையத்தில் இருந்து
உருவியது.மிகுதி முழுவது விளம்பரம்,விளம்பரம். 10 பக்கத்தில் முழுக்க முழுக்க முழுப்பக்க மரணஅறிவித்தல்கள். இந்த பத்திரிகைக்கு எனது நண்பர்கள் வட்டாரத்தில் செத்தவீட்டு பத்திரிகை என்ற பட்ட பெயர்.

ஏன் இதைநிறைய அடுக்கி வைத்திருக்கிறார் என்று சந்தேகம் ,அவரிடமே
கேட்டேன்.ஏன் அங்கிள் பத்திரிகை டெலிவறி செய்யுறீங்களோ? ரூம் நிறைய
பேப்பராய் இருக்கு. அவரின் பதில் இல்லை தம்பி நாங்கள் எல்லோ இப்ப
ஒரு நாய்க்குட்டி வாங்கி இருக்கிறோம்.எனக்கு ஒண்டும் புரியவில்லை
நாய்க்குட்டி வாங்கினதுக்கும் பத்திரிகைகள் ரூம் முழுக்க அடுக்கி வைத்திருக்கிறதுக்கும் என்ன சம்பந்தம்?இல்லை தம்பி இது குட்டி நாய் தானே கக்கா இருக்கிறதுக்கு இப்பதான் பழகிறார்.4,5 பத்திரிகை தாள்களை ஒரு மூலையில்
போட்டால் அவர் அதில கக்கா இருப்பார்.அதுக்கு தான் இந்த பத்திரிகைகளை
ஒவ்வொரு கிழமையும் கொண்டுவாரனான்.நான் மூச்...........

Tuesday, February 06, 2007

அன்ரன் பாலசிங்கத்தின் பொறுப்பை ஏற்கமாட்டார் அடேல்.

விடுதலைப்புலிகளின் சர்வதேச விவகாரங்களுக்கான பொறுப்பாளராகத் தாம் செயற்பட மாட்டார் என்று திருமதி அடேல் பாலசிங்கம் தெரிவித்தாக லண்டனில் இருந்து வெளிவரும் "த டெய்லி டெலிக்கிராப்' பத்திரிகை தகவல் வெளியிட்டுள்ளது.

மறைந்த அன்ரன் பாலசிங்கம் வகித்து வந்த விடுதலைப்புலிகளின் சர்வதேச விவகாரங்களுக்கான பொறுப்பாளர் பதவியை அவரது துணைவியார் அடேல் பாலசிங்கம் ஏற்றுச் செயற்படுவார் எனச் செய்திகள் சில வாரங்களாக வெளிவந்து கொண்டிருந்தன.

""தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பில் எனது கணவர் வகித்து வந்த பதவியை நான் ஏற்கவுள்ளதாக வெளிவரும் செய்திகளில் எந்தவிதமான உண்மையும் இல்லை'' என்று திருமதி அடேல் ""ஒஸ்ரேலியன்'' பத்திரிகைக்கு மின்னஞ்சல் மூலம் தெரிவித்திருக்கின்றார்.

விடுதலைப்புலிகளின் புதிய சர்வதேச ""குரலாக'' திருமதி அடேல் விளங்குவார் என்று செய்திகள் வெளிவரத் தொடங்கிய பின்னர் அது குறித்து அவர் தமது கருத்தை வெளியிட்டிருப்பது இதுவே முதன்முறையாகும் என்றும் "த டெய்லி டெலிகிராப்' குறிப்பிட்டுள்ளது.

இதற்கிடையில் திருமதி அடேல், தமது கணவர் அன்ரன் பாலசிங்கம் வகித்த பதவியை ஏற்றுப் பணியாற்றுவார் என்று செய்திகள் வெளிவரத் தொடங்கியதும் அவரைக் கைது செய்யுமாறு ஸ்ரீ லங்காவின் ராஜதந்திரிகள் பிரிட்டிஷ் அரசிடம் கோரிக்கை விடுத்தனர்.எனினும் 57 வயதான திருமதி அடேல் பாலசிங்கம் விடுதலைப்புலிகளின் நீண்டகால தீவிர ஆதரவாளர் என்பதாலும் தலைவர் பிரபாகரனின் நம்பிக்கைக்கு உரியவர் என்ற வகையிலும் கணவருடன் சேர்ந்து சர்வதேச மட்டத்தில் பணியாற்றுவதில் மிகுந்த அனுபவம் உள்ளவர் என்ற வகையிலும் விடுதலைப்புலிகள் அமைப்பில் அவருக்குக் குறிப்பிடத்தக்க இடமொன்று உண்டு என்று புலிகளுக்கு நெருங்கிய வட் டாரங்கள் கருதுவதாகவும் "த டெய்லி கிராப்' தெரிவித்துள்ளது.

உதயன்

Sunday, February 04, 2007

சுப்புஅம்மானும் ,சுப்புகுட்டியும்

எனது இந்த பதிவில் இனி சுப்புஅம்மானும்,சுப்புக்குட்டியும் இடையிடையேசந்தித்து கதைக்க போகிறார்கள்.பல்வேறுபட்ட பல விடையங்களை அவர்கள்கதைப்பார்கள். நகைச்சுவையுடன் அதே நேரம் சிந்திக்க வைக்ககூடியதாகவும்அவர்களின் உரையாடல் இருக்கும்.

எண்ணத்தில் உதித்து சில மாதங்களேஆன ,முதன்முதலாக வலையேறும் சுப்பு அம்மானையும் சுப்புக்குட்டியையும்வரவேற்க நீங்கள் தயாரா? சரி ,சரி கைதட்டியது போதும்.இன்றைக்கு அவர்கள் கதைக்கும் விடையம் அரசியலாக இருந்தாலும்தொடர்ந்து பல்வேரு விடையங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வார்கள்..இதோ சுப்பு அம்மானும் சுப்புக்குட்டியும் இணைந்து கலக்கும்.................................... என்ன பெயரை வைக்கலாம் என்பது உங்களிடமே விட்டுவிடுகிறேன்.ஒரு பெயரை முன்மொழியுங்கள்.

அன்புடன் கரிகாலன்..

Photobucket - Video and Image Hosting



.சுப்புக்குட்டி:-வணக்கம் அம்மான்.

சுப்பு அம்மான்:-வணக்கம்டா மோனை.எங்க துலையாலையோ?

சுப்புக்குட்டி:-இல்லை அம்மான் சும்மா ஒரு தேத்தண்ணி குடிப்பம் எண்டு வந்தனான்.

சுப்பு அம்மான்:-இல்லையடா மோனை நீ அடிக்கடி அம்மான் அம்மான் எண்டு கூப்பிட எனக்கொரு விசியம் எல்லோ ஞாபகத்துக்கு வருது.அம்மான் எண்டு யாரை சொல்லுறது எண்டு தெரியுமோ. அந்த காலங்களில அப்பு,ஆச்சி ,குஞ்சிஅப்பு எண்டு கூப்பிட்ட காலங்களில தாயின்னரை சகோதரங்களை தான் அம்மான் எண்டு சொல்லுறது.அனால் இப்ப சிலதுகள் அம்மான் எண்டால்அது இது எண்டு கரடிவிட்டுக்கொண்டிருக்கினம்.

சுப்புக்குட்டி:- அம்மான் நீங்கள் சந்தடி சாக்கில எங்கேயோ அம்பு விடுறீங்கள் போல கிடக்கு.

சுப்பு அம்மான்:- அதை விடு மோனை.. என்ன மோனை புதினங்கள்?

சு.குட்டி:-எங்கடை ரணிலார் எல்லோ நேபாளம் போயிருந்தவராம்.

சுப்பு அம்மான்:-எட மோனை அவர் அங்க என்னத்துக்கடா மோனை போனவராம்.?எங்கடை அரசியல் வாதிகள் அங்கை எல்லாம் போகமாட்டினமே.

சுப்புக்குட்டி:-நேபாளத்திலே சண்டைஎல்லாம் முடிஞ்சு போச்செல்லே அம்மான்.அதுதான் அங்கை ஒரு மகாநாடாம் இலங்கையின் அனுபவத்தின் அடிப்படையில் மோதலின் பின்னரான பொருளாதார முகாமைத்துவம்எண்ட தலைப்பிலே.அதுக்கு தான் ரணிலை கூப்பிடவையாம்.

சுப்புஅம்மான்:-அடிடா எண்டானாம் புறப்படலையிலை.சரி,சரி அவர் அங்கை என்ன சொன்னவராம்?

சுப்புக்குட்டி:-நேபாளம் முன்னேற வேண்டும் எண்டால் நாடும் அதன் மக்களும் ஒற்றுமைப்படவேண்டும் எண்டும் நேபளத்தில் அரசியல் ஸ்திரத்தன்மை வேண்டும் என்றும் வேற பல விசியங்களையும் சொன்னவராம்.

சுப்பு அம்மான்:- எனக்கெண்டா சிரிப்புதான் வருதடா தம்பி.கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன் வைகுண்டம் ஏறி... எண்டெண்டு ஒரு பழமொழி இருக்கெல்லே.தன்ரை நாட்டிலே,நாட்டையே சீரழிக்கும் இனப்பிரச்சனையையே தீர்க்க மனதில்லாதவர்கள் அடுத்த நாட்டுக்கு போய் அவர்களுக்கு அறிவுரை சொல்றதை நினைச்சா சிரிப்பு சிரிப்பு தான் வருது. ஊருக்கு தான் உபதேசம் உனக்கு இல்லையடி பெண்ணே எண்டதுதான் எனக்கு ஞாபகம் வந்து துலைக்குது.

சுப்பு குட்டி:- கூப்பிட்டவர்களை தான் சொல்லவேணும்.அம்மான் நீங்கள் நீங்கள் சிரிப்பா சிரிக்க எண்டு சொல்ல தான் எனக்கு ஞாபகம் வருது இவர் இப்படி வெளிநாட்டில இருக்க இவரின் கட்சியிலை இருந்து 17 பேர் எல்லோ கூண்டோட கட்சி மாறிட்டினம்.கட்சி மாறினதுமல்லாமல் எல்லாருக்கும் அமைச்சு பதவிகள் நாடே சிரிப்பா சிரிக்குது.

சுப்பு அம்மான்:- இப்ப இலங்கையின்னரை அமைச்சரவையயை பாத்தியே தம்பி 107 பேர்.2 கோடி பேர் இருக்கிற ஒரு நாட்டுக்கு 107 அமைச்சர்கள் எண்டால் ,இனி அவயின்றை சம்பளம்,கிம்பளம் எண்டு எவ்வளவு செலவுகள் பாத்தியேடா மோனை. பதவியாசை எப்படி எல்லாம் மனுசரை ஆட்டுது பாத்தியோ தம்பி. முந்தின காலங்களிலே எல்லாம் தொண்டமானின்றை கட்சி மட்டும்தான் யார் ஆட்சிக்கு வரீனமோ அவரோடை கூட்டு வைக்கும்.அதிகாரத்தில் இருந்தால் தான் தனது ம்க்களுக்கு எதாவது? நன்மை செய்யலாம் எண்டு.இதிலே கண்டியோ ஆருக்கு நன்மை எண்டு சொல்லாமலே தெரியும் தானே.

சுப்பு குட்டி:-ஓம் அம்மான் இண்டைக்கும் அந்த மலையக மக்கள் கல்விஅறிவு பெறாமல் ,சரியான வீட்டு வசதிகூட இல்லாமல்,குடிக்கும்,சினிமாவுக்கும் அடிமையாக இருப்பதற்கே காரணமே மேற்படி தலைவர்கள் தான்

சுப்பு அம்மான்:-இப்படி இருந்த இலங்கையில் இப்ப பிரதான எதிர்க்கட்சியில் இருந்தே கட்சி தாவுறாங்கள் எண்டால் இலங்கை அரசியல் எப்படி சாக்கடையா போட்டுது பாத்திட்டியோ?இலங்கையிலே பெரும்பாலான அரசியல் வாதிகள் சட்டத்தரணிகள்,படித்தவர்கள் இருந்தும் அதிகார போதை அவங்களை எப்பிடி ஆட்டுது பாத்தியோ?இதில இரண்டு பேர் மகிந்தவை கடுமையா விமர்சித்தவை

சுப்புக்குட்டி:-இப்பிடி வர்றவைக்கு எல்லாம் பதவி குடுத்தால் மகிந்தற்றை கட்சிக்குள்ள பிரச்சனை வராதோ அம்மான்.சு.அம்மான்:-ஏன் வராது? இப்பவே புகைச்சல் கிளம்பிட்டுது எண்டு லேசுபாசா கதை வருது.ஜே.வி.பி காரங்கள் வேற முறுக்கிக்கொண்டு நிக்கினம் பாப்பம் என்ன நடக்குதெண்டு.சில வேளை இலக்சன் வந்தாலும் வரும் கண்டியோ.

சுப்புக்குட்டி:- சரி, அம்மான் வீட்டை போகவேணும் பிறகு சந்திப்பம் என்ன?சுப்பு அம்மான்:- ஓமடா தம்பி பிறகு சந்திப்பம் என்ன?
சு.குட்டி:- ஓமோம்

Monday, January 29, 2007

ஆத்தா புது ப்ளாக்கரில் சேந்திட்டேன்.

பாம்பு தின்ற ஊருக்கு போனால் நடு முறி எனக்கு என்பது பெரியோர் சொன்ன வாக்கு அதற்க்கு இணங்க நானும் புது ப்ளாக்கரில் ஜக்கியம்
ஆகிவிட்டேன்.இனி தமிழ்மணத்திலும் பிரச்ச்னை இல்லாமல் எல்லாம்
நல்லபடி நடக்கும் என்று நம்புகிறேன்.

Wednesday, January 24, 2007

ஆக்கிரமிப்பும் அச்சுறுத்தலும் புலிகளைப் பணிய வைக்குமா?

எல்லோரும் ஏறி விழுந்த நொண்டிக் குதிரையில் சக்கடத்தார் தானும் ஏறி விழுந்தாராம் என்று பேச்சு வழக்கு உண்டு.

இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக் குத் தீர்வு காணும் விடயத்தில் மஹிந்த ராஜ பக்ஷவின் அரசு கையாளும் அணுகுமுறையை இப்படித்தான் கணிக்கத் தோன்றுகின்றது.ஜே.ஆர். ஜெயவர்த்தனா, ஆர். பிரேமதாஸ, சந்திரிகா குமாரதுங்க போன்ற முன்னாள் ஜனா திபதிகளும், அவர்களது அரசுகளும் தமிழர்களின் தேசிய இனப்பிரச்சினையைத் தீர்ப்ப தற்குக் கையாண்டு கடைசியில் தோற்றுப் போன அதே கையாலாகாத அணுகுமுறையைத் தான் தந்திரோபாயத்தைத்தான் மஹிந்தரின் அரசும் இப்போது பின்பற்றுகின்றது என்பது தெளிவாகி வருகிறது. ஒரு தெளிவற்ற தீர்க்கதரிசனமற்ற அர சியல் முதிர்ச்சியற்ற சாத்தியமற்ற ஒன்றுக் கொன்று முற்றிலும் முரண்பட்ட அணுகு முறையைத்தான் சிங்கள ஆட்சிப் பீடம், இவ் விடயத்தில் தொடர்ச்சியாகப் பின்பற்றி வரு கின்றது என்பதை ஏற்கனவே இப்பத்தியில் கோடிட்டுக் காட்டியிருக்கிறோம்.

ஒருபுறம் போரைத் தீவிரமாக முடுக்கி விடும் இராணுவக் கெடுபிடிப் போக்கு. மறுபுறம் சமா தான வழித் தீர்வு குறித்து பிரபலாபம். இதுவே சிங்களத்தின் இரட்டை வேட அணுமுறை.கடந்த காலக் கொழும்பு அரசுகளால் தீவிர முயற்சியுடன் முன்னெடுக்கப்பட்டுத் தோல்வி கண்ட தந்திரோபாயம் இது என்ற உண்மையைக் கவனத்தில் கொள்ளாது, அதே பாணியைப் பின்பற்ற மஹிந்தரின் அரசும் முயல்கின்றது.விடுதலைக்கான உரிமைக்கான கௌரவ வாழ்வுக்கான நீதி, நியாயம் பெறு வதற்கான தமிழரின் போராட்டம், ஆயுத வழிக் குத் திரும் பியுள்ள இன்றைய சூழலில் அந்த வழியிலேயே தீர்வையும் தனக்கு விருப்பமான முடிவையும் தமிழர் தரப்பு மீது திணிக்க முயல் கிறது தற்போதைய அரசு. தமிழரின் அரசியல் தலைவிதியை, படை பலத்தை அடிப்படையாகக் கொண்டே நிர்ண யிப்பதற்கு, இந்த அரசு முயன்று வருகின்றது என்பதைக் கடந்த வாரம் இப்பகுதியில் சுட்டிக்காட்டியிருந்தோம்.

தமிழர்களின் நிலங்களை ஆக்கிரமித்து, அதன் மூலம் இராணுவ மேலாதிக்க நிலையில் நின்று, தான் விரும்பும் அரைகுறைத் தீர்வைத் தமிழர் தலையில் கட்டிவிடுவதே அரசின் திட்டம் என்ற கருத்தையும் வெளிப்படுத்தியிருந்தோம். அக்கருத்துக்களை ஊர்ஜிதம் செய்வது போன்று, இலங்கை பாதுகாப்புத்துறைப் பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெலவின் அறிவிப்பு அமைந்திருக்கின்றது.

கிழக்கில் கணிசமான பகுதியைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து மீட்டுக் கைப்பற்றிய பின்னர் வாகரை வெற்றியை அடுத்து இறுமாப்புடன் இந்த அறிவிப்பை அவர் விடுத்திருக்கின்றார்.மோதல்களை நிறுத்தி, பேச்சு மேசைக்குத் திரும்புவதற்குப் புலிகள் விரைந்து உடன்பட வேண்டும். இல்லையேல் மென்மேலும் சண் டைக்கு அவர்கள் முகம் கொடுக்க வேண்டியி ருக்கும். என்று எச்சரித்திருக்கின்றார் அவர்.யுத்த நிறுத்தத்துக்கு வழி செய்த புரிந்துணர்வு ஒப்பந்தம், நடைமுறையில் இருப்பதாகத் தெரிவித்துக் கொண்டே அந்த ஒப்பந்தப்படி ஒரு தரப்பின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்குள் மற்றத் தரப்பு, படை நடவடிக்கைகளை முன்னெடுக்கக் கூடாது என்ற தெளிவான ஏற்பாடு இருக்கத் தக்கதாகவே கிழக்கில் பெரும்பாலான பகுதிகளிலிருந்து புலிகளைப் படை நடவடிக்கை மூலம் விரட்டி, அப்புறப்படுத்தி விட்டு இந்த அறிவிப்பை அரசு விடுக்கின்றது.

முன்னைய சிங்கள அரசுகள், இதே போன்ற தந்திரத்தைக் கையாண்டு பெற்ற அனுபவம் என்னவென்பது மறக்கப்பட்ட சரித்திரம் அல்ல.இலங்கை யுத்தக் களத்தில் படைவலுச் சம நிலை, காலத்துக்குக் காலம் மாறிக்கொண்டிருப்பதும், ஒரே சமச்சீர் நிலை நீண்ட காலத்துக்குத் தாக்குப் பிடிப்பதில்லை என்பதும் அனுபவப் பாடங்கள்.

பதினெட்டு மாதங்களாக ஜெயசிக்குறு இரா ணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட போது, அரசுத் தரப்புக்குச் சாதகமாக மேம்பட்டிருந்த படைச் சமவலு நிலை, திடீரெனப் பதினெட்டு மணித்தியாலங்களில் தலைகீழாக மாறியமை மறுக்கப்படக் கூடியதல்ல. அது போல, கட்டு நாயக்கா விமானப்படைத் தளம் மற்றும் விமான நிலையம் மீதான அதிரடித் தாக்குதலினால், ஒரு சில மணி நேரத்தில் படை வலுச் சமநிலை தலைகீழானதும் நினைவுகொள்ளத்தக்கது.

இத்தகைய சூழ்நிலையில் பாரிய படைக் கலச் சக்தியையும், சுடுகல வலுவையும் பயன் படுத்தி, புதிய புதிய படையெடுப்புகளை நடத்தி, தமிழர் மண்ணை ரணகளமாக்கி விட்டு, உடன் பேச்சுக்கு வராவிட்டால் இது போன்ற மென்மேலும் பல விபரீதங்களை எதிர்கொள்ள நேரும் என்று தமிழர் தரப்பை எச்சரிப்பதால் உருப்படியாக நடைபெறப்போவது எதுவுமில்லை.இராணுவச் சமநிலை நிலையில் வீழ்ச்சி அல்லது பின்னடைவு கண்ட நிலையில், பேச் சுக்கு அமைதி வழித் தீர்வுக்கு புலிகள் இறங்கி வந்தனர் என்று கூறுவதற்கும் கடந்த காலங் களில் எந்தப் பதிவோ அன்றி உதாரணமோ இல்லை.

எனவே, இத்தகைய ஆக்கிரமிப்பு நடவடிக்கையும், அதை அச்சுறுத்தலாகக் காட்டி பேச்சுக்கு மசிய வைக்கும் மடக்கிப் போடும் மிரட்டல் தந்திரமும் புலிகள் விடயத்தில் பயன் தருமா என்பது சந்தேகத்துக்கு அப்பாற்பட்டது. இத்தகைய நெருக்குதல் போக்கு அல்லது அழுத்த நடவடிக்கை, அமைதி எத்தனங்களில் இருந்து இரு தரப்புகளையும் மேலும் மேலும் விலத்திப்போக வைத்துப் பகையுறவையும், விரோத மனப்பான்மையையுமே வளர்க்கும். அதன் விளைவு மோசமானதாகவும், விபரீத மானதாகவும் அமையும் என்பதும் சொல்லித் தெரியவேண்டிய ஒன்றல்ல.

இதனைப் பட்டறியவும் காலம் அதிகம் செல்லாது என்பதும் கடந்தகால அனுபவம்.

-uthayan-

Sunday, January 14, 2007

இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

உலகெங்கும் பரந்து வாழும் என் தமிழ் உறவுகள் அனைவருக்கும் எனது
தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள்.

"பனி படர்ந்த தெருக்களில் கால்கள் நடந்தாலும் மனம் மட்டும் மண் புழுதி
நிறைந்த தெருக்களில் நடந்ததையே நினைக்கிறதே"

வன்னியின் அதிகாலை விடியல் பொழுது புகைப்படத்தில்.

Photobucket - Video and Image Hosting

கரிகாலன்