Monday, December 26, 2005

இந்திய தூதரகத்தின் முன் மறியல் போராட்டம்?

ந்திய வம்சாவளி தமிழர்களின் வெறுப்பை சம்பாதித்திருக்கும் இந்தியத் தூதரகத்தின் முன் மறியற்போராட்டம் - ரி.சென்னன்.


லங்கையின் இந்திய தூதுவராலயத்தின் முன் பாரிய மறியற் போராட்டம் ஒன்று விரைவில் நடத்தப்படும் என்று இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணி தலைவர் ரி.சென்னன் தெரிவித்துள்ளார்.

இலங்கைளிலுள்ள ஓட்டு மொத்த இந்திய வம்சாவளி மக்களின் தேவைகள் மற்றும் விருப்புகள் ஆகியவற்றினை கருத்திற் கொண்டு செயற்படாத இலங்கைக்கான இந்திய தூதரகம் மீது மக்கள் வெறுப்புக் கொண்டுள்ளனர்.
இது சம்பந்தமாக இந்திய வம்சாவளி மக்களின் பலத்த எதிர்ப்பை வெளிப்படுத்து முகமாக இலங்கையின் இந்திய தூதுவராலயத்தின் முன் பாரிய மறியற் போராட்டம் ஒன்று விரைவில் நடத்தப்படும் என்று இலங்கை தொழிலாளர் ஜக்கிய முன்னணி தலைவர் ரி.சென்னன் முன்னணியின் பணிமனையில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு பேசுகையில் குறிப்பிட்டார்.


அவர் மேலும் தெரிவிக்கையில்.
இலங்கையில் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்திய வம்சாவளி தமிழ் மக்கள் விடயத்தில் இந்திய தூதரகம் அக்கறை காட்டுவதாக தெரியவில்லை. இதனால் இந்திய தூதராலயம் மீதும், இந்திய அரசாங்கத்தின் மீதும் இலங்கை வாழ் இந்திய வம்சாவளி மக்கள் நம்பிக்கை இழந்து விட்டனர். அம் மக்கள் இன்று யாருமற்ற அநாதைகளாக இருந்து வருகின்றனர். அம் மக்களுக்கு குரல் கொடுக்க எவருமில்லை.


இந்திய வம்சாவளி மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் அமைப்பு இ.தொ.க மட்டுமல்ல. மேலும் பல் வேறு அமைப்புகள் மலையகத்தில் உள்ளதென்பதை இந்தியத் தூதுவர் உணர்ந்து கொள்ள வேண்டும். இந்திய தூதுவர் இ.தொ.கவை தவிர்ந்த எனைய இந்திய வம்சாவளி அமைப்புகளை புறக்கணித்து வருகின்றார். இப் புறக்கணிப்பு நீண்ட காலமாகவே இடம் பெற்று வருகின்றது. என்று அவர் தெரிவித்துள்ளார்.

சங்கதி.


Wednesday, December 21, 2005

இந்தியப்பிரதமருக்கு வேண்டுகோள்

பலாலி விமான தளம்: இந்திய பிரதமருக்கு இந்து ஆலய பரிபாலன சபைகளின் ஒன்றியம் வேண்டுகோள்!

சிறிலங்கா அரசாங்கத்துக்கு இந்திய அரசாங்கம் எதுவித இராணுவ உதவிகளையும் வழங்க வேண்டாம் என்று யாழ். மாவட்ட இந்து ஆலய பரிபாலன சபைகளின் ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

யாழ். மாவட்ட இந்து ஆலய பரிபாலன சபைகளின் ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கை:

சிறிலங்கா படையினரது வலுவை அதிகரிப்பதற்கான தங்களது ஒத்துழைப்பு தமிழின அழிப்புக்கு வழிவகுக்கும்.
சிறிலங்காப் படையினரது பலாலி விமான ஒடுபாதையை விரிவாக்கவும் மேலதிக இராணுவ வளங்களை அளிப்பதற்காகவுமான உடன்படிக்கையை சிறிலங்கா அரசாங்கத்துடன் தாங்கள் மேற்கொள்ளவுள்ளதாக ஊடகங்கள் மூலமாக அறிந்துகொண்டோம்.

இத் தகவலானது இன்னலுறும் தமிழ் மக்களுக்கு பெரும் விசனத்தையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.
தற்பொழுது சர்வதேச அனுசரணையாளரின் ஒத்துழைப்புடன் போர்நிறுத்தம் நடைமுறையில் உள்ளது. ஆனால் போர்நிறுத்த உடன்படிக்கையில் ஏற்றுக் கொள்ளப்பட்ட விடயங்கள் சிறிலங்கா அரசாங்கத்தினால் முழுவதுமாக நடைமுறைப்படுத்தப்படவில்லை.

ஆகையால் சிறிலங்கா படைத்தரப்பினரது அடாவடித்தனங்கள் அதிகரிப்பதுதான் அண்மைக்கால நிகழ்வுகளாகும். இதனால் தமிழ்மக்களின் சமாதானத்தின் மீதான நம்பிக்கை சிதறடிக்கப்பட்டுவிட்டது.
சிறிலங்கா அரசாங்கத்தின் கபடமான போக்கு காரணமாக சமாதான முன்னெடுப்புகளும் தடைப்பட்டுவிட்டன.
தமிழ் மக்கள் தமது அடிப்படை மனித உரிமைகளுக்காக போராடுவது என்பது அவர்களது சுதந்திரமான, கௌரவமான, பாதுகாப்பான வாழ்வுடன் சம்மந்தப்பட்டது.

எனவே, இத்தகைய
ஜனநாயகத்துக்கான போராட்டம் நியாயமானதும், நீதியானதுமானதாகும். அத்துடன் நீடித்த நிரந்தர சமாதானத்திற்கான போராட்டமாகும். இப்போராட்டத்ததை எவ்வகையிலேனும் ஒடுக்க வேண்டும் என்பதே சிறிலங்கா அரசாங்கத்தினால் தலைமை தாங்கப்படுகின்ற சிங்கள, பௌத்த பேரினவாதத்தின் முனைப்பாகும்.

சிறிலங்கா புதிய அரச தலைவர் பதவியேற்றதன் பின் இராணுவ நெருக்குவாரங்கள் அதிகரித்துவருகின்றன. தமிழ் மக்கள் மீதான இன அழிப்பு போரைத் திணிப்பதற்கான அனைத்து வழிமுறைகளையும் கைக்கொள்வதற்கு சிறிலங்கா அரசாங்கம் தயாராகிவிட்டது என்பதற்கு கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் படைத்தரப்பு அடாவடித்தனங்கள் சான்று பகிர்கின்றன.
அதே நேரத்தில் ஒடுக்கப்படும் தமிழ் மக்களது எதிர்ப்புணர்வு தம்மை தற்காத்துக்கொள்வதற்கான போராட்டங்களாக உருவாகி வருகின்றன.
பெண்கள் மீதான முன்முறைகள், அறிவுஜீவிகள், மாணவர்கள் மீதான திட்டமிட்ட வகையிலான தாக்குதல்கள், துப்பாக்கிச் சூடுகள், அதிகரித்துவரும் சுற்றிவளைப்புக்கள் தேடுதல்கள், ஊடகவியாலாளர்கள் மீதான தாக்குதல்கள், பொதுமக்கள் மீதான இராணுவ நெருக்குவாரங்கள் எவ்வகையிலும் நியாயப்படுத்தப்பட முடியாதவை.

அத்துடன் அனைத்துலக மனித நேய ஒழுங்குவிதிகள், மனித உரிமைகள் ஆகியவற்றை அப்பட்டமாக மீறுகின்ற செயற்பாடுகளாகும்.
சிறிலங்கா அரசாங்கமானது சமாதானம் என்ற முழக்கத்தை முன்வைக்கும் அதே நேரத்தில் தமிழ்மக்கள் மீதான இராணுவ நெருக்குவாரங்களை உருவாக்குவது சிறிலங்கா அரசாங்கத்தினது வஞ்சகப் போக்கினையே வெளிக்காட்டுகின்றது.

இந்த நிலையில் பலாலி விமான ஒடுபாதை விரிவாகத்துக்கான தங்களது ஒத்துழைப்பும், இராணுவ வள உதவிகளும் சிறிலங்கா அரசாங்கத்துக்குக் கிடைப்பதானது தமிழ் மக்களை கவலையடைய வைக்கின்றது.
இந்தியாவுக்கும் இலங்கையில் வாழ்கின்ற மக்களுக்கும் உள்ள உறவுகள் பன்நெடுங்காலமானவை.

இந்திய அரசாங்கமும் இந்திய மக்களும் இங்கு வாழ்கின்ற தமிழ்மக்களின் உரிமைப் போராட்டங்களை புறம்தள்ளப் போவதில்லை என்பதே எமது எதிர்ப்பார்பாகும்.

நாம் இந்தியாவை எமது நேச சக்தியாகவே என்றும் கருதி வருகின்றோம்.
ஆனால் சிறிலங்கா அரசாங்கமானது இத்தகைய நட்புறவைச் சிதைத்து தமது பேரினவாத மேலாண்மையை நிலைநிறுத்த முயல்கின்றது. மிகவிரைவிலேயே தமிழின அழிப்புக்கான அனைத்து முயற்சிகளையும் உச்சகட்டத்திற்கு எடுத்துச் செல்வதே சிறிலங்கா அரசாங்கத்தின் நோக்கமாகும்.

எனவே சிங்கள பௌத்த பேரினவாதம் எம்மீது திணிக்கவுள்ள பேரவலங்களுக்கு இந்திய மக்களும், இந்திய அரசாங்கமும் எவ்வகை ஆதரவோ, ஒத்துழைப்போ வழங்கக் கூடாது.
நாம் இந்திய மக்கள் மீதும், இந்திய அரசாங்கத்தின் மீதும் கொண்டுள்ள நம்பிக்கையை உயர் நிலைக்கு கொண்டு செல்ல தாங்கள் உரிய வகையில் செயற்பட்டுஇ தடைப்பட்ட நிரந்தர சமாதானத்திற்கான பாதையை மீண்டும் திறப்பதற்கு சிறிலங்கா அரசாங்கத்தின் மீது அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும்.

சிறிலங்கா பலாலி விமானத்தள விரிவாக்கத்துக்கான உதவிகளையோ, இராணுவ ரீதியிலான ஒத்துழைப்பையோ வழங்க வேண்டாம் எனவும், தமிழ் மக்களின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கின்றோம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Wednesday, December 07, 2005

காலம் வரும்......

வினை விதைத்தவன் வினை அறுப்பான் தினை விதைத்தவன் தினை அறுப்பான் என்பது பழமொழி.

கடந்த காலங்களில் இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் புலிகள் மற்றும் பொது மக்கள் கொல்லப்பட்ட போது புலிகள் சொன்னார்கள் இது அரசாங்கத்தின் புலனாய்வு பிரிவின் வேலை என்று.
அரசு சொன்னது இது கருணா தரப்பு வேலை தமக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லை என்று.கண்காணிப்பு குழு சொன்னது இதில் மூன்றாம் தரப்பு சம்பந்தப்பட்டுள்ளது என்று.அப்போது ஏறியது புலிகளின் பி.பி

அப்படியே அந்த நிகழ்வுகள் யாழப்பாணம் நோக்கி நகர்ந்து தமிழ் இன உணர்வாளர்கள் கொல்லப்பட பதிலடியாக இராணுவத்தினர் மீதான தாக்குதல்கள் இடம்பெற அரசு சொல்கிறது புலிகள் தான் இச் சம்பவங்களுக்கு காரணம் என்று.புலிகள்சொல்கிறார்கள் தமக்கும் இந்த தாக்குதல்களுக்கும் சம்பந்தம் இல்லை என்று. போர் நிறுத்த கண்காணிப்புகுழு சொல்கிறது இந்த தாக்குதல்கள் புலிகளால் செய்யப்பட்டவை என்பதற்கு எந்த ஆதாரங்களும் இல்லை என்று.
இப்போது ஏறிக்கொண்டிருப்பது அரசின் பி.பி

சும்மாவா சொன்னார்கள் யானைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கும் ஒரு காலம் வரும் என்று.

Sunday, November 27, 2005

தேர்தல் பகிஷ்கரிப்பு!

சர்வதேச சமூகத்தின் நிகழ்ச்சி நிரலை குழப்பிவிட்டுள்ள தேர்தல் பகிஷ்கரிப்பு

* தேர்தல் வெற்றிக்குப் பின்னர் இனவாதக் கோஷத்தை சற்று அடக்கி
வாசிக்க நிர்ப்பந்திக்கப்படும் ஆளும் தரப்புக் கட்சிகள்!



ஜனாதிபதித் தேர்தல் நடந்து முடிந்துவிட்டது. தமிழ்த் தேசம் தேர்தலைப் பகிஷ்கரித்தமையினால் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வேட்பாளர் மகிந்த ராஜபக்‌ஷ, சிறிய பெரும்பான்மையினால் வெற்றி பெற்றுள்ளார். வெற்றி பெற்ற அணியினர் இனவாத அரசியலை முன்வைத்த அணியினராக இருந்தமையினால், தமிழ்த் தேசத்தின் பகிஷ்கரிப்பு காரணமாகத்தான் வெற்றியடைந்தோமென வெளியில் கூறுவதற்கு மிகவும் சங்கடப்படுகின்றார்கள்.

ஆனால், தேர்தல் வெற்றிக்குப் பின்னர் தங்கள் இனவாதக் கோஷங்களைச் சற்று அடக்கியே வாசிக்கின்றார்கள் ஜே.வி.பி.யினர்.முழுமையாகவே மௌனமடைந்துவிட்டனர் போலவே தெரிகின்றது. புலிகள்-ஐ.தே.க. கூட்டுப் பற்றிக் கற்பனைக் கதைகளையெல்லாம் சிருஷ்டித்தவர்கள் இன்று வாயே திறக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

மறு பக்கத்தில் வெற்றுக் காசோலையில் தமிழ்த் தேசம் கையொப்பமிட்டுத் தருமென நினைத்து ஏமாந்த ரணில் விக்கிரமசிங்க அணியினர், கோபம் உச்சந்தலைக்கேறிய நிலையில் ஏதோவெல்லாம் பிதற்றத் தொடங்கியுள்ளனர். ரணில் விக்கிரமசிங்க தனித்துப் போட்டியிடவில்லை. அவருக்குப் பின்னால் சர்வதேச ஆதிக்கச் சக்திகள் அனைத்தும் நின்றன. இந்திய-அமெரிக்க உறவின் காரணமாக இந்தியாவும் இறுதி நேரத்தில் ரணிலுக்குப் பின்னால் நின்றதாகவே செய்திகள் வந்தன.

கத்தோலிக்க மதபீடம் உட்பட அனைத்து அரச சார்பற்ற நிறுவனங்களும் பின்னால் நின்றன. இவையனைத்தும் தமிழ்த் தரப்பிற்குப் பாரிய அழுத்தங்களைக் கொடுத்தும் தமிழ்த் தேசம் தனது கொள்கை வழிநின்று மாறவில்லை. விடுவிக்கப்பட்ட பிரதேசங்கள் முழுமையாகப் பகிஷ்கரித்தன. விடுவிக்கப்படாத பிரதேசங்களில் பல்வேறு அழுத்தங்களிலிருந்தும் கூட பெரும்பான்மையோர் பகிஷ்கரித்தனர். கிழக்கில் பகிஷ்கரிப்புப் பிரசாரம் குறைவாகவிருந்தது. அதேவேளை, அழுத்தங்கள் வலிமையாகவிருந்தன. ஆனாலும், பெரும்பான்மையோர் பகிஷ்கரித்தனர்.

தமிழ்த் தேசத்தின் கத்தோலிக்க ஆயர்கள் வெளியழுத்தங்கள் காரணமாகவும், தமிழ்த் தேசப் போராட்டத்தினை அவர்கள் பார்க்கும் பார்வைக் கோளாறு காரணமாகவும் பகிஷ்கரிப்பினைக் கைவிடுமாறு கோரியிருந்தனர்.ஆனால், பகிஷ்கரிப்புப் போராட்டம் வளரத் தொடங்கியதைத் தொடர்ந்து மக்களிடம் அவர்கள் தங்கள் கருத்துக்களைப் பிரசாரம் செய்ய முயலவில்லை. இதனால், குடாநாட்டில் வாழும் கத்தோலிக்க மக்கள் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை. ஆனால், மன்னாரில் சிறியளவில் வாக்களிப்பு நடைபெற்றுள்ளது.

கத்தோலிக்க ஆயர்களின் இந்தக் கருத்து பற்றி ஒரு சைவ முக்கியஸ்தர் என்னுடன் தொலைபேசியில் ஒரு மணி நேரமாக வாதாடினார். அன்று தொடக்கம் இன்று வரை தமிழ்த் தலைமைகள் உட்பட தமிழ்த் தேசிய சக்திகள் கத்தோலிக்க ஆயர்களுக்கு அழுத்தங்களைக் கொடுக்கத் தயங்குகின்றனரென்ற வகையில் அவரது கருத்துக்கள் அமைந்திருந்தன. அவர்கள் செய்தால் எதுவும் செய்ய மாட்டார்கள். ஆனால், சைவப் பிரமுகரொருவர் இவ்வாறு செய்தால் எல்லோரும் திரண்டு தாக்க வந்துவிடுவார்களென்ற வகையில் அவரது கருத்துக்கள் சென்றன. தேசிய இனப்பிரச்சினை பற்றி எதுவும் பேசாமல் சைவ-கிறிஸ்தவ முரண்பாடுகள் பற்றியே வாதம் சென்றதால் ஒரு கட்டத்தில் நான் தொலைபேசி உரையாடலைத் துண்டித்துவிட்டேன்.

கத்தோலிக்க ஆயர்கள் இந்த விடயங்களைப்பற்றிக் கவனத்திலெடுக்க வேண்டுமென்றே விரும்புகின்றேன்.

கத்தோலிக்க ஆயர்களென்றாலும் சரி, சைவ மதப் பெரியார்களென்றாலும் சரி தமிழ்த் தேசம் சம்பந்தமான விடயங்களில் மிகவும் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்வது அவசியமானது. கிழக்கிலேற்பட்ட பிரதேசப் பிரச்சினைகள் போல மத முரண்பாடுகளை அவர்கள் தோற்றுவித்துவிடக் கூடாது. இந்த அக முரண்பாடுகளைத் தமிழ்த் தேசிய நலனுக்குச் கீழ்ப்படுத்தி நட்பு முறையில் தீர்த்துக் கொள்வதற்கான மார்க்கங்களை அவர்கள் கண்டாக வேண்டும்.பிரதேச முரண்பாட்டின் விளைநிலமாக மட்டக்களப்பும்,மத முரண்பாட்டின் விளைநிலமாக மன்னாரும், சாதி முரண்பாட்டின் விளைநிலமாக குடாநாடும் இன்று இருக்கின்றன. இவ்வக முரண்பாடுகள் தமிழ்த் தேசத்தை, அதன் இருப்பினையழிக்கும் வெடி குண்டுகள். தமிழ்த் தேசிய சக்திகள் இவ்வெடி குண்டுகள் தொடர்பாகத் தொடர்ந்தும் அசட்டையாக இருந்துவிடக் கூடாது.தமிழ்த் தேசிய இனப்பிரச்சினை பற்றிச் சிறிதும் அக்கறையற்று இவற்றினை மட்டும் தூக்கிப் பிடிப்பவர்கள் இன்றும் நம் மத்தியிலிருக்கின்றனர்.

மறுபக்கத்தில் இம் முரண்பாடுகளெதுவும் இல்லையென நாம் பூசி மெழுகவும் கூடாது. கோட்பாட்டு ரீதியாக இம் முரண்பாடுகளைத் தீர்ப்பதற்கான அடித்தளங்களை நாம் கண்டாக வேண்டும். அதிகாரம் வந்ததன் பின்னர் இவற்றிற்கிடையேயுள்ள சமமற்ற தன்மைகளைத் தீர்ப்பதற்கு முன்வரலாம்.தமிழ்த் தேசிய எதிர்ப்புச் சக்திகள் தமிழ்த் தேசத்தின் இராணுவ வலிமை பற்றித் தற்போது அதிகம் ஆய்வு செய்வதில்லை.தமிழ்ச் சமூகவமைப்புப் பற்றியும், அங்கு வலிமையாகவிருக்கின்ற அக முரண்பாடுகள் பற்றியுமே ஆய்வு செய்கின்றனர். இதன் மூலம் தமிழ்ச் சமூகத்திலுள்ள இடைவெளிகளைக் கண்டு அதற்கூடாக நுழைந்து தமிழ்த் தேசிய அரசியல் மையத்தை அழிக்கப் பார்க்கின்றனர். அக முரண்பாடுகள் பற்றிய குரல்களனைத்தும் யாழ்-சைவ-வேளாளப் பிரிவினரையே நோக்கியிருப்பதால், இது விடயத்தில் முன்கையெடுத்துச் செயற்படும் பொறுப்பு இவர்களுக்கேயுண்டு. தமிழ்த் தேசிய அரசியற் தலைமையினால் மட்டுமே, இந்தப் பிரச்சினையைத் தீர்க்க முடியாதென்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

பகிஷ்கரிப்புப் பற்றிய ஆயர்களின் கருத்துக்கள், நான் முன்னைய கட்டுரையில் கூறியது போல இலங்கைத் தேசியத்திலிருந்து விடயங்களைப் பார்த்ததனால் ஏற்பட்டவொன்றுதான். இலங்கைத் தேசியத்திற்குள் நின்று விடயங்களைப் பார்ப்பதென்பது ஐம்பதுகளிலும், அறுபதுகளின் ஆரம்பத்திலும் முன்வைக்கப்பட்ட அரசியல். அது காலாவதியாகி நீண்ட காலமாகிவிட்டது. இன்று தமிழ்த் தேசம் இலங்கைத் தேசியத்திற்கு வெளியே நின்றுதான் விடயங்களைப் பார்க்கின்றது.

தமிழ் மக்கள் தற்போது தங்களை இலங்கையர்களாகப் பார்ப்பதில்லை.மாறாக, தமிழர்களாக மட்டுமே பார்க்கின்றனர். சமஷ்டி கூட தற்போதைய நிலையில் தமிழ் மக்களின் கோரிக்கையல்ல. அது சர்வதேசச் சமூகத்தின் கோரிக்கை. ஸ்ரீலங்கா தமிழ் மக்களுக்கேற்ற சமஷ்டி முறையினைச் சிபார்சு செய்தால், அதனைப் பரிசீலிக்கலாமென்ற நிலையில்தான் தமிழ்த் தேசம் இருக்கின்றது. அதன் பின்னர்தான் நாம் தமிழர்களாகவும் இலங்கையர்களாகவும் இருப்பது பற்றி யோசிக்கலாம். தற்போது எம்மால் தமிழர்களாக மட்டுமேயிருக்க முடியும்.

நாம் தமிழர்களாக மட்டும் இருப்பதற்காக இலங்கையரென்ற அடையாளத்திலிருந்து ஒவ்வொன்றாகக் கழன்று வருகின்றோம். தனியான கட்டுப்பாட்டுப் பிரதேசங்கள்,தனியான நிர்வாகத்துறை, தனியான நீதித்துறை, தனியான காவல்துறை, தனியான முப்படைகளென்பன இலங்கையரென்ற அடையாளத்திலிருந்து கழன்று வந்த அம்சங்கள்தான்.

ஜனாதிபதித் தேர்தல் பகிஷ்கரிப்பையும் இக்கழன்று வரும் அம்சங்களிலொன்றாகவே பார்க்க வேண்டும். பகிஷ்கரிப்புப் போராட்டத்தின் கோட்பாட்டுப் பின்னணி இதுதான்.

தமிழர்கள் இலங்கையரென்ற அடையாளத்திற்கு மீளவும் செல்வது சிங்கள தேசத்தின் பணியேயொழிய எமது பணியல்ல. நாம் அதற்காக உழைத்துக் களைத்துத் தான் தமிழர்களாக மட்டுமிருக்க முடிவெடுத்திருக்கின்றோம். எனவே, சிங்கள தேசம் செய்ய வேண்டிய பணியினை தமிழ்த் தேசம் தன் தலையில் சுமந்துகொண்டு திரியக்கூடாது. ஆயர்கள் அந்தச் சுமையினைத் தாங்கள் சுமக்க முற்படுகின்றனர். ஏதாவது தகுந்த உத்தரவாதங்களுடன் சுமக்க முற்பட்டாலும் சகித்துக் கொள்ளலாம். ஆனால், எந்தவித உத்தரவாதங்களுமில்லாமல் சுமக்க முற்படுகின்றனர். இந்தப் போக்கு ஆயர்களிடம் மட்டுமிருக்கின்றதெனக் கூறிவிட முடியாது. வேறு பல, கொழும்பு நலனைத் தளமாகக் கொண்ட தமிழர்களிடமும் ஐ.தே.கட்சி தொடர்பாகப் பிரமையிலுள்ளவர்களிடமும் இருக்கின்றது. பகிஷ்கரிப்புப் போராட்டம் இது பற்றிய பாடத்தினைத் தமிழ்த் தேசத்திற்குத் தந்திருக்கின்றதென்றே நினைக்கின்றேன்.

ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியுற்ற வேட்பாளரும் அவரைச் சுற்றியுள்ள உள்நாட்டு,சர்வதேசக் கூட்டமும், அவர் ஜனாதிபதியாக வருவதை விரும்பிய அரசு சார்பற்ற நிறுவனங்களும் புலிகள் மக்கள் வாக்களிப்பதை தடைசெய்துவிட்டனரெனக் கூக்குரலிடுகின்றனர். முன்னைய தேர்தலில் கள்ள வாக்குப் போடப்பட்டதெனக் கூறினர். இத் தேர்தலில் வன்முறை மூலம் வாக்களிப்பதைத் தடுத்துள்ளனரெனக் கூறுகின்றனர். மக்கள் ஒரு போராட்டத்தினை நடாத்தும்போது உதிரிகள் அதனைக் குழப்ப முற்பட்டால், குறைந்தளவிலான வன்முறையைப் பயன்படுத்துவது உலகப் போராட்டங்களில் வழக்கம். அவ்வாறான சில வன்முறைகள் நடந்திருக்கலாம். ஆனால், இந்த வன்முறையைத் தூக்கிப் பிடிப்பதால் போராட்டத்தின் அரசியல் மறைந்துவிடுமென எவரும் நினைத்துவிடக் கூடாது.

இந்தக் கூக்குரலில் அதிகமீடுபடும் கூட்டம் ரணிலுக்குப் பின்னால் நின்ற ஐரோப்பிய அமெரிக்க முகாம்தான். அந்தக் கூட்டம் ரணிலுக்கல்ல, தமக்களிக்கப்பட்ட சவாலாகவே இப்பகிஷ்கரிப்பினைக் கருதுகின்றது. வெற்றுக் காசோலையில் தமிழ்த் தேசம் கையெழுத்திட்டுத் தருமெனக் கனவு கண்டது ரணில் மட்டுமல்ல, இவர்களும்தான். தங்களுடைய அழுத்தங்களுக்கெல்லாம் ஒரு தேசமும், அதன் போராட்டமும் பணிந்துவிடுமென நினைத்தவர்கள் கோபம் உச்ச நிலைக்கேறிய நிலையில் புலம்பத் தொடங்கியுள்ளனர். எந்தத் தேசமும் இந்தச் சக்திகளுக்காகத் தன்னுடைய போராட்டத்தினைக் கைவிட்டது கிடையாது. வேண்டுமானால்,தற்காலிகமாகத் தோல்விகளைத் தழுவியிருக்கலாம். நிரந்தரத் தோல்வியை எந்தத் தேசமும் அடைந்துவிட முடியாது.

இந்தச் சக்திகளுக்குத் தமிழ்த் தேசம் "எம்மால் எதையும் செய்ய முடியும்" என்பதை நிரூபித்துக் காட்டியிருக்கின்றது. எங்களை ஒடுக்க நினைத்தால், நீங்கள் இங்கு வர முடியாதென்பதைக் காட்டியிருக்கின்றது. இந்தியாவும் முதலில் இவ்வாறு நினைத்துத் தமிழ்த் தேசத்தை ஒடுக்கப் பார்த்தது. இன்று இனப்பிரச்சினைக்குள், தான் நுழைய வழியில்லாமல் வழிதேடிக் கொண்டிருக்கின்றது. தமிழ்த் தேசத்தை ஒடுக்க நினைத்த இந்தியா இன்று முழு இலங்கையையுமே கைவிட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

இன்று அதே நிலைக்கு ஐரோப்பிய முகாம் தள்ளப்பட்டிருக்கின்றது.
மறுபக்கத்தில் தமிழ்த் தேசம் பகிஷ்கரிப்பென்ற பெயரில் எறிந்தது சிறிய கல்தான்.ஆனால், அக்கல் சர்வதேசச் சக்திகள் உட்பட ஸ்ரீலங்காவின் அனைத்து அணிகளின் நிகழ்ச்சி நிரல்களையும் குழப்பி விட்டிருக்கின்றது.
மகிந்தவின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் குழப்பமேற்பட்டிருக்கின்றது. அது பண்டாரநாயக்க குடும்ப அணியாகவும், மகிந்த அணியாகவும் பிளவுபட்டிருக்கின்றது. அனுராவுக்கு முன்னர் கூறியதுபோல பிரதமர் பதவி வழங்கப்படவில்லை. இனவாதிகளைத் திருப்திப்படுத்துவதற்காகவும், தனக்கு ஒரு போட்டியாளராக இருக்கக் கூடாதென்பதற்காகவும் பாரம்பரிய இனவாதியான இரட்ணசிறி விக்கிரமநாயக்க பிரதமராக்கப்பட்டுள்ளார்.

ஜே.வி.பி. யினர் மிகவும் ஆடிப்போயுள்ளனர்.தாங்கள் வீணாகச் சிரமமெடுத்து உழைத்திருக்கின்றோமென அவர்கள் நினைக்கத் தொடங்கியுள்ளனர். சர்வதேசச் சக்திகள் ஐ.தே.கட்சியுடனிணைந்து சமாதானச் செயற்பாட்டினை முன்னெடுங்களென மகிந்தவிற்கு அழுத்தங் கொடுத்து வருவதால் ஜே.வி.பி.யினர் ஒதுக்கப்பட்டுள்ளனர்.

அவர்களின் புலி ஐ.தே.க. கூட்டு என்ற பிரசாரம் நான் முன்னர் கூறியது போல கண்ணுக்கு முன்னாலேயே பிசுபிசுத்துப் போயிருக்கின்றது. இனிமேல் அவர்கள் ஆரம்பத்திலிருந்து புதிய அரசியலைக் கட்டியெழுப்ப நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். யார் ஆட்சிக்கு வந்தாலும் தங்களை ஒதுக்க முற்படுவார்களென்பது அவர்களுக்குத் தற்போது கொஞ்சங் கொஞ்சமாகத் தெரியத் தொடங்கியிருக்கின்றது.

சர்வதேசச் சக்திகள் தங்கள் நிகழ்ச்சி நிரலை முன்னெடுக்க முடியாது தடுமாறுகின்றனர். சமாதானப் பொறிக்குள் தமிழ்த் தரப்பினை மாட்டி பலவீனப்படுத்துவதுதான் அவர்களின் பிரதான நிகழ்ச்சி நிரல். பகிஷ்கரிப்பு அந்த நிகழ்ச்சி நிரல் முன்னெடுப்பை முழுமையாகக் குழப்பியுள்ளது. இன்று மகிந்தவினைப் பயன்படுத்தி அதனை முன்னெடுக்க முயற்சிக்கின்றனர். ஆனால், அந்தச் செயற்பாடு இலகுவானதாகவிருக்கப் போவதில்லை.
மொத்தத்தில் தமிழ்த் தேசம் தனது அடுத்த கட்டத்திற்குச் செல்வதற்கான காலம் கனிந்து வருகின்றதென்றே நினைக்கின்றேன்.

நன்றி:- சுப்பிரமணியம்,தினக்குரல்

Thursday, November 24, 2005

கருத்துக்களுக்கான"கருத்து" இணையத்தளம்

கருத்துரிமைக்காக "கருத்து" அமைப்பு தமிழகத்தில் தொடங்கப்பட்டிருக்கிறது.கடந்த நவம்பர் 13 ந்திகதி தொடக்கிவைக்கப்பட்ட கருத்து என்ற அமைப்பும் அதன் இணையத்தளமும் தமிழ்நாட்டில் யாரும் சுதந்திரமாக கருத்துக்கள் சொல்லலாம் என்ற நோக்கிலே உருவாக்கப்பட்டதாகதெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அமைப்பு உருவாக்கப்பட்டதில் பெரும்பங்கு வகித்தவர் கவிஞர் கனிமொழி.கருத்துரிமைக்கான இந்த அமைப்பின் இணையதளத்தில் யாரும் சட்டத்துக்கு உட்பட்ட வகையில் தமதுகருத்துக்களை சொல்லலாம்.குஸ்பு,சுகாசினி பிரச்சனை ஏற்பட்டுள்ள இந்த் நேரத்தில் இந்த அமைப்புதொடங்கப்பட்டுள்ளது பலரின் கவனத்தினை ஈர்த்துள்ளது.

பார்ப்போம் கருத்து அமைப்பின் எதிர்காலம் எப்படிஇருக்கப்போகின்றது என்பதை.கருத்தினை எதிர் கொள்ளப்போகின்றவர்கள் "கருத்தினை" கருத்துக்களால் எதிர்கொள்வார்களா அல்லது கத்தி துடைப்பம் செருப்புக்களால் எதிர்கொள்ளப்போகிறார்களா என்பதை.ஏனெனில் சகிப்புத்தன்மை என்பது தற்போது தமிழனுக்கு இல்லாமல் போய்வெகு காலம் ஆகிவிட்டதே.சரி நீங்களும் கருத்து கொல்லப்போறீங்களா?இங்கேயே கருத்துக்கள் சொல்லி அடிச்சுக்கொள்வது போதாதா.இது எதற்கு வேறு என்கிறீர்களா?ஒரே இடம் போர் அடிக்கும் அதுக்குதான் புது இடம்.

தளம் இதுதான்.
http://www.karuthu.com

நேரடியாக கருத்துகளுக்கு செல்ல
http://www.karuthu.com/forum/forum_topics.asp?FID=4

Wednesday, November 23, 2005

தடுமாறும் தமிழோசை?!

தமிழோசையில் சொல்வது நடுநிலையானது என்பதும் நம்பகத் தன்மையானது என்பதும் இறந்தகாலமாகிப்போனதை நாம் நன்கு அவதானித்து வருகிறோம்.

அண்மையில் கூட யாழ்ப்பாணத்தில் நடந்த 'பொங்குதமிழ்' நிகழ்வு குறித்துச் செய்தி சொன்ன தமிழோசையின் வவுனியா செய்தியாளர் 'புலிகள் ஆதரவு அமைப்புகளால் ஒழுங்கு செய்து நடத்தப்பட்ட பொங்கு தமிழ்" என்று குறிப்பிட்டார். அந்த நிகழ்விலே பொதுச்சுடர் ஏற்றி அதனை ஆரம்பித்துவைத்தவர் யாழ் மாவட்ட அரச அதிபர்.

அப்படியாயின் தமிழோசைச் செய்தியின் பிரகாரம் யாழ்மாவட்ட அரச செயலகமும் புலிகள் ஆதரவு அமைப்புகளில் ஒன்று. அப்படித்தானே?
இன்னொரு உதாரணமும் சொல்லலாம். ரிஸ்வி மீடினின் கொலை தொடர்பாகத் தமிழோசையில் சொல்லபட்ட செய்தியைப் பாருங்கள்.
மீடின் சுடப்பட்டது நள்ளிரவில்
மறுநாள் மதியம் 11 மணியளவில் சிறிலங்கா இராணுவத்தின் இணையத்தளத்தில் மீடின் கொலைதொடர்பான ஊடக அறிக்கை வெளியிடப்பட்டுவிட்டது.

அதிலே தெளிவாக 'மீடினின் கிரிபத்கொட வீட்டுக்குத் தொலைபேசியில் தொடர்புகொண்ட மீடினின் நண்பர் ஒருவர் மீடின் சுடப்பட்ட செய்தியை மீடினின் மனைவியிடம் தெரிவித்தார்.." என்று குறிப்பிடப்பட்டடிருந்தது.

(''……Later one of his friends had telephoned his wife at home and informed that Lt. Col MEEDIN was lying dead near his home at KIRIBATHGODA.." . நன்றி: சிறிலங்கா இராணுவ களநிலை அறிக்கை: Situation Report as at UTC 0200 (0800) 30 October 2005 )

அன்று இரவு 9.45 (இலங்கை நேரம்) ஒலிபரப்பான தமிழோசையில் ரிஸ்வி மீடின் கொல்லப்பட்டது குறித்துத் தகவல் சொன்ன தமிழோசையின் செய்தியாளர் 'இனந்தெரியாத நபர்கள் மீடின் சுடப்பட்ட செய்தியை மீடினின் வீட்டுக்குத் தொலைபேசியில் சொன்னார்கள்.." என்று குறிப்பிட்டார்.

இது எதைக் காட்டுகிறது. செய்தியாளரின் உள்ளக் கிடக்கையையா? 'இனந்தெரியாதவர்கள்" என்ற பதத்தை உச்சரித்ததன் மூலம் செய்தியாளர் யாரையாவது இனங்காட்ட முயல்கிறாரா?அல்லது தமிழோசை நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களின் அக்கறையின்மையையா?

தகவல் தொடர்பு யுகமான தற்காலத்தில் செய்தியாளர் வழங்கிய தகவல் தொடர்பில் சிரத்தையெடுத்துச் சரிபார்க்க முடியாதவர்கள் எதற்கு நிகழ்ச்சி தயாரித்து வழங்குகிறார்கள்?

முன்னொரு காலத்தில் சங்கர
மூர்த்தி, ஆனந்தி போன்றவர்களின் நடுநிலையான செயற்திறன் மிக்க கூட்டணியால் தமிழோசை பெற்றிருந்த நற்பெயருக்கு தற்போது பொறுப்பிலிருப்பவர்கள் தமது தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் காரணமாக வேட்டுவைக்கிறார்கள் போற்படுகிறது.

பி.பி.சி தமிழோசையின் விசேட நிருபராக இலங்கைத் தீவில் நிலைகொண்டிருப்பவருக்கும், அந்தச் சேவையின் லண்டன் ஒலிபரப்பாளர்களுக்கும் உண்மையில் ' ஏன் தமிழ்மக்கள் தேர்தலைப் புறக்கணிக்கவேண்டும்?' என்ற கேள்வி மனதைக் குடைகிறது. இதற்கான விடை நேற்றிரவு வரை அவர்களுக்குப் புரிந்திருப்பதாகத் தெரியவில்லை.
உதாரணமாகத் தேர்தல் புறக்கணிப்புக் குறித்துக் கருத்துத் தெரிவித்த தமிழ்மகன் ஒருவரிடம் 'இது சனநாயக மீறல் இல்லையா?' என்று கேட்டார் அந்த விசேட நிருபர். அதே கேள்வியைத்தான் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரையும் அந்த நிருபர் கேட்டார்.

உண்மையில் இவருக்குச் சனநாயகத்தில் அக்கறை இருந்தால் அல்லது சனநாயகம் என்றால் என்ன என்று தெளிவான விளக்கம் இருந்தால் யாழ்ப்பாணத்தில் நிற்கும் இந்தக் காலப்பகுதியில் ''உயர்பாதுகாப்பு வலயம் என்ற பெயரில் அடிப்படை மனித உரிமைகள் கூட வழங்கப்படாது ஏதிலிகள் தங்ககத்தில் உள்ள மக்களை எப்போது மீளக் குடியமர்த்தப் போகிறீர்கள். அவர்களை மீளக்குடியமர்த்தாது விடுவது சனநாயக மீறல் இல்லீங்களா?" என்று யாழ் மாவட்ட இராணுவத் தளபதியையோ அல்லது ஆகக் குறைந்தது யாழ்மாவட்ட அரச அதிபரையோ கேட்டு அவர்களது பதிலை ஏன் ஒலிபரப்பவில்லை?

''ஓட்டுப்போடுவது" மட்டும்தானா அங்கு நிற்கும் நிருபர் அறிந்திருக்கும் சனநாயகம்?

வாக்களிக்காமல் வீட்டிலிருப்பது சனநாயக மீறல் என்று கருதும் இந்த விசேட நிருபரின் தேசம்கூட உப்புச் சத்தியாக்கிரகம் போன்ற சட்ட மறுப்பு நடவடிக்கைகளால் தான் சுதந்திரம் அடைந்தது. அதனை அவர் முதலில் நினைவுபடுத்திக்கொள்வது அவசியம்.

அடுத்து நேற்றைய தினம் ()19-11-2005) தமிழோசை செய்தியரங்கில் பின்வரும் செய்தி ஒரு பேராசிரியரால் கூறப்பட்டது.

'தமிழ் மக்கள் இந்த முறை அதிக அளவில் வாக்களிக்காமல் இருந்ததினால் மஹிந்த வெற்றி பெற்றுள்ளார் என்று வைத்துப் பார்க்கும்போது, சமாதானத்தை முன்னிலைப் படுத்தி தேர்தலில் நின்ற ரணில் விக்கிரமசிங்கவின் தோல்வி தமிழ் மக்களுக்கு சமாதானம் தொடர்பில் தவறவிட்ட ஒரு வாய்ப்புதான்" என்றார் அவர்

இவர் வெளிப்படையாகவே 'ஐக்கிய தேசியக் கட்சி சமாதானத்தைக் கொண்டுவரும்" என்ற கருத்துகளுடன் கட்டுரைகளை எழுதியவர்.
ஆனால் தமிழ் மக்களாகிய எமக்கு சிங்களப் பேரினவாதிகளின் இந்தச் சமாதான வேடம் ஒன்றும் புதியதல்ல.

தேர்தல் தருணங்களில் ஒரு அறிவிப்பும் தேர்தல் முடிந்ததும் ஒரு அறிவிப்பும் செய்யும் பேரினவாதிகள் தொடர்ந்தும் தமிழர்களை ஏய்க்கவேண்டும் என்று தமது தனிப்பட்ட சுயலாபங்களுக்காக எவராவது விரும்பினால் அதனை நம்பி ஏமாந்துபோகிற தமிழ் அரசியல் தலைமையல்ல தற்போது இருப்பது என்பதை இந்தப் பேராசிரியர்களும் செய்தி நிறுவனங்களும் முதலில் புரிந்துகொள்ளவேண்டும்.

இப்படித்தான் சமாதான தேவதையாகத் தன்னைக்காட்டி வாக்குகளை அள்ளிய சந்திரிகா அம்மையார் பின்னர் தமிழருக்குத் திரும்பச் செய்த நன்றிக்கடனை எமது மக்கள் இன்னும் மறந்துபோகவில்லை.
அவ்வாறு ரணிலும் மாறாமாட்டார் என்பதற்கு என்ன உத்தரவாதத்தை இந்தப் பேராசியர் எமது மக்களுக்குக் காட்ட முடியும்?

இறுதிநேரத்தில் சர்வதேச வலைப்பின்னல், சர்வதேச இராணுவ ஆலோசனை குறித்துத் தான் ரணில் தரப்பிலிருந்து செய்திகள் வந்ததே தவிர சமஷ்டியின் என்ன பரிமாணத்தில் இவர் பிரச்சினையைத் தீர்க்க விரும்புகிறார், இடைக்காலத் நிருவாக சபைகுறித்து என்ன கருதுகிறார்? என்பவை போன்ற நியாயமான -தமிழ்மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டிய -விடயங்களை எங்காவது ரணிலோ அல்லது அவரது அணியினரோ தெளிவுபடுத்தியதாக ஒரு ஆதாரத்தையாவது இந்தப் பேராசிரியரால் காட்டமுடியுமா?

இந்த ஒரு உதாரணமே சகல சந்தர்ப்பவாதிகளையும் இனங்காட்டப் போதுமென்று கருதுகிறேன்.

திருமகள் (ரஷ்யா)

Tuesday, November 15, 2005

மறைமுகமாக முடக்கப்படும் தமிழ் இளையோர்! தீர்வு என்ன?

மறைமுகமாக முடக்கப்படும் தமிழ் இளையோர்! தீர்வு என்ன?

ஒரு தேசிய இனம் தனது விடுதலைக்காகப் போராடி வரும் தருணம் இது. இந்தப் போராட்டத்தினை ஒடுக்க ஆக்கிரமிப்பாளர்கள் பல்வேறு ஆக்கிரமிப்பு வடிவங்களைப் புதிது புதிதாக அறிமுகப்படுத்தி எமது இளம் சந்ததியை நசுக்கிவிட, அவர்களைப் போராட்டத்தின் திக்கிலிருந்து திசை கெடவைக்க முனைப்புடன் முனைந்துவருகிறார்கள் என்பதும் உங்களுக்குப் புதிய செய்தியல்ல.தமிழனின் கை கொண்டே அவனது கண்ணைக்குத்தும் முயற்சியாக தமிழ்ச் சிறார்களின் மனங்களில் நச்சு விதைகளை விதைத்துத் தறிகெட வைக்கச் சிங்களப் புலனாய்வுத்துறை முயன்றுவருவதும், யாழ் மண் ஆக்கிர மிக்கப்பட்ட காலம் முதல் இந்த நடவடிக்கைக்கான பரீட்சைக் களமாக யாழ் மண் விளங்குவதையும் தமிழீழ மக்கள் நன்கு அறிவர். யாழ் சுண்டிக்குளி மகளிர் கல்லூரி மாணவி கிருஷாந்தி குமாரசாமி மீதான வன்புணர்வு மற்றும் படுகொலையுடன் ஆரம்பித்து வைக்கப்பட்ட இந்த நிகழ்ச்சித்திட்டம் படிப்படியாக விரிவடைந்து இன்று ஆபாசப் படங்கள், போதைதரும் பாக்குகள், சாராயக் கடைகள், அப்பக் கடைகள் என்று பல்வேறு வடிவங்களில் சிறிலங்கா இராணுவ ஆக்கிரமிப்புப் பகுதிகளில் தனது செயற்பாடுகளை முன்னெடுத்து வருகிறது.

இவ்வாறு இளைய தமிழர்கள் திசை மாறவேண்டும் என்ற ஒரே நோக்கோடு செயற்படும் சிங்களதேசம் தனது நோக்கம் நிறைவேறி வருவதாகத் தற்போது எண் ணத்தலைப்பட்டுள்ளது. 06-10-2005 கொழும்பில் பிரசுரமான சண்டே ரைம்ஸ் வார இதழில் யாழ்ப்பாண இளைஞர்கள் அனைவரும் போராடப் போய்விட்டதாகத் தோன்றிய காலம் ஒன்று இருந்தது. ஆனால் தீபாவளி தினத்தன்று வடக்கின் தலைப்பட்டினத்தில நூற்றுக் கணக்கான இளைஞர்கள் மனோகரா திரையரங்கின் முன் புதிய திரைப்படமான சிவகாசியைக் காண வரிசை கட்டி நிற்கும் வித்தியாசமான காட்சியைக் காண முடிந்தது. என்ற விளக்கத்துடன் முதற் பக்கத்தில் படம் ஒன்று பிரசுரமாகி யிருப்பதாக அறிய முடிகிறது. (நன்றி சண்டேரைம்ஸ்)

இளைஞர்கள் படத்திற்குச் செல்வதும், வரிசைகட்டுவதும் அந்தக்காலத்திலிருந்து நடந்துவரும் காரியங்கள். இதற்கு இப் பொழுது என்ன முக்கியத்துவம் வந்தது என்று சிந்தித்துப் பாருங்கள்.சிறிலங்கா அரசினதும் அதன் புலனாய் வாளர்களினதும் உள்ளக்கிடக்கையை, அவர்கள் எதை விரும்பினார்களோ அதைப் பெற்றுக்கொண்ட மகிழ்ச்சியை மேற்படி செய்தியிலிருந்து நீங்கள் அறிய வில்லையா?

படம் பார்ப்பதால் என்ன வந்து கெட்டது. நாங்கள் பார்க்காத படமா? என்று உங்களிற் சிலர் நியா யமான ஒரு கேள்வியை எழுப்பலாம்.நீங்கள் படம் பார்த்தீர்கள், படலையைப் புரட்டி நட்டீர்கள். ஆனால் தெருவில் செல்லும் பெண் புரசுகளைப் பதம்பார்க்கும் எண்ணமோ, அல்லது முதுகின் பின்னே கத்தியைச் செருகிச்சென்று கண்முன்னே கண்டவரைச் சீவித்தள்ளும் வெறியோ உங்களுக்குள் இருக்கவில்லை என்பதை நீங்களே ஒப்புக்கொள்வீர்கள்.

யாழ்ப்பாணம போதனா வைத்திய சாலையின் சத்திரசிகிச்சைப் பிரிவில்(Surgical words) போய்பாருங்கள். பெண் நோயியல் மருத்துவரை (Gynecologist) , சிறுவர் பிரிவில் கடமைபுரியும் வைத்தியர் களைக் (Pediatricians) கேளுங்கள். பேரினவாதத்தின் திட்டமிட்ட, ஆனால் மிகவும் வெற்றிகரமாகச் செயற்படுத்தப் பட்டுவரும் இன அழிப்பின் புதிய வடிவம் குறித்து உங்களுக்கு ஒரு செய்தியை அவர்கள் சொல்லுவார்கள்.

யாழ்ப்பாண வைத்தியசாலையில் தினந் தோறும் அடிகாயங்களுடனும், வெட்டுக் காயங்களுடனும் விபத்துப் பிரிவில் (casualty) அனுமதிக்கப்படுபவர்களில் பாதிக்கு மேற்பட்டோர் பதின்வயதைச் (teenage) சேர்ந்த தமிழ் இளைஞர்கள். இவர்களில் பலருக்கு அடியும், வெட்டும் விழுவது தலையில். வெட்டுவதும் தமிழன். வெட்டப்படுவதும் தமிழன். வெட்டு விழுவதோ தலையில். தலை என்பது மிகவும் பிரதானமான அங்கம் என்பது எண்சாண் உடம்பிற்குச் சிரசே பிரதானம் என்று என்றைக்கோ எழுதிவைத்த தமிழனின் இன்றைய வாரிசுகளுக்குத் தெரியவில்லை.

இனி வெளிநோயார் பிரிவைப் (OPD) பார்ப்போமா? அங்கும் இளைஞர்கள் தென்படுகிறார்கள். பார்க்க வாட்ட சாட்டமாக, அழகாகத் தென்படும் இவர்க ளுக்கு என்ன குறை?இவர்கள் தற்போது வருந்துவற்குக் காரணமே, இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் இவர்களின் தலையில் பட்ட அடிதான். அந்த அடியின் பின்விளைவாகத் தற்போது மூளையின் சில பகுதிகள் பாதிக்கப்பட்டதால், உடலின் ஏதாவது ஒரு அல்லது பல பாகங்களில் வலி, சோர்வு, செயலிழப்பு, உணர்வின்மை போன்ற நரம் புத்தொகுதி சார்ந்த வியாதிகள் இவர்க ளைப் பீடித்துள்ளது. அதாவது இத னை இன்னொரு விதமாகச் சொல்வதானால், யாழ்ப்பாணத்தை இரா ணுவம் ஆக்கிரமிப்புச் செய்து சிலகாலம் கழிகையில் அப்போது பதின்வயதில் இருந்த இந்த இளைஞர்கள், படங்களில் தாங்கள் பார்த்ததைப் பரீட்சித்துப் பார்த்ததன் பின்விளைவுகள் இவை.

இந்த நானாவித குளறுபடிகளுக்கும் காரணம் வைத்தியத் துறையால் இதுவரைக்கும் மாற்றுக் கண்டு பிடிக்கப்படாத அங்கமான மூளையில்- மைய நரம்புத் தொகுதியில் (CNS - Central Nervous system)- ஏற்பட்ட நிரந்தரப் பாதிப்புகள்.இனி மருந்து மாத்திரைகளுடன் கழியப் போகும் இவர்களது எதிர்காலம் என்ன? இவ்வாறு மௌனமாக ஒரு இனத்தின் இளம் சமூகம் திட்டமிட்ட விதத்தில் முடமாக்கப்படுவது குறித்துக் குடா நாட்டிலுள்ள எவருமே - விடுதலைப் புலிகளைத் தவிரப்- புரிந்துகொண்டிருப்ப தாகத் தெரியவில்லை.

இதற்குச் சற்றும் குறையாத வேதனைக் கதைகளுடன் பெண்கள் பிரிவும், சிறுவர் பிரிவும் இயங்குகின்றன. பராயமடையாத சிறுமிகளைக் கூட சிறுவர்களே தீண்டி யதாக வழக்குகள். பதின்வயதில் கர்ப்பமாகி நடுத்தெருவில் நிறுத்தப்படும் சிறுமிகள், சட்டவிரோத கருக்கலைப்பால் தினசரி ஒருவராவது ஆபத்தான கட்டத்தில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் கொடுமை. இப்படிச் சிறுவயதிலேயே உளரீதியாக முடமாக்கப்படும் பெண்கள், சிறுமிகள் குறித்து எந்தப் பெண்ணுரிமை வாதிகளாவது, எந்தச் சர்வதேச சிறுவர் அமைப்புகளாவது கண்கொண்டு பார்த் தனரா? பாதிக்கப்பட்ட பின்பு ஆர்ப்பாட்டம் நடத்துவதும் அறிக்கை விடுப்பதும்தான் இவர்களது செயற்பாட்டின் எல்லைகளா?? இப்படியான சம்பவங்கள் மேலும் நிகழாது தடுக்க இவர்களில் எவரிட மாவது தொலைநோக்கான திட்டங்கள் இருக்கிறதா? தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புத் தவிர வேறு எந்தச் சனநாயகத்தின் காவலராவது இந்தச் சீரழிவு குறித்து ஒரு வரியாவது சிந்தித்திருக்கிறார்களா? பேசியி ருக்கிறார்களா?

தாமே சனநாயகத்தின் காவலர்கள் என்றும் தமிழர்களைக் காக்க வந்த இரட்சகர்கள் என்றும் உளறித் திரியும் எவராவது இந்தச் சீரழிவுகளைத் தடுப்பது குறித்து ஏதாவது செய்திருக் கிறார்களா? தமிழ் மக்கள் அவசியம் தங்களைத் தாங்களே கேட்டுணரவேண்டிய கேள்வி இது. கேவலம்! இதிலே கூடப் புலிகளுக்கு ஆதரவான எவராவது அரிதாகச் சிக்குப்பட்டால் மட்டும் இவர்களது கண்ணுக்கு அது தென்படும். அதுவும் நீதிமன்றமே எச்சரிக்கும் அளவிற்கு அது பற்றி வீணையை மீட்டிக்கூச்சலிடுவார்கள். ஆனால் மற்றவர்கள் குறித்து அவர்களிற்குக் கவலையில்லை. ஏன் தெரியுமா? புலிகளை எதிர்த்துக் கூச்சலிட்டால் மட்டுமே இவர்களுக்குச் சம்பளமும், சலுகைகளும் கிடைக்கும். வயிறு நிரம்பும்.

இங்கே உதாரணத்திற்குக் குறிப்பிட்டது யாழ் குடாவின் -யாழ்ப்பாண வைத்திய சாலையின்- எல்லைக்குள்ளான நிலைவரம். வடக்குக் கிழக்கில் எத்தனை இராணுவக்கட்டுப்பாட்டுப் பிரதேசங்கள் என்பது உங்களுக்கே தெரியும். இவ்வாறு சொல்லுந்தரமற்ற வகையில் எமது இளம் சந்ததி இராணுவ ஆக்கிரமிப்புப் பகுதிகளில்; இரகசியமாக அழிக்கப்பட்டு வருவதை தடுப்பதற்கு வழி என்ன? நிச்சயமாக இதனை எமது மக்கள்தான் தடுக்கவேண்டும். எல்லாவற்றிற்கும் எவராவது வரவேண்டும் என்று பார்த்துக் கொண்டிருப்பதை விடுத்து மக்களே செயலில் இறங்கவேண்டும். அதாவது அந்நிய ஆக்கிரமிப்பு இராணுவம் தமிழ் மண்ணிலிருந்து தமிழ் மக்களால் அகற்றப்படவேண்டும். அதுவே இந்தச் சிக்கலிற்கான இறுதித் தீர்வாக அமையும்.

நன்றி- திருமகள் (ரஷ்யா)







Friday, November 11, 2005

ஈழத்தமிழர் தொடர்பான சில பதிவுகள்.

கொழும்பிலிருந்து வெளிவரும் "தினக்குரல்" பத்திரிகையில் திரு சா.ஆ. தருமரத்தினம் அவர்களால் ஈழத்தமிழர் ஒடுக்குதலுக்குள்ளாகி வருதலை சர்வதேச சமூகத்தின் மனச்சாட்சிக்கு உறுத்திய வரலாற்றுப் பதிவுகள் எனும் தலைப்பில் ஒரு தொடரெழுதப்பட்டுவருகிறது. இதுவரையில்
இந்ததலைப்பில் இரண்டு கட்டுரைகள் வெளிவந்துவிட்டன.நூலாக எழுதப்பட்டதை வெளியிடுகிறார்களோ அல்லது இப்போதுதான் வெளியிடப்படுகிறதோ என்பது எனக்கு தெரியவில்லை.ஆனாலும்
இது ஒரு பாராட்டத்தக்க முயற்சி.இன்றைய காலகட்டத்தில் ஈழத்தவர் அல்லாத உலகெங்கினும் பரந்து வாழும் பல தமிழர்களுக்கு ஈழப்போராட்டம்,ஈழசரித்திரம் சம்பந்தமாக சரியான தெளிவான அறிவு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று இந்த இணையம் வந்ததன் காரண்மாக சரியான தெளிவான அறிவினை பெற்றவர்கள் பலர்.அதில் இந்த வலைப்பூக்களுக்குகூட நிறைய
பங்கு இருக்கிறது. வலைபதிய வந்ததன் பின்னர் தான் ஈழம்,ஈழப்போராட்டம்,ஈழவரலாறு சம்பந்தமாக சரியான அல்லது தெளிவான அறிவை பெற்றுக்கொண்டதாக பலர் சொல்லியிருக்கின்றனர்.அந்தவகையில்
இக்கட்டுரைகளை எழுதுபவரும் இணையத்தில்வெளியிடுபவர்களும் பாராட்டுக்குரியவர்களே.
இனறைய இளைஞர் சமுதாயம் கூட வரலாற்றை தெளிவாக அறிந்து கொள்ள இது உதவும்.

இதுவரையில் வந்த இரண்டு கட்டுரைகளாவன.

"தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலைகள்"

"வட்டுக்கோட்டைத் தீர்மானம்"

Wednesday, November 09, 2005

ஐ.தே. க. பின்னிய சர்வதேச வலை!


.தே. கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் உருவாக்கமே கருணாகுழு. புலிகளின் தலைவர் பிரபாகரன் மீண்டும் யுத்தத்துக்குப் போனால் அவரது புலிப்படையை எதிர்த்துப் போராட அமெரிக்க, இந்தியப் படைகளைத் தயாராக ஏற்பாடு செய்து வைத்திருக்கின்றார் ரணில்'' என்று ஐ.தே. கட்சி எம்.பியான நவீன் திஸநாயக்கா பெருமிதத்தோடு கூறினார் என வெளியான செய்தியை அவரே மறுத்திருக்கின்றார். நவீ னின் மறுப்பு பிரசுரமான பத்திரிகை அச்சாகும் அதேவேளை யில் நவீன் திஸநாயக்கா கூறியவை என வெளியான கருத்தை ஒத்த விடயங்களை ஐ.தே. கட்சியின் முக்கிய நாடாளுமன்ற உறுப்பினர்களுள் ஒருவரும், முன்னாள் அமைச்சரும், ரணில் விக்கிரமசிங்கவுக்கு மிக நெருங்கியவருமான மிலிந்த மொற கொட கூறியிருக்கின்றார் என்ற செய்தி ஆங்கிலப் பத்திரிகை ஒன்றில் அச்சாகியிருக்கின்றது.

ரணில் பிரதமராயிருந்த போது தமிழர் தரப்போடு முன்னெடுக்கப்பட்ட அமைதி முயற்சிகளில் முக்கிய பங்காற்றிய வரும், தற்போது ரணிலின் தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் முக்கிய பங்கு வகிப்பவருமான மிலிந்த மொறகொடவிடமி ருந்து இக் கருத்துகள் வெளிவந்திருக்கின் றன என்பது முக்கியமாகும்."" ஐக்கிய தேசியக் கட்சியின் அதிகளவான பங்களிப்பி னால் முன்னெடுக்கப்பட்ட அமைதி முயற்சிகளின் உருவாக்கமே கருணா.""யுத்தச் சூழ்நிலையில் கருணா போன்ற அதிருப்தியா ளர்கள் எந்தச் சந்தர்ப்பத்திலும் உருவாகவே முடியாது. துப் பாக்கிகளை அமைதியடைய வைத்து தடைகளை அகற்றி பாதைகளைத் திறந்து அதன்மூலம் இரக்கமேயில்லாத விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களுக்கு மாற்றுவழியை அளிக்கும் சூழ்நிலையை ஏற்படுத்திக் கொடுத்தவர்கள் ஐக் கிய தேசியக் கட்சியினரான நாங்கள்தான்'' இப்படி பெரு மிதத்தோடு கருணா குழுவின் உருவாக்கத்துக்கு உரிமை கோரி யிருக்கின்றார் மிலிந்த மொறகொட.

விடுதலைப் புலிகளின் தற்கொலைப் படை உறுப்பினர்களுக்கும், அதிலிருந்து வெளியே மீண்டு வேறு மாற்றுப் பாதைக்குத் திரும்புவதற்கான சூழ்நிலையைத் தமது கட்சியே ஏற்படுத்திக் கொடுத்தது என்றும் அவர் அந்தச் செயலுக்கு தமது கட்சியின் சார்பில் பாந்தயம் கோருகின்றார்.இலங்கை அமைதி முயற்சிகளில் சர்வதேச வலைப் பின்னலை தமது ஐ.தே. கட்சி அரசு கொண்டு வந்து செருகியதையும் கூட இந்தப் பேட்டியில் தங்கள் சாதனையாக பெருமையாக மார்தட்டி சுட்டிக்காட்டியிருக்கின்றார் மொறகொட.

அந்த சர்வதேச வலைப்பின்னலை நாங்கள் ஏற்படுத்தியதால்தான் இலங்கை அரசு, புலிகள் ஆகிய இரு தரப்பினருமே யுத்தத்துக்குத் திரும்ப முடியாமல் யுத்த நிறுத்தத் தடத்தை விட்டு விலகமுடியாமல் அமைதி நிலையில் நின்று பிடிக் கின்றார்கள் என்றும் அவர் தம்பட்டம் அடித்திருக்கின்றார்.ஐ.தே.கட்சித் தலைவர்களாலும் அக்கட்சியின் முன்னைய அரசினாலும் பின்னப்பட்டது என்று பெருமிதத்துடனும், உரிமையுடனும் இப்போது கூறப்படுகின்ற இந்த சர்வதேச வலையை தமிழர்கள் எப்படி நோக்குகின்றார்கள்?முன்னைய சமாதானப் பேச்சுகள் தோல்வியில் முடிவடைந்ததற்கு இந்த வலைப் பின்னலும் முக்கிய காரணம் என் பதுதான் தமிழர் முடிவு. இந்த முயற்சிகளில் தமிழர் தரப்பில் தலைமை வகித்து நேரடியாக அதில் ஈடுபட்ட மதியுரைஞர் பாலசிங்கமே அதைத் தெளிவுபடுத்தியிருக்கின்றார். இந்த சமாதான முயற்சிகள் தொடர்பான தமது மதிப்பாய்வின் இறுதியில் அவர் இவ்வாறு முத்தாய்ப்பு வைக்கிறார்.

""பலம் பொருந்திய நாடுகளின் தனிப்பட்ட புவியியல் கேந் திர அபிலாஷைகளும் அதிகார வீச்சுகளும், பேச்சில் பங்கு கொண்ட இரு தரப்பினரது அதிகாரச் சமவலு உறவில் பாதிப்பை ஏற்படுத்தின. உலக அரசுகளின் கூட்டணியான சர்வதேசச் சமூகம், ஸ்ரீலங்கா அரசின் நலன்களுக்குச் சார்பாக நின்றது. இதனால், சம உறவு நிலை எமக்குப் பாதகமாக அமைந்தது. உதவி வழங்கும் சர்வதேச நாடுகள், ஸ்ரீலங்கா அரசின் தூண்டுதல் காரணமாக, அரசியல் தீர்வுக்கு வரம்பு களைத் திணிக்கத் துணிந்தன.

இத்தலையீடானது, எமது அரசியல் தகைமையையும் தலைவிதியையும் நாமே நிர்ண யித்துக் கொள்ளும் எமது சுயாதீன உரிமையைப் பாதித்தது. சர்வதேச சமூகத்தின் தலையீடு, நெருக்குவாரம் மூலம் புலி களைக் கட்டுப்படுத்தி, அமுக்கும் (இணிணtச்டிணட்ஞுணt) தனது அந்தரங்கத் திட்டத்தையே " சர்வதேசப் பாதுகாப்பு வலைப்பின்னல்' என ரணில் விக்கிரமசிங்க கூறி வந்தார். சமாதானத்தின் பெயரால், சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்புடன் விக்கிரமசிங்க அரசு விரித்து வைத்த சர்வதேசச் சதி வலைப்பொறிக்குள் சிக்கி விடாது இருப்பதில் எமது இயக்கத் தலைமை மிகவும் எச்சரிக்கையாக இருந்தது.

சமாதானப் பேச்சுகளை எமக்கு சாதகமாகப் பயன்படுத்தி, தமிழரின் தேசிய இனப்பிரச்சினையைச் சர்வதேச மயப் படுத்துவதில் நாம் வெற்றி கண்டோம். ஆனால், அதே வேளை, எமது மக்களின் விடுதலைப் போராட்ட இலட்சியத் தில் சர்வதேச சக்திகள் குறுக்கிட்டு, தலையீடு செய்வதை நாம் வன்மையாக எதிர்த்தோம். மூன்றாம் தரப்பு அனுசரணை யாளரின் மத்தியஸ்துடன், எமது மக்களின் பிரச்சினையை நேர்மையுடன் பேசித்தீர்க்கும் பக்குவமும், அதிகாரமும் அற்ற விக்கிரசிங்கவின் நிர்வாகம், அமெரிக்காவின் தலைமையி லான உலக நாடுகளை அணிசேர்த்து, புலிகளைப் பொறியிட முனைந்ததும் பேச்சுகள் முடங்கிப் போனதற்கு இன்னொரு காரணமாகும்'' என்கிறார் மதியுரைஞர் பாலா.

சமாதானப் பேச்சுகள் முடங்குவதற்குக் காரணமான சர்வதேச வலைப் பொறியை இப்போதும் தனது சாதனையாகத் தூக்கிப் பிடிக்கிறது ஐ.தே. கட்சி.அதன் உள்நோக்கங்களை அம்பலப்படுத்திப் புலப்படவைக்கின்றன மொறகொட போன்ற தலைவர்களின் கருத்துகள். அவ்வளவே.

யாழ் உதயன் பத்திரிகையின் 09-11-2005 இதழில் வந்த ஆசிரியர் தலையங்கமே இது.

Tuesday, November 08, 2005

வலதுசாரியாகிவிட்ட வாசுதேவா-ஒரு மடல்!

வாசுதேவ நாணயக்காரவுக்கு!

ஒரு காலத்தில் இடது சாரிகள் சிங்கள அரசியலில் மாற்றுக் கருத்துக்களைக் கொண்டிருந்தனர். தமிழ் மக்களின் பிரச்சினைகளின் யதார்த்தத்தை ஒட்டுமொத்தமாகப் புரியாவிட்டாலும் சிறிதளவாவது அவர்கள் புரிந்து விட்டார்கள் போன்ற உணர்வு தமிழ் மக்களுக்கு ஏற்பட்டது. வலதுசாரிகள் அல்லாமல் இலங்கையில் இடதுசாரிகள் ஆட்சி அமைக்குமானால் தமிழ் மக்களது பிரச்சினை விடயத்தில் அணுகுமுறைகளில் முன்னேற்றம் ஏற்படும் என்ற எண்ணபாடு இருந்தது.

இதற்குக் காரணம் உங்களைப் போன்றவர்களின் பேச்சுக்கள் ஒரு காலத்தில் சிங்களவர்களிடையே வாசு நல்லவர், நமது பிரச்சினையின் ஆள நீளத்தைப் புரிந்திருக்கிறார், இவரைப் போன்றவர்கள் தெற்கே கணிசமானளவு புரிந்து கொள்வார்களாயின் நல்ல சூழல் உருவாகும் என தமிழ் மக்கள் அபிப்பிராயப்பட்டதும் உண்டு.

ஆனால், அது இப்போ தப்பாகப் போச்சு. ஏனெனில் வாசு இப்போது இடது சாரியல்ல. இனவாதக் கூட்டுடன் நெருக்கமாகி விட்டார். பேரினவாதக் கயிற்றை விழுங்கி விட்டார். தமிழர்களின் பிரச்சினைக்கு சரியான தீர்வு காணப்பட வேண்டும் என அன்று கூக்குரலிட்ட வாசுதேவா அல்ல இவர். நாட்டை துண்டாடக் கூடாது. தமிழனுக்கு உரிமையை வழங்கக் கூடாது. சுனாமிப் பொதுக்கட்டமைப்பு நிறுவக் கூடாது. போர் நிறுத்த உடன்படிக்கையை இரத்துச் செய்வோம் என கங்கணம் கட்டிக் கொண்டு களத்தில் குதித்திருக்கும் மங்களவுக்கு எப்படி ஐயா சாமரம் வீசமனசு வந்தது.

வெற்றிலைக்கு நேரே புள்ளடி போடுங்கோ! என தென்னிலங்கை மக்களிடையே துணிந்து கூறுகிறீர்களே! அன்று சொன்னதை ஒருக்கால் ஞாபகமூட்டிப் பாருங்கோ புரியும். போர்க் காலச் சூழலில் படையினர் தமிழ் மக்களை வெட்டிக் குதறி, கொலைசெய்த போது நீங்கள் தமிழ் மக்களது பிரச்சினைக்குப் பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காணப்பட வேண்டுமெனக் கூறியது இப்போது என்னாச்சு. பேரினவாதம் இடது சாரிகளை ஆக்கிரமித்து விட்டது.

கட்டுக் கட்டாக பணம், கை நிறைந்த சலுகைகள் கொட்டித் தருகிறார்கள். உங்கள் மனதைக் குளுமைப்படுத்துகிறார்கள். அதற்கு பிரதியுபகாரமாக இடதுசாரிக் கொள்கைகள், முற்போக்கான சிந்தனைகள், சிறுபான்மையினம் தொடர்பான எண்ணங்கள் சிந்தனைகளையெல்லாம் புதைகுழியில் போட்டு மூடிவிட்டு இனவாதத்தில் உழன்று கொண்டிருக்கின்ற கூட்டத்துடன் ஒருவராக அங்கத்துவமாகி விட்டீர்கள்.

இனியும் ஏமாறாது எமது இனம். எங்கள் இனத்தின் மீது பரிந்து பேசுபவர்கள் நாளை பேரினவாதிகளுடன் நின்று குழிவெட்டுவார்கள். எமது தமிழினம் இனி எச்சரிக்கையாகவே இருக்கும். வாசு அல்ல வாசு போன்ற வழித் தோன்றல்கள் சிரித்த முகத்துடன் சமத்துவம் பேசினாலும் தமிழினம் ஏற்காது. ஏனெனில் இனி இடது சாரிகளையும் நம்பத் தேவையில்லை. நீங் களே வலது சாரியாகி விட்டீர்கள் என்று கூறி மடலை முடிக்கின்றேன்.

இங்ஙனம் ஈழமகன்
நன்றி ஈழநாதம் செய்திப்பத்திரிகை( மட்டு பதிப்பு)

Friday, November 04, 2005

சு.ரா பற்றிய ஒரு வித்தியசமான மடல்!

சு.ரா வின் மறைவினையொட்டி பல பதிவுகள் தமிழ்மணத்தில் வந்ததும்
பல அஞ்சலி நிகழ்வுகள் நடத்தப்பட்டதும் யாவரும் அறிந்ததே.
ரொரன்ரோவில் இருந்து வெளிவரும் முழக்கம் ஏட்டின் 21.10.2005 இதழின்
"மக்கள் களம்"
ஒரு வாசகர் எழுதிய சு.ராவைப் பற்றிய கடிதம் ஒன்று எனது கண்ணில் பட்டது.
சு.ரா வைப்பற்றி அறிந்துள்ளேனே தவிர அவரது நூல்களோ அல்லது அவரது
கருத்துக்களோ எனக்கு பரிச்சயமானவை அல்ல.பொதுவாகவே எனக்கு
இலக்கியத்தில் பெரிதாகவே ஈடுபாடு இல்லை.இங்கு இந்த முழக்கம் பத்திரிகை வெளியிட்டிருக்கும் வாசகரின் கருத்தினை நான் ஒரு வித்தியாசமான கருத்திலையே பார்க்கிறேன். .இப்படியான ஒரு விடயத்தினை இங்கு இதுவரையில்
யாரும் தொட்டதாக எனக்கு நினைவில்லை.கடிதம் இதுதான்.


'காலச்சுவடு" குழுவைச்சேர்ந்த சுந்தரராமசாமி அவர்கள் கடந்த கிழமை மறைந்துவிட்டார். அவருக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். அறிவாளிகள் வரிசையில் இருக்கின்றோம் என்று மனப்பால் குடித்துக் கொண்டிருக்கும் அவரின் ரொரன்ரோ ஆதரவாளர்கள்; சுந்தர ராமசாமியின் மறைவையொட்டி இரங்கல் கூட்டம் நடத்தி உள்ளனர். அந்த இரங்கல் கூட்டத்தின்போது மதுவருந்தி தங்கள் கவலையைப் போக்கியும் உள்ளனர். இந்த கிழமை இறுதிநாளிலும் ஒரு இரங்கல் கூட்டம் திட்டமிடப்பட்டிருக்கின்றது. அதில் என்ன நடக்கப் போகின்றதோ... யாரறிவார்? சுந்தர ராமசாமி இறந்து விட்டார் இறந்தவரைப் பற்றி கெட்டது கூறுவது தமிழ் மரபுக்கு எதிரானது. ஆனால் தமிழினத்திற்கு எதிராக செயற்பட்டவரை இன்று அல்லாவிடினும் என்றாவது வெளிப்படுத்தவேண்டுமே!

'காலச்சுவடு" கூட்டமானது தமிழகத்தில் நெடுமாறன் உள்ளிட்ட தமிழின உணர்வாளர்கள் கைது செய்யப் படுவதற்குக் காரணமாக இருந்துள்ளது. சுந்தரராமசாமியின் மகன் கண்ணன் என்பவர் தமிழகத்திலுள்ள தமிழ் இன உணர்வாளர்கள் தமிழ்த் தேசியத்திற்கு ஆதரவாக எங்காவது பேசினால் அந்தப் பேச்சை வைத்து அவர்கள் மேல் எந்த சட்டத் தொகுதி, நுணுக்க அடிப்படையில் வழக்குப் போடலாம் போன்ற வற்றை தமது உறவுக்காரரான சோ இராமசாமி நடத்தும் 'துக்ளக்" இதழில் போடுவார். மறுநாளே கைது இடம் பெறும். இதில் இருந்து வலைப் பின்னல்பற்றி யோசித்துப் பாருங்கள். இருக்க,ரொரன்ரோவில் அவருக்கு இரங்கல் கூட்டம் நடத்துபவர்களிலும்; பலர் தமிழ்த் தேசியத்தை எதிர்ப்பவர்களாக உள்ளார்கள். என்ன ஒற்றுமை..?

- அருண் கனகராஜா, ரொரன்ரோ.

முழக்கம் பத்திரிகை(21.10.2005) இதழுக்கான இணைப்பு

Sunday, October 30, 2005

சிங்கள ஊடகங்களின் `கொலை'ச் செய்திகள்

சிங்கள நாளேடான `சத்தின' வின் காரண காரிய விளக்கங்கள்.


இலங்கையில் கிழக்கில் இன்று மினி யுத்தம் ஒன்று இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது என்றால் அதில் தவறேதுமில்லை என்று கூறலாம்.
கிழக்கில் இன்று சூரியன் உதிக்கின்றதோ இல்லையோ தினம் ஒரு படுகொலை நிகழ்ந்த வண்ணமேயுள்ளது.

அந்த வகையில், கடந்த 11 ஆம் திகதி மட்டக்களப்பு வவுணதீவில் இடம்பெற்ற சம்பவமொன்றில் மட்டக்களப்பு- அம்பாறை மாவட்ட சிறப்புத் தளபதி கேணல் பானு பயணம் செய்த வாகனத் தொடரணி மீது கருணா தரப்பினரால் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் இத்தாக்குதலில் கேணல் பானுவும் புலனாய்வு துறைத் தலைவர் கீர்த்தியும் படுகாயமடைந்ததாகவும் படுகாயமடைந்த கீர்த்தி கொழும்பு அப்பலோ மருத்துவமனைக்கு இராணுவ ஹெலிக்கொப்டர் மூலம் கொழும்புக்கு கொண்டு வரப்பட்டதாகவும் பின்னர் அவர் உயிரிழந்ததாகவும் சிங்கள ஊடகங்கள் மிகுந்த மகிழ்ச்சியான தலைப்புச் செய்திகளுடன் செய்திகளை பிரசுரித்தன.

சிங்கள ஊடகங்கள் இச்சம்பவத்தினை விடுதலைப் புலிகளுக்கு பாரிய தோல்வியினை ஏற்படுத்தி விட்டதாகவும் அதனால் சிங்களத் தேசத்திற்கு பல நன்மைகள் கிட்டிவிட்டதாகவும் என்ற வகையில் தமது செய்திகளை பிரசுரித்திருந்தன என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

சம்பவ தினத்திற்கு அடுத்த நாள் வெளியான சிங்கள நாளேடுகளில், திவயின பத்திரிகை தமது தலைப்புச் செய்தியாக "கிழக்கு மாகாண தளபதி பாய்ந்தோடி உயிர் தப்பியுள்ளார். கருணா தரப்பினரின் தாக்குதலில் வன்னிப்புலிகளில் ஐந்து பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். ஏழு பேர் படுகாயமடைந்துள்ளனர். இரு வாகனங்கள் அழிந்துள்ளன." என அதன் தலைப்புச் செய்தியாக குறிப்பிடப்பட்டுள்ளது.

லங்காதீப பத்திரிகையின் உபதலைப்புச் செய்தியாக "கருணா தரப்பினர் மூலம் பாரிய தாக்குதலொன்று புலிகளின் கிழக்கு தளபதி பானு ஆபத்தான நிலையில், புலிகளில் ஏழு பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

லக்பிம பத்திரிகையின் தலைப்புச் செய்தியில் "கருணா தரப்பு தாக்குதலில் புலிகளின் இரு தலைவர்கள் உட்பட நால்வர் கொலை. எட்டுப்பேர் படுகாயமடைந்துள்ளனர். இதில் கிழக்குத் தளபதி பானுவும் இருந்துள்ளார். காயமடைந்த ஒருவரை கொண்டு செல்வதற்கு இராணுவ ஹெலிக்கொப்டரொன்று" என தனது தலைப்புச் செய்தியில் குறிப்பிட்டுள்ளது.

தினமின பத்திரிகையின் முன்பக்கச் செய்தியில் "புலிகளின் கிழக்கு தளபதி பானுவின் வாகனத் தொடரணி மீது தாக்குதல்". இச்செய்தியில் மேலும் எட்டுபேர் உயிரிழந்துள்ளதாகவும் இருவர் படுகாயமடைந்துள்ளதாகவும் அச்செய்தியில் குறிப்பிட்டுள்ளது.

டெய்லி நியுஸ் பத்திரிகையின் முன்பக்கச் செய்தியில் "பானு பயணஞ் செய்கையில் தாக்கப்பட்டுள்ளார்." இதன் செய்தியில் வன்னிப் புலிகள் மூவர் உயிரிழந்துள்ளதாகவும் ஏழு பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் இத்தாக்குதலை கருணா தரப்பினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஏசியா ட்ரிபுயூன் இணையத்தளத்தில் செய்தி பிரசுரிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

டெய்லி மிரர் பத்திரிகையின் முன்பக்கச் செய்தியாக "விபத்துக்குள்ளான எல்.ரி.ரி.ஈ. தளபதிக்கு அரசாங்கம் ஹெலிக்கொப்டர் வழங்கியுள்ளது. "இதன் செய்தியில் குறைந்த பட்சம் நான்கு பேர் உயிரிழந்துள்ளதுடன் ஏழு பேர் படுகாயமடைந்துள்ளதாக அதன் செய்தியில் குறிப்பிட்டுள்ளது.

தமிழ் நாளிதழ்களான தினக்குரல், வீரகேசரி, சுடர்ஒளி ஆகியன இச்சம்பவத்தினை முன்பக்கச் செய்தியாக பிரசுரித்திருந்தன. அத்தாக்குதலில் எவரும் உயிரிழந்ததாக செய்திகள் பிரசுரிக்கப்பட்டிருக்கவில்லை. அதேவேளை, கேணல் பானுவின் பேட்டியொன்றை வீரகேசரி பிரசுரித்திருந்தது.

மேற்குறிப்பிட்ட சம்பவத்துடன் சிங்கள, தமிழ், ஆங்கில ஊடகங்களை ஒப்பிடுமிடத்து எவ்வாறு செயல்பட்டுள்ளன? என்பது நன்கு புலனாகிறது. சிங்கள ஊடகங்களிலும் ஆங்கில ஊடகங்களிலும் இச்சம்பவத்தில் கொலை செய்யப்பட்டள்ளவர்களின் எண்ணிக்கை வித்தியாசமாகும். இவற்றுள் எந்த எண்ணிக்கையினை நம்புவது? என்ற குழப்பம் வாசகர்கள் மத்தியில் ஏற்படுகிறது. அத்துடன், தமிழ் பத்திரிகைகளில் இத்தாக்குதலில் எவரும் கொலை செய்யப்படவில்லையென்றே குறிப்பிடப்பட்டுள்ளது.

மேற்குறிப்பிட்ட சம்பவத்துடன் சிங்கள ,ஆங்கில ஊடகங்களின் செயற்பாட்டினை நோக்குமிடத்து, அவ்ஊடகங்கள் தத்தமது வாசகர்களை ஏமாற்றியுள்ளதுடன் சிங்கள சமூகத்தினருக்கு பொய்யான தகவல்களையும் வழங்கியுள்ளனர். அத்துடன், சிங்கள ஊடகங்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் இச்சம்பவத்தினை செய்தியாக பிரசுரித்திருந்தன. ஊடகங்கள் இவற்றையல்ல மேற்கொள்ள வேண்டும். நாட்டின் பிரஜைகளுக்கு உண்மையினை வழங்குதல் வேண்டும். அத்துடன், எந்தவொரு ஊடகமும் இனிமேல் இவ்வாறான தாக்குதல்கள் இடம்பெறாதிருப்பதற்கு என்ன செய்ய வேண்டும்?

எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் இனிமேல் இடம்பெறாதிருப்பதற்கு யார் பொறுப்பேற்றல் வேண்டும்? என்ற கருத்துகளை முன்வைக்காதது இவ் ஊடகங்கள் விட்ட தவறாகும்.

இதேபோல், கடந்த பெப்ரவரி மாதம் அம்பாறை மாவட்ட அரசியல் துறைப்பொறுப்பாளர் கௌசல்யன் கொலை செய்யப்பட்ட பொழுது, 2005 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 14 ஆம் திகதி பிரசுரமான திவயின பத்திரிகையின் தலைப்புச் செய்தியில் "பாம்பின் விசம்" என்ற தலைப்பில் அவர் தனது பத்தியில் இவ்வாறான நபர்கள் கொலை செய்யப்பட வேண்டியவர்கள் என குறிப்பிட்டிருந்தார். இன்றும் அப்பத்திரிகை உட்பட ஏனைய பத்திரிகைகளும் மறைமுகமாக, குறிப்பாக இச்சம்பவத்தின் போதும் தமது மகிழ்ச்சியினை தெரிவித்துள்ளன என்பது இதன் மூலம் புலப்படுகிறது.

அதேவேளை, கருணா தரப்பினர் மகிந்த ராஜபக்‌ஷவிற்கு ஆதரவு வழங்குவதாக ஜே.வி.பி. ஆதரவு பத்திரிகையான லங்கா பத்திரிகை தெரிவித்துள்ளது. அப்பத்திரிகைக்கு கருணா தரப்பினருடன் நெருங்கிய தொடர்புகள் இருப்பதாக காணப்படும் பல கட்டுரைகள் கடந்த காலங்களில் பிரசுரமாகின. அதனால் இச்செய்தியினை ஒரே தடவையில் வாந்தி என்று கூறி எறிந்து விடுதல் பொருத்தமற்றது. கருணா தரப்பினர் அச்செய்தி பொய்யென தமது இணையத்தளத்தில் ஊடாகவேனும் மறுப்புத் தெரிவிக்கவில்லை.

அவற்றுக்கிடையில், கடந்த 10 ஆம் திகதி மட்டக்களப்பில் கருணா தரப்பினர் மேற்கொண்ட தாக்குதலின்போது 09 பேர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர். அத்தாக்குதலை கருணா தரப்பினர் ஏற்றுக்கொண்டுள்ளனர். கடந்த காலங்களில் கருணாவின் பெயரில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் குறிப்பிடத்தக்க அளவு விடுதலைப் புலி உறுப்பினர்கள் உயிரிழந்துள்ளனர்.

இவ்வாறான நிலைமைகள் தொடர்ந்தால் இலங்கையின் இனப்பிரச்சினை மேலும் சிக்கலுக்குள்ளாகும் நிலைமையே உருவாகும்.
இன்று கிழக்கில் இயங்கும் தமிழ் துரோக துணைப்படைகளின் ஆதரவுடன் இராணுவத்தினர் மேற்கொள்ளும் நிழல் யுத்தம் இப்பொழுது படிப்படியாக யாழ்ப்பாணத்தையும் நோக்கி நகர்த்தப்பட்டுக் கொண்டிருப்பதனை அண்மைக்காலம் முதல் யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் சம்பவங்களிலிருந்தும் சிங்கள ஊடகங்களில் வெளியாகும் பொய்யான செய்திகளிலிருந்தும் நன்கு காணக்கூடியதாகவுள்ளது.

அந்த வகையில் கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை (23.10.2005) பிரசுரமான "சத்தின" பத்திரிகையின் தலைப்புச் செய்தியில் "யாழ் .வைத்தியசாலையில் 22 இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர் எனவும், புலி உறுப்பினர்களைச் சேர்ந்த இரு வைத்தியர்களின் திட்டமொன்று" என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அச்செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, கடந்த ஐந்து மாத காலப்பகுதியில் யாழ். வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்ட இருப்பத்தியிரண்டு (22) இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளமை தொடர்பாக இப்பொழுது பாரிய சந்தேகங்கள் தோன்றியுள்ளன.

துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி மற்றும் வேறு நோய்களின் போது யாழ். வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் இராணுவ வீரர்கள் இவ்வாறு தொடர்ச்சியாக உயிரிழப்பதுடன் அந்த இராணுவ நோயாளர்களுக்கு உரிய முறையில் உரிய சிகிச்சை கிடைக்காமையினாலும் இந்நிலைமை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது. இதற்கு காரணம் யாழ். வைத்தியசாலையில் பணிபுரியும் இரு தமிழ் வைத்தியர்களின் வைத்திய தொழிலிற்கே பொருந்தாத மனிதாபிமானமற்ற செயற்பாடுகளே எனத் தெரிய வருகிறது.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயமடையும் இராணுவத்தினருக்கு உரிய சத்திர சிகிச்சைகள் மற்றும் சிகிச்சைகளை பெற்றுக் கொடுக்காதிருப்பதற்கு இவ்விரு வைத்தியர்களும் செயற்படுவதுடன் அதற்கு ஏனைய ஊழியர்களின் ஒத்துழைப்பும் சிறப்பாக கிடைப்பதாகவும் கூறப்படுகின்றது.

அதற்கேற்ப இராணுவ வீரர்களின் நோய் உச்ச நிலையினை அடைந்து, பின்னர் அவர்கள் உயிரிழக்க வழி செய்து வருவதாகவும் குறிப்பிடப்படுகின்றது. இவ்விரு வைத்தியர்களும் சில காலம் புலிகள் அமைப்பின் வைத்திய பிரிவில் இருந்தவர்களெனவும் பின்னர் யாழ். வைத்தியசாலையில் சேவைக்கு இணைந்து கொண்டுள்ளதாகவும் தெரியவருகிறது.

இவ்விருவரும் கமலன் பாலச்சந்திரன் மற்றும் பத்மநாதன் சிவராசன் என இனங்காணப்பட்டுள்ளதுடன், அதற்கேற்ப யாழ்ப்பாணத்தில் விபத்துகளுக்கு மற்றும் நோய்களுக்கு இரையாகும் முப்படையினர் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் யாழ் வைத்தியசாலைக்கு சிகிச்சை பெற்றுக் கொள்வதற்காக அனுப்பப்படுவதனால், மரணம் சம்பவிக்கப்படுவதாக பொலிஸ் புலனாய்வு பிரிவின் தகவல்கள் மூலம் தெரிய வந்தள்ளதாக அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இச்செய்தி தொடர்பாக யாழ் வைத்தியசாலை பதில் பணிப்பாளர் கருத்து தெரிவிக்கையில்; இச்செய்தி முற்றிலும் உண்மைக்கு புறம்பான செய்தியொன்றாகும். கடைசியாக இற்றைக்கு சுமார் ஏழு வருடங்களுக்கு முன்பே மூன்று இராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். (மேஜர் சுசந்த மெண்டிஸின் படுகொலை) என அவர் தெரிவித்தார்.

இப்பத்திரிகை எந்நோக்கத்திற்காக இச்செய்தியினை பிரசுரித்தது? எனத் தெரியவில்லை. ஆனால், இவ்வாறான செய்திகள் கிழக்கில் போன்று வடக்கிலும் தொடரப்பட்டால் நிலைமை எங்கு? எதில்? எவ்வாறு முடிவடையும்? என்பதனை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

எஸ்.நயனகணேசன்/தினக்குரல்.

Saturday, October 15, 2005

இந்திய உளவுப்பிரிவின் குறி!

இந்திய உளவுப்பிரிவால் இலக்கு வைக்கப்படும் இலங்கை தமிழ் ஊடகத்துறை. ஏன்? எதற்கு? எப்படி?

இலங்கையில் உள்ள தமிழ் ஊடகத்துறையினரை வளைத்து போடும் முயற்சியில் இந்திய உளவுப்பிரிவு தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக தெரியவருகின்றது. அன்பாகவும், அதட்டலாகவும் இந்த முயற்சி மேற்கொள்ளபட்டு வருவதாக தெரியவந்துள்ளது.

இராணுவ ஆய்வாளர் சிவராமின் படுகொலைக்கு பின்னரே இந்த விடயம் வெளித்தெரிய வந்துள்ள போதிலும் அதற்கு முன்னரே இதற்கான ஆரம்பக் கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

தமது நடவடிக்கைகளுக்கு எதிரான கருத்தினையுடைய ஊடகவியலாளர்களை மிரட்டி பணியவைப்பதற்கு தமிழ் ஆயுதக் குழு ஒன்றின் உதவி பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஊடகவியலாளர் சிவராமின் படுகொலையுடன் தொடர்படைய இந்த குழுவினருக்கு இந்திய உளவுப் பிரிவால் பெருமளவு நிதி வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிகின்றது.

இந்திய உளவுப் பிரிவு தமிழ் ஊடகத்துறையை கட்டுப்படுத்த முயல்வது ஏன் என்ற கேள்வி இயல்பாகவே எழுவது தவிர்க்க முடியாதது.
........................................................................................

சுவிஸிலிருந்து சத்திரியன் எழுதிய இக்கட்டுரையினை மேலே தொடர்ந்து
படிக்க கீழே உள்ள சுட்டியினை சுட்டுங்கள்.

http://www.sankathi.net/index.php?option=com_content&task=view&id=2990&Itemid=44

Thursday, October 13, 2005

சிறி சுவாமிநாராயண் மந்திர்!


இங்கே நீங்கள் படத்தில் காண்பது கனடா ரொரண்டோவில் இருக்கும் சிறி சுவாமி நாராயண் மந்திரின் அழகிய தோற்றமே இது.உலகெங்கும் 45 நாடுகளில் இயங்கும் சுவாமி நாராயண் அமைப்பினரால் இவ் ஆலயம்,ஆச்சிரமம் அமைக்கப்பட்டுபராமரிக்கப்பட்டு வருகிறது.

எனது கமெராவினால் கிளிக்கிய படங்கள் இது.முற்றுமுழுதாக சலவைக்கல்லால்அமைக்கப்பட்டுள்ள ஒரு அழகிய இந்து ஆலயம்.ரொரண்டோவில் பார்க்கவேண்டிய இடங்களில் இந்த ஆலயமும் ஒன்றாகும்.சில தினங்களுக்கு முன்னர் நண்பன் ஒருவரை காண இந்தப் பகுதிக்குசென்றிருந்தேன்.அப்போது இந்த ஆசிரமத்திற்கும் சென்று வந்தேன்.மிக அழகாக,தூய்மையாக,சிறந்த ஒழுங்கமைப்புடன் இந்த மந்திர்செயற்பட்டு வருகிறது.சுவாமிகளின் உரையினைக் கேட்கலாம்என்றால் உரை அன்று குஜராத்தி மொழியிலே இடம்பெற்றது.

தமிழ்நாட்டிலும் கோயம்புத்தூரிலும் சென்னையிலும் இவர்களின் ஆச்சிரமம் இருப்பதாக அங்கு பணிபுரிந்த தொண்டர் தகவல் சொன்னார்.தனியே மதத்துடன் நின்றுவிடாது பல சமூகப்பணிகளிலும் இவர்கள் தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர்.

Thursday, September 29, 2005

இதுவும் ஒரு செருப்பு மேட்டர் தான்!

இந்த குஷ்பு மேட்டருக்கு பின்பு பிரபலமாகிவிட்டது செருப்பு,துடைப்ப மேட்டர்.செருப்பை வைத்து தொழில் புரிவோரை அவமானப்படுத்தியது என்று பதிவுகள் வேறு. இதுவும் ஒருசெருப்பை பற்றிய பதிவுதான்.இணையத்தில் கண்ட ஒரு படத்தினைதான் இங்கு நீங்கள் பார்க்கின்றீர்கள்.பல வரிகளில் சொல்வதை ஒரு புகைப்படம் சொல்லிவிடும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.அதேபோல இந்த படத்திலுள்ள செருப்பையும் அணிந்திருக்கும் கால்களையும்பார்த்தவுடன் ஒரு இனம்தெரியாத சோகம் எழுகிறது மனதில்.அத்துடன் உடனடியாக இந்த செருப்புக்கும்,கால்களுக்கும்சொந்தக்காரனின் முகத்தினை பார்க்க வேண்டும் என்ற ஆவல் எழுகிறது.வறுமையும் இயலாமையும் எப்படி மனிதனை ஆட்டுவிக்கிறது என்பதனை முகத்தில் அறையும் விதமாய்சொல்கிறார் இப் படப்பிடிப்பாளர்.ஒரு நல்லபுகைப்படபிடிப்பாளனின் வெற்றி இப்படியான விடயங்களில் தான்தங்கி இருக்கிறது. ஹவானாவில் இப்படம்
பிடிக்கப்பட்டதாக தெரிகிறது.மேலதிக விபரங்கள் புரிந்துகொள்ளமுடியவில்லை.

செருப்பணிந்தவன் சப்பாத்து அணிந்தவனை ஏக்கத்துடன் பார்க்கிறான்.ஆனால் கால் இல்லாதவன் அவன் கால்களை ஏக்கத்துடன் பார்ப்பதை மறந்துவிடுகிறான்.

Wednesday, September 28, 2005

செருப்பு வெளக்கமார் கழுதை கூட்டாளி.

செருப்பு வெளக்கமார் கழுதை கூட்டாளி

உள்குத்து வெளிக்குத்து பேசி சல்லியடிக்கும் கூட்டமே இதற்குப் பதில் சொல்லாதே.


1. யாரையோ எதிர்க்க சாதாரண மக்களின் ஜீவனத் தொழிலான கழுதையை "கேவலக்" குறியீடாக மாற்றிய உங்களை என்ன செய்வது?


2. ஏன் உங்கள் பார்வையில் கழுதை கேவலக் குறியீடாகத் தெரிகிறது?


3. உங்களுக்கு யார் அனுமதி கொடுத்தது கழுதையை போட்டோ எடுக்க?


4. ஏன் குதிரையை அழைத்துவந்து உங்கள் எதிர்ப்பை சினிமாவுக்கு காட்ட வேண்டியது தானே?


5. கழுதையை வைத்து கஷ்ட ஜீவனம் செய்யும் எங்களைப் பற்றி ஏதாவது சிந்தித்தது உண்டா?


6. ஏன் சினிமா/நடிகை/நடிகர்கள் சுற்றியே கழுதையை வைத்துக் கொள்கிறீர்கள்?


7. கேவலம் ..கேவலம் ..கழுதைக்காக ஒரு போஸ்ரரைக்கூட கிள்ளிப்போடாத நீங்கள்தான் கூட்டாளி வர்க்கமா?

8. பெற்ற மகனையே கழுதை என்று திட்டி "கழுதையை" அவமானப்படுத்தும் நீங்கள்"குதிரை" என்று திட்டமுடியுமா?


இப்படிக்கு,


கீழைத்தெரு சலவைத்தொழிலாளர்கள் சங்கம்.

( குதிரை வைத்துள்ள " சோம.இராமசாமி" இதில் சேத்தி இல்லை)


கீழைத்தெரு பிராணிகள் முன்னேற்ற சங்கம்

(சிறுத்தைபுலி வைத்திருக்கும் கோந்து.கோயிந்தசாமி இதில் கண்டிப்பாக சேத்தி இல்லை)


"என்னமோ போங்க" எழுதியிருந்த பதிவைப் பார்த்தவுடன் எழுந்த(காப்பி) கற்பனை இது. ஹீ.....ஹீ...... யாரும் இதை சீரியசாக எடுக்கவேண்டாம்.

நகைச்சுவைக்காவே இப்பதிவு.இதில் எந்த உள்நோக்கமும் இல்லை.அனால் ஒண்டு சிலவேளைகளில் சிந்தித்தால் மனிதனை விட கழுதையும், குதிரையும் எல்லாவிடயத்திலும் மேல் என்று எனக்கு படுகிறது.

நடப்பவைகளை நினைத்தால் எங்கு போய்முட்டிக்கொள்வது என்று தெரியவில்லை.மொத்தத்தில் ஒண்ணுமே புரியலை உலகத்திலே, என்னமோநடக்குது மர்மமாய் இருக்குது.


Tuesday, September 27, 2005

எவன் விற்றாலும் தமிழ் வியாபாரம் ஆகிறது.

"மிழை விற்று ஆதாயம் தேடியவர்கள் தமிழ் அறிஞர்களை விட, அரசியல் வாதிகளே அதிகம். இதில் பரிதாபம் என்னவென்றால் எவன் விற்றாலும் தமிழ் வியாபாரமாகி விடுகிறது. அது மட்டுமா? எவன் தமிழ் விற்றாலும் தமிழுக்கு தலைவனாகி விடுகிறான். தமிழ்நாட்டில் தமிழர்களைவிட தமிழ் விற்பவர்களே அநேகம்.''

சொன்னவர்:-கவிஞர் சினேகன்.
மாலைச்சுடர் பத்திரிகைப் பேட்டியில்

Saturday, September 24, 2005

ஹிட்லரை மன்னிப்புக் கேட்க வைத்த தமிழர்

ந்தியா விடுதலையடைந்து 58 ஆண்டுகளாகிவிட்டன. வெள்ளை அரசின் அடக்குமுறைகளுக்கு அஞ்சி பிறந்த மண்ணில் அடிமைகளாகவும், ஏதிலிகளாகவும் வாழ்ந்த கொடுமையான வரலாற்றை இன்றைய தலைமுறை மறந்திருக்கலாம். பேசுவதற்கும், எழுதுவதற்கும் மட்டுமல்ல, வாழ்வதற்கும் கூட வெள்ளை ஏகாதிபத்தியத்தின் சுண்டு விரலசைவுக்கு காத்திருந்த காலம் ஒன்றுண்டு. அடிபட்டு, மிதிபட்டு, ஆண்டாண்டு காலமாய்ச் சிறைப்பட்டு, எண்ணற்றோர் குருதி சிந்திய கொடுமையான சரித்திரத்தைக் கொண்டது இந்திய மண். மண்ணை, மானத்தை,மனிதத்தை மீட்க நடத்திய பெரும் போரில் உற்றார், உறவினர்களை இழந்து, நண்பர்களை இழந்து ரணங்களோடும், தழும்புகளோடும் தியாகப் பரம்பரைத் தலைமுறையினர் மறைந்து கொண்டிருக்கும் தருணம் இது.

இந்திய துணைக்கண்டமே அடிமைப்பட்டுக் கிடந்த காலத்தில், ஆங்காங்கே பீறிட்டெழுந்த விடுதலை உணர்ச்சியில் ஒட்டுமொத்த இந்தியாவும் கிளர்ந்தெழுந்தது. காந்தியடிகளின் தலைமையை ஏற்று ஒன்றுபட்ட பெரும் போராட்டம், பிரிட்டிஷ் அரசிற்குப் பெரும் தலைவலியாய் அமைந்தது. எத்தனையோ அடக்குமுறைச் சட்டங்களைக் கொண்டு வந்தபோதிலும் சுடர்விட்டு ஒளிர்ந்த விடுதலை கனலை அணைக்க இயலவில்லை.
பிறகு எந்த மாகாணத்துக்கும் சற்றும் குறைவின்றி, சொல்லப்போனால் இன்னும் கூடுதலாக, தமிழகம் முன்னெடுத்த சுதந்திரப் போர், பெருமை கொள்ளத்தக்கது. கும்பினியாரை எதிர்த்த பூலித்தேவன் தொடங்கி, வரி கேட்டு மிரட்டிய வெள்ளையனை `வந்து பார்' என்று விரட்டிய பாஞ்சாலக்குறிச்சி கட்டபொம்முவின் முழக்கமே, மதப் பகைமையை உண்டாக்கி அதில் குளிர் காய நினைத்த குள்ளநரிகளின் தந்திரத்திற்கு வேட்டு வைத்த வேலூர்க் கோட்டைச் சிப்பாய்க்கலகமும், வட நாட்டில் ஜான்சிராணியா.. இதோ தமிழ்நாட்டில் வீரமங்கை வேலுநாச்சியும் வெள்ளைப் படைக்கு முறம் காட்டினாளே! அங்கே தாகூரா.. இங்கே பாரதி முண்டாசு கட்டிக் கொண்டு, தனது சொற்சாட்டைகளால் பிரிட்டிஷ் பேரரசை சுழற்றியடித்தானே! சுதேசியம் பேசிய வடநாட்டுத் தலைவர்களை மிஞ்சி மக்களைப் பங்குதாரராக்கி கப்பல் விட்டுப் பெருமை பெற்றானே வ.உ.சி. செக்கிழுத்து, மூத்திரம் குடித்து தொழு நோயாளியாய் சிறையிலிருந்து வெளியே வந்து, சற்றும் குறையாத கர்வத்துடன் மறைந்தானே சுப்ரமணிய சிவா!உயிர் போகும் நிலையிலும் கொடியின் மானம் காத்து, வரலாற்றில் உயர்ந்து நிற்கிறானே குமரன்! மிதவாதிகளின் போராட்டம் ஒரு புறமிருக்கையில், கலெக்டர் ஆஷ் துரையைக் கொன்று வாஞ்சி மணியாச்சியாய் வாழ்ந்து கொண்டிருக்கிறானே வீரன் வாஞ்சிநாதன்!

இம்மண்ணின் விடுதலைக்காக கணக்கற்ற புதல்வர்களை தமிழன்னை வாரிக் கொடுத்திருக்கிறாள். பறங்கிக் கூட்டத்தை விரட்டியடித்து, சுதந்திரக் கொடியேற்ற நாஞ்சில் நாட்டிலிருந்தும் உலகம் போற்றிய உன்னத மகவு ஒன்றை தமிழகம் ஈன்றெடுத்தது. சின்னச்சாமி - நாகம்மாள் என்ற சாதாரண ஏழைத்தாய்- தந்தையருக்குப் பிறந்த அம்மாவீரன், பின்னாளில் ஜெர்மனியின் சர்வாதிகாரி, உலக நாடுகளையெல்லாம் குலைநடுங்க வைத்த ஹிட்லரையே தலைவணங்க வைத்தான் என்ற வரலாறு எத்தனை பேருக்குத் தெரியும்?

"ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட, அடிமைப்பட்ட மக்கள் உலகின் எந்தக் கோடியில் இருந்தாலும் அங்கே சென்று, அவர்களின் அடிமைத் தளைகளைத் தகர்த்தெறிவேன்" எனச் சூளுரைத்த அந்த நாஞ்சில் நாட்டு வீரன்தான் `எம்டன்' ஜெய்ஹிந்த் செண்பகராமன்.

1914 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 22 ஆம் நாள் எம்டன் என்ற நீர்மூழ்கிக் கப்பலில் பயணித்து, சென்னையிலுள்ள செயின்ட் ஜோர்ஜ் கோட்டையைத் தகர்க்க வெடிகுண்டு வீசிய பெருவீரன்தான் செண்பகராமன் . இந்த அளவில் மட்டும்தான் செண்பகராமன் குறித்த வரலாறு நமக்குத் தெரியப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், அதற்கும் மேலாக இந்திய நாட்டின் விடுதலைக்காக வெளிநாடுகளில் அவன் மேற்கொண்ட முயற்சிகளும், அதனால், அவன் பட்ட வேதனைகளும் மறைக்கப்பட்டுவிட்டன அல்லது மறக்கப்பட்டுவிட்டன.

தென்னாபிரிக்காவில் கறுப்பின மக்களுக்காகக் காந்தியடிகள் நடத்திய போராட்டத்திற்குச் சற்றும் குறையாமல், அமெரிக்கப் பேரரசின் இனவெறியில் சிக்கி நாள்தோறும் செத்துப் பிழைத்த நீக்ரோ மக்களுக்காகக் குரல் கொடுத்தார், அருந்தமிழ்ப் புதல்வன் செண்பகராமன். அப்போதைய அமெரிக்க குடியரசுத் தலைவர் உட்ரோ வில்சனைச் சந்தித்து, கறுப்பின மக்களின் துயரங்களை எடுத்துரைத்தார். "பெரும்பான்மை மக்களின் கருத்திற்கு மாறாக தாம் நடந்து கொள்ள இயலாது" என்று உட்ரோ வில்சன் மறுத்துரைத்துவிட்டார். இருந்தும் சோர்வுபடாமல், தன்னைக் கொலை செய்யக் காத்திருக்கும் இனவெறியர்களின் மிரட்டலை மீறி, செண்பகராமன் ஊர் ஊராகச் சென்று நீக்ரோ மக்களைச் சந்தித்துத் தனது வலிமையான கருத்துப் பிரசாரத்தை நடத்தினார்.

முதலாம் உலகப்போர் தொடங்கிய 1914 ஆம் ஆண்டு, இந்தியாவிற்கு வெளியே, ஜெர்மன் மன்னர் கெய்சரின் ஆதரவோடு முதன் முதலாக `இந்திய தேசியத் தொண்டர் படை' என்ற அமைப்பைத் தோற்றுவித்தார். செண்பகராமன் வழி நடத்திய ஐ.என்.வி. என்ற இந்திய தேசியத் தொண்டர் படையின் பேராற்றலைக் கண்டு பிரிட்டிஷ் அரசு கலக்கம் அடைந்தது. வங்கச் சிங்கம் சுபாஷ் சந்திரபோஷின் ஐ.என்.ஏ. இற்கு செண்பகராமன் அமைத்திருந்த ஐ.என்.வி.யே முன்னோடியாக அமைந்திருக்கிறது. 1933 ஆம் ஆண்டு வியன்னாவில் நடைபெற்ற மாநாட்டில் சுபாஷும் செண்பகராமனும் நாட்டு விடுதலை குறித்து ஆராய்ந்த போது, செண்பகராமன் வகுத்துத் தந்த திட்டம் சுபாஷ் சந்திரபோஸைக் கவர்ந்தது ஒன்றே இதற்குச் சான்று.

இந்திய நாட்டின் விடுதலையைத் தனது உயிர் மூச்சாய்க் கொண்ட இம்மாவீரன், தென்னாபிரிக்காவிற்கும் பயணம் மேற்கொண்டு அங்குள்ள கறுப்பின மக்களின் உரிமைக்காகக் குரல் கொடுத்தார். கென்யாவில் டாக்டர் செண்பகராமன் நிகழ்த்திய வரலாற்றுச் சிறப்புமிக்க பேருரையைப் பற்றிக் கேள்விப்பட்ட காந்தியடிகள், அவரைப் பெருமையோடு பாராட்டியிருக்கிறார். ஜவஹர்லால் நேரு தனது சுயசரிதையில், "நாஜிகளுடன் கலந்து, சற்றும் பயமின்றிப் பணிபுரிந்த சொற்ப இந்தியர்களில் செண்பகராமன் முதன்மையானவர்" என்று புகழ்ந்து எழுதியிருக்கிறார்.

"விடுதலை பெறக்கூடிய தகுதி இந்தியர்களுக்குக் கிடையாது" என்று சொன்னதற்காக ஹிட்லரிடம், இந்தியா பற்றியும் அதன் தலைவர்கள் குறித்தும் ஆணித்தரமான தகவல்களைக் கூறி செண்பகராமன் வாதம் புரிந்தார். அவரின் கூர்மையான வாதத்திறமைக்கு முன்னர் ஹிட்லரின் பேச்சு எடுபடாத காரணத்தால், எழுத்து மூலமாக செண்பகராமனிடம் மன்னிப்புக் கோரினார் ஹிட்லர். ஜெர்மன் நாஜிகளுக்கு இந்தச் சம்பவம் எரிச்சலூட்டிய காரணத்தால், செண்பகராமனைக் கொலை செய்யத் திட்டம் தீட்டி உணவில் விஷம் வைத்துக் கொஞ்சம் கொஞ்சமாகக் கொன்றனர். 1934 ஆம் ஆண்டு மே மாதம் 26 ஆம் நாள் அவரது அன்பு மனைவி இலட்சுமி பாயின் மடியில் உயிர் துறந்தார்.

"சுதந்திர இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவராக வீரன் செண்பகராமன் நியமிக்கப்பட வேண்டும்" என்ற ஜெர்மன் மன்னர் கெய்சரின் விருப்பம் நிறைவேறாமற் போனாலும், "சுதந்திர இந்தியாவில், நாஞ்சில் தமிழகத்து வயல்களிலும், கரமனை ஆற்றிலும் எனது சாம்பலைத் தூவ வேண்டும்" என்ற செண்பகராமனின் விருப்பம் மட்டும் 1966 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 19 ஆம் நாள் இந்திய அரசின் உதவியோடு நிறைவேறியது.

உலக நாடுகளுக்கெல்லாம் பயணம் செய்து, உலகத் தலைவர்களைச் சந்தித்து இந்தியாவின் விடுதலைக்காக ஆதரவு திரட்டிய செண்பகராமன் என்ற பெருமகனின் வரலாறு, மிக விரிவான அளவில் ஆராயப்பட்டு பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகம் என அனைத்து நிலையிலும் உள்ள பாடத்திட்டங்களில் சேர்க்கப்பட வேண்டும். மத்திய, மாநில அரசுகள் செண்பகராமனின் தியாகத்திற்கும் அவர் தம் குடும்பத்தாருக்கும் உரிய மரியாதை அளிக்க வேண்டும்.

இரா. சிவக்குமார்/தினமணி

Thursday, September 22, 2005

பசுமை நன்கொடை

மிழீழ பொருண்மிய மேம்பாட்டு நிறுவனத்தினரால் மரம் நடுகையினை ஊக்குவிக்கும் பொருட்டு கிளிநொச்சியில்
நிறுவப்பட்டுள்ள விளம்பரப்பலகையே இது.

படம் உதவி:- தமிழ்நெற்



அத்துடன் சுற்றுச்சூழல் மேம்பாட்டிற்காக தமிழ்நாடு திண்டுக்கல்லில் இருந்து
வெளிவரும் "புதியகல்வி" அச்சு இதழ்காரர்களால் சுற்றுச்சூழல் பாதுகாப்பை
நோக்கமாக கொண்டு நடத்தப்படும் இணையத்தளம்தான் பசுமை.கொம்.
தமிழில் இதுபோன்ற துறைசார்ந்த இணையத்தளங்களின் தேவை எப்போதுமே உண்டு.அந்த வகையில் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக இயங்கும்
இந்த இணையத்தளம் பாராட்டப்படவேண்டிய விடயமே. இத்தளத்தினை
பார்வையிட இங்கு செல்லவும். எழுத்துருவை பதிவிறக்கினால் தான்
இத்தளத்தினை பார்க்க,படிக்க முடியும்.அல்லது தரவிறக்கம் செய்யாமல் எழுத்துருவை திறந்துவைத்துக்கொண்டும் தளத்தினை பார்க்கலாம்.

இது என் படிப்பு

ழநாதன் அவர்கள் "இது என் புராணம்"என்ற தலைப்பில் பதிவு ஒன்று இட்டிருந்தார்.அது வீட்டில் தொடங்கி கந்த புராணத்தில் முடிந்திருந்தது.நல்லதொரு முயற்சி. அப்பொழுது தான் எனக்கும் ஞாபகத்தில் வந்தது இன்னொரு படிப்புபற்றி.இதுக்கும் கந்த புராணத்துக்கும் சம்பந்தம் இல்லை.அனாலும்இதுவும் ஒரு வகைப்படிப்புதான்.பத்திரிகை படிப்பு.

யாழ்ப்பாணத்தின் பல கிராமங்களில் இதை நான் பார்த்திருக்கிறேன்.கடற்கரைகளில்,வாசிகசாலை முன்றலில்,ஆலமரம்,அரசமரத்துக்கு கீழும்அன்றைய காலகட்டத்தில் நான் அரசியல் படித்ததே இந்த பத்திரிகை படிப்புக்கள் மூலம் தான்.எங்கள் வீட்டில் இரண்டு பத்திரிகைகள் வரும்.இருந்தும் என்னை அதிகம் கவர்ந்தது இந்த திண்ணை அல்லது தெருப் படிப்புதான்.என்ன விடயத்தினை சொல்ல வருகின்றேன் என்பது பலருக்கும் இப்போது புரிந்திருக்கும்.

எங்கள்.அம்மம்மா வீட்டிற்கு பக்கத்தில் ஒரு பலசரக்குகடை ஒண்டு இருந்தது.நாங்கள் சாமான்கள் வாங்குவதும் அந்தக்கடையில்தான்.அந்தக்கடைக்கு பக்கத்து கடை நானறிந்த காலத்தில் இருந்தே பூட்டியே இருந்தது.இரு கடைகளுக்கும் முன்னால் சீமெந்து இடப்பட்டு நீண்ட விறாந்தை ஒன்று இருந்தது.பின்னேரங்களில் பூட்டியிருக்கும் கடைக்கு முன்னால் வயது போன சில பெரிசுகள் கூடியிருப்பர்.அதில் ஒருவர் நடுநாயகமாக அமர்ந்திருக்க அவரைச் சூழ பலர் அமர்ந்திருப்பர்.நடுநாயகமாக அமர்ந்திருப்பவர் கையில் அன்றையசெய்திதாள்கள் இரண்டாவது இருக்கும்.அவர்தான் அங்கு தலைவர் மாதிரி. பின்னேரம் 6.00 மணிக்கு பின்னர் கொஞ்சம் கொஞ்சமா இன்னும் பலர்அங்கு வந்து சேர தொடங்குவார்.இதில் வந்து கூடுபவர்கள் பலர் வறிய கூலித்தொழிலாளிகளாகஇருப்பதையும் கண்டிருக்கிறேன்.

ஏறத்தாள எல்லோரும் வந்து அமர்ந்தவுடன்,அங்கு நடுவில் அமர்ந்திருப்பவர் பத்திரிகைகளை எடுத்து உரத்த குரலில் வாசிக்க ஆரம்பிப்பார்.வாசிப்பது என்றால் ,5,6 வரி படிப்பார் பின்பு நிறுத்திவிட்டு செய்திதொடர்பான தனது கருத்துக்களை சொல்வார்.மற்றவர்களும் தமது கருத்துக்களை சொல்வர்.பின்பு செய்திகள் தொடர்ந்து படிக்கப்படும்.இப்படி சூடு ,சுவையான கருத்துக்கள்,விவாதங்கள்சில வேளைகளில் அனல் பறக்கும் வார்த்தைகள் கூட வந்து விழும்.

எனக்கு அரசியல், போராட்டத்தில் ஆர்வத்தினை உண்டாக்கியதே இந்த கூட்டம் தான்.செய்தி படிப்பவர் செய்திகளைப் படித்து விட்டு "அய்யா இப்படி சொல்லியிருக்கிறார்"எண்டு சொல்ல, கேட்பவர்களில் ஒருவர் "அப்ப அம்மா இதுக்கு என்ன செய்யப்போறா"?எண்டு கேட்க,கேட்டுக்கொண்டிருந்தவர் சொல்லுவார் அம்மாவுக்கு தெரியம் அய்யாவை எப்படி மடக்கிறது எண்டு.
இப்படி சொல்ல அவர்கள் பேசிக் கொள்ளும் அய்யா,அம்மா யார் என்று அறியாமல் தலையினை பிய்த்துக் கொள்வேன்..அய்யா என்று யாரைசொல்கிறார்கள்? அம்மா என்று யாரைச் சொல்கிறார்கள் என்று பின்னர்தான் அறிந்து கொண்டேன்.

( இதற்கும் தமிழ்நாட்டு அம்மா,அய்யாவுக்கும் எந்த சம்பந்தம் இல்லை.முன்கூட்டியே சொல்லிவிடுவது நல்லதுதானே அல்லது யாராவது வந்து நீ அகதிதானே. உன்னுடைய வேலையினைப் பார்.
ரொரன்ரோ முருகன் கோவில் வாசலில் பிச்சை எடுத்து நிதி திரட்டு என்று
பின்னூட்டம் இடுவார்கள்.அவர்களின் நேரத்தினை சேமிப்பதற்காகவே இந்த வரிகள்.)

எனக்கு அரசியல் தொடர்பாய் சிலவற்றை அறிந்து கொண்டது இங்கு என்று சொன்னேன் தானே.அதே போல( காதை கிட்ட கொண்டு வாங்கோ) சில கெட்ட வார்த்தைகளையும் அறிந்து கொண்டது இங்கிருந்துதான்.
சிறீமா விமானநிலையம்?? திறந்து வைத்த கதை?? கூட இங்கிருந்துதான்
அறிந்துகொண்டேன்.கதை தெரியாதவர்களுக்கு நான் ஒண்டும் செய்ய
இயலாது. கதையை சொன்னால் தமிழ்மணத்தில் இருந்து "என் மனவெளியில்" தூக்கப்பட்டுவிடும்.


சில வேளைகளில் சில செய்திகள் சம்மந்தமாக விவாதங்கள் நடைபெறும் உணர்ச்சிமேலீட்டில் போது கெட்ட வார்த்தைபிரயோகங்களும் இடம் பெறும்.அப்படியான வேளைகளில் நான் அங்கு நிற்பதை கண்டால் "பெரியாக்கள்கதைக்கும் இடத்தில் உனக்கு என்ன வேலை" என்று சொல்லி என்னை விரட்டிவிடுவார்கள்.மற்றம்படிஎன்னைக் கண்டு கொள்ளாதவர்கள் இப்படிப்பட்ட நேரங்களில் கண்டுகொள்வார்கள்.

பெரும்பாலும் அம்மம்மா என்னை பின்னேரங்களில் கடைக்கு பொருட்கள் வாங்க அனுப்புவா.அப்பிடி அனுப்பும் நேரங்களில் இந்த பத்திரிகை படித்து ரசிக்கும் கூட்டத்தில் நானும் பார்வையாளனாக் கலந்து கொள்வதுண்டு.சில வேளை கடை முதாலாளியும் விவாதங்களில் பங்கெடுக்க அவர் வரும் வரை நானும் கடை வாசலில் நிண்டு இவைகளைகேட்டுக்கொண்டிருப்பேன்.ஒரு நாள் இப்படி தான் கடைக்கு அனுப்பிய பொடிச்சியை கன நேரமாக காணவில்லை எண்டு போட்டு அம்மம்மா வந்திட்டா நேரே கடைக்கு வந்தவ முதலாளியும் நானுமாக "அரசியல் அரங்கில் " மூழ்கிப்போயிருந்தைக் கண்டு விட்டு முதலாளிக்கு ஏச்சும் எனக்கு "கடைக்கு அனுப்பினால் இஞ்ச வந்து வீண்பராக்கு பாத்துக்கொண்டிருக்கிறாய்"எண்டு தலையில் குட்டும் விழுந்தது.ஆனாலும்
நான் எப்படியாவது பத்திரிகை படிக்கும் இடத்துக்கு வந்துவிடுவேன் என்ன
சாட்டு போக்கு சொல்லி எண்டாலும்.

அனாலும் ஒண்டு பாருங்கோ.அண்டைக்கு பராக்கு பாக்க தொடங்கினது
இண்டைக்கும் பிரச்சனையாக அல்லோ கிடக்குது.
"உங்களோட வந்தால் எனக்கு மானமேபோகுது ,சும்மா பராக்கு பாக்காமல் வாங்கோ பாப்பம்" இது எனது "பிரிய சகியின்" குரல்.
கடை தெருவுக்கு போனால் எனது மனைவி நான் எங்கு "பராக்கு" பார்க்கிறன் என்று தான் பார்ப்பா.ஆனாலும் ஒண்டு தொட்டில் பழக்கத்தை மாத்த ஏலுமோ?


ஈழநாதனின் பதிவைப் பார்த்தவுடன் எனது ஞாபகத்தில் வந்த விடயங்கள் இவை.கிராம வாழ்க்கையின்ஒரு ரசிக்கதக்க,வியக்கதக்க அம்சங்களில் இதுவும் ஒன்று.படிப்பறிவு அற்றோர் இப்படி,இதன்வாயிலாக நாட்டுநடப்புக்களைஅறிந்துகொண்டனர்.அன்றைய நாட்களில் யாழப்பாணத்தின் பல கிராமங்களில் கண்ட காட்சியே இது.இன்று இலங்கை வானொலிகளிலும்,தொலைக்காட்சிகளிலும் இடம் பெறும் "பத்திரிகை கண்ணோட்டம்" த்திற்கு இவை தான் அடிப்படையாக இருந்திருக்க வேண்டும். இன்று காலமாற்றங்கள், இவைகளை அரித்துப்போகவைத்திருக்கலாம்.ஆனாலும் பழக்கங்கள்,வழக்கங்கள் காலவோட்டத்தில் மாறுவது நியதிதானே.கோவணம் கட்டிய எமது மூதாதையர்கள்,வேட்டி கட்டி,பின்பு சட்டை அணிந்து,இப்போது பாண்ட்,சேட்
இப்படி வந்துவிடவில்லையா? மற்றங்களே நிரந்தரம்.ஈழநாதனின் மேட்டருக்கு
க்டைசியில் வந்துவிட்டேன். என்ன ஈழநாதன் திருப்தியா?

(ஆனாலும் தமிழைப்பற்றி கதைத்தால் உணர்ச்சி வசப்பட்டு வேட்டி சட்டையுடன் முடிச்சு போடுகிறார்கள். தமிழைப்பற்றி கதைப்பதானால் கோவணம் அணிந்துதான் கதைக்க வேண்டும் என்று சொல்லாமல் விட்டார்களே அந்த மட்டில் சந்தோசம்.)

யாழப்பாணத்தில் சுருட்டு சுற்றும் சுருட்டு கொட்டில்களிலும் இப்படி செய்திகள் வாசிக்கப்படும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.ஆனால்நான் பார்த்ததில்லை.விடயம் தெரிந்த யாராவது அதைப்பற்றி எழுதலாமே.

வயது போனவர்களுக்குதான் இதைபற்றி தெரியும்.ஈழநாதன்,வசந்தன் கொஞ்சம்
கவனீங்கோ அப்பா.ஏன் கொழுவி,சயந்தன் ,குழைக்காடன்,வன்னியன் கூட எழுதலாம்.
. ஹீ... ஹீ

Monday, September 19, 2005

SriLanka - Witness to History -நூல் விமர்சனம்.

'சிறிலங்கா - வரலாற்றின் சாட்சி" என்ற ஆங்கில நூலைப் பார்த்தபோது பல எண்ணங்கள் மனதிலே வந்தன.

எழுபதுகளிலே, யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்த ஆங்கில வார இதழான Saturday Review என்னும் பத்திரிகையின் ஆசிரியராகப் பணிபுரிந்து வாசகர்களின் மனங்களில் நீங்காத இடத்தைப் பெற்ற " Saturday Review சிவநாயகம்" என்று அன்போடு அழைக்கப்பட்ட முதுபெரும் பத்திரிகையாளர் ஒருவரால் இது எழுதப்பட்டுள்ளது.

எமது இனப்பிரச்சனை உருவாகிய ஆரம்ப காலங்களிலே வெளிநாடுகளுக்கு வேலை தேடிச் சென்றவர்களும், உள்ளுரிலே வாழ்ந்த தமிழ் மக்களும், வாரம்தோறும் வெளிவந்த "Saturday Review" பார்த்துக்கொண்டிருந்த காலம் அது. அழகிய ஆங்கிலத்தில் உண்மையைச் சுவையாக எழுதும் ஆற்றல் படைத்தவர் சிவநாயகம். அவருடைய பேனா, அரசியலின் ஆழங்களை அநாயாசமாக, அழகிய சொற்சித்திரங்களாக வடித்துத் தந்தது. தமிழர்கள் மத்தியில் மட்டுமல்லாது, சிங்களப் பத்திரிகையாளர்கள், பிறநாட்டு பத்திரிகையாளர்களின் மதிப்பையும் பெற்று உயர்ந்தவர். Saturday Review என்னும் பத்திரிகைச் செயலகத்தை தேடி யாழ்ப்பாணத்திற்கு அமெரிக்கத் தூதுவர் முதல் பிறநாட்டு, உள்நாட்டுப் பத்திரிகையாளரும் ஒரு காலத்தில் செல்வதற்கான நிலையை உண்டாக்கியவர் திரு சிவநாயகம்.

அவர் இன்று தமது எழுபத்தி ஐந்தாவது வயதிலும் எழுதிக் கொண்டிருக்கிறார். இந்த வருட ஆரம்பத்தில் அவர் எழுதி வெளியிட்டிருக்கும் நூல் தான் 'சிறிலங்கா - வரலாற்றின் சாட்சி". கிட்டத்தட்ட 57 வருடகால ஈழத்தமிழினத்தின் வரலாற்றை (இலங்கை சுதந்திரம் பெற்ற காலம் முதல்) அவர் மிகவும் துல்லியமாக இந்நூலில் பதிய வைக்கிறார்.

இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இனவிடுதலைக்கான போராட்டங்கள் ஆரம்பிப்பதைச் சரித்திர வாயிலாகப் பார்க்கலாம். நோர்வே, சுவீடன், ஐயர்லாந்து போன்றவை தமது தனித்துவத்தைப் பாதுகாக்கும் முயற்சியில் தனியாக பிரிந்து போயின. இந்த வரிசையிலேயே தமிழினத்தின் விடுதலையையும் திரு சிவநாயகம் இந்நூலில் ஆராய்கிறார்.

வரலாற்றாசிரியர் ஒருவர் தேதி வாரியாக, செய்திகளைப் பதியும்பொழுது, அவற்றின் தொகுதி, அவை கூறும் பாதிப்பு, காரணமாக வாசிப்பவர்களின் மனதிலே பாரத்தையும், அழுத்தத்தையும் ஏற்படுத்தும் தன்மை ஒன்று உள்ளது. ஆனாலும் வரலாற்றையும் சுவையாகக் கூறமுடியும் என்பதற்கு திரு சிவநாயகம் அவர்களின் எழுத்து சிறந்ததோர் எடுத்துக்காட்டு.

83 ஆம் ஆண்டுமுதல் தமது பத்திரிகையில் சிங்கள அரசைத் தாக்கி எழுதிய காரணத்தால் இரவோடிரவாக நாட்டை விட்டுக் கடல் வழியே இந்தியாவுக்குச் சென்று தஞ்சம் புகுந்தவர், அங்கேயிருந்த அரசின் ஆதரவுடன் Tamil Nation என்னும் பத்திரிகையை ஆரம்பித்து எமது விடுதலைப் போராட்டத்தை உலகறியச் செய்தார். ஆனால் அரசியல் பழிவாங்கல் காரணமாக வேலூர்ச் சிறையில் மூன்று வருட காலம் அல்லல்பட்டு இந்திய அரசால் நாடு கடத்தப்பட்டு பிரான்சில் தஞ்சம் புகுந்து அகதியாகப் பல இன்னல்களைச் சந்தித்தார். எனினும் மேல்நாட்டு நூல் நிலைய வசதிகளின் பயனாக, அரசியல் ஆவணங்களைப் பெற்று உண்மையான சரித்திரச் சான்றுகள் நிறைந்த இந்நூலை அவரால் எழுத முடிந்துள்ளது. புற்று நோயாளியான இவர், தமது முதுமைக் காலத்தை பிறந்த மண்ணிலே கழிப்பதற்காக இன்று நாடு திரும்பியிருக்கிறார்.

'சிறிலங்கா - வரலாற்றின் சாட்சி" என்னும் இந்நூலில் தானே ஒரு சாட்சியாக நின்று எழுதுவது போல எழுதுகிறார் - அரசியலும் இவர் வாழ்வும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்திருப்பதால், இந்நூல் சுயசரிதை போலவும் சரித்திர நூல் போலவும் விளங்குவது தவிர்க்க முடியாதது.

1956 ஆம் ஆண்டு, யாழ்ப்பாணத்திலிருந்து தொடரூந்து மூலம் கொழும்பு நோக்கி வரும் இவர் நடுவழியிலே சிங்களக் கும்பல் ஒன்றினால் தாக்கப்பட்டு, தொடரூந்திலிருந்து வெளியே தள்ளி விடப்பட்ட கதையோடு நூலை ஆரம்பிக்கிறார். இவர் மாத்திரமல்ல வேறு பல தமிழர்களும் தன்னோடு அடி வாங்கியதையும் பார்த்தபோதுதான், தனது பிறந்த மண்ணிலே வாழமுடியாத காரணம், தான் தமிழனாகப் பிறந்த குற்றம் ஒன்றே என்பதை உணர்ந்ததாகவும் எழுதுகிறார். அன்று அவர் ஓர் இளைஞன். அப்பொழுது ஏற்பட்ட இந்த வடு அவரை ஒரு தார்மீக எழுத்தாளனாக உருவாக்கியது என்பதை இந்நூல் மூலம் அறிகிறோம். டெய்லி நியூஸ், டெய்லி மிரர் பத்திரிகைகளிலே அவர் தொடர்ந்து செயலாற்றிய போதும், Saturday Review இன் பின்னரே இன விடுதலையைப் பற்றி எழுதும் வலுமிக்க எழுத்தாளராக மாறுகிறார்.

இந்தப் பதிவைப் பார்த்தபோது மகாத்மா காந்தியை இந்தியர் என்ற ஒரே காரணத்துக்காக தென்னாபிரிக்க வெள்ளையர் ரயிலிலிருந்து வெளியே இழுத்துத் தள்ளிய நிகழ்வும், காந்திஜியின் வாழ்வில் அந்நிகழ்ச்சி ஏற்படுத்திய பாரிய மாற்றமும் நினைவில் வந்தது. இன விடுதலைக்காகச் சிறை சென்ற நெல்சன் மண்டேலா, இனத்துக்காகப் போராடி உயிரிழந்த சேகுவேரா போன்றவர்களின் வரிசையிலே திரு சிவநாயகத்தின் எழுத்துக்களையும் சேர்த்துப் பார்க்க முடிகிறது. இவரின் ஆயுதம் பேனா ஒன்றே. இந்தப் பலம் பொருந்திய ஆயுதத்தை அவர் கையாளும் முறையை இந்நூலிலே பார்த்து அதிசயப்படுகிறோம்.

இந்நூலின் பிரதான அம்சம் எமது இளைஞர்களின் இன விடுதலைக்கான தார்மீகப் போராட்டம் - அவர்களின் தியாகம். புலிப்படை வீரரின் தியாக உணர்வு அவரின் எழுத்தில் புதியதோர் உத்வேகம் பெறுகிறது. ஆழமாக எமது உணர்வைத் தாக்கி, எம்மை மெல்ல மெல்ல உலுக்கி விடுகிறது இவருடைய எழுத்துத் திறன். 'உள்ளத்தில் உண்மையொளி உண்டாயின் வாக்கினில் ஒளி உண்டாம்" என்பதை அவரின் எழுத்தின் சத்தியத்தில் தரிசிக்கிறோம்;. பெரும்பான்மையினரின் தந்திரங்கள், படைபலத்திற்கு முன் எமது மூத்த அரசியல்வாதிகளின் சாத்வீகப் போராட்டங்களின் தோல்வியை, இயலாமையை, உணர்ந்து செயல்பட்ட இளைஞர்களின் எழுச்சியை, நியாயப்படுத்துவதன் மூலம், தேதி வாரியாக, போராட்டத்தின் ஒவ்வொரு கட்டத்தையும் இவர் பதிய வைத்துள்ள முறையில் இது சிறந்ததோர் வரலாற்று ஆவணமாக விளங்குகிறது.

இந்தியாவிலே வாழ்ந்த காலத்திலே, அவருடைய அனுபவப் பதிவுகள், இன்றைய நிலையில் பின்னோக்கிப் பார்க்கும் போது பல செய்திகளை விளக்கி நிற்கிறது. தமிழ் மக்கள் இந்தியாவைத் தாயாகவும் தம்மைச் சேயாகவும் எப்பொழுதும் நினைத்திருந்தமையையும், பின்னர் ஏமாற்றமடைந்ததையும் வேதனையோடு பதிகிறார். தமிழரின் இன்றைய நிலைக்கு இது ஒரு முக்கிய காரணம் என்கிறார். இந்தியாவின் பிரித்தாளும் தந்திரோபாயத்தின் விளைவுகளால் பாதிக்கப்பட்ட தமிழினத்தின் விடுதலைப் போராட்டம், ஒரு இக்கட்டான சூழலில் இன்று இருப்பதையும் வல்லரசுகள் சிறிய இனங்களைப் பகடைக் காய்களாகக் கருதுவதையும் அரசியலாளரான இவரின் எழுத்தில் பார்க்க முடிகிறது.

இந்தியாவிலே தன்னைச் சிறையிலே அடைத்த போது, அங்கே காரணமில்லாமல் பல இலங்கையர் சிறையில் அடைக்கப்பட்டிருந்ததைப் பற்றி இந்த மனிதாபிமானி வேதனையுடன் எழுதுகிறார். சிறைவாசத்தின் போது அவர் அனுபவித்த துன்பம் வாசிப்பவர்களின் மனதை உலுக்கி விடுகிறது. சிறையிலிருந்து தன்னை விடுவிக்கவும், பின்னர் தனக்கு அரசியல் தஞ்சம் பெற்றுத் தரவும், தன்னுடைய எழுத்துப் பணிக்குப் பல வழிகளிலும் உதவி அளித்த புலம்பெயர் தமிழ் மக்களின் ஆதரவை நன்றியுடன் இந்நூலில் நினைவுகூர்கிறார்.

யாழ்ப்பாணத்தில் IPKF இனரின் செயல்களைக் கண்டித்து எழுதுகையில், அவர்களின் தளபதிகள் சிலர் புலிப்படைத் தளபதிகள் மீது வைத்திருந்த பெருமதிப்பையும் இந்நூலில் அவர் பதிவு செய்யத் தவறவில்லை. அரசியல் காரணங்களால், இனவிடுதலை எப்படிப் பாதிக்கப்பட்டது என்பதை ஆராயும் வகையில் போராட்ட வரலாற்றை முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாத பலருக்கும் இவரது விளக்கம்; தெளிவை ஏற்படுத்துகிறது.

யாழ்ப்பாண நூல் நிலையம் எரிந்த கதை பற்றி எழுதும்போது ஒரு இனத்தின் கலாச்சாரத்தை அழித்தால் அந்த இனத்தையே அழித்துவிடலாமென்று மனப்பால் குடித்தவர்களின் அறியாமையை எள்ளி நகையாடும் அவருடைய எழுத்து பல உண்மைகளை உணர்த்துகிறது. நூல் நிலையத்தின் நடு மாடியிலே புராதன ஏட்டுச் சுவடிகளும் அரிய ஆவணங்களுமிருந்தன என்றும் அவற்றிற்கே முதலில் இனவாதிகள் தீயிட்டனர் என்ற செய்தியை எழுதுகையில், ஏனைய நூல்களைக் காப்பாற்ற முடிந்தாலும், இவற்றை அழிக்க வேண்டும் என்பதே துவேச மனப்பான்மை கொண்டவர்களின் நோக்கம் என்ற உண்மையை உணர வைக்கிறார்.

இலங்கையின் அரசியல் வரலாற்றிலே, சிங்களத் தலைவர்களுடன் இணைந்து தமிழர்களான சேர் பொன்னம்பலம் இராமநாதன், சேர் பொன்னம்பலம் அருணாசலம் என்ற தமிழர்கள், இலங்கைக்குச் சுதந்திரம் பெற்றுத் தந்தவர்கள் என்றும், ஆனாலும் அதே சிங்கள மக்களின் துரோகத்தைத் தமிழ் மக்கள் காலம் கடந்து உணர்ந்ததையும் காட்டும் சிவநாயகம் அவர்கள், பிரிட்டிசாரிடம் திரு ஜின்னா பாகிஸ்தானைப் பெற்றது போல தமிழ் மக்களும் சுதந்திரம் பெற்ற பொழுதே தமது உரிமைகளைப் பெற்றிருந்தால் இன்று இந்நிலை வந்திருக்காது என்று வருந்துகிறார். 'நம்பிக் கெட்டவர்கள்" தமிழர் என்ற வருத்தத்தைப் பதிவு செய்கையில், அனிதா பிரதாப் என்னும் இந்தியப் பத்திரிகையாளருக்கு தமிழ்த் தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கூறிய வாசகத்தையும் இங்கே பதிவு செய்கிறார்.

'திரு ஜயவர்த்தனா ஒரு நல்ல பௌத்தராக இருந்திருந்தால், நான் இப்படி துப்பாக்கியோடு திரிய வேண்டியதில்லை" என்பதே தலைவரின் வாசகம்.
இவருடைய எழுத்தைப் பெரிதும் மதிக்கும் சிங்கள அறிஞர், திரு ஏட்றியன் விஜயமான (Adrianne Wijeyamanne) இந்த நூலுக்கு சிறந்ததோர் முன்னுரையை வழங்கி, எமது இன விடுதலையின் நியாயப்பாட்டை வலியுறுத்துவது நூலின் மதிப்பை உயர்த்திவிடுகிறது.

அன்றைய யாழ்ப்பாண வாழ்க்கையைச் சுவைபட எழுதும். சிவநாயகம் அவர்கள் தான் பிறந்து வளர்ந்த கொக்குவில் கிராமம் பற்றிய அழகிய சொற் சித்திரம் ஒன்றை இங்கே பதிய வைத்திருப்பது இந்நூலுக்கு மேலும் மெருகூட்டுகிறது.

'கொக்குவில், யாழ்ப்பாண நகர எல்லையில் அமைந்திருக்கிறது. அது கிராமமுமில்லை நகரமுமில்லை. சிறு சிறு ஒழுங்கைகள் ஒவ்வொரு வீட்டிலும் போய் முடியும். சைக்கிளை எடுத்துக்கொண்டு ஒழுங்கைகளுக்குள்ளால் சுற்றலாம். நினைத்தவுடன் யாழ்ப்பாண நகரத்திற்குப் போய் வந்து விடலாம். பின்னர் இந்தக் கிராமப் பண்பாட்டுக்குள் வந்து அமைதியாக இருக்கலாம்" என்று வர்ணிக்கிறார்.

யாழ்ப்பாணத்திலேயுள்ள எந்த ஒரு கிராமத்திற்கும் இவை பொருந்தும் என்றாலும், அவர் எழுதியுள்ள முறையில் அவருடைய கொக்குவிலைப் போன்ற அழகிய கிராமமே இல்லை என்பது அவருடைய ஊர்ப்பற்றையே காட்டுகிறது. இந்தப் பற்றே அவரின் இனப்பற்றாகவும் பின்னர் மலர்கிறது. கொக்குவிலிலே ஒரு பல்லினக் கலாச்சாரம் இருந்தது என்று எம்மை ஆச்சரியத்திலே ஆழ்த்துகிறார். வீடு வீடாகச் சென்று, சீனத்துப் பட்டு விற்ற சீன தேசத்து வியாபாரி, தலையிலே பெட்டியைச் சுமந்தபடி விசுக்கோத்து, சீனிப் பணிஸ், கேக் விற்ற சிங்கள பாண் வியாபாரி, பள்ளிகளிலே கர்நாடக இசை, ஆங்கிலம் கற்பித்த தென்னிந்திய தமிழ், மலையாளப் பட்டதாரிகள், சிங்களம் கற்பித்த பௌத்த பிக்கு என்று பலரைப் பற்றி எழுதுகிறார். இந்தப் பிக்கு தமிழை விரும்பிக் கற்று சிலப்பதிகாரத்தையும் மணிமேகலையையும் பின்னர் சிங்களத்தில் மொழிபெயர்த்து எழுதிய செய்தியையும் அறிகிறோம். தமிழறிஞர் தனிநாயக அடிகளார், இப் பௌத்த அறிஞரரன தம்மரத்ன தேரரை முதலாவது தமிழ் ஆராய்ச்சி மாநாட்டுக்கு அழைத்துக் கௌரவித்த போது அவர் 'சிங்கள எழுத்துக்களில் தமிழ் மொழியின் பாதிப்பு" என்னும் பொருள் பற்றி உரையாற்றியவர் என்று அறிய வியப்பாக இருந்தது.

கொக்குவிலை ஒர் உலகக் கிராமம் Global Village போல உருவாக்கி விடுவது அவரின் எழுத்தின் சிறப்பு. பல்லினக் கலாச்சாரம் என்ற கருத்து இந்நாட்களில் ஏதோவொரு புதிய கருத்துப் போலத் தோன்றினாலும், அன்றே எம்மவர் இவற்றை இயல்பாக ஏற்று பண்புடன் வாழ்ந்ததை பெருமையோடு குறிப்பிடும் வகையில் அவரது இனப்பற்று தெரிகிறது. மேலும் இவருடைய முன்னோரான முதலியார் இராசநாயகம் அவர்கள் ஈழத் தமிழரின் பெருமையை விளக்கும் "பண்டைய யாழ்ப்பாணம்"Ancient Jaffna என்னும் நூலைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுபது ஆண்டுகளுக்கு முன்னரே எழுதியுள்ளார் என்பதையும் இந்நூல் மூலம் அறிய மகிழ்ச்சியாக இருக்கிறது.

இவ்விடத்தில், சிவநாயகம் அவர்கள் இந்நூலில் குறிப்பிடும் ஒரு கதையைப் பற்றிக் கூறி இவ்விமர்சனத்தை நிறைவு செய்ய விரும்புகிறேன்.
அமெரிக்க எழுத்தாளரான ஏர்னெஸ்ட் ஹெமிங்வே என்பவர் The Old Man and the Sea (கிழவனும் கடலும்) என்ற ஒரு நாவலை எழுதியுள்ளார்.

ஒரு கிழவனுக்கு கடலிலே மீன் பிடிக்கும்பொழுது தூண்டிலிலே பெரிய மீன் ஒன்று சிக்கியது. அவனுக்கு அதனைக் கரைக்குக் இழுத்துவரும் சக்தி இருக்காததால், அதனை ஒரு சிறுவனின் உதவியோடு கரை சேர்க்கிறான். ஆனால் கரைக்கு வந்தபின் பார்த்தால், மீனைக், காணவில்லை - அங்கே மீனின் எலும்புக்கூடு மாத்திரமே இருந்தது. வலிய சுறா மீன்கள் மீனின் சதையை உண்டுவிட்டன. இந்த நூலை எழுதும்போதெல்லாம் இந்தக் கதை தனது மனதில் மீண்டும் மீண்டும் வந்தபடியே இருந்ததாக சிவநாயகம் அவர்கள் எழுதுவதை வாசிக்க வேதனையாக இருந்தாலும், கதையில் வந்த முதியவரைப் போலல்லாமல், அவர், தனது முதுமையிலும், நோய் வாய்ப்பட்ட நிலையிலும், மனவலிமை ஒன்றையே ஆயுதமாகக் கொண்டு, ஒரு சிறந்த பொக்கிசத்தைத் தமிழ் மக்களுக்கு, உலக வரலாற்றுக்கே தந்துவிட்டார் என்று நாம் பெருமைப்படலாம். அவருடைய ஆங்கில சொற்பிரயோகத்தின் வன்மை, அதனூடு இழையோடும் நகைச்சுவை, அரசியல் உண்மைகளை மனதில் பதியவைக்கும் திறமை ஆகியன இவ்வரலாற்று நூலை ஏனைய வரலாற்று நூல்களிலிருந்தும் வேறுபடுத்திக் காட்டுவதால் இன்றைய எமது இளம் தமிழ்ச் சந்ததியினருக்கு இந்நூல் ஒரு சிறந்த கொடை என்பதில் சந்தேகமில்லை.

"Que Sera Sera
Whatever will be,will be,
நடப்பதுதான் நடக்கும்"

என்னும் பாடல் வரிகளோடு நூலை நிறைவு செய்யும் சிவநாயகம் அவர்கள் - தனது வாழ்வு 'பாம்பும் ஏணிப்படியும்" (Snake & The Ladder) போன்றது என்றும், ஏதோ கண்ணுக்குத் தெரியாத சக்தி ஒன்று தன்னை வழிநடத்தியது என்றுதான் சொல்லலாம் என தனது கதையை முடிக்கும்போது

'எழுதிச் செல்லும் விதியின் கைகள் எழுதி எழுதிச் மேற் செல்லுமே"

என்ற உமர் கய்யாமின் பாடல் வரிகள் நினைவுக்கு வருகின்றன.

பராசக்தி சுந்தரலிங்கம் (அவுஸ்திரேலியா)/ தமிழ்நாதம்

எங்கே போகிறோம் நாம் ?- பகுதி 3

ரி அவர்களை விடுவோம். நாம் என்ன செய்கிறோம். எங்கள் உள்ளே எழுந்த காய்ச்சல் அடக்க மானுடத்துக்கு எதிராக பாடுகிறோம்.விடுதலைக்கு எதிராக வீறுகொள்கிறோம்.அப்போது தமிழ் இளைஞர் பேரவைக்கு தலைவராக இருந்த சி.புஷ்பராஜா எழுதிய "ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம்" என்னும் நூல் எழும் தேவை ஏன் வந்தது? தன்னை மையப்படுத்திய அக்காலத்தைய தமிழீழ விடுதலைப் போர் பற்றி எழுதுகிறார்.தானே மணமகன்,தானே பிணம் என்கின்ற உளவியல் சிக்கல் அந்த நூலில் ஊடுபாவாக ஓடியது. அதே காலத்தில் போராளியாக இயங்கிய ஒரு சிலரிடம் நான் கதையாடியபோது "இது மிக போக்கிலிதனமான ஒரு புத்தகம்"என்று ஒருவர் சொன்னார். இப்போது அது குறித்து விரிவாக எழுதுவது என் நோக்கம் அல்ல.பொதுப் பார்வையிலும்,பொதுப்புத்தியிலும்,விமர்சனபூர்வமாகவும் ஒருநூல் வரவேண்டியதும் அவசியம்.

ஷோபாசக்தியின் "கொரில்லா","ம்" ஆகிய புதினங்களும் சில சிறுகதைகளும் ஈழ விடுதலைப் போர் மீது சேற்றை அள்ளிவீசும் செயலாகவே எனக்குப்படுகிறது."தேசத்துரோகி" என்றொரு சிறுகதை. அக்கதையில் அப்பாவித் தமிழர் அவலமாக கொல்லப்பட்ட துன்பவரி வந்ததுதான்.அனால் அதையும் விட துருத்திக்கொண்டு நின்றது வேறொரு செய்தி 'மிகுந்த கோபத்துடன் அகங்காரமும் வீரமும் தோய்ந்த குரலில்' அப்பாவி தமிழர்களை மிதிவெடிக்குள் விரட்டிக்கொன்ற ரணில் விக்கிரமசிங்க என்னும் முன்னைய சிறீலங்கா பிரதமரை தமிழீழவிடுதலைப் புலிகள் நம்புகின்றார்கள் என்பதே!இது அரசியல் ஆய்வாகவோ அல்லது இராணுவ ஆய்வாகவோ தெரிவிக்கப்பட்டிருந்தால் அச் செய்தி பார்வைக்குரியதே! ஆனால் ஒரு சிறுகதையில் அது சொல்லப்பட்டிருக்கும் மறைமையானது வலிந்து தாக்கும் முறையாகும்.ஒன்றைச் சொல்லலாம்.நமது தேசிய விடுதலை அமைப்பான தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பும் நமது தலைமையும் விலை போகக்கூடிய ஒன்றோ அல்லது ஏமாறக்கூடிய ஒன்றோ அல்ல. ஷோபாசக்திக்கு அந்தக்கவலை வேண்டாம்.

இப்படி ஒரு சிலரின் செய்கை இப்போது,இந்த விடுதலைப் போரில் மாத்திரம் நிகழ்வது அல்ல.எப்போதும்,எந்த விடுதலைப்போர் நிகழ்ந்த காலத்திலும்,இப்படியானவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.எம் கடன் என்னவெனில் இப்படியானவர்களை இனம் காண்பதும்,இவர்களை உலகுக்கு அறிவிப்பதுமாகும்.அவ்வளவே!

அ.இரவி அவர்களால் எழுதப்பட்டு முழுமையான கட்டுரையாக வெளிவந்ததை இங்கு பகுதிகளாக்கி தந்தேன்.(எனது நேரம்,வசதி கருதி)

Monday, September 12, 2005

கோக் vs பெப்சி:- குடிக்கலாம்- இரசிக்கலாம்


மேலே நீங்கள் பார்க்கும் படத்தில் காணும் கட்டடத்தின்,இரண்டாவது மாடியில் கொக்கா கோலா மென்பான நிறுவனத்தினர் தமது அலுவலகத்தினை அமைத்தனர்.தமது விளம்பரப் பலைகையினையும் நாட்டினார். இது நடந்து சில நாட்களின் பின்னர் அவர்களின் விளம்பரப்பலகையின் கீழே பெப்சி கம்பனி தனது விளம்பரப் பலகையை நிறுவியது அதிரடியாக.அதிலே இடம் பெற்ற வாசகங்களை படத்தினைப் பார்த்துப் படித்துகொள்ளுங்கள்.சரியான நெத்தியடி கோக்கிற்கு.

சரி இந்த சம்பவம் எங்கு நடந்தது? படத்தில் தெரியும் தமிழ் எழுத்துக்கள்,ஆட்டோ,பெண் போன்றவற்றினை வைத்து பார்த்தால் எங்கு நடந்தது என்பதை சொல்லவும் வேண்டுமா? கோக்கிற்கும் பெப்சிக்கும் இடையில் இப்படி ஆரோக்கியமான விளம்பர போட்டிகள் அடிக்கடி நடப்பது எல்லோரும் அறிந்ததே.மேலே குறிப்பிட்டதை போல பெப்சிக்கும் கோக்கிற்கும் இடையில் நடைபெற்ற மற்றுமொரு சுவாரசியமான விளம்பரப் போட்டி.

ஒரு முறை கோக் கம்பனியின் விளம்பரம் இப்படி இருந்தது.ஒரு குரங்கு ஒரு பெரிய மரப்பலகையினை ஒவ்வொரு ஆணிகளாக எடுத்து சுத்தியல் மூலம் அறைந்து கொண்டு இருந்தது.கருமமே கண்ணாக ஒவ்வொரு ஆணியாக அறைந்துகொண்டிருந்த குரங்கின் அருகில் கோக் போத்தல்கள்.உடனே தொலைக்காட்சி திரையில் இந்தவாசகங்கள்.

"கடமையே கண்ணாக இருப்பவர்கள் அருந்துவது கோக்"

பார்த்தார்கள் பெப்சி கம்பனிகாரர்கள்.உடனேயே அவர்களும்கொண்டுவந்தார்கள் பதிலடியாக ஒரு விளம்பரம்.ஒரு கடற்கரை, குளியல் உடையில் ஆண்கள் பெண்கள்.ஒரு ஜீப் வருகிறது.அதில் நீச்சல் உடையில் இளம்பெண்கள்அமர்ந்திருக்க அவர்களின் மத்தியில் தொப்பி அணிந்தபடி கோக் விளம்பரத்தில் வந்தது போல ஒரு குரங்கு அதிரடி இசை ஒலிக்க. இப்போது திரையில் தெரிந்தன இந்த வாசங்கள்

"வாழ்க்கையை அனுபவிக்க தெரிந்தவர்கள் அருந்துவது பெப்சி"

இது எப்படி இருக்கு? நான் பார்த்தவரையில் கோக்கின் தோற்றம் ,விளம்பரம் போன்றவற்றினை பார்த்தால் 35 வயது பெண்ணை பார்ப்பது போல ஒர் பிரமையும்.பெப்சியின் விளம்பரங்களை பார்த்தால்16 பெண்ணைபார்ப்பது போல் ஒரு பிரமையும் தெரிகின்றது.

ஹி.ஹீ,ஹீ . உங்களுக்கு எப்படி?

காதைக் கிட்ட கொண்டு வாங்கோ ஒரு ஜோக்.

ஒரு ஆராச்சியாளர் அடிக்கடி ஆராய்சிக்காக வடதுருவத்துக்கு போவார்.ஆனால் தனது உதவியாளார்கள் இருவரை மட்டும் அழைத்துப் போவார்.அதில் ஒருவர் 50 வயது பெண். கடிகாரம்,கலண்டர் எதுவும் எடுத்துப்போகமாட்டார் பேராசிரியார்.ஆனால் சரியாக ஆறாவது மாதம் தனது ஆராய்சியை முடித்துக்கொண்டு வீடு திரும்பி விடுவார்.இப்படி அடிக்கடி நடக்க ஆச்சரியம் தாளாத ஆராச்சியாளரின் நண்பர் கேட்டார்.என்னப்பா நீ கலண்டர் ,கடிகாரம் கொண்டு போவதில்லை ஆனால்எப்படி சரியாக 6வது மாதம் வீடுதிரும்ப முடிகிறது என்று?ஆராச்சியாளர் சொன்னார் எல்லாம் அந்த 50 வயது பெண் உதவியாளார் மூலம் தான் என்று. நண்பருக்கு சந்தோஷம் தாளமுடியவில்லை.ஒரு கிளுகிளுப்பான கதை கிடைக்கப்போகிறதே என்று?ஆராச்சியாளார் சொன்னார் நண்பனே எப்போது அந்த 50வயது பெண் அழகாக எனக்கு தெரிகிறாளோ அப்போது நான் முடிவு செய்து கொள்வேன்,எனது ஆராய்ச்சியை முடித்து வீடு திரும்ப வேண்டிய காலம் வந்து விட்டது என்று.

Friday, September 09, 2005

எங்கே போகிறோம் நாம் ?- பகுதி 2

ப்படி எல்லாம் நான் இங்கு எழுதுவது யாரையும் கிண்டலடிக்கவோ நோகடிக்கவோ அல்ல.ஒரு கோபம் அவ்வளவுதான்.ஒரு சமூகம்
உயிருக்கு அல்லாடிக்கொண்டு இருக்கிறது.வாழ்வுக்கு போராடிக்கொண்டு இருக்கிறது.அடையாளம் யாவும் அகற்றப்பட்டிடுமோ என்று கதறிக்கொண்டிருக்கிறது.வானில் எங்கும் வல்லூறுகள் வட்டமிடுகின்றன.அமெரிக்கா என்றும் இந்தியா என்றும் தமது பென்னாம் பெரிய சிறகை விரித்துப் பறப்பு செய்கின்றன.சிங்கள தேசம் என்னும் பருந்தும் கூடவே பறந்து கொத்துகின்றது.கோழிக்குஞ்சுகள் நாம் காக்கப்படவேண்டும்.வளரவேண்டும்.வாழவேண்டும்.சமாதானம் பற்றி,
அமைதி பற்றி,மனிதஉரிமை பற்றி பேசிப்பேசியே இந்த வல்லூறுகள்
நம்மை சாவுக்கு இரையாக்கிவிடும்.எம்மவரும் ஏதும் அறியாது அல்லது ஏதும் அறியாதுபோல் நடித்து தமது சொந்தக் "காய்ச்சலை" தீர்த்துக்கொள்ள பேனாவை தூக்கிவிடுவர்.

பாரதியாரின் இருவரிகளைஇப்பொழுது நான் இவர்களுக்கு
சமர்ப்பிக்கின்றேன்.

"ஆயிரம் உண்டிங்கு ஜாதி எனில்
அன்னியர் வந்து புகல் என்ன நீதி?"

கவிதைகள் சில எம் போரின் தேவையை இழித்துப் பாடி விட்டன.
அவைபற்றி சொல்லப்புகின்,அதிக ஒற்றைகளையும் அதிக நேரத்தினையும் நான் தேடவேண்டிவரும்.அப்படி தேடினாலும் இந்த எழுத்துக்களை அச்சுக்கோர்க்க என்னிடம் எழுதக்கேட்டோர் பஞ்சிப்படுவார்களோ என நினைத்து விடுகிறேன்.கவிதைகளை நாம் தவிர்த்தாலும் உரைநடையில்
கூட நமது போருக்கு எதிரான முக்கியமான பதிவுகளை நாம் காண்கிறோம்.முன்னர் ஒரு காலத்தைய "போராளி" என்று அறியப்பட்ட சி.புஸ்பராஜா எழுதிய "ஈழப் போராட்டத்தில் எனது சாட்சியம்" என்னும்(கிட்டத்தட்ட சுயசரிதைக்)குறிப்பு நூலும் ஷோபாசக்தி எழுதிய சில சிறுகதைகளும்,கொரில்லா, ம் என்கின்ற நாவல்களும் இந்த வகையில் சொல்லவேண்டியன. இனி வருவனவற்றினை வாசிக்க முன்னர்
முதலாம் பதிவில் முதலாம் பந்தியினை மீளவாசிக்கக் கடவீர்.

அவ்வாறு வாசித்து முடித்த பின்னால் ஒரு உண்மையை இப்போது ஒப்புக்கொள்ளலாம்.மேற்குறிப்பிட்ட நூல்களும் வேறு சில கவிதைகளும் தங்கள் காய்ச்சலை வெளிப்படுத்த எழுதப்பட்டவைதாம்.அப்படி எழுதுகிறபோது அவர்கள் விரும்பியோ விரும்பாமலோ மானுட
விடுதலைக்கு எதிரான பாடலையே பாடிவிடுகின்றன.அவர்கள் நோக்கமும் அதுதான் என தெள்ளென தெளிவாகின்றது.கோவிந்தன் "புதியதோர் உலகம்"எழுதுகின்றபோது,அது எதிரிக்குசாதகமாக அமைந்து விடுமோஎன் அஞ்சி அஞ்சி எழுதிய போக்கு இத்தகையோரிடம் காணக்கிடைக்கவில்லை.இவர்கள் தம்மை முன்னர் போராளிகளாக அறிவித்துக்கொண்டவர்கள்.சிறு துரும்பாவது போருக்கு போட்டிருக்கிறார்கள்.அனால் வெளியே வந்து,போராட்டத்தினை எள்ளி நகையாடுகிறார்கள்.

ஆக்கபூர்வமான விமர்சனமாக இருந்தால் அதன் உயர் நோக்கம் கருதி இருகரம் நீட்டி வரவேற்கலாம்.இது காய்சலாகவே அமைந்து விடுகின்றது.மேற்குறித்த நூல்கள் பற்றிய விமர்சனத்தை நான் இப்போது முன்வைக்கப்போவதில்லை.இவற்றை கவனத்தில் எடுக்கத் தேவையில்லை என்றும் கருதுகிறேன்.கவனத்தில் எடுக்கவேண்டிய தீய சக்திகள் அவற்றை கவனத்தில் எடுத்தும் விட்டன.ஆகும் வேலையை அந்த சக்திகள் பார்த்துக்கொண்டும் இருக்கின்றன.இந்நூல்கள் பற்றிய சாதகமான விமர்சனங்கள்,தட்டிக்கொடுப்புக்கள்,முன்னெடுப்புக்கள்,
அறிமுகப்படுத்தல்கள்
என்று சகலகாரியங்களையும் இந்த சக்திகள் செய்துகொண்டிருக்கின்றன.இவர்கள் ஈழத்தில் ஒரு போர் நிகழவதைக்
கூட கணக்கில் எடுக்காதவர்கள்.ஈழத்து தமிழ்தேசிய விடுதலைப்
போரின் நியாயம் குறித்து ஒரு வரி பேசாதவர்கள்.அவை குறித்து எழுந்த இலக்கியங்களை ஏறெடுத்தும் பார்க்காதவர்கள்.ஈழத்தில் கவிதை இந்தவிதமாக வளர்ந்திருக்கிறதே என்பதை கவனத்தில் கொள்ளாதவர்கள்.அவர்களது அங்கீகாரத்துக்காக ஈழத்தில் நாம் ஒன்றும் "பண்ணவில்லை". ஆனாலும் அவர்கள் யார் என்பதை
அடையாளப்படுத்தவே இவற்றைச் சொன்னேன்.

ஆனால் ஈழ விடுதலைக்கு எதிராக ஏதும் படைப்புக்கள் வந்தால் இத் தீயசக்திகள் அவற்றை எடுத்து ஏந்தி,ஏற்றிவைத்து தொழுது போற்றுவர்.எப்படியோ அவர்களின் கண்ணில் அவை பட்டுவிடும்.ஈழத்து இலக்கியம் என்றால் அவர்களுக்கு தெரிபவர்கள் யார் என்று பட்டியல் போட்டாலே அவர்களது கணக்கு புரிந்துவிடும்.அந்தபட்டியல் இரண்டு வகையானதாக இருக்கும்.ஒன்று ஈழவிடுதலைப் போருக்கு எதிராக எழுதுபவர்கள்.இரண்டு ஈழவிடுதலைப் போர் குறித்து ஏதும் கதையாதவர்கள் தப்பித்தவறி ஈழம் என்ற சொல்கூட வராது பார்த்துக்கொள்பவர்கள்.

தொடர்ந்து வரும்............
நன்றி.அ.இரவி

சந்திரமுகி "ராரா" பாடல்:- தெலுங்கா? தமிழா?

ங்கு ரொரண்டோவில் ஒலிபரப்பாகும் தமிழோசை வானொலியினை நான் அடிக்கடி கேட்பதுண்டு.இரவு 12.00 முதல் அதிகாலை 6.00மணிவரை இந்த வானொலி நிகழ்சிகள் இடம்இடம்பெறும். நேற்றைய தினம் அறிவிப்பாளர் கஜன் அவர்களின் அறிவிப்பில் 12.00 மணிதொடங்கி 1.00 மணிரையிலான நிகழ்சிகள் இளமைத்துடிப்புடன் களை கட்டியிருந்தன.இரவு 1.00 மணிவரை நல்ல பாடல்கள் பலவற்றை நேயர்கள் கேட்டுக்கொண்டிருந்தனர்.நானும்
உறக்கம் வரும்வரை கேட்டுக்கொண்டிருந்தேன்.

அந்நிகழ்சியில் கலந்துகொண்ட பெண் ஒருவர் சந்திரமுகி படத்தில் இடம்பெற்ற ராரா பாடலை ஒலிபரப்புமாறு கேட்டபோது அறிவிப்பாளர் கஜன் சொன்னார் இந்த ராராபாடலை தான் தமிழில் தரப்போவதாகவும் நீங்கள் இதுவரையில் கேட்டிருக்கமுடியாது என்று சொல்லி அந்தப்பாடலை ஒலிபரப்பினார்.

நான் சந்திரமுகி படத்தை இதுவரையில் பார்க்கவில்லை.பாடல்கள் தான் கேட்டிருக்கிறேன்.இந்த ராரா பாடல் தெலுங்கில் ஒலிப்பதைத்தான் இதுவரையில் கேட்டிருக்கிறேன். படத்திலும் தெலுங்கில் தான் இடம் பெற்றிருப்பதாக படித்திருக்கிறேன்.நான் அறிய விரும்புவது இந்த பாடல் படத்தில் தமிழில் உண்டா? அல்லது இப்போது தமிழில் தயாரித்து புதிய இசைத்தட்டில் சேர்த்திருக்கிறார்களா? இப்படி வேறு சில பாடல்கள் பின்னாளில் இசைத்தட்டில் சேர்த்திருக்கின்றனர்.எப்படி இருந்தாலும் கர்நாடக இசையில் அமைந்த இந்த பாடல் தெலுங்கில் கேட்டாலும் சரி,தமிழில் கேட்டாலும் சரி இனிமையாகவே இருக்கிறது. மனதை கொள்ளை கொள்கிறது.

Tuesday, September 06, 2005

எங்கே போகிறோம் நாம் ?- பகுதி 1

நான் எழுதி வைத்திருந்த ஒரு கட்டுரையினைவிட பதிக்க எண்ணியிருந்த போதினிலே திரு அ.இரவி அவர்களால் எழுதப்பட்டிருந்த இக் கட்டுரை கண்ணில் பட்டது. நான் எழுதிவைத்திருந்த சில விடயங்களை விட மிக அழகாக எழுதப்பட்டிருந்த இக் கட்டுரையினை இங்கு பதிக்கலாம் என்று எண்ணி இக் கட்டுரையினை இங்கு பதிக்கிறேன்.

என்னுள் எழுந்த அதே கோபம் இக்கட்டுரையாளரிடமும் எழுந்ததன் விளைவே இந்த கட்டுரை யதார்த்தம் புரியாமல் இன்னும் 1987 க்கு முற்பட்ட காலங்களிலேயே நின்றிருக்கும் சில 56,57,46 வயதில் உள்ளோருக்கு இதில் உள்ளவை பரிந்துரைக்கப்படுகிறது.வயது,படிப்பு மட்டும் அறிவையோ முதிர்ச்சியையோ தீர்மானிக்காது.

யாரையும் காயப்படுத்தவோ அல்லது நோகடிக்கவோ இக்கட்டுரை இங்கு பதிக்கப்படவில்லை என்பதை புரிந்து கொள்ளவும்.

கட்டுரை ஆசிரியர் திரு அ.இரவி அவர்களுக்கு நன்றி

-------------------------------------------------------------------------------------------

"புதியதோர் உலகம்" என்றொரு நாவல் 1985ல் வந்ததது.கோவிந்தன் எழுதியிருந்தார்.கோவிந்தன் அவர்கள் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின்(பிளாட்-PLOT) அங்கத்தவராக செயற்பட்டவர்.அந்த அமைப்பில் நிலவிய அராஜகம் ஜனநாயகமின்மை காரணமாக அதிலிருந்து வெளியேறியதாக கோவிந்தன் எழுதியிருந்தார்.அவ்வாறு வெளியேறி தலைமறைவாக இருந்த இரண்டு மாத கால இடைவெளியில் இவ் நாவல் எழுதப்பட்டிருக்கிறது.தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் அராஜகச் செயற்பாடுகளை வெளிப்படுத்தும் தொனிப்பொருள் கொண்டது இவ்நாவல் ஆயினும் அந்நாவலின் முன்னுரையில் கோவிந்தன் மேலும் எழுதுகிறார்.

"இந்நாவல் கூறும் விடயங்களை சிறீலங்கா அரசு தனக்கு சாதகமாக பயன்படுத்தி தமிழீழ விடுதலைப் போராட்டத்தினை சிறுமைப்படுத்தும் பிரசாரத்தினை மேற்கொள்ளலாமே என்ற அச்சம் இந்நாவல் படைக்கப்படும்போது கூட இருந்தது.கூடுமானவரை அந்த உணர்வு வாசகர்களுக்கு ஏற்படாதவகையில் நாவல் உருவாக்கப்பட்டது...."

ஒரு எழுத்து போராளி எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு கோவிந்தனின் கூற்று மெத்தச்சரியான உதாரணம்.விடுதலைப்போரை அவர் நேசித்ததன் அடையாளம் தான் இவ்வாசகங்கள்.அந்தநேசிப்பிலிருந்தும் சத்தியத்திலிருந்தும் பிறந்ததனால் மிகச் சிறந்த தமிழ்நாவல்களுள் ஒன்றாக புதியதோர் உலகம் நாவலும் அமைகின்றது.

அனால் இப்போதெல்லாம் என்ன நடக்கின்றது?மானுடத்தை,விடுதலையைநேசிக்காதோர்,படைப்பாளிகளாக வரலாறு எழுதுவோராக வந்ததனால் சில விகற்பங்கள் நிகழகின்றன.தமக்கு நேர்ந்த அனுபவங்களை பொதுஅனுபவங்களாக்கி,தம்மை மாத்திரமே மனிதர் எனநினைத்து, தனக்கான சுதந்திரத்தினை மாத்திரமே அவாவி நின்று,மானுடவிடுதலையை விலைகூறுபவர்களாக சில படைப்பாளிகள் மாறி வருகின்றனர்.அதுதான் மண்ணுக்கு,மக்களுக்கு செய்துவிட்ட பாதகச்செயல்.

"எனது மண்ணில்
நிச்சயமற்று போய்விட்ட
எனது இருப்பை உறுதிப்படுத்த
பிறந்தமண்ணின் எல்லையைக்கடந்தேன்"

என்று ஒரு கவிஞர் கருதுகின்றார்.அவரது உயிர்ப்பயம் என்பது அவரால் மாத்திரமே உணரப்படமுடியும்.அது பற்றிஏதும் பேச இயலாது.சரி அவ்வளவற்றுடன் அந்தக் கவிதையை அவர் நிறுத்திவிடவில்லை.மேலும் தொடர்கிறார்.

"இறுதியாக பாதங்களில்
ஒட்டியிருந்த செம்மண்ணையும்
தட்டியாயிற்று"

அந்தக்கவிஞர் தன் பிறந்த மண்ணின் எல்லையில் தன் மண்ணின் அடையாளத்தினை முற்று முழுதாக களைந்துவிடுகிறார்.இப்போது அவர் அந்த மண்ணுக்கு உரியவர் அல்லர்.இறுதிவரி இப்படி முடிகிறது.

"செம்மண்ணும் போயிற்று
எம்மண்ணும் போயிற்று"

இப்போது சொந்த மண்ணையே முற்றாக மறந்து விடுகிறார்.முற்றுப்புள்ளிவைத்தாயிற்று.இப்படி முற்றுப்புள்ளிவைப்பது வலு இலகு.இனி சமையல்,சாப்பாடு,கோயில்,கும்பிடு என்று இலெளகீக வாழ்க்கைக்குள் நுழையவேண்டியதுதான்.அதுவெல்லாம் சரி.மெத்தச் சந்தோஷம்.சாகும் வரை போராடி ஏன் வாழ்வான்? வாழ்வு இடர் தருகிறதா?உதறி எறிந்திட வேண்டியதுதான்.உபத்திரம் இது.

ஆனால் வேறொன்றுதான் சற்று உதைக்கிறது.இந்தக் கவிதை எழுதிய இதே கவிஞர் முன்னர் வேறுபல கவிதைகளையும் எழுதிவிட்டு போய்விட்டார்

"தோழி
எழுந்து வா
இன்னும் இருட்டினில் என்னடி வேலை?"

என்று இருட்டினில் நித்திரைப்பாயில் படுத்திருந்த பலரையும் எழுப்பி பின்னால் வரச்சொல்லியும் கூப்பிட்டுவிட்டார்.இப்போது இந்தக்கவிஞர் "குண்டி மண்ணையும்" தட்டிவிட்டு போனபின்,எழுந்துவந்த அவர்கள் என்ன செய்வதென்றறியாது கலங்குகின்றார்கள்.

இனிச் சற்றுக் காத்திருந்தால் போதும்"மனித உரிமைகளின்" பெயரில் "நியாயவாதி"களின் பெயரில் ஆதிபத்தியநாடுகளும் அதன் அடிவருடிகளும்,விருதும் சொச்சப்பணமும் தேவைப்பட்டால் புலமைப்பரிசிலும் தந்து விலை பேசிவிடுவார்கள்.

தொடரும்................