Friday, December 11, 2015

வெள்ளத்தால் பரிதவிக்கும் தாய்த் தமிழக உறவுகளுக்கு ஓர் மடல்!

வந்தாரை வாழ வைக்கும் தாய்த் தமிழகம் -இன்று
வானத்துச் சுனாமியால் தனித் தீவானதே
தொப்புள் கொடி உறவுகளான
எம் சொந்தங்கள் படும் அவல நிலை கண்டு
எம் மனங்கள் துயர் தாளாமல் வெதும்பி உருகுகிறதே …!
வரலாறு காணாத மனிதப் பேரவலத்தால்
வந்தது மனிதப் பேரவலம்
இயற்கைத் தாயே … பதில் சொல்லு
ஏனடி உனக்கு இத்துணை கோபம் ?
போதுமம்மா…! போதும்..!
எம் உறவுகள் நிம்மதியாய் வாழ
இனியேனும் வழி விடு
இன மத மொழி பேதமின்றி
எல்லோர் மனதிலும் இடம்பிடித்த
சென்னை மாநகரம் -இன்று
யார் கண் பட்டதோ…!
தரையாய் இருந்து வந்த நிலங்கள்
கடலாய் மாறிட ….
திகைத்துப் போன மக்கள் கூட்டம்
இன்று செய்வதறியாது திகைத்து நிற்கும் பரிதாப நிலை
ஈழத் தமிழருக்கு ஏதும் இன்னலென்றால்
முதலில் ஒலிக்கும் குரல் உங்களுடையதே-அதை
எப்படி நாம் மறப்போம் ?
எம் மண்ணின் விடிவுக்காக நீங்கள் செய்த உன்னத தியாகங்களுக்கும்
தொடர்ச்சியான போராட்டங்களுக்கும்
நாம் என்ன தான் கைமாறு செய்வோம் ?
கரை காணாத் துயர் கடலுள் அகப்பட்டு
கதி கலங்கிப் போயிருக்கும்
ஒட்டு மொத்த எம் உதிர உறவுகளும்
விரைவில் வெள்ளத்தால் மீள
எல்லோருக்கும் பொதுவான இறைவனிடம் மன்றாடுகின்றோம்
வளம் கொழிக்க வாழ்ந்த எம் உறவுகள் -இன்று
ஒரு வேளை உணவுக்காகக்
கையேந்தும் அவல நிலை கண்டு
எங்கள் எல்லோர் விழியிலும்
கண்ணீர் மழை கொட்டுகிறதே !
கடல் எல்லை நம்மைப் பிரித்தாலும்
உணர்வு எல்லையால் நாங்கள்
என்றும் ஒன்றுபட்டவர்களே…!
அதனால் தான் மீண்டும் மீண்டும் சொல்கிறோம்
எப்போதும் நாங்கள் உங்களுடனேயே இருக்கிறோம்
உங்கள் துயரத்தில் நாங்களும் பங்கு கொள்கிறோம் உறவுகளே ..!
ஆறாத் துயருடன் : குறிஞ்சிக் கவி செ -ரவிசாந்,
வீரமனை, குப்பிளான்.யாழ்ப்பாணம் 

Thursday, December 10, 2015

தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கு!

வணக்கம். தங்கத்தாரகை, புரட்சித்தலைவி, நிரந்தர முதல்வர் போன்ற அடைமொழிகள் இல்லாததைக் கண்டு முகம் சுளித்திருப்பீர்கள். அப்படி அழைப்பதற்கான நேரமோ விருப்பமோ இல்லை. முதல்வர் என்ற முறையில் ‘மாண்புமிகு’ என்று அழைத்திருக்கலாம். ஆனால் மக்களின் மீது கரிசனம் கொள்ளும் மாண்பு தங்களுக்கு இல்லை என்று கருதுவதால் அப்படி அழைக்கவும் மனம் வரவில்லை.
உங்கள் கட்சிக்காரர்கள் உங்களை ‘அம்மா’ என்று அழைப்பதோடு தமிழகத்தையும் அப்படி அழைக்க வைத்துவிட்டார்கள். நீங்களும் எங்கள் வரிப்பணத்தில் அம்மா உணவகம், அம்மா மருந்தகம் என்று ஏராளமாக, தாராளமாக ‘அம்மா’ திட்டங்களைக் கொண்டுவந்துவிட்டீர்கள். அம்மா என்கிற சொல் தமிழர்களுக்கு உயர்வானது. தாய்மை என்றால் கருணை என்று அர்த்தப்படுத்திக்கொள்கிறவர்கள் தமிழர்கள். தன் குஞ்சுகளைக் கொல்ல வரும் பருந்தைக்கூட சாத்தியப்படாத உயரத்தில் பறந்து சண்டையிட்டுக் காப்பாற்ற முயலும் தாய்க்கோழி. ஆனால் நீங்களோ வெள்ளத்தால் பாதிப்படைந்த மக்களைக் கண்கொண்டும் பார்க்கத் தயாராயில்லை.
   
நவம்பர் மாத இறுதியில் பெருமழை பெய்து கணிசமான பாதிப்புகள் ஏற்பட்டும், கூக்குரல்கள் எவையும் உங்கள் காதுகளை எட்டவில்லை. உங்கள் போயஸ் கார்டன் வீட்டைத் தாண்டியும் சென்னை இருக்கிறது. அங்கே உங்களுக்கு வாக்களித்த அப்பாவி மனிதர்கள் இருக்கிறார்கள் என்று நீங்கள் உணரவேயில்லை. சமூகவலைத்தளங்கள், ஊடகங்கள் என பாதிப்புகளைப் போதுமான அளவுக்குப் பட்டியலிட்டும் படம் பிடித்தும் காட்டியபிறகு, ஒருவழியாக உங்கள் வீட்டின் கதவுகள் திறந்தன. நீங்கள் தமிழகத்துக்கே முதல்வர் என்று நினைத்தால், ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ. மட்டும்தான் என்பதுபோல் ஆர்.கே.நகருக்குச் சென்றீர்கள். காரைவிட்டு இறங்காமலே ‘பார்வையிட்டீர்கள்’. மைக் பிடித்து ‘வாக்காளப் பெருமக்களே’ என்று பேசி இழிவான அரசியலின் அத்தியாயத்தைத் தொடங்கிவைத்தீர்கள். ‘ஒருமாதம் பெய்ய வேண்டிய மழை மூன்றே நாட்களில் பெய்யும் என்று எதிர்பார்க்கவில்லை’ என்று கச்சிதமாக வசனம் பேசினீர்கள். அவ்வளவுதான்!
சரி, அப்போது நீங்கள் எதிர்பார்க்கவில்லை. ஆனால் டிசம்பர் முதல் வாரத்தில் 50 செ.மீ மழை பெய்யும் என்று பி.பி.சி. அறிவித்ததே, வானிலை ஆய்வு மையமும் கனமழை பெய்யும் என்று அறிவித்ததே... அந்த மழைக்கும் பெருகப்போகும் வெள்ளத்துக்கும் என்ன செய்தீர்கள்? ‘செய்வீர்களா நீங்கள் செய்வீர்களா?’ என்று எங்களைப் பார்த்து கேட்ட நீங்கள், பேரிடர் தருணத்தில் கூட ஒன்றுமே செய்யவில்லையே! டிசம்பர் 1 தொடங்கிய பெருமழை, பெருகிய வெள்ளம், திறந்துவிடப்பட்ட ஏரி சென்னையின் பெரும்பாலான மக்களின் வாழ்வாதாரங்களை, உடைமைகளை, கனவுகளை, சேமிப்பை, கடன்தொகையை, கால்நடைகளை, நம்பிக்கையை, பல உயிர்களை, உறவுகளை அடித்துச் சென்றுவிட்டது. அப்போதாவது போயஸ் கார்டன் கதவு திறந்ததா? இல்லை!

மோடி, ஹெலிகாப்டரில் பார்வையிடப்போகிறார் என்ற செய்தி வந்ததும், அவருக்கு முன்னால் நீங்கள் ஹெலிகாப்டரில் ‘பார்வையிட்டீர்கள்’. அடுத்த மாநிலத்து முதல்வரோ, பிரதமரோ ஹெலிகாப்டரில் வந்து பார்வையிடுவதைப் புரிந்துகொள்ள முடிகிறது. சென்னை முழுக்க வெள்ளப் பாதிப்பு என்பது எல்லோருக்கும் தெரியும்போது சிலநாட்கள் கழித்து ஹெலிகாப்டரில் பார்வையிடுவதற்குப் பெயர்தான் முதல்வரா? பாதிக்கப்பட்ட மக்களைப் போய்ச் சந்திப்பதில் இருந்து எது உங்களைத் தடுத்தது?

பாதிக்கப்பட்டவர்களைத்தான் பார்க்க வரவில்லை. பத்திரிகையாளர்களை அழைத்துப் பேசியிருக்கலாமே. சென்னையின் பாதிப்பு, அதற்கு அரசு எடுக்கப் போகும் முயற்சிகள் என விலாவாரியாக விளக்கியிருக்கலாமே! ‘விஸ்வரூபம்’ படப் பிரச்னையில் கமல்ஹாசனைக் குற்றம் சாட்ட மிக நீண்ட பிரஸ்மீட் நடத்தினீர்களே... லட்சோப லட்சம் மக்களைப் பாதிக்கும் இந்தப் பேரிடர் குறித்துப் பத்திரிகையாளர்களைச் சந்தித்து அரசின் நிலை பற்றி விளக்கவேண்டும் என்று உங்களுக்குத் தோன்றவில்லையா? உங்களைச் சுற்றியிருக்கும் ஆலோசகர்கள் உங்களுக்கு உணர்த்தவில்லையா?
பாதிக்கப்பட்ட மக்களைச் சந்திக்கவில்லை; பத்திரிகையாளர்களைச் சந்திக்கவில்லை. இதோ இத்தனை பாதிப்புகளுக்கு இடையில் ஈரநெஞ்சம் கொண்ட சாமான்ய மனிதர்களும்,  சிறுசிறு அமைப்புகளும், அர்ப்பணிப்பு உணர்வு கொண்ட அரசு ஊழியர்களும் நிவாரணப் பணிகளைச் செய்து முடித்தபிறகு, முந்தா நாள் அறிக்கை விடுகிறீர்கள், ‘கனமழை பெய்ததால்தான் வெள்ளம் ஏற்பட்டது’ என்று. இதைக் கண்டுபிடிக்க இத்தனை நாட்களா? ஊரே கதறியபோது, சென்னையில் ஒன்றுமே நடக்காததுபோல் இருந்தது ஜெயலலிதாவும் ஜெயா டி.வி.யும் மட்டும்தான்.

சாதாரண மக்கள் கொண்டுசேர்த்த நிவாரணப் பொருட்களைப் பறித்து அதில் அம்மா ஸ்டிக்கர்களை ஒட்டினார்கள் உங்கள் கட்சிக்காரர்கள். பல இடங்களில் நிவாரண உதவிகள் செய்யப்போனவர்களை மிரட்டினார்கள். ‘தவறு செய்யும் கட்சிக்காரர்களைத் தண்டிப்பவர் ஜெயலலிதா’ என்று ஒரு பிம்பத்தை உருவாக்கி வைத்திருக்கிறீர்கள். ‘அக்ரி கிருஷ்ணமூர்த்திக்குத்தான் அமைச்சர் பதவி போகுமே தவிர, ‘குற்றவாளி’ என்று குன்ஹா தீர்ப்பளித்தாலும் ஜெயலலிதாதான் அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர்’ என்று புரிந்தவர்களுக்கு இந்தப் பிம்பம் ஒரு மாயை என்று தெரியும். இந்த மாயையை நம்புபவர்கள் சார்பாகவே கேட்கிறேன், அடுத்தவர் பொருட்களில் ‘அம்மா ஸ்டிக்கர்’ ஒட்டிய அடாவடிக்காரர்கள் மீது என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் ஜெயலலிதா? கொடுமையிலும் கொடுமையாக துக்க வீட்டிலும் ’அம்மா துதி’ பாடுகிறார்கள் உங்கள் கட்சிக்காரர்கள். சகிக்கவில்லை.
 
பாதிக்கப்பட்ட மக்களைப் பார்க்கச் செல்லாதது, நிவாரணப் பொருட்களிலும் அம்மா ஸ்டிக்கர் ஒட்டுவது மட்டுமா உங்கள் ஆட்சியின் குற்றங்கள்? இதோ, ‘அதிக மழை பெய்ததால் மட்டும் வெள்ளம் ஏற்படவில்லை. செம்பரம்பாக்கம் ஏரியைச் சீராகத் திறந்துவிடுவதில் ஏற்படும் தாமதமும் ஒரேடியாகத் திறந்துவிடப்பட்டதும், மக்களுக்கு முறையாக அறிவிக்காததும்கூட காரணங்கள்’ என்று செய்திகள் வெளியாகியிருக்கிறதே, இதற்கெல்லாம் காரணம் உங்கள் தலைமையிலான செயல்படாத அரசாங்கம்தானே ஜெயலலிதா அவர்களே..!?

‘அம்மாவின் ஆணைக்கிணங்க’ என்று மூச்சுக்கு முன்னூறு தடவை கட்சிக்காரர்கள் தொடங்கி கலெக்டர்கள் வரை சொல்ல வைத்திருக்கிறீர்களே, அந்த ‘அம்மாவின் ஆணை’ எப்போது வரும் என்று தெரியாமல் காத்துக்கிடந்ததுதானே இந்த வெள்ளத்துக்குக் காரணம். இந்தக் கடிதத்தை எழுதிக்கொண்டிருக்கும் இந்த நொடிவரை தலைமைச் செயலாளரால் உங்களைச் சந்திக்க முடியவில்லையே. பாதிக்கப்பட்ட மக்களையும் பத்திரிகையாளர்களையும், ஏன் பிரதமரையும்கூட சந்திக்காத நீங்கள் அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டி நிவாரணப் பணிகளை முறையாகச் செய்வீர்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு இல்லை.

பதவியில் இல்லாதபோதும் ‘மக்களின் முதல்வர்’ என்று உங்களுக்கு நீங்களே பட்டம் சூட்டிக்கொண்டீர்கள். ஆனால், பதவியில் இருக்கும் இப்போதுகூட நீங்கள் மக்களின் முதல்வராக இல்லையே!

உங்கள் கட்சிக்காரர்கள் உங்களை நிரந்தரப் பொதுச்செயலாளர் என்றும்,  நிரந்தர முதல்வர் என்றும் அழைக்கிறார்கள். ஜனநாயகத்தின் வாசனை தப்பித் தவறிக்கூட கசிந்துவிடாத உங்கள் கட்சியில் நீங்கள் நிரந்தரப் பொதுச்செயலாளராக இருக்கலாம். நீங்கள் நிரந்தர முதல்வரா இல்லையா என்பதை ஆறுமாதங்களில் வரப்போகும் தேர்தல் சொல்லிவிடும். ஆனால் ஒன்றுமட்டும் உறுதி - இந்த இயற்கைப் பேரிடரும், அதில் உங்கள் தலைமையிலான அரசு காட்டிய அலட்சியமும், உங்கள் கட்சிக்காரர்கள் காட்டிய அடிமை மோகமும், தமிழகத்துக்கு நிரந்தரக் களங்கம்.

தனிமனிதத் துதியை விரும்பும், ஊக்குவிக்கும் ஓர் அரசின்கீழ் நாங்கள் வாழ்வது தமிழர்களான எங்களுக்கு நிரந்தர அவமானம்!

இப்படிக்கு, 
தமிழகத்தின் பாதுகாக்கப்பட்ட பிரதேசமான போயஸ் கார்டனுக்கு அப்பால் வசிக்கும் ஒரு சென்னைவாசி!


இந்த கடிதம் மற்றும் படங்கள்  யாவும்  விகடனுக்கு உரியது .உண்மையில் இதை  எல்லோருடனும் பகிர்ந்து கொள்ளவேண்டும் என்ற நோக்கில் இதை  இங்கு தந்திருக்கிறேன்   விகடன் இணையதளத்துக்கு நன்றிகள் .

Sunday, December 06, 2015

ஒரு அவசர உதவி .இலங்கையில் தமிழக உறவின் சடலம் !

மழையில் சிக்கி தமிழக உறவுகள்  சொல்லணா துயரங்களை அனுபவித்துவரும் நிலையில் இன்றைய தினம் இலங்கையின் திருகோணமலை கடற்பகுதியில் ஒரு தமிழக உறவின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது .அந்த சடலத்தில் ஒரு அடையாள அட்டையும் கண்டெடுக்கப்பட்டுள்ளது . கண்டெடுக்கப்பட்ட சடலத்திலிருந்து மீட்கப்பட்ட சாரதி அடையாள அட்டையில், அவர் சென்னை சூளைமேடு காமராஜ் நகர், என்.ஜி.ஓ காலனியை சேர்ந்த வாகனச்சாரதியான என்.பூமிதுரை என குறிப்பிடப்பட்டுள்ளது.வீட்டு இலக்கம் 13/15

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தினால் அடித்துச் செல்லப்பட்டு இவர் இலங்கை கடற்பரப்பில் கரையொதுக்கியிருக்கலாம் என அந்த சந்தேகிக்கப்படுகிறது. நிலாவெளி பகுதியில் கண்டெடுக்கப்பட்ட சடலம் தற்போது திருகோணமலை வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைகளுக்காக வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது. சடலம் உருகுலைந்துள்ளமையினால், அடையாளம் காண முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

சக வலைபதிவர்கள்  இயலுமானவ்ர்கள் தயவு செய்து இந்த தகவலை அவர்களின் குடும்பத்தினருக்கு உரிய முறையில் தெரிவித்து ஆக வேண்டிய காரியங்களை தூதுவராலயதின் ஊடாக   செய்யலாம் என்பதனையும் தெரிவித்து விடவும் .சடலம் அடையாளம் காணப்படவில்லை என்பதனையும் கவனத்தில் கொள்ளவும் .தயவு செய்து  சென்னையில் உள்ளவர்கள் இதனை செய்யலாம் .

அடையாள அட்டையின் படம் கீழே இணைத்துள்ளேன் .



கலைஞர் டி.வி – ஜெயா டி .வி! - இதுதாங்க வித்தியாசம்!!!

“அப்பா, சண்டே என்னையும் அண்ணாவையும் மாலுக்குக் கூட்டிட்டுப் போறீங்களா?’’ பள்ளி திறந்த சோகத்தில் சின்னவன் என்னிடம் கேட்டான்.
“இல்ல கண்ணு, சென்னை பூரா மழை பேஞ்சு கழுத்தளவு தண்ணி நிக்குது. சாப்பாடு, தண்ணி எதுவுமே கிடைக்கலை. நியூஸ் பார்க்கலியா நீ?’’ என்று கேட்டுவிட்டு, ஆதாரம் காட்ட, கலைஞர் செய்திகள் வைத்துக் காண்பித்தேன். இடுப்பளவு நீரில் சென்னை மக்கள் அங்கும் இங்கும் துன்பப்படும் செய்திகளைப் பார்த்ததும், என்னிடமிருந்து ரிமோட்டைப் பிடுங்கி, “இந்த சானல் பாருங்கப்பா…’’ என்று ஜெயா நியூஸ் வைத்தான்.     
    
அம்மா படத்தை வைத்துக்கொண்டு அமைச்சர்கள் உட்கார்ந்திருக்க, `இதைவிட எவ்வளவு பெரிய மழை வந்தாலும் சென்னைக்கு ஒரு துளிகூட பாதிப்பே இல்லை. தமிழ்நாடு அரசு தயார் நிலையில் இருக்கிறது’ எனச் செய்தி சொல்லி சென்னை சாலை களைக் காண்பித்தார்கள், படுசுத்தமாக காய்ந்துபோய், பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது சிங்காரச் சென்னை.             
“எந்த மாலுக்குப் போகலாம்னு டிசைட் பண்ணி வைங்க. ஈவினிங் ஸ்கூல்லேர்ந்து வந்த உடனே எனக்கு சொல்லணும்’’ என்று கட்டளையிட்டுச் சென்றிருக்கிறான்.
கார்ட்டூன் மட்டும் பார்த்திட்டிருந்த புள்ளப்பூச்சிங்களுக்கெல்லாம் கொடுக்கு முளைக்க வெச்சிட்டீங்க ளேய்யா!
முகநூலில் சுட்டது .

Saturday, December 05, 2015

ஆளுங்கட்சியினரின் அராஜகம்... கொந்தளிக்கும் மக்கள்!

காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக கடந்த சில நாட்களாக தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால், சென்னை நகரம் வெள்ளத்தில் தத்தளித்து வருகிறது. மீட்புப்பணிகளில் ராணுவம் உள்ளிட்ட முப்படையினரும் இயங்கி வருகின்றனர். பால், ரொட்டி உள்ளிட்ட உணவு பொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.


கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு,  தமிழகத் தலைநகர் இத்தகைய இடர்பாட்டினை எதிர்கொண்டுள்ளது.  முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காமல் விட்ட அரசு,  நிவாரணப்பணிகளை மேற்கொள்வதிலும் சுணக்கம் காட்டியது பொதுமக்களுக்கு வேதனையை ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்களும், தன்னார்வத் தொண்டர்களும் தங்களால் இயன்ற உதவிகளையும், உணவு பொருட்களையும் பாதிப்புக்குள்ளான மக்களுக்கு வழங்கி வருகின்றனர்.


இந்நிலையில், ஆளும் கட்சியை சேர்ந்தவர்கள்,   நிவாரணப்பணிகளில் ஈடுபட்டு வரும் தன்னார்வத் தொண்டர்களிடம் இருந்து உணவு பொருட்களை வாங்கி நாங்கள்தான்  விநியோகிப்போம் என்று பல பகுதிகளில் அராஜகத்தில் ஈடுபட்டு வருகின்றார்கள். இன்னும் சில இடங்களில் அப்படி அபகரிக்கப்பட்ட உணவு பொருட்களை தாங்கள் வழங்குவதுபோல் இருக்க வேண்டும் என்று, அதற்காக முதல்வரின் படம் போட்ட 'ஸ்டிக்கர்களை உணவு பொட்டலங்கள் உள்ளிட்ட பொருட்கள் மீது ஒட்டி வழங்குதாகவும் செய்திகள் வெளி வருகின்றன.


இன்னும் சில இடங்களில் 'ஸ்டிக்கர்களை' தயார் செய்ய தாமதமானதால், அந்த உணவு பொருட்களை  வழங்காமல் வைத்திருந்து ஸ்டிக்கர்கள் கிடைக்கப்பெற்ற பின் அதனை நிவாரண பொருட்கள் மீது ஒட்டி அரசு சார்பில் வழங்குவதாக கூறப்படுகிறது. இதனால்  நிவாரணப் பொருட்கள் கிடைக்கப் பெறாமல்,  மக்கள் திண்டாடி வருகின்றனர்.


இதுமட்டுமல்லாமல் பல இடங்களில் ஆளுங்கட்டியினர் பாகுபலி திரைப்பட போஸ்டர்போல் முதல்வரின் படத்தை போட்டு பெரிய பெரிய அளவில் ஃப்ளக்ஸ் பேனர்களை வைத்து கொண்டு மலிவான விளம்பரங்களை தேடிக்கொண்டு நிவாரணம் வழங்கி வருவதாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளது.
இதையெல்லாம் தட்டிக்கேட்கவும், தடுக்கவும் யாரும் முன்வராமல் கண்டும் கண்டுக்கொள்ளாமல் இருப்பதும் எங்களுக்கு மிகுந்த வேதனையுடன் அதிர்ச்சியாகவும் இருக்கிறது என்று பலர் குமுற ஆரம்பித்துள்ளனர்.

இதற்கிடையே நிவாரணப்பணிகளில் ஈடுபட்டு வரும் மே 17 இயக்கத்தை சேர்ந்த தொண்டர்களை அ.தி.மு.க.வினர் தொடர்ந்து மிரட்டிவருவதாகவும் புகார் எழுந்துள்ளது.

இந்நிலையில், நிவாரணம் வழங்குவதில் அ.தி.மு.க.வினர் செய்து வரும் அராஜகத்தினை மே 17 இயக்கம் வன்மையாக கண்டித்துள்ளது, இது குறித்து தனது பேஸ்புக் பக்கத்தில், ''அ.தி.மு.க.வினரின் அராஜகத்தினை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும். இல்லையென்றால் போராட்டத்தில் ஈடுபட வேண்டிய நிலை ஏற்படும். 

நிவாரணப் பொருட்களை விநியோகம் செய்து கொண்டிருந்த மே 17 இயக்கத் தோழர்களிடத்திலும் அ.தி.மு.க.வினர் நெருக்கடியை கொடுத்தனர். தங்களிடம் நிவாரணப் பொருட்களை ஒப்படைக்கும்படியும், இப்பகுதி எங்களுடையது, எங்களிடம் நிவாரணப் பொருட்களை ஒப்படைத்துவிட்டுச் செல்லுங்கள் என்று மிரட்டினர்.அந்த  மக்களிடம் கடந்த 15 நாட்களாக தொடர்ந்து மே 17 தோழர்கள் நிவாரணப்பணி செய்கின்ற காரணத்தினால் அப்பகுதி மக்களே அ,தி.மு.க.வினருக்கு எதிர்ப்பினை தெரிவித்து தோழர்களுக்கு பாதுகாப்பளித்தனர்.
வெளியூரில் இருந்து நிவாரணம் ஏற்றி வரும் வாகனங்களை அ.தி.மு.க.வினர் தடுத்து நிறுத்தி நிவாரணப் பொருட்கள் மீது,  ஆளும் கட்சி சின்னத்தை பதிப்பதும் பின்னர்,  அவர்களே எடுத்துச் சென்று நிவாரணப் பொருட்களை விநியோகம் செய்ய எடுத்து செல்வதாக, பல தோழர்கள் தொடர்பு கொண்டு தெரிவிக்கிறார்கள்.
இதேபோல் ஒரு தனியார் நிறுவனத்தினரால் எடுத்து வரப்பட்ட 5 லாரிகளை இவ்வாறு தடுத்த  காரணத்தினால் அந்த வாகனங்கள் சேலத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டிருக்கின்றன.இதேபோல இஸ்லாமிய இயக்கத் தோழர்களின் வாகனத்திலும் அ.தி.மு.க.வின் கொடியும், ஜெயலலிதாவின் படமும் வலுக்கட்டாயமாக ஒட்டப்பட்டிருக்கிறது. 40 ஆண்டுகளாக அதிகாரத்தில் இருந்த அ.தி.மு.க., தி.மு.க. கட்சிகளின் செயலற்ற, பொறுப்பற்ற தன்மையால் சென்னை நகரம் சீரழிக்கப்பட்டு இன்று சந்திக்கும் பேரிடருக்கு அடித்தளமிட்டிருக்கிறார்கள்.

தமிழகத்தின் இந்த நெருக்கடியான நேரத்தில் கூட  மக்கள் பணிக்கு இடையூறாக இருக்கும் அ.தி.மு.க.வினரை கண்டிக்க அனைத்து ஜனநாயக இயக்கத் தோழர்களுக்கும் அறைகூவல் விடுக்கிறோம்" என்று கூறப்பட்டு உள்ளது

அதோடு மே17 இயக்கம், உதவி தேவைப்பட்டாலோ, பங்களிப்பு செய்ய விரும்பினாலோ 9444146806, 9884072010, 9962670409 எண்களை தொடர்பு கொள்ளலாம் என்றும், முகநூலிலும் செய்தி அனுப்பலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.


ஐ.ஏ.எஸ். அதிகாரி விஜய்பிங்களேவை நீங்கள் மறந்திருக்கலாம். ஆனால், சென்னை உள்ள தற்போதைய நிலையில், அவரை நாம் அனைவரும் நினைவில்கொள்ள வேண்டும். 2004 பேட்ஜை சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி விஜய்பிங்களே. மாவட்ட ஆட்சியராக பணியாற்றிவிட்டு சாலை தர கட்டுப்பாட்டு பிரிவில், சென்னை மாநகராட்சி கூட்டு கமிஷனராக பணியாற்றியவர்.

இவர் தற்போது மாற்றப்பட்டு உள்ளார். இதற்கான காரணமாக, பிங்களே ஒரு நேர்மையான அதிகாரி. சமீபத்தில் சென்னையில் பல சாலைகள் செப்பணியிடப்பட்டது. சில சாலைகள் புதிதாக போடப்பட்டது. அப்படி போடப்பட்ட சாலைகளின் தரம் குறித்து அவர் காண்டிராக்டரை கண்டித்ததாலும், அபராதம் விதித்ததாலும் மாற்றப்பட்டு இருக்கிறார் என்று சென்னை மாநகராட்சியின் சில அதிகாரிகள் கூறுகின்றனர்.

இது விகடன் இணையதளத்தின் ஒரு கட்டுரை .நன்றியுடன்  இதை இங்கு 
பதிந்திருக்கிறேன் .விகடனுக்கு நன்றி .

Thursday, November 26, 2015

ஆமிர்கானும் சகிப்புத்தன்மையும்! தினமணி ஆசிரியர் தலையங்கம்

சமீபத்தில் நடிகர் ஆமிர் கான் ஒரு நிகழ்ச்சியின்போது பேசிய பேச்சு, ஊடகங்களில் விவாதப் பொருளாகி இருக்கிறது. தனது மனைவி கிரண், “இந்தியாவை விட்டு வெளியேறி வெளிநாட்டில் வாழலாமா?’ என்று வீட்டுக்குள் நடந்த உரையாடலின்போது குறிப்பிட்டதாக ஆமிர் கான் ஒரு விழா மேடையில் பகிர்ந்துகொண்டார். இந்தப் பேச்சின் உள்ளுறைப்பொருள் இந்தியாவில் சகிப்புத்தன்மை இல்லை என்பதுதான். ஆமிர் கான் பேச்சுக்கு காங்கிரஸ் மற்றும் சில எதிர்க்கட்சிகள் ஆதரவு அளித்து, விவாதப் பொருளாக்கிவிட்டிருக்கின்றன.
ஆமிர் கான் நடித்து வெளியான பி.கே. திரைப்படத்தில் ஹிந்து கடவுள்கள், சாமியார்கள் குறித்து சில விமர்சனங்கள் இருந்தன. இதற்காக இந்தப் படத்தை தடை செய்ய வேண்டும் என்று இந்து அமைப்புகள் கோரிக்கை வைத்தபோது அதைப் புறந்தள்ளியது மத்தியில் ஆளும் இதே நரேந்திர மோடி அரசுதான். இந்தப் படம் தொடர்பான ஆதரவான கருத்தை முன்வைத்தவர் பா.ஜ.க.வின் முன்னணித் தலைவர் எல்.கே. அத்வானி.
நிலைமை இதுவாக இருக்கும்போது, ஆமிர் கான் ஏன் இந்த விவாதத்தை பொதுமேடையில் பேசினார் என்பது தெரியவில்லை. அவர் இயல்பாகச் சொன்னாரா அல்லது இந்த விவாதம் வேறு தளங்களுக்குக் கொண்டு செல்லப்பட வேண்டும் என்று வேண்டுமென்றே தொடங்கி வைத்தாரா என்பதை அவர்தான் விளக்க வேண்டும்.

இஸ்லாமியர்கள் சிறுபான்மையினராக இருக்கும் இந்தியாவில்தான் ஆமிர் கான், சல்மான் கான், ஷாரூக் கான் ஆகியோர் முன்னணி நடிகர்களாகக் கடந்த பதின் ஆண்டுகளுக்கும் மேலாக திரைத் துறையில் கோலோச்சுகின்றனர். இவர்களுக்கு முன்னாலும், இந்தித் திரைப்பட உலகில் திலீப்குமார், பெரோஸ்கான், சஞ்சய் கான், பரூக் ஷேக் உள்ளிட்ட இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்த கதாநாயகர்களும், எண்ணிலடங்காத பல நடிகைகளும் மக்களின் பேராதரவுடன் வலம் வந்திருக்கிறார்கள். இந்திய மக்கள் சகிப்புத்தன்மை கொண்டவர்கள் என்பதால் மட்டுமே இது சாத்தியமாகிறது.
ஆஸ்கர் விருது பெற்ற தமிழ் இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான், “முகம்மது: இறைதூதர்’ என்ற ஈரானிய படத்துக்கு இசையமைத்தார் என்பதற்காக மும்பையைச் சேர்ந்த அமைப்பு ஃபட்வா அறிவித்தபோது இந்தியத் திரைத் துறையும், அறிவுஜீவிகளும், அரசியல்வாதிகளும் சகித்துக்கொண்டு சும்மா இருந்தார்களே, அது ஏன்? நடிகர் ஆமிர் கானின் தனிப்பட்ட கருத்து தேசத்தின் கருத்தாக மாற்றப்படும்போது, ரஹ்மான் மீதான மிரட்டல் ஏன் தனிப்பட்ட விவகாரமாகவே முடிந்துபோனது?
இப்போது இந்தியாவை ஏன் சகிப்புத்தன்மை இல்லாத நாடாக மாற்றிவிடும் முயற்சியில் அறிவுஜீவிகளும் கலைஜீவிகளும் இறங்கியிருக்கிறார்கள் என்ற கேள்விக்கு நேரடியான பதில் இல்லாவிட்டாலும், அறிவுஜீவிகள், கலைஜீவிகள் கோரிக்கைகளை மோடி அரசு ஏற்க மறுத்ததுதான் இதற்கு அடிப்படைக் காரணம் என்பதை ஊகமாகப் புரிந்துகொள்ள முடிகிறது.

பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு அமைந்த பிறகு பல்கலைக்கழக மானியக் குழுவில் கெடுபிடிகள் அதிகரிக்கத் தொடங்கின. குறிப்பாக, மத்திய பல்கலைக்கழகங்களில் முனைவர் பட்டம், எம்.பில். பட்டம் படிப்போருக்கான உதவித் தொகையை ஆய்வுகளின் தர அடிப்படையில் தீர்மானிப்பது என்பது உள்ளிட்ட பல கட்டுப்பாடுகளை ஏற்படுத்தியது. ஆய்வு நடத்துகிறோம் என்ற பெயரில் உதவித் தொகை தவறான நபர்களுக்குத் தரப்படுவதைத் தடுப்பதுதான் இந்த முடிவுக்குக் காரணம்.
ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகம், தில்லி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 700 ஆராய்ச்சி மாணவர்களும், நாடு முழுவதிலும் பல்வேறு பல்கலைக்கழகங்களில் ஆராய்ச்சி மாணவர்களும் இதைக் கடுமையாக எதிர்த்துப் போராடினர். “நான்-நெட் ஃபெலோஷிப் திட்டங்களை’ ரத்து செய்யமாட்டோம் என்று மத்திய அரசு இறங்கி வந்தாலும், மற்ற கோரிக்கைகளை ஏற்க மறுத்துவிட்டது. இதனால், அறிவுஜீவிகளின் கோபம் அதிகரித்தது.
கடந்த நான்கு மாதங்களில், இந்தியாவில் 300 மதக் கலவரங்கள் நடந்திருக்கின்றன. 35 பேர் கொல்லப்பட்டிருக்கின்றனர் என்கிறது மத்திய உள்துறை அமைச்சகக் குறிப்பு. அக்டோபர் மாதம் வரை 630 மதக் கலவரங்களும், 86 மரணங்களும் நடைபெற்றிருக்கின்றன. இதுதான் மத சகிப்புத்தன்மை இல்லாத நிலைமையின் அடையாளம் என்று சொல்வார்களேயானால், இவர்கள் கடந்த ஆட்சியில் ஏன் மெளனமாக இருந்தார்கள் என்கிற கேள்வி எழுகிறது.
முந்தைய மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில், 2013-இல் நடந்த மதக் கலவரங்களின் எண்ணிக்கை 823. அப்போது அறிவுஜீவிகளுக்குப் புலப்படாத சகிப்புத்தன்மை இல்லாத நிலைமை இப்போது திடீரென்று தோன்றுவதற்கு நரேந்திர மோடி மீதான கண்மூடித்தனமான வெறுப்பும், காங்கிரஸ் மீதான அனுதாபமும்தான் காரணமாக இருக்க முடியும்.
மோடி முகத்தில் கரி பூச வேண்டும் என்பதற்காக இந்திய மக்கள் அனைவரின் மீதும் கரி பூசுவதும், இந்தியா என்கின்ற நாடே சகிப்பின்மை அற்ற நாடென முத்திரை குத்தி, பயங்கரவாதிகளின் கோபத்தைக் கிளறிவிடப் பார்ப்பதும் விபரீதமான சிந்தனை. இதைச் சொல்லும் அதே நேரத்தில், இன்னொன்றையும் குறிப்பிடத்தான் வேண்டும். தனது கட்சிக்காரர்களும், கூட்டணிக் கட்சியினரும் சமூக நல்லிணக்கத்தை பாதிக்கும் விதத்தில் பேசுவதைத் தடுப்பதும், கட்டுப்படுத்துவதும் பிரதமர் மோடியின் கடமை. அவரது மௌனமும்கூட இப்படியொரு தோற்றத்திற்குக் காரணமாக அமைகிறது என்பதை அவர் உணர வேண்டும்
தினமணி 

Monday, November 23, 2015

நீங்கள் ஒரு புத்தகப் பிரியரா ? கண்டிப்பாக இதை படிக்கவேண்டாம்!



நல்ல புத்தகம் ஒரு சிறந்த நண்பன்.கண்டதையும் கற்பவன்  பண்டிதன் ஆவான் என்று எங்கள் பாடசாலை நூலகத்தில் எழுதப்பட்டிருந்தது  இப்போதும் எனது நினைவில் இருக்கிறது .இங்கு கண்டது என்பது பலதரப்பட்ட நூல்கள் என்ற பொருள் கொள்ள வேண்டும் .இனி வாசிப்பு சம்பந்தமாக சில  விடயங்கள்                                                                      


                                       
                                         


• நாம் ஒரு நூலில் .சில பக்கங்களைப் படிக்கிறோம். ஆனால் படித்த பிறகு என்ன படித்தோம் என்று நினைவுக்கு வருவதில்லை. காரணம் மனம் அதில் ஈடுபடாமல் இருப்பதால், கிரகித்துக் கொள்ள முடியவில்லை. அதனால் குறிப்புகள் எடுப்பது சிறந்தது.

• கண்கள் 5 சதவிகிதம் தான் வேலை செய்கிறது. 95 சதவிகிதம் மூளைதான் வேலை செய்கிறது. 1 மணி நேரம் படியுங்கள். பின்னர் சிறிது நேரம் ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள்.

• காலையில் கிழக்குப் பக்கமும், மாலையில் மேற்குப் பக்கமும் உட்கார்ந்து படியுங்கள். தெற்கு நோக்கிப் படிப்பதை தவிர்க்கவும்.என சொல்லப்படுகிறது

• என்ன புத்தகத்தினை படிக்க  வேண்டுமென்று முதலில் தீர்மானித்துக் கொள்ள வேண்டும்.அத்துடன் புத்தகங்களின் எழுத்தின் அளவினையும் கவனத்தில் கொள்ளவேண்டும்

• அவசியமில்லாததை ஒதுக்கித்தள்ள வேண்டும். மூளை ஒரு சேமிக்கும் வங்கி.அவசியம் அல்லது முக்கியம் என்று கருதுவதை நன்கு படித்து நினைவுப் பெட்டியில் பத்திரப்படுத்த வேண்டும்.. வாசிக்கும் எதையும்  புரிந்து கொண்டு மனதில்  பதியவைத்தல் எப்போதும் நினைவிலிருக்கும்.

• படிக்கும் வேகம் என்ன என்று அறிந்து, அதனைப் படிப்படியாக அதிகரித்துக் கொள்ளவும் ஒரு நிமிடத்திற்கு 150 வார்த்தைகளைப் படிக்கவும், அதில் 100 வார்த்தைகளையாவது கிரகிக்கும் தன்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.பின்னர் 200-150, 200-250 எனப் படிப்படியாக உயர்த்திக் கொள்ள முயற்சி செய்யவும்.

• தினசரி  பொது அறிவினை வளர்க்கக் கூடிய ஏதேனும் ஒரு புத்தகத்தை குறைந்தது 15 நிமிடமாவது படிக்கவும். ஒரு வாரத்தில் சுமார் 2 மணி நேரம், மாதத்தில் 8 மணி நேரம் கிடைக்கிறது. ஒரு நல்ல புத்தகத்தைப் படிக்க சுமார் 4 மணி நேரம் தேவை. மாதத்தில் இரண்டு புத்தகங்களைப் படிக்கலாம். ஆண்டில் 24 புத்தகங்களைப் படிக்கலாம்.

• வெளியில் போகும் போது, ஒரு புத்தகத்துடன் செல்லுங்கள், பயணம் செய்யும் போதும், பலவற்றிற்காகக் காத்திருக்கும் போது, நமது நேரத்தை வீணாகச் செலவிடாமல், பயனுள்ள வகையில் செலவிடலாம்.

• படிப்பதைக் கடமையாகக் கருதாமல் பிடித்தமான விஷயமாக மாற்றிக் கொண்டால், நிச்சயமாக மறக்காது.

• படிக்கிற நேரம் உங்களுக்கு எந்த நேரம் சிறந்தது என்று கருதுகிறீர்களோ, அதைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.

• படிக்கின்ற போது முக்கியமானவற்றை அடிக்கோடிடுங்கள். தனி குறிப்பேட்டில் குறிப்பெடுத்துக் கொள்ளுங்கள்.

• படிக்கும் பழக்கும் ஒரு சிறந்த பழக்கம். அதனை வழக்கப்படுத்திக் கொள்ளுங்கள். ஒரு நல்ல புத்தகம் ஒரு சிறந்த நண்பன், வழிபோக்கத் துணைவன்.



 நான் எனது தொலைபேசியில்  நிறைய நூல்களை தரவிறக்கம் செய்து வைத்திருக்கிறேன் .எங்கு சென்றாலும் என்னோடு  இருக்கும்  எதற்காகவும் காத்து இருக்கும் நேரங்களில்  இப்பொழுது எல்லாம் ஈ -நூல்களை படிக்கிறேன் தொலைபேசியில்  .அதைவிட எனது வாகனத்தில் குறைந்தது மூன்று புத்தகங்களாவது  வைத்திருப்பேன் .முக்கியமாக தொலைபேசியில் தேவை இல்லாமல் நோண்டிக்கொண்டு இருப்பதை சுத்தமாக விட்டுவிட்டேன்

.இப்பொது சில காலங்களாக நிறைய நூல்களை படிக்க முடிகிறது. முக்கியமாக உங்கள் பிள்ளைகளை நூலகம் செல்ல புத்தகங்கள் வாசிக்க ,இரவல் பெற ஊக்கப்படுத்துங்கள் .இங்கு கனடாவில் பாடசாலையில் சீனியர்  கிண்டர்கார்டனுக்கு  பிள்ளை போனவுடனேயே  பொது நூலகத்தில்  அங்கத்தவர் ஆவதற்கு விண்ணப்ப படிவம் கொடுக்கப்படும் .படசாலையில் இருந்து தினசரி ஒரு நூல் வீட்டுக்கு கொண்டுவருவார்கள் .வாசித்து அது சம்பந்தமாக எழுதி மறுநாள் கொண்டு போகவேண்டும் .

எப்போதும் தாய் மொழி வாசிப்பே சிறந்தது ஏனெனில் தாய்மொழியில்  வாசிக்கும் போது,அல்லது பேசும் போது அது ஒருவரின் இதயத்தால் உணரப்படுகிறது ,மாறாக அந்நிய மொழி மூளையால் கிரகிக்கப்படுகிறது .இங்கு கனடாவில் பிறந்து வளர்ந்த எனது பிள்ளைகளின் முதல் மொழி தமிழ் என்று குறிப்பிட்டாலும் நடைமுறையில் ஆங்கிலம் தான் முதல் மொழி .இது தான் இங்குள்ள யதார்த்தம்.

எனது பிள்ளைகளை நான் முதல் முதலில் பாடசாலையில் சேர்க்கும் போது எனது  இரண்டு பிள்ளைகளின் ஆசிரியர்கள் இருவரும் வெள்ளை இனத்தவர்கள் ,ஆங்கிலேய பெண்கள்   எனக்கு சொன்னது  ஆங்கிலத்தை உங்கள் பிள்ளை இலகுவாக கற்றுக்கொள்ளுவார்கள்  .அதை நாங்கள் பார்த்துக்கொள்வோம் .  நீங்கள் உங்கள் பிள்ளைக்கு உங்கள் தாய் மொழியை சொல்லிக்கொடுங்கள் என்று .ஒருவர் அல்ல இருவருமே சொன்னார்கள் .இன்றைக்கு எனது பிள்ளைகள் நன்றாக தமிழ் கதைப்பார்கள் .ஓரளவு எழுதுவார்கள் ஓரளவு வாசிப்பார்கள் .நாளை எனது பிள்ளைகள் தமிழ்
சார்ந்து சிந்திப்பார்கள், தமிழ் சார்ந்து செயற்படுவார்கள்  என்பதில் எனக்கு மிகவும் சந்தோசம் .

ஏனெனில் எனது பிள்ளைகளுக்கு நான் சொல்லியிருக்கிறேன் தமிழ் கதைப்பவர்கள் என்பதற்காக தாக்கப்பட்டிருக்கிறோம் ,கொல்லப்பட்டிருக்கிறோம்.தமிழுக்கா உயிர் கொடுத்தோர் வரலாறுகளையும் சொல்லியிருக்கிறேன் .

ஏனெனில் வரலாறு முக்கியம் அல்லவா அமைச்சரே !!!!!!!!!!!!

மீண்டும் மறு பதிவில்  சந்திப்போம்  அன்புடன் கரிகாலன்.