Wednesday, December 19, 2007

திருமலையில் பல கிராமங்களிலிருந்து முஸ்லிம்களை வெளியேற்ற திரைமறைவில் சதி நடவடிக்கை

திருகோணமலை மாவட்டத்தில் பல கிராமப்புற முஸ்லிம் குடியிருப்புகளிலிருந்து முஸ்லிம்களை வெளியேற்ற திரை மறைவுச் சதி மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

கிண்ணியா பிரதேச சபைப் பிரிவிலுள்ள பல இடங்களிலிருந்து முஸ்லிம்களை வெளியேறுமாறு பொலிஸார் அச்சுறுத்தி வருவதாகவும் முஸ்லிம்கள் வன இலாகாவுக்குட்பட்ட காணிகளில் அத்துமீறிக்குடியேறி இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

அரசாங்கம் 1971 ஆம் ஆண்டு முதல் குடியிருந்து வந்த முஸ்லிம்களை தமது பிறந்த இடங்களிலிருந்துவெளியேற்ற திட்டமிட்டுச் செயற்பட்டுவருவதாக திருகோணமலை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தௌபீக் தெரிவித்திருக்கின்றார்.

இது பற்றி அவர் மேலும் விளக்கமளிக்கையில் கூறியதாவது;

கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வட்ட மடு, செம்பி மோட்டை,வழைமடு, பனிச்சங்குளம், கள்ளரப்பு, குரங்குப் பாஞ்சான், போன்ற கிராமங்களில் முஸ்லிம்களுக்குரிய குடியிருப்புக்காணிகள், விவசாய காணிகளிலிருந்து அவர்களை உடனடியாக வெளியேறுமாறு பொலிஸார் உட்பட அதிகாரிகள் அச்சுறுத்தி அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.

ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்களை உடனடியாக வெளியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

காணி அபிவிருத்திச் சட்டத்தின் கீழ் 1971 ஆம் ஆண்டிலும், 1979 ஆம் ஆண்டு காலப்பகுதியிலும் வழங்கப்பட்ட காணி அனுமதிப் பத்திரங்களுக்கமையவே இக்காணிகளில் முஸ்லிம் மக்கள் குடியிருப்புகளில் குடியேறி விவசாயத்தில் ஈடுபட்டு வந்தனர்.

1990 ஆம் ஆண்டில் இடம்பெற்ற கலவரம் காரணமாக இப்பிரதேச மக்கள் தமது விவசாய நிலங்களையும், குடியிருப்புகளையும் கைவிட்டு வெளியேறி வேறுபகுதிகளில் தஞ்சமடைந்தனர். சுமார் 17,18 வருடங்களுக்குப் பின்னர் இந்த முஸ்லிம் மக்கள் தமது சொந்த இடங்களுக்கு மீண்டும் திரும்பி விவசாயத்தை மேற்கொள்ளத் தொடங்கியுள்ளனர்.

இந்த நிலையில் அரச காணிகளில் அத்துமீறி குடியேறியிருப்பதாக குற்றச்சாட்டு சுமத்தி இவர்களை உடனடியாக வெளியேற்றும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இக்காணிகள் வனபரிபாலன திணைக்களத்துக்குரியதெனக் கூறி அதிகாரிகளும், வான் எல பொலிஸாரும் அக்குடியிருப்புக்களில் மக்களை அச்சுறுத்தி உடன் வெளியேறுமாறு கட்டாயப்படுத்துகின்றனர்.

கிழக்கு மாகாணத்தை அரசு முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருப்பதாகவும், அங்கு மக்கள் சுதந்திரமாகத் தமது செயற்பாடுகளை மேற்கொள்ள முடியுமெனக் கூறும் அரசாங்கம் மறுபுறத்தில் குடியிருப்புகளிலிருந்து முஸ்லிம்களை வெளியேற்றும் நடவடிக்கைகளை முடுக்கிவிட்டிருக்கின்றது.

அரசு இவ்விடயத்தில் உரிய நடவடிக்கை எடுத்து நியாயம் பெற்றுக்கொடுக்கத் தவறினால் இப்பகுதி முஸ்லிம்கள் பெரும் நெருக்கடிக்குள் தள்ளப்படலாமெனவும் அந்த மக்களை இன்னுமொரு தடவை அகதிகளாக்க வேண்டாமெனவும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் அரசுக்கு வலியுறுத்தியுள்ளார்.

thinakkural

Sunday, December 09, 2007

காங்கிரஸ் கட்சியினரை திகைக்க வைத்த எஸ்.ஆர்.பி.யின் புதிய காய் நகர்த்தல்

இலங்கைத் தலைநகர் கொழும்பிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் அரசபடைகளால் தமிழர்கள் ஆயிரக்கணக்கில் கைதுசெய்யப்பட்டு பயங்கரவாதிகள் போல் சிறைகளிலடைக்கப்பட்டு இம்சிக்கப்பட்டபோதும் அதன் வலி தமிழகத்தில் உணரப்படாதது தமிழக அரசியலின் சந்தர்ப்பவாதத்தை மீண்டும் ஒரு தடவை உறுதிப்படுத்தியுள்ளது.

மலேசிய அரசுக்கெதிராக அங்குள்ள இந்தியத்தமிழர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது 38 பேர் கைதுசெய்யப்பட்டதற்காக கொதித்தெழுந்த தமிழகமும் தமிழகத்தின் அரசியல் தலைவர்களும் மலேசியாவை விட அருகிலுள்ள இலங்கையில் இந்தியவம்சாவளித் தமிழரும் தமது இரத்த உறவுகளும் ஆயிரக்கணக்கில் ஆண் பெண் பேதமின்றி வயதுவித்தியாசமின்றி கைது செய்யப்பட்டபோது அமைதிகாத்ததற்கும் வலுவான அரசியல் பின்னணி உண்டு.

தமிழகத்தில் தற்போது இரு கொள்கைகளையுடைய அரசியல் கட்சிகள் உண்டு. ஒருதரப்பு ஈழத்தமிழருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் ஆதரவு தெரிவித்து அரசியல் நடத்துவார்கள். இன்னொரு தரப்பு விடுதலைப் புலிகளுக்கும் ஈழத்தமிழர்களுக்கும் எதிரான கருத்துக்களைக்கூறி அரசியல் பிழைப்பு நடத்துவார்கள். இது ஒரு கொள்கையுடைய இரு அணிகள்.

மத உணர்வையும் மதத்தையும் பயன்படுத்தி அரசியல் நடத்துவது இன்னொரு கொள்கை. ஒரு தரப்பு மத உணர்வுகளை புண்படுத்தி மதவாதிகளை தாக்கிப் பேசி மதவாதக் கொள்கைகளை உடைத்தெறிந்து நாஸ்திக அரசியல் நடத்திக் கொண்டிருக்கிறது. இன்னொரு தரப்பு மதஉணர்வுகளையே மூலதனமாகக் கொண்டு மதவாத அரசியலை முன்னெடுக்கும் ஆஸ்திக அரசியலை நடத்தி வருகிறார்கள்.

இவ்வாறான நிலையில் இன்று தமிழகத்தின் அரசியலில் விடுதலைப் புலிகள் அமைப்பும் மதவாதமுமே செல்வாக்குச் செலுத்திக் கொண்டிக்கின்றது. இதனால், இங்கு மனிதாபிமானம் தார்மீக கடமை, இரத்த பாசம் போன்றவையெல்லாம் கடைநிலைக்குத் தள்ளப்பட்டு விட்டன.

இதன் வெளிப்பாடே மலேசியாவில் இந்தியத் தமிழர்கள் கைது செய்யப்பட்ட போது கொதித்தெழுந்து உரிமைக்குரல் எழுப்பி கண்ணீர் விட்ட தமிழக் முதலமைச்சரும் தமிழக அரசியல் தலைவர்களும் இலங்கையிலுள்ள இந்தியவம்சாவளி மக்களான தோட்டத் தொழிலாளர்கள் 400 க்கும் மேற்பட்டோர் அரசபடைகளால் கைதுசெய்யப்பட்டு சிறைகளிலடைக்கப்பட்ட போது கண்டு கொள்ளாமலிருந்தனர்.

மலேசியாவில் 38 இந்தியவம்சாவளித் தமிழர் கைதுசெய்யப்பட்ட போது கண்டனக்குரல் எழுப்பிய தமிழகம் இலங்கையில் 400 க்கும் மேற்பட்ட இந்திய வம்சாவளித்தமிழர் கைதுசெய்யப்பட்ட போது ஏன் கண்டனம் செய்யவில்லை. மலேசியாவிலுள்ள இந்தியவம்சாவளித் தமிழர் வேறு இலங்கையிலுள்ள இந்தியவம்சாவளித் தமிழர் வேறா ?

மலேசியாவிலுள்ள இந்தியவம்சாவளித் தமிழருக்கு உரிமைகளை வழங்க வேண்டுமென மத்திய அரசு ஊடாக வலியுறுத்தும் தமிழக அரசு இலங்கையிலுள்ள இந்தியவம்சாவளித் தமிழருக்கு உரிமைகளை கொடுக்க வேண்டுமென எப்போதாவது குரல்கொடுத்ததுண்டா? குரல் கொடுக்க நினைத்தாலும் அவர்களால் முடியாது. அதுதான் தமிழகத்தின் இன்றைய அரசியல் நிலைவரம்

வழக்கமாக வடக்கு-கிழக்கு தமிழர்களை மட்டுமே இலக்கு வைத்து செயற்பட்டு வந்த இலங்கையரசும் அதன் படைகளும் இம்முறை இலங்கையிலுள்ள இந்தியவம்சாவளித் தமிழர்கள் மீதும் கைவைத்துள்ளனர். இது தொடர்பாகத் தமிழக இந்திய அரசுகள் மௌனம் காத்து வருவது எதிர்காலத்தில இந்தியவம்சாவளித் தமிழர்களுக்கும் பேராபத்தை ஏற்படுத்தப் போகின்றது.

இந்திய வம்சாவளித் தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்கள் பலர் இலங்கை அரசில் அங்கம் வகித்தாலும் அவர்கள் அரசுக்கு கூசா தூக்கி சேவகம் செய்பவர்களாக இருப்பதால் இந்திய வம்சாவளித் தமிழர்கள் இலங்கையில் அநாதைகள் போலவே இருக்கிறார்கள். அராதைகள் போன்றே இலங்கையரசினாலும் நடத்தப்படுகிறார்கள்.

இவ்வாறான ஒரு நிலையில் இந்திய வம்சாவளித் தமிழ்மக்கள் இலங்கைப் படைகளால் வீதிகளிலும் வீடுகளிலும் தொழில் புரியும் இடங்களிலும் வைத்துக் கைது செய்யப்பட்டு ஆடு மாடுகளைப்போல் சிறைகளில் அடைக்கப்பட்டு இம்சிக்கப்பட்டபோது அதனை தமிழக அரசும் இந்திய அரசும் வேடிக்கை பார்த்து தமது மக்களுக்கு பெரும் துரோகத்தை செய்துள்ளது.

உலகத்தமிழரின் காவலன் என தன்னைக் கூறிக்கொள்ளும் தமிழகத்தின் முதலமைச்சர் கருணாநிதி இலங்கைத் தலைநகரில் வடக்கு-கிழக்கு தமிழர்களும் இந்திய வம்சாவளித் தமிழர்களும் இலங்கைப்படைகளால் கொத்துக் கொத்தாக கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்ட போது தனது காவலன் பணியிலிருந்து கடமை தவறிவிட்டார். இது அவருக்கும் நன்றாகவே தெரிந்துள்ளது.

எஸ்.ஆர்.பி.யின் அபாண்ட குற்றச்சாட்டு

இதேவேளை, விடுதலைப் புலிகளுக்கு எதிராக தமிழகத்தில் காங்கிரஸ் அமைச்சர் இளங்கோவன் புயலைக்கிளப்பிக் கொண்டிருக்க தமிழ்ச்செல்வனை விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனே இலங்கையரசுக்குத் காட்டிக்கொடுத்து படுகொலை செய்தாரென தமிழக காங்கிரஸின் மூத்த தலைவர்களில் ஒருவரான எஸ்.ஆர்.பி.என அழைக்கப்படும் முன்னாள் அமைச்சர் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன் அபாண்டமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழக காங்கிரஸின் சட்டமன்ற கட்சித் தலைவராகவும் இணை அமைச்சராகவும் இருந்தவர் எஸ்.ஆர்.பி.அண்மைக்காலமாக அரசியலிலிருந்து ஒதுங்கியிருந்த இவர் திடீரென தமிழ்ச்செல்வன் கொலைக்கு பிரபாகரன் தான் காரணமென்ற குற்றச்சாட்டுடன் ஊடகவியலாளர்களைச் சந்தித்தார். இது காங்கிரஸ் கட்சியினரையே கொஞ்சம் திகைக்க வைத்துவிட்டது.

அரசியலிலிருந்து ஒதுங்கியிருந்த எஸ்.ஆர்.பி. மீண்டும் அரசியல் பிரவேசம் செய்வதற்காகவே தமிழ்ச்செல்வன் விவகாரத்துடன் ஊடகவியலாளர்கள் முன் தோன்றியதாக காங்கிரஸிடையே முணுமுணுப்புகள் கேட்கின்றன. இக் கருத்தை நிராகரிப்பதற்கில்லை. ஏனெனில், ஊடகங்களில் பிரதான செய்தியாக வேண்டுமென்றால் ஒன்று இராமரைப் பற்றிக் கூறவேண்டும். இல்லையென்றால் விடுதலைப் புலிகளைப் பற்றிக்கூறவேண்டும்.

ஆனால், இக்குற்றச்சாட்டை மறுக்கும் எஸ்.ஆர்.பி. அரசியலுக்காக பரபரப்பாக செய்ய வேண்டிய தேவை எதுவும் தனக்கில்லை எனக்கூறியுள்ளார். தமிழ்ச்செல்வனை பிரபாகரன் படுகொலை செய்ததாகக் கூறும் அவரின் குற்றச்சாட்டுக்கு அவர் கூறும் ஆதாரம் இலங்கையில் தமிழர்களால் வெறுத்து ஒதுக்கப்பட்டுள்ள ஆனந்தசங்கரி கூறிய கருத்து மட்டுமே.

இதேவேளை, இலங்கைத் தமிழர்களுக்கு சம உரிமை வழங்க வேண்டும் . அவர்கள் இரண்டாம்தர பிரஜைகளாக நடத்தப்படக் கூடாது என்பதை தாம் வலியுறுத்துவதாகக்கூறியுள்ள காங்கிரஸின் மத்திய அமைச்சர் இளங்கோவன் விடுதலைப் புலிகள் அழிக்கப்பட வேண்டும். அவர்களை மன்னிக்கவோ, மறக்கவோ காங்கிரஸ் தயாரில்லை எனக் கூறியுள்ளதுடன் புலிகளை ஆதரிப்போர் தமது முதல் எதிரிகளென்றும் கூறியுள்ளார்.

விடுதலைப் புலிகளை ஆதரிப்பவர்கள் அவர்களை தமது காவலர்களாக போற்றுபவர்கள் இலங்கைத் தமிழர்கள். அவ்வாறெனில் இளங்கோவனின் கூற்றுப்படி இலங்கைத் தமிழர்கள் தான் காங்கிரஸின் முதல் எதிரிகள். அதனால்தான் காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு இலங்கைத் தமிழரை அழிப்பதற்காக இலங்கை அரசுக்கு ஆயுத உதவிகளை வழங்கி வருகின்றதா?

இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும். அவர்களுக்கு சமஉரிமை வழங்கப்பட வேண்டுமெனக் கூறும் அமைச்சர் இளங்கோவன் விடுதலைப் புலிகளை அழிக்க வேண்டுமெனவும் கூறுகின்றார்.

இலங்கைத் தமிழரின் ஏக பிரதிநிதிகளாக இருக்கும் விடுதலைப் புலிகளை அழித்துவிட்டு தமிழர் பிரச்சினைக்கு எவ்வாறு தீர்வு காணமுடியும்?

இளங்கோவனின் கருத்துப்படி விடுதலைப் புலிகளை அழித்துவிட்டு இலங்கைத் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதென்பது மணமகன் இல்லாமல் நடக்கும் திருமணம் போன்றது. இளங்கோவன் தொண்டர்களை உசுப்பேற்றும் கருத்துகளை கூறுகிறாரே தவிர யதார்த்த பூர்வமானவற்றை ஏற்கமறுக்கிறார். இதுதான் இளங்கோவனின் இலங்கைத் தமிழர் தொடர்பான நிலைப்பாடு.

அமைச்சர் இளங்கோவனின் கருத்தையே இந்திய பார்ப்பன ஊடகமும் தமிழர் விரோதப் போக்கைக் கொண்டதுமான த ஹிந்து தனது ஆசிரிய தலையங்கத்தில் வலியுறுத்தியிருந்தது. விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை அழிப்பதன் மூலமோ அல்லது அவரை தலைமைப் பதவியிலிருந்து நீக்குவதன் மூலமாகவே தான் இலங்கைத் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காணமுடியுமென கருத்து வெளியிட்டிருந்தது.

இலங்கைத் தமிழர்கள் தமது உயிரினும் மேலாக நேசிக்கும் தமக்கு சுதந்திரத்தைப் பெற்றுத் தருவாரென நம்பியிருக்கும் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை அழிக்க வேண்டுமென்பதிலேயே இந்தியாவின் அதிகார சக்திகள் தமது செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றன. பிரபாகரனை அழிப்பதன் மூலம் ஒரு இனமே அழிந்து விடுமென்பதை நன்குணர்ந்தும் அதனை மூடிமறைத்து பிரபாகரனை அழிப்பதன் மூலமே தமிழர்களுக்குத் தீர்வு கிடைக்குமென்ற பிரசாரத்தை முன்னெடுத்துள்ளன.

இதனாலேயே பிரபாகரன் தனது மாவீரர் தின உரையில் தமது விடுதலைப் போராட்டம் தொடர்பாக இந்தியா செய்த வரலாற்றுத் தவறுகளை சுட்டிக்காட்டியதுடன் மீண்டும் அவ்வாறான தவறுகளை செய்ய வேண்டாமெனவும் தமது போராட்டத்துக்குத் தார்மீக ஆதரவை தருமாறும் கோரியுள்ளார்.

இக்கோரிக்கை பிணத்திடம் கேட்டதற்கு ஒப்பானதாகும்.

ஏனெனில், தமிழர்களை இலங்கையரசு சிறுகச்சிறுக அழித்தாலும் ஒட்டுமொத்தமாக அழித்தாலும் இந்திய அரசோ, தமிழக அரசோ கண்டுகொள்ளாது. அதேவேளை, தமிழர் விடுதலைப் போராட்டத்தை அழிக்கத் தேவையான உதவிகளை வழங்கத்தயார் என்பதே தமிழக, மத்திய அரசுகள் இலங்கை தொடர்பில் அண்மைக்காலமாக வெளிப்படுத்தி வரும் செயற்பாடுகளின் உண்மை வடிவமாகும்.

-கலைஞன்-/thinakkural

Sunday, December 02, 2007

தெற்கின் பாதுகாப்புக்காக தனிமைப்படுத்தப்படும் வடக்கு

போர்நிறுத்த உடன்படிக்கை முடிவுக்கு வரப்போகிறது. விடுதலைப்புலிகளைத் தடை செய்வதன் மூலம் போர்நிறுத்த உடன்படிக்கையை முறித்து விடவும் சமாதான முயற்சிகளுக்கான வாய்ப்பை இல்லாது செய்துவிடவும் அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது. முழு அளவிலான போரில் இறங்கியுள்ள அரசு, வடக்கை முழுமையாக மீட்கப் போவதாகவும் சூளுரைத்து வருகிறது.

வடக்கில் பாரிய தாக்குதலை நடத்தியவாறு தெற்கின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசு முயல்கிறது. வடக்கில் படையினர் மேற்கொள்ளும் தாக்குதல்களால் அப்பாவி மக்கள் கொல்லப்படும் தகவல்களை மறைத்து, தெற்கில் இடம்பெறும் சிறிய சம்பவங்களுக்கும் அரசு முக்கியத்துவம் கொடுக்க முற்படுகிறது.

தெற்கின் பாதுகாப்பென்பது வடக்கில் இடம்பெறும் தாக்குதல்களைப் பொறுத்ததே. வடக்கில் எந்த அழிவுகளைச் செய்தாலும் எவருமே கேட்கக் கூடாதெனக் கருதும் இனவாதிகள், தெற்கில் என்ன சம்பவம் நடைபெற்றாலும் அது பயங்கரவாதத்தின் உச்சமென்கின்றனர்.

வடக்கில் மக்கள் குடியிருப்புக்களுக்கு மத்தியில் புலிகளின் முகாம்களிருப்பதால் வன்னியில் இடம்பெறும் தாக்குதல்களில் மக்களின் இழப்பு தவிர்க்க முடியாததெனத் தனது தாக்குதல்களை நியாயப்படுத்த முயலும் அரசு, தெற்கில் மக்கள் வாழ்விடங்களுக்கு மத்தியிலும் வர்த்தக பொருளாதார நிலைகளுக்கு மத்தியிலும் படைமுகாம்களிருப்பதை மறந்துவிட்டது.

கொழும்பு நுகேகொடையில் கடந்த புதன்கிழமை இடம்பெற்ற குண்டுவெடிப்பில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டது மிகவும் கொடூரமானது. வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டியது. எந்த வன்முறையிலும் அப்பாவி மக்களை இலக்கு வைப்பது ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது. எவரதும் குற்றங்களுக்காக ஏதுமறியாதவர்கள் தண்டிக்கப்படுவது ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது.

பாதிக்கப்படுபவர்கள் எந்த மக்களாயிருந்தாலும் அப்பாவிகளைக் கொன்று குவிப்பது கோழைத்தனமானது. அவ்வாறானதொரு செயலைச் செய்துவிட்டு அதனை நியாயப்படுத்துவதும் அப்படியொரு தாக்குதல் நடைபெற்றதா, சர்வதேச சமூகத்தை ஏமாற்ற மேற்கொள்ளப்படும் பொய்ப்பிரசாரங்களே இவ்வாறான தாக்குதல் பற்றிய தகவல்களெனக் கூறப்படுவதும் மேலும் அப்பாவிகளை பழிவாங்கப் போவதற்கான செயல்களேயாகும்.

முழு அளவில் போர் தொடங்கிவிட்டது. சமாதானத்திற்கான வாய்ப்புகள் இனி சாத்தியப்படமாட்டாது. புலிகளைத் தடை செய்வதில் அரசு தீவிரம் காட்டுகிறது. வரவு - செலவுத் திட்டத்தின் 3 ஆவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு எதிர்வரும் 14 ஆம் திகதி நடைபெறுவதற்கு முன் புலிகளை அரசு தடை செய்துவிட வேண்டுமென ஜே.வி.பி. கோரிக்கை விடுத்துள்ளது. இது பெரும்பாலும் சாத்தியப்படலாமென எதிர்பார்க்கப்படுகிறது.

போர்நிறுத்த உடன்பாடு அமுலிலிருக்கையில் அரச படைகளின் மனித உரிமை மீறல்கள் குறித்து சர்வதேச சமூகம் கடும் விசனமடைந்துள்ளது. இதனால், போர்நிறுத்த உடன்படிக்கையை நேரடியாக முறிக்காமல், புலிகள் மோசமான வன்முறைகளில் ஈடுபட்டு வருவதாகக் கூறி அவர்களைத் தடை செய்வதன் மூலம் போர்நிறுத்த உடன்படிக்கைக்கு முடிவுகட்டி விடலாமென சில தரப்புக்கள் சிந்திக்கின்றன. இதனால், அடுத்து வரும் நாட்களில் வன்முறைகள் அதிகரிக்கலாமென்ற அச்சம் அனைவர் மத்தியிலும் நிலவுகின்றது.

கடந்த 25 வருட காலப்போரில் புலிகளுக்கெதிராக துணிச்சலாகச் செயற்படுபவர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவே என அவரைப் புகழுவோர் தற்போது தெற்கில் அதிகம். இனப்பிரச்சினைக்கு சமாதானத் தீர்வைக் கண்டுவிடக் கூடாதென விரும்புவோர் இராணுவத் தீர்வைத் தூண்டி வருகின்றனர்.

இனப்பிரச்சினை வேறு பயங்கரவாதப் பிரச்சினை வேறென அதற்கு வியாக்கியானம் கூறும் அவர்கள், பயங்கரவாதப் பிரச்சினைக்கு இராணுவ ரீதியில் தீர்வு கண்டுவிட்டால் இனப்பிரச்சினைக்கு சுமுகமான தீர்வைக் கண்டுவிடலாமென விளக்கமும் கூற முற்படுகின்றனர்.

தற்போதைய நிலையில் இராணுவத் தீர்வை காணுமாறு அரசை வலியுறுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இனப்பிரச்சினைக்கு அதிகாரப் பரவலாக்கல் மூலம் தீர்வு காண்பதென்பது ஈழத்தை உருவாக்குவதற்கு சமனென அவர்கள் விளக்கம் கூற முற்படுகின்றனர். இதனால், தமிழ் மக்களின் பிரச்சினையை பயங்கரவாதப் பிரச்சினையாக்கி புலிகளை அழிப்பதன் மூலம் இனப்பிரச்சினைக்கு தீர்வு கண்டுவிட வேண்டுமென இனவாதிகள் துடிக்கின்றனர்.

புலிகள் மிகவும் பலவீனமடைந்துள்ளதாக இனவாதிகள் கருதுகின்றனர். அநுராதபுரம் விமானப் படைத்தளம் மீதான தாக்குதலால் தென்பகுதி அதிர்ந்து போயிருந்தது. ஆனால், புலிகளின் அரசியல் துறைப்பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வன் கொல்லப்பட்டதால், இழந்த உற்சாகத்தை அவர்கள் மீளப்பெற்றதுடன் புலிகளின் ஏனைய தலைவர்களையும் இவ்வாறு அழித்துவிடலாமென்ற நப்பாசையில் உள்ளனர்.

இதனால், வன்னியில் தினமும் விமானத் தாக்குதலும் கடும் ஷெல் தாக்குதலும் ஆழ ஊடுருவும் படையினரின் கிளேமோர் தாக்குதலும் நடைபெற்று வருகிறது. வடக்கே அனைத்து தடைகளையும் விதித்துவிட்டு அங்கு நடைபெறும் கொடூரத் தாக்குதல்களை அரசு முழு உலகுக்கும் மறைத்து வருகிறது.

தெற்கில் இடம்பெறும் சிறுசிறு சம்பவங்களும் மிகப் பெரியளவில் பிரசாரப்படுத்தப்படுகிறது. சிங்கள, ஆங்கில ஊடகங்கள் இந்தச் செய்திகளை தலைப்புச் செய்திகளாக்கி வருகின்றன. ஆனால், வடக்கு - கிழக்கில் இடம்பெறும் சம்பவங்கள் அனைத்தும் மூடிமறைக்கப்படுகின்றன. சிங்கள, ஆங்கில ஊடகங்கள் அவை பற்றி மூச்சும் விடுவதில்லை. இதனால், தென்னிலங்கை மக்களுக்கு அங்கு தினமும் நடைபெறும் கொடூரங்கள் பற்றி எதுவும் தெரிவதில்லை. முற்றாகவே இருட்டடிப்புச் செய்யப்படுகிறது.

வடக்கு - கிழக்கில் தினமும் பலர் கொல்லப்படுகின்றனர். பலர் கடத்தப்படுகின்றனர். பலர் காணாமல் போகின்றனர். யுத்தமென்ற பெயரில் வடக்கே தினமும் தமிழர் பகுதிகளில் நூற்றுக்கணக்கில் ஆட்லறி ஷெல் தாக்குதலும் மோட்டார் குண்டுத் தாக்குதலும் பல்குழல் ரொக்கட் தாக்குதலும் நடைபெறுகிறது. இவற்றின் தாக்கம் சொல்லில் உணர்த்தப்பட முடியாது. நேரில் அனுபவிக்கும் மக்களுக்கே அதன் தாக்கம் புரியும்.

இதைவிட கடந்த ஒன்றரை வருட காலத்தில் வடக்கில் மட்டும் விமானங்கள் ஆயிரக் கணக்கான குண்டுகளை வீசியுள்ளன. கிபிர் மற்றும் மிக் விமானங்கள் வீசும் ஒவ்வொரு குண்டும் 500 கிலோவுக்கும் மேற்பட்ட எடை கொண்டன. ஒவ்வொரு குண்டும் குறைந்தது ஒரு வீட்டையாவது தரைமட்டமாக்கும். இன்று வரை ஆயிரக்கணக்கான வீடுகள் அழிக்கப்பட்டு பல நூற்றுக்கணக்கானோர் இந்தத் தாக்குதல்களால் கொல்லப்பட்டுள்ளனர்.

யுத்தம் நடைபெறும் பூமி வடக்கு - கிழக்கு என்பதால் அங்கு மட்டும் தான் இந்தத் தாக்குதல் நடத்தப்பட வேண்டுமென்பது என்ன நியாயம்? இதே தாக்குதல்களில் ஒன்று,இரண்டு தெற்கில் நடைபெற்றால் எப்படியிருக்குமென்பதை இன்று வரை சிங்கள மக்கள் எவருமே உணரவில்லை. இதனால்தான் தெற்கில் சிறிய குண்டுவெடித்தால் உலகம் முழுவதற்கும் மரண ஓலம் எழுப்பப்படுகிறது.

அதேநேரம், புலிகளை எந்தளவு தூரம் ஆத்திரப்படுத்த முடியுமோ அந்தளவிற்கு ஆத்திரப்படுத்தி அவர்களை வன்முறைகளில் ஈடுபடச் செய்ய வேண்டுமென்பதில் அரசும் இனவாதிகளும் தீவிரம் காட்டுகின்றனர். தமிழ்ச்செல்வன் மீதான தாக்குதல், விமானப் படையினரின் துல்லியமான செயற்பாட்டால் ஏற்பட்டதல்ல. வழமைபோல் வன்னியில் குண்டுகளை வீசியபோது எதேச்சையாக ஏற்பட்டதொன்றென்பதை அனைவரும் அறிவர்.

தமிழ்ச்செல்வன் கொல்லப்பட்டதால் சமாதான முயற்சிக்கே சாவுமணி அடிக்கப்பட்டுவிட்டதாக தென்பகுதி மக்கள் கூட உணர்ந்தபோது, தமிழ்ச்செல்வனை எந்தளவில் அவமதிக்க முடியுமோ அந்தளவுக்கு அவர்குறித்து அரசும் இனவாத ஊடகங்களும் மிக மோசமாகப் பிரசாரம் செய்தன. தங்கள் தரப்புடன் சமாதானம் பேசியவர், தங்களுடன் இனியும் சமாதானம் பேச இருந்தவரெனக் கூடப் பார்க்காது அவரை அரசு மிகவும் கேவலப்படுத்தியது.

புலிகளின் தலைவர் பிரபாகரனின் பிறந்த நாளன்று, அவரை கொல்லப்போவதாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் சகோதரருமான கோதாபய ராஜபக்ஷ சபதமிட்டார். அடுத்த மாவீரர் தினத்தில் உரையாற்ற அவர் இருக்கமாட்டாரெனவும் கூறி புலிகளை எந்தளவுக்கு சீண்ட முடியுமோ அந்தளவுக்கு சீண்டினார்.

மாவீரர் தினமன்று வன்னியில் ஆழ ஊடுருவும் படையணியினர் நடத்திய தாக்குதலில் 10 பாடசாலை மாணவர்கள் உட்பட 13 பேர் கொல்லப்பட்டனர். புலிகளின் தலைவர் ஆற்றும் மாவீரர் தின உரையை எவருமே கேட்கக் கூடாதென்பதற்காக, ஊடக நிலையமென்றும் பாராது அன்று மாலை `புலிகளின் குரல்' வானொலி நிலையம் மீது 12 குண்டுகள் வீசி அந்த நிலையம் தரைமட்டமாக்கப்பட்டதுடன் பத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். ஆனாலும், பிரபாகரனின் உரையை முழு உலகமும் கேட்டது.

இவையெல்லாவற்றுக்கும் அப்பால் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவும் புலிகளை ஆத்திரமூட்ட முயன்று பார்க்கிறார். பிரபாகரன் உயிருடன் பிடிக்கப்பட்டால் அவரை இந்தியாவிடம் ஒப்படைப்போமென்றும் அவ்வாறு உயிருடன் பிடிக்க முடியாது, இராணுவ நடவடிக்கை மூலம் அவர் கொல்லப்பட்டால் அவரது உடல் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் ஊடாகவோ அல்லது வேறு வழிகளிலோ புலிகளிடம் ஒப்படைக்கப்படமாட்டாதெனவும் பிரபாகரனின் உடலை இந்தியா கேட்டால் அதனை அவர்களிடம் ஒப்படைப்போமென்றும் கெஹலிய ரம்புக்வெல கூறியுள்ளார்.

இவ்வாறெல்லாம் கூறி அவர்களை சினமுறச் செய்து அதன்மூலம் அவர்கள் ஏதாவது வன்முறையில் ஈடுபட வேண்டுமென்ற நோக்கில் அரசு செயற்படுகிறதா? என்ற கேள்வியும் எழுகிறது. ஆனால், கடந்த காலங்களிலெல்லாம் இவ்வாறான ஆத்திரமூட்டல்களை புலிகள் சந்தித்தவர்களென்பதால் உரியவர்கள் மட்டுமே இதற்குரிய பலாபலன்களை அனுபவிப்பார்களென புலிகள் தரப்பில் கூறப்படுகிறது.

புலிகளுக்கெதிரான இராணுவ நடவடிக்கையெனக் கூறி வடக்கில் தமிழ் மக்கள் மிக மோசமாக இம்சிக்கப்படுகின்றனர். கடந்த வருடம் ஆகஸ்ட் மாதத்துடன் யாழ். குடாநாட்டுக்கான தரைவழிப் பாதையை முகமாலையுடன் அரசு மூடியது. தற்போது வன்னிக்கான பாதையை மூடியதுடன் மட்டுமல்லாது மதவாச்சியுடன் ரயில் சேவையை நிறுத்தி வடபகுதிக்கான போக்குவரத்தையே அரசு முடக்கியுள்ளது.

ஏற்கனவே, யாழ்.குடா மக்களை குடாநாட்டுக்குள் முடக்கிய அரசு இன்று வடபகுதி மக்களை முழுமையாக முடக்கியுள்ளது. தென்பகுதியின் பாதுகாப்புக்காக வடபகுதியை அரசு முழுமையாகத் தனிமைப்படுத்தியுள்ளது. தெற்கை முதன்மைப்படுத்தியே நாட்டின் நலன்கள் அனைத்துமிருப்பதை இந்தச் செயற்பாட்டின் மூலம் அரசு உணர்த்தியுள்ளது. சர்வதேச சமூகமும் இதனடிப்படையிலேயே செயற்படுகின்றது.

வடக்கில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்ட போதெல்லாம் மௌனம் சாதித்த ஐ.நா.வும் அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் தெற்கில் ஒரு தாக்குதல் நடைபெற்ற பின்பே தங்கள் மௌனத்தை கலைத்துள்ளன. வன்முறைகளை கண்டிப்பதில் கூட சர்வதேச சமூகமும் ஒரு வரைமுறைக்குள் தான் நிற்கின்றதென்பதை அண்மைய சம்பவங்கள் எடுத்துக் காட்டுகின்றன.

இந்தியா, பாகிஸ்தான், ஈரான், அமெரிக்கா என உலக நாடுகளிடமிருந்தெல்லாம் போர்த் தளபாடங்களை வாங்கிக் குவிக்கும் இலங்கை அரசு இவற்றை வைத்திருப்பது சமாதானம் பேசவல்ல. படையினருக்கு ஏற்படும் இழப்புகளால் படைகளை விட்டுத் தப்பியோடுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பதுடன் படைகளுக்குச் சேருவோரின் தொகையும் குறைவடைந்து வருவதால் இனிமேல் போர்த் தளபாடங்களையே அரசு பெரிதும் நம்பியிருக்க வேண்டிய நிலையேற்பட்டுள்ளது.

ஆயுத உதவிகளை அள்ளிக் கொடுக்கும் அயல்நாடுகள் மனிதாபிமானம் பற்றி பேசுகின்றன. வடக்கிலும் கிழக்கிலும் அழிவுகள் ஏற்படும் போதெல்லாம் மௌனம் சாதிப்பவர்கள் தெற்கில் ஏதாவது நடந்ததும் துடித்து விடுகின்றனர். வடக்கே மோசமான தாக்குதல் இடம்பெறும் போது தெற்கில் அதன் பிரதிபலிப்பு இருக்குமென்பது இன்று நேற்றுத் தெரிந்ததல்ல, இனப்பிரச்சினை தொடங்கிய காலம் முதலே என்பதை அனைவரும் உணர வேண்டும்.

-விதுரன்- thinakkural.

Sunday, November 25, 2007

மாவீரர் தின உரையில் இம்முறை பிரபாகரன் சொல்லப் போவதென்ன?





மிழீழ பிரகடனமா? போர் நிறுத்தத்திலிருந்து விலகும் அறிவிப்பாவென இலங்கையரசும் சர்வதேசமும் கிலி பிடித்துப் போயுள்ள நிலையில் அதற்கான விடையுடன் நாளை மறுதினம் வருகிறது விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் வரலாற்றுச் சிறப்புமிக்க மாவீரர் தின உரை.

கடந்த காலங்களை விட மிகவும் தீர்க்கமானதொரு கால கட்டத்தில் இலங்கையரசும் விடுதலைப் புலிகளுமுள்ள நிலையில் பிரபாகரனின் இவ்வருடத்துக்கான மாவீரர் தின உரையில் காத்திரமான சில அறிவிப்புகள் அடங்கியிருக்குமென்பதே அனைத்து தரப்பினரினதும் எதிர்பார்ப்பாகவுள்ளது.

ஏனெனில், கடந்த ஆண்டுக்கான மாவீரர் தின உரையில் இலங்கையரசுக்கு சில எச்சரிக்கைகளை விடுத்திருந்த பிரபாகரன் சமாதானத்தின் மீது தனக்கிருந்த நம்பிக்கையை வெளிப்படுத்து முகமாக இலங்கையரசுக்கு கால அவகாசத்தையும் வழங்கியிருந்த போதும் இலங்கையரசு அதனை உதாசீனப்படுத்தி பெரும் போர் முன்னெடுப்புகளை மேற்கொண்டது.

போர் நிறுத்த உடன்படிக்கையில் முக்கிய சரத்துக்களை மீறி கிழக்கு மாகாணத்தில் பாரிய படை நடவடிக்கைகளை மேற்கொண்ட இலங்கையரசு பல நூற்றுக்கணக்கான தமிழ் மக்களை கொன்றொழித்து கோடிக்கணக்கான ரூபா சொத்துகளை அழித்து மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை, குடும்பிமலை பகுதிகளை ஆக்கிரமித்தது.

அதன் தொடர்ச்சியாக பல படை நடவடிக்கைகளை முன்னெடுத்தது. இதன் ஒரு பகுதியாக வன்னி பிரதேசத்தில் பாரிய படை நடவடிக்கையை மேற்கொண்டு சிலாவத்துறை பிரதேசத்தை ஆக்கிரமித்தது. தற்போதும் ஆக்கிரமிக்கும் நோக்குடன் படை நடவடிக்கைகளை தொடர்வதால் வன்னி முன்னரங்க பகுதிகள் அதிர்ந்து கொண்டிருக்கின்றன.

இது தவிர விடுதலைப் புலிகளின் ஆயுதக் கப்பல்களெனக் கூறி சர்வதேசக் கடற்பரப்பில் வைத்து சில கப்பல்களை இலங்கை கடற்படையினர் மூழ்கடித்தனர். குடும்பிமலை ஆக்கிரமிப்பு, கப்பல்கள் மூழ்கடிப்பென இலங்கையரசு வெற்றி விழாக்களை கொண்டாடி முழுவதுமான ஒரு போரை முன்னெடுத்தது.

இலங்கையரசின் ஒவ்வொரு செயலுக்கும் விடுதலைப் புலிகளும் பதிலடி வழங்கினர். காலி துறைமுகம் மீதான தாக்குதல், கட்டுநாயக்கா, பலாலி விமானத் தளங்கள், கொலன்னாவை எண்ணெய்க் குதங்கள் மீதான விமானத் தாக்குதல்கள், விளாத்திக்குள அதிரடித் தாக்குதல், பம்பைமடுவில் கனரக ஆயுதங்கள் அழிப்பு, அநுராதபுரம் விமானத் தளம் மீதான கரும்புலிப் படையணித் தாக்குதல்களென இலங்கையரசுக்கு பேரழிவை ஏற்படுத்தினர்.

இந்நிலையில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள் இராணுவத்தின் ஆழ ஊடுருவும் படையணி நடத்தும் தாக்குதல்கள், தொடர்ச்சியான விமானத் தாக்குதல்களென புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகள் அதிர்ந்து கொண்டிருக்க, யால வன விலங்கு சரணாலய தாக்குதல், திஸ்ஸமகராம தாக்குதல்களென தென் பகுதி கதிகலங்கிக் கொண்டிருக்கிறது.

இலங்கையரசின் வலிந்த தாக்குதல்களுக்கே புலிகள் பதிலடி வழங்கி வந்த அதேவேளை இலங்கையரசின் போர் நிறுத்த உடன்படிக்கை மீறல்களை சர்வதேசத்தினதும் சமாதானப் பேச்சுக்களுக்கான அனுசரணையாளர்களினதும் கவனத்துக்கும் கொண்டு சென்று போர் நிறுத்த உடன்படிக்கையை இலங்கையரசு சீராக கடைப்பிடிக்க அழுத்தம் கொடுக்குமாறும் வேண்டினர்.

ஆனால் இலங்கையரசு போர் நிறுத்த உடன்படிக்கையின் பிரதான பாத்திரமும் தம்முடனான சமாதான பேச்சுக்களில் பங்குபற்றிய விடுதலைப் புலிகளின் சமாதான பேச்சுக் குழுவின் தலைவரும் அரசியல் துறைப் பொறுப்பாளருமான சு.ப.தமிழ்ச்செல்வனை கிளிநொச்சியில் அமைந்துள்ள சர்வதேச பிரதிநிதிகளுடனான பேச்சுக்கள் இடம்பெறும் சமாதான செயலகத்துக்கருகில் வைத்து விமானக் குண்டு வீச்சு மூலம் படுகொலை செய்து போர் நிறுத்த உடன்படிக்கைக்கு முற்றுப் புள்ளி வைத்தது.

இலங்கை இனப்பிரச்சினைக்கு சமாதான வழியில் தீர்வொன்றை பெற்றுக் கொள்வதற்காக முன்னின்று செயற்பட்ட விடுதலைப் புலிகளின் சமாதான பேச்சுக்குழுவின் தலைவர் தமிழ்ச்செல்வனை படுகொலை செய்த இலங்கையரசு அதனை வெற்றி விழாவாகக் கொண்டாடியது. ஒரு கொடிய பயங்கரவாதியை கொன்றொழித்துவிட்டதாக தீவிர பிரசாரம் செய்தது.

தமிழ்ச்செல்வன் படுகொலை செய்யப்பட்ட அதேநாள் அறிக்கையொன்றை விடுத்த ஜனாதிபதியின் சகோதரரும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருமான கோதாபய ராஜபக்ஷ, தமிழ்ச்செல்வன் படுகொலையே ஆரம்பமெனவும் இனி விடுதலைப் புலிகளின் ஒவ்வொரு தலைவர்களையும் பலியெடுப்போமெனவும் சூளுரைத்தார். இதேபோன்றே விமானப்படை தளபதி ரொஷான் குணதிலகவும் புலிகளின் தலைவர் பிரபாகரனின் நாட்கள் எண்ணப்படுவதாக எச்சரித்தார்.

இவ்வாறான நிலையில் விடுதலைப் புலிகள் உடனடியாகவே போர் நிறுத்த உடன்படிக்கையிலிருந்து விலகுவததாக அறிவிப்பார்களென்றே அனைவரும் எதிர்பார்த்ததுடன் தமிழ்ச்செல்வன் இழப்புக்காக பாரிய பதிலடியொன்றை மேற்கொள்வார்களெனவும் எதிர்வு கூறப்பட்டது. ஆனால் இவை எதனையும் இன்றுவரை புலிகள் செய்யாதது பலரையும் சந்தேகப் படவைத்துள்ளது.

தமிழ்ச்செல்வன் படுகொலையின் பின்னர் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் தலைவரை கிளிநொச்சிக்கு அழைத்த விடுதலைப் புலிகள் தமிழ்ச்செல்வன் படுகொலை தொடர்பான தமது கண்டனத்தை தெரிவித்ததுடன் இது தொடர்பாக சர்வதேச சமூகத்தின் மௌனத்தை கண்டித்ததுடன் சமாதான அனுசரணையாளரான நோர்வே எவ்வித கருத்தையும் வெளியிடாதது குறித்து தமது வருத்தத்தையும் தெரிவித்ததுடன் நோர்வே தனது கருத்தை தெரிவிக்க வேண்டுமெனவும் கூறினார்.

நிலைமை இவ்வாறிருக்க அரசின் மூத்த அமைச்சரும் ஜனாதிபதியின் நம்பிக்கைக்குரியவருமான ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே விடுதலைப் புலிகள் விரைவில் தமிழீழத்தை பிரகடனப்படுத்தவுள்ளனரெனக் கூறி தென்னிலங்கையில் பீதியைக் கிளப்பிவிட்டார். இதனைத் தொடர்ந்து மாவீரர் தினத்தில் தமிழீழ பிரகடனம், தைப்பொங்கலில் தமிழீழ பிரகடனமென தினமும் ஒரு செய்தி தென்னிலங்கையில் வெளியாகிக் கொண்டிருக்கிறது.

இதேநேரம், சமாதானத்தை விரும்பும் நாடுகளின் அழுத்தம் இலங்கையரசு மீது பிரயோகிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் போது வல்லரசு நாடுகளான அமெரிக்கா, சீனா, இந்தியா ஆகியன இலங்கையரசின் போர் இயந்திரத்தை வலுப்படுத்தும் முகமாக தாராளமான இராணுவ உதவிகளை அள்ளி வழங்கிவருவதால் இலங்கையரசு போர் மூர்க்கம் கொண்டு வன்னி மீதான படையெடுப்புக்கு தயாராகி வருகிறது.

விடுதலைப் புலிகளும் தற்போது தற்காப்பு போரிலேயே ஈடுபட்டு வந்தாலும் பாரிய படை நடவடிக்கையொன்றுக்கான தயார்படுத்தலில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதற்கான சில முன்னேற்பாட்டு, ஒத்திகை சண்டைகளையும் புலிகள் நடத்தியுள்ளனர். முப்படைப்பலத்தை கொண்டுள்ள விடுதலைப் புலிகளும் இறுதி யுத்தமொன்றுக்கு தம்மை தயார்படுத்திவிட்டே உத்தரவுக்காக காத்திருக்கின்றனர்.

இலங்கையரசும் விடுதலைப் புலிகளும் இறுதி யுத்தமொன்றுக்கு தயாராகிவிட்ட நிலையில் நாளை மறுதினம் இடம்பெறவுள்ள விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மாவீரர் தின உரை பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த மாவீரர்தின உரையில் தமிழீழ பிரகடனமென இலங்கையரசும் போர் நிறுத்த உடன்படிக்கையிலிருந்து விலகல் அறிவிப்பு வருமென சர்வதேசமும் குழப்பிக் கொண்டிருக்கின்றன.

தமது விடுதலைப் போராட்டத்தில் இதுவரை சுமார் 20 ஆயிரம் வரையான போராளிகளையும் 1 இலட்சத்துக்கு மேற்பட்ட பொதுமக்களையும் இழந்துவிட்ட புலிகள் இனியும் பொறுமை காக்கமாட்டார்களென்ற கருத்து வலுத்துவரும் நிலையில் புலிகளின் முக்கிய பிரமுகர் பாலகுமார் அண்மையில் நிகழ்த்திய உரையொன்றில் இனியும் நாம் போராளிகளை விதைக்க தயாரில்லை என்பதால் விரைந்து முடிவொன்றை எடுப்போமெனக் கூறியதும் கவனிக்கத்தக்கது.

புலிகள் பாரிய தாக்குதலொன்றை மிக விரைவில் நடத்துவார்களென்று இலங்கையரசும் எதிர்பார்ப்பதால் அதற்கு முன்பாக தாம் முந்திவிட வேண்டுமென்பதில் தீவிரமாகவுள்ளது. அதனாலேயே பூநகரி மற்றும் மடுப்பகுதிகளை கைப்பற்றிவிடத் துடிக்கிறது. பூநகரியை கைப்பற்றுவதன் மூலம் புலிகளின் ஆட்டிலறி பலத்தை முறியடிக்கவும் மடுப்பகுதியை கைப்பற்றுவதன் மூலம் புலிகளின் விநியோக மார்க்கங்களை துண்டாடவும் இராணுவம் முயற்சிக்கின்றது.

இவ்வாறான ஏட்டிக்கு போட்டியான இராணுவ முனைப்புகளுக்கு மத்தியில் தனது மாவீரர் தின உரையில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் எதனைக் கூறப் போகின்றார்? தமிழீழ பிரகடனமா? போர் நிறுத்த உடன்படிக்கையிலிருந்து விலகும் அறிவிப்பா? அல்லது வழக்கம் போலவே இலங்கையரசுக்கு இறுதி எச்சரிக்கையும் சர்வதேசத்தின் செயற்பாடுகள் தொடர்பான கவலையுமா?

இலங்கையரசின் யுத்த நடவடிக்கைகளாலும் சர்வதேசத்தின் பக்கச்சார்வுப் போக்குகளாலும் விசனமடைந்திருக்கும் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் இம் மாவீரர் தின உரையில் போர் முரசு கொட்டலாமென்பதே அனைவரினதும் எதிர்பார்ப்பாகவுள்ளது.

எனவே இலங்கையரசுக்கும் சமாதான அனுசரணையாளர்களுக்கும் அதிர்ச்சி தரும் அறிவிப்புகள் பல இம்மாவீரர் தின உரையில் வெளிவருமென்பதில் சந்தேகமில்லை.

தாயகன்,தினக்குரல்

Thursday, November 01, 2007

முரண்பட்ட கருணா குழுவினர் ஒன்றுகூடி மீண்டும் சேர்ந்தியங்குவர் என அறிவிப்பு

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் (ரி.எம்.வி.பி) என்று அழைக்கப்படும் கருணா அணிக்குள் தோன்றியதாகக் கூறப்படும் உள் முரண்பாடுகள் முடிவுக்கு வந்துள்ளன என்று அந்த அணியின் அரசியல் துறைப் பொறுப்பாளர் திலீபன் தெரிவித்திருக்கிறார்
.
இது தொடர்பாக அவர்களுடைய இணையத்தளத்தில் வெளியிடப்பட்டிருப்பவை வருமாறு:
கடந்த 21 ஆம் திகதி மட்டக்களப்பில் கட்சியின் சகல உயர் மட்ட உறுப்பினர்கள் ஒன்றுகூடி மக்களினதும், கட்சியினதும் எதிர்கால நலனையும், சமகால நிலைமையையும் கருத்தில் கொண்டு நடைமுறைச் சாத்தியமான முக்கிய முடிவுகளை எடுத்துள்ளனர்.
அதனடிப்படையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் கருணாவின் ஆலோசனையிலும் பணிப்புரையின் கீழும் பிள்ளையான் இரண்டாம் நிலைப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கட்சியின் அதிகாரங்கள் பரவலாக்கப்பட்டு கருணாவின் நேரடிக் கண்காணிப்பில் கட்சியின் அரசியல் வேலைத்திட்டங்களை முன்னெடுக்க ஆறுபேர் கொண்ட அரசியல் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

அதன் உறுப்பினர்களாக பிள்ளையான், திலீபன், பாரதி, அசாத் மௌலானா, மார்க்கன், பிரதீப் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். கட்சியின் நிதிநிலைகள் தொடர்பாக கையாள்வதற்கு 7 பேர் கொண்ட நிதி செயற்குழு ஒன்றும் பிரத்தியேகமாக அமைக்கப்பட்டுள்ளது.
கட்சியின் நற்பெயருக்கும், கட்டுக்கோப்பிற்கும்,விதிக்கு முரணாகச் செயற்படும் யாராக இருந்தாலும் அவர்களுக்கு எதிராக பதவி நிலை கருத்தில் கொள்ளப்படாது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவும் அந்தக் கூட்டத்தில் முடிவுசெய்யப்பட்டிருக்கின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த பலவாரங்களாக கருணா அணிக்குள் முரண்பாடுகள் உருவாகி இருந்தமை உண்மையே.
அதற்குப் புறம்பாக தலைமைத்துவப் போட்டி, நிதிமோசடி என்றெல்லாம் கூறப்பட்டவை கற்பனை இவ்வாறான கருத்தையும் எந்தச் சந்தர்ப்பத்திலும் ரி.எம்.வி.பி. உறுப்பினர்கள் கொண்டிருக்கவில்லை என்று கூறப்பட்டுள்ளது
.
அண்மையில் தமது அமைப்புக்குச் சொந்தமான பல கோடி ரூபா நிதியை அதன் தலைவர் கருணா மோசடி செய்துவிட்டார் என்றும், ரி.எம். வி.பி. அணியில் இருந்தும் அதன் தலைமைப் பொறுப்பில் இருந்தும் அவரை மத்தியகுழு இடைநிறுத்தியிருக்கிறது எனவும் அறிவித்திருந்தமை தெரிந்ததே

Tuesday, October 30, 2007

போரியல் தீவிரப் போக்கால் மோசமடையும் பொருளாதாரம்

நுராதபுரம் விமானப்படைத் தளம் மீது விடுதலைப் புலிகளின் கரும்புலி அணி நடத்திய அதிரடிப் பாய்ச்சலினால் அதிர்ந்துபோயிருந்த தென்னிலங்கையை, திடீரென வந்த பால்மா விலை அதிகரிப்புப் பற்றிய அறிவிப்பு மேலும் அதிர்ச்சிக்குள் ஆழ்த்தியிருக்கின்றது.
போரியல் வெறிப் போக்கால் நாட்டின் பொருளாதாரத்தை மண்ணாக்கி வருகின்றது இந்த அரசுத் தலைமை. அதன் விபரீத விளைவுகளுக்கு முகம்கொடுத்து, அவற்றை எதிர்கொள்ள வேண்டிய நெருக்குவாரத்துக்குள் இக்கட்டுக்குள் தள்ளப்பட்டிருக்கின்றார்கள் பொதுமக்கள்.
ஒரு கிலோ பால்மா பக்கெட்டின் விலை ஒரேயடியாக இருநூறு ரூபாவால் அதிகரிக்கப்பட்டிருக்கின்றது.

அடுத்த வாரம் அரசின் வருடாந்த வரவு செலவுத் திட்டம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவிருக்கின்றது. அதற்கு முன்னரே விலை அதிகரிப்பு அறிவிப்புகள் தம்பாட்டில் வந்து கொண்டிருக்கின்றன.

இனி, வரவு செலவுத் திட்டத்தின் மூலமும் புதிய வரி விதிப்புகள், விலை அதிகரிப்புகள் தாராளமாக வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஒருபுறம் யுத்தத்துக்காகப் பெரும் தொகை நிதி வீண் விரயம் செய்யப்படுகின்றது. மறுபுறம் அதே யுத்தம் பொருளாதார விருத்தியை வீழ்த்தி, வருமானத்தை முடக்கி, பொருளாதார நெருக்கடியை உருவாக்கி நிற்கின்றது. இவற்றுக்கு மத்தியில் புதிய வரிவிதிப்புகள், விலை அதிகரிப்புகள் என்று நாட்டின் மோசமடைந்துவரும் பொருளாதாரச் சுமையை மக்கள் மீது சுமத்துவதைத் தவிர அரசுக்கு வேறு வழியேயில்லை. எனவே, வரவு செலவுத் திட்டத்தை ஒட்டியும் புதிய விலை அதிகரிப்புகள் வரும் என நம்பிக்கையாக நம்பலாம்.

இதே சமயம்,தொலைத் தொடர்புக் கட்டண (தொலைபேசிக்கட்டண) அதிகரிப்பு, மின்சாரக் கட்டண உயர்வு, எரிபொருள் விலை அதிகரிப்பு என்று பல நிதிச் சுமை அறிவிப்புகள் அடுத்தடுத்துத் தொடர்ந்தும் வெளியாவதற்கு வரிசையாகக் காத்து நிற்கின்றன என்கின்றன விடயமறிந்த வட்டாரங்கள்.

நல்லாட்சி தவறி, ஊழலும், மோசடியும், லஞ்சமும் அரச நிர்வாகத்துக்குள் புரையோடிப் போயிருக்கின்றமையும் நாட்டின் பொருளாதாரம் இவ்வாறு அதல பாதாளத்துக்குள் வீழ்ந்தமைக்கு மற்றொரு முக்கிய காரணமாகும்.

இவ்வளவு குளறுபடிகளையும் "புலிகளுக்கு எதிரான யுத்தம்' என்ற ஏமாற்று நாடகத்தின் அரங்குகளினால் மூடி மறைத்துக்கொண்டு ஆட்சி வாகனத்தை ஓட்டுகின்றது அரசுத் தலைமை.
மிகவும் மோசமடைந்துவரும் இந்தப் பொருளாதார நெருக்கடிக்குள் இருந்து நாடு எப்படித் தாக்குப் பிடித்துப் பிழைத்து, மீண்டு, தப்பும் என்பதே தென்னிலங்கை அரசியல் விமர்சகர்களின் ஆச்சரியத்துடன் கூடிய வினாவாகவிருக்கின்றது.

கட்டுமட்டில்லாமல் எகிறிவரும் விலைவாசி உயர்வுக்கு முகம் கொடுத்து, குடும்பத்தின் அன்றாடத் தேவைகளையாவது நிறைவு செய்து, எவ்வாறு வாழ்க்கையை ஓட்டுவது என்பது சாதாரண அப்பாவிப் பொதுமகனின் ஒரே வினாவாகவிருக்கின்றது. ஒரு வேளை கூட முழுமையாக உணவு அருந்தும் வசதியில்லாத "அன்றாடம் காய்ச்சி' நிலைக்குப் பல குடும்பங்கள் வந்துவிட்டன.
விலைவாசி அதிகரிப்புச் சுமையால் சமூகம் தடுமாறுகிறது என்றால், மறுபுறம் அதிகார நிர்வாகத் தவறுகளில் அதிருப்தி கொண்டுள்ள நாட்டு மக்கள் குறிப்பாகத் தென்னிலங்கை மக்கள் இந்த அரசுக்கு எதிராகத் தமது எரிச்சலை வெளிப்படுத்தத் தொடங்கிவிட்டார்கள்.
நாடளாவிய ரீதியில் ஆசிரியர்கள், அதிபர்கள் இன்றும் நாளையும் வேலைநிறுத்தத்தில் குதிக்கின்றார்கள். இதனால் அரச பாடசாலைகள் முற்றாகச் செயல் இழக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. எனினும் இந்த வேலை நிறுத்தத்தில் தமிழர் சார்பு ஆசிரியர் தொழிற்சங்கங்கள் சம்பந்தப்படாததால், இந்த வேலைநிறுத்தத்தின் நேரடிப் பாதிப்பு வடக்கு, கிழக்கில் அநேகமாகக் குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

இதேசமயம், சுகாதார சேவைத் தொழிற்சங்கங்கள் நாளை மீண்டும் ஒருநாள் வேலைநிறுத்தத்தில் குதிக்கவுள்ளன.
அதேவேளை, மின்சாரசபை உட்பட பல அத்தியாவசியத் துறைத் தொழிற்சங்கங்களும் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்துக்குத் தயாராகி வருகின்றன.
ஆட்சி, அதிகாரக் கையாள்கை தவறியதால் விலைவாசி அதிகரிப்பு, வாழ்க்கைச் சுமை உயர்வு, பண வீக்கம், ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி என்று நாட்டின் பொருளாதாரத்தின் ஒவ்வொரு அடிப்படை அங்கங்களும் வரிசையாகத் தளர்ந்து வருகின்றன.
தற்போதைய அரசின் யுத்தத் தீவிரப் போக்கு பல மோசமான பின்னடைவுகளையும், விளைவுகளையும் நாட்டின் பொருளாதாரத்தில் ஏற்படுத்தி வருவது அப்பட்டமாகப் புலப்படுகின்றது.

நாட்டுக்குப் பெரும் வருமானம் ஈட்டித்தரும் உல்லாசப் பயணத்துறை, போர் விபரீதங்களால் மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றது. உல்லாசப் பயணிகளின் வருகை ஏற்கனவே சுமார் இருபது வீதத்திலும் அதிகமாக வீழ்ச்சியடைந்துள்ளது. யால வனச் சரணாலயம் மற்றும் அநுராதபுர விமானப்படைத்தளம் ஆகியவை மீதான புலிகளின் வெற்றிகரத் தாக்குதல்கள் இந்தத் துறையை மேலும் மோசமாகப் பாதிக்கும் சூழ்நிலை தென்படுகிறது.
மொத்தத்தில் நாட்டின் பொருளாதாரம் கட்டையில் ஏறிப் படுக்கப்போகின்றது என்பது மெல்ல மெல்ல நிச்சயமாகி வருகின்றது.
இந்த மோசமான நிலைமைக்கு அரசை வழிப்படுத்திய "ராஜபக்ஷ சகோதரர்கள் அண்ட் கம்பனியே பொறுப்பேற்க வேண்டியிருக்கும்.

-sudaroli-

Monday, October 15, 2007

இலங்கை நிலைமை தொடர்பாக ஆர்பர் அம்மையாரின் கையாள்கை

இலங்கை இனப்பிரச்சினை விவகாரம் தொடர்பாகக் காத்திரமான விடயங்களை வெளிக்கொண்டு வரும் என எதிர்பார்க்கப்பட்ட, மனித உரிமைகளுக்கான ஐ.நா.தூதுவர் லூயிஸ் ஆர்பர் அம்மையாரின் இலங்கை விஜயம் முடிவடைந்துவிட்டது.
எதிர்பார்க்கப்பட்டபடி, இலங்கை நிலைமை தொடர்பான தெளிவான பார்வை ஒன்றை ஆர்பர் அம்மையாரின் இந்தப் பயணம் மூலம் உலகம் தரிசிக்கக்கூடிய நல்லதோர் வாய்ப்புக் கிட்டியிருக்கின்றது.
இலங்கையில் மிக மோசமாக இடம்பெறும் மனித உரிமை மீறல்களைக் கண்காணிக்க ஐ.நாவின் அவதானிப்பு அலுவலகம் ஒன்றை இலங்கையில் ஸ்தாபிக்க வேண்டும் என்பதில் ஐ.நா.உறுதியாக இருப்பதும்
அதற்கு இடமளிப்பது இல்லை என்பதில் இலங்கை அரசு பிடிவாதமாக இருக்கின்றது என்பதும்
ஆர்பர் அம்மையாரின் கொழும்பு விஜயத்தின் முடிவின்போது நடத்தப்பட்ட பத்திரிகையாளர் மாநாட்டில் தெளிவாக வெளிப்பட்டன.
இலங்கை விவகாரத்தைக் கண்காணிப்பதற்காக சர்வதேச அமைப்புகள் இலங்கைக்கு வருவதற்கும், இங்கு ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பின் அலுவலகம் ஒன்றைத் திறப்பதற்கு அனுமதிப்பது இல்லை என்பதிலும் அரசு உறுதியாக இருக்கின்றது.
மேற்படி அலுவலகம் திறப்பதைப் பிரேரிக்கும் விதத்தில் ஆர்பர் அம்மையார் தெரிவித்த கருத்துக்கு அதே பத்திரிகையாளர் மாநாட்டில் வைத்து அரசின் திட்டவட்டமான நிராகரிப்புப் பதில் தெளிவாகத் தெரிவிக்கப்பட்டு விட்டது.
இலங்கை அரசின் சார்பில் அந்தப் பத்திரிகையாளர் மாநாட்டில் பங்குபற்றிய இடர் முகாமைத்துவ, மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க இந்த விடயத்தை உறுதியாகத் தெளிவுபடுத்தினார்.
அந்த மாநாட்டில் வைத்து மனித உரிமைகளுக்கான ஐ.நா.தூதுவர் ஆர்பர் அம்மையார், தெரிவித்த கருத்துகளின் சாராம்சம் இங்கு நோக்கற்பாலது.
""மனித உரிமைகளைப் பேணும் விடயத்தில் இலங்கை அரசுக்கும் ஐ.நாவுக்கும் இடையில் வெறும் தொழில்நுட்ப உதவிப் பரிமாற்றம் இருந்தால் மட்டும் போதுமானது என நான் நம்பவில்லை. மக்களுக்கு நன்மைதரும் விதத்தில் இதில் ஐ.நாவின் பங்களிப்பு உயர்ந்தளவுக்கு மேம்படுத்தப்படவேண்டும்.
""மனித உரிமை மீறல்கள் கட்டுமட்டில்லாமல் நடக்கின்றன. இவை அரசுக்கு எதிரான புலிகளின் வெறும் பிரசார உத்தியின் அடிப்படையிலான குற்றச்சாட்டுகள் என்று கூறப்பட்டாலும் கூட, விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டிய பல விடயங்கள் அவற்றில் புதைந்திருப்பதை உணர முடிகின்றது.
""பயங்கரவாதத்தை ஒழிக்கும் நோக்குடன் இலங்கை அரசு கொண்டு வந்துள்ள அவசரகாலச்சட்ட விதிகள் தொடர்பான இறுக்கமான ஏற்பாடுகள், சட்டத்தின் ஆட்சியில் ஏற்பட்டுள்ள மிக மோசமான நலிவு நிலைமை, குற்றமிழைத்தோரைச் சட்டத்தின் பிடியிலிருந்து காப்பாற்றும் விசேட சட்டவிலக்களிப்பு வசதிகள் போன்றவை மனித உரிமைகள் தொடர்பான விடயத்தில் அபாய எச்சரிக்கையை ஏற்படுத்துவனவாக உள்ளன.
""ஊன்றிய கவனிப்புடன் கூடிய விசாரணைகள், குற்றமிழைத்தோரை சட்டத்தின் முன் நிறுத்துதல், அத்தகையோரைத் தண்டித்தல் போன்றவை தொடர்பாக இறுக்கமான சட்ட ஏற்பாடுகள் இல்லாமை கவலையைத் தருகின்றது.''
இப்படியெல்லாம் தமது இலங்கை விஜய முடிவில் ஆர்பர் அம்மையார் கருத்துத் தெரிவித்திருக்கின்றார்.
ஆர்பர் அம்மையார் தமது இலங்கை விஜயத்தை அடுத்து, கொழும்பில் தெரிவித்த கருத்துகளில் இருந்து ஊன்றிக் கவனிக்கத்தக்க அம்சங்களாக வெளிப்பட்ட விடயங்களை இனிப் பார்ப்போம். அவை:
* மனித உரிமை மீறல்கள் தொடர்பான முறைப்பாடுகளை விசாரிப்பதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன என்று இலங்கை அரசு கூறினாலும், அவ்வாறு நேர்மையாக விசாரிக்கப்படவேண்டிய பல்வேறு சம்பவங்கள் இன்னும் விசாரிக்கப்படாமலேயே உள்ளன.
* அவ்வாறு நிலுவையில் விடப்பட்டிருக்கும் பல்வேறு மனித உரிமை மீறல்கள் விசாரிக்கப்படுவதற்கு ஆவன செய்யப்பட வேண்டும்.
* இலங்கையில் மோசமாக இடம்பெறும் மனித உரிமை மீறல்களை விசாரணை செய்வதற்கு இலங்கையில் தற்சமயம் நடைமுறைப்படுத்தப்படும் சட்டங்கள் போதுமானவையல்ல.
*குற்றச்சம்பவங்கள் குறித்து விசாரிக்கப்படாத நிலைமை நீடிப்பது பெரும் குழப்பத்தைத் தருகின்றது.
இவையே ஆர்பர் அம்மையார் வெளிப்படுத்தும் முக்கிய விடயங்களாகும்.
ஏற்கனவே சர்வதேச ரீதியில் சர்ச்சைக்குரிய முக்கிய தேசங்களின் மனித உரிமை மீறல்கள் தொடர்பான விடயங்களைக் கையாண்ட நிரம்பிய அனுபவம் பெற்றவரே லூயிஸ் ஆர்பர் அம்மையாராவார்.
முன்னாள் யூகோஸ்லாவியாவிலும், ருவாண்டாவிலும் மிக மோசமாக இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து, சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கைத் தொடர்ந்து, அந் நாடுகளின் தலைவர்களுக்கு எதிரான வழக்கு விசாரணைகளை நடத்திய முன் அனுபவம் ஆர்பர் அம்மையாருக்கு நிறையவே உண்டு.
சர்வதேச நீதிமன்றத்தில் சிறந்த வழக்குத் தொடுநராகப் பணியாற்றிய ஆர்பர் அம்மையாருக்கு, இலங்கைக்கு உள்ளே இனப்பிரச்சினை ரீதியாகத் தமிழர் அடக்கி, ஒடுக்கப்பட்டு, அவலப் படுத்தப்படும் வாழ்க்கை நிலையைப் புரிந்து கொள்வது (அவருக்கு) ஒன்றும் அப்படிக் கஷ்டமான விடயமே அல்ல.
இந்தப் பின்னணியில்
இங்கு தாம் கண்ட உண்மைகளை சர்வதேச மயப்படுத்தி, இலங்கைப் பிரச்சினையில் மேற்குலகு உட்பட்ட பெரும்பான்மை சர்வதேச சமூகத்துக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த ஆர்பர் அம்மையார் உதவி செய்வார்; உறுதியாக நடவடிக்கை எடுப்பார் எனத் தமிழர்கள் நம்பிக்கையோடு எதிர்பார்க்கின்றனர்.

நன்றி- சுடரொளி